topbella

Tuesday, April 14, 2026

கண்ணாடி வேண்டாமே பாப்பா - பாவேந்தரின் இளையார் ஆத்திச்சூடி கதைகள் - நெல்லை அன்புடன் ஆனந்தி - ஒரு பார்வை - பொன். குமார்


எனது கண்ணாடி வேண்டாமே பாப்பா (பாவேந்தர் ஆத்திசூடி) சிறார் கதை நூலுக்கு..

நூல் விமர்சகர் #பொன்_குமார் ஐயா அவர்களின் விமர்சனம்.

மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா பொன். குமார் 

நூலைச் சிறப்பாக வடிவமைத்து அழகு சேர்த்த நூலேணி பதிப்பகம் Nooleni publications உரிமையாளர் #கன்னிக்கோவில்_இராஜா அவர்களுக்கும் இனிய நன்றி.

நெல்லை அன்புடன் ஆனந்தி

கண்ணாடி வேண்டாமே பாப்பா - பாவேந்தரின் இளையார் ஆத்திச்சூடி கதைகள் - நெல்லை அன்புடன் ஆனந்தி - ஒரு பார்வை - பொன். குமார்


ஆத்திச்சூடி என்பது ஒற்றை வரிக் கவிதை. ஆத்திச் சூடியை அவ்வையே தொடங்கி வைத்தாள். அவ்வைக்கு பிறகு ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மகாகவி பாரதி ஆத்திச் சூடியை அவர் பாணியில் பாடிவைத்தார். பாரதியைத் தொடர்ந்து அவர் சீடன் பாரதிதாசன், வாணிதாசன் என பலரும் ஆத்திச்சூடியைப்பாடினர். பாரதி தாசன் ஆத்திச்சூடியை வைத்து கல்லை மலரடியான் சிறார் நலம் தேடு என்னும் தலைப்பில் முப்பத்திரண்டு சிறுகதைகளை சிறுவர்களுக்காக எழுதியுள்ளார். தொடர்ந்து எழுத்தாளர் நெல்லை அன்புடன் ஆனந்தி கண்ணாடி வேண்டாமே பாப்பா என்னும் தலைப்பில் ஒரு தொகுப்பினை தந்துள்ளார். பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியை வைத்து சூரரைப் போற்று என்னும் தன்முனைக் கவிதைகள் அடங்கிய தொகுப்பைத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிறுவர்களுக்காக ஏற்கெனவே பல தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். 

அனைவரும் உறவினர் என்னும் முதல் கதையே  அற்புதமான கதை. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சமமாக பழகினாலும் சாதி பார்க்காவிட்டாலும் வீட்டிலிருக்கும் பாட்டிகள் இன்னும் சாதிகள் பார்க்கிறார்கள் என்கிறது. இளையோரிடம் சாதி இல்லை என்றாலும் பெரியவர்களிடமே இருக்கிறது, பெரியவர்களே திணிக்கிறார்கள் என்கிறது. அனைவரும் சமம் என்பதை அனைவரும் உறவினர் என்று ஆசிரியர் தெரிவித்துள்ளார். இளையோரிடையே சாதியை விதைக்க வேண்டாம் என்று வேண்டியுள்ளார். 

நன்றாக படிக்கும் மாணவர்கள் தைரியசாலிகளாக இருப்பதில்லை. தைரியசாலிகளாக இருக்கும் மாணவர்கள் நன்றாக படிப்பதில்லை. தைரியசாலிகளாக இல்லாத மாணவர்களை மற்றவர்கள் கேலி செய்வதுண்டு. அப்படி கேலி செய்யப்படுபவன் அழுகிறான். தைரியமானவன் அவனிடம் அழாதே அழுபவன் கோழை என முத்திரை குத்தி விடுவார்கள் என்று அறிவுறுத்தி தேற்றுகிறான். இக்கதையின் தலைப்பு அழுபவன் கோழை. மாணவர்கள் கோழைத்தனமாக அழக்கூடாது என்கிறது. 

எதையும் ஊன்றிப்பார் என்பது மூன்றாம் சிறுகதை. குமாரும் ரவியும் நண்பர்கள். ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். ஒரு பேச்சுப்போட்டியில் திரைப்படங்கள் தீமையைச் செய்கின்றன என்று குமாரும் திரைப்படங்கள் நன்மையைச் செய்கின்றன என்று ரவியும் எதிரெதிர் நிலையில் பேசுகிறார்கள். நடுவர் இருவருமே சிறப்பாக பேசினார்கள் என்று இருவருக்குமே பரிசளித்து திரைப்படங்களில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு நாமே ஊன்றிப் பார்த்து ஆராய்ச்சி செய்து நல்லது கெட்டது அறிந்து செயல்பட வேண்டும் என்கிறார். திரைப்படத்தில் மட்டுமல்ல எந்த ஒன்றிலுமே இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை உணர்ந்து ஊன்றிப் பார்த்து தேவையானதை எடுத்துக் கொள்ள வேண்டும். 

ஆண் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ, மாணவிகளுக்கு இன்னொரு தந்தை மாதிரி. வகுப்பில் படிக்கும் மாணவிகளை மகளாக பார்க்க வேண்டும். பாவிக்க வேண்டும். மாணவிகளை தனியாக அழைத்து சந்தேகம் தீர்ப்பதாக தேகம் தீண்டுவது கூடாது. அவ்வாறு ஆசிரியர் அத்துமீறும் பட்சத்தில் மாணவிகள் துணிச்சலாக நடந்து பாடம் நடத்தும் ஆசிரியருக்கு பாடம் கற்பிக்க வேண்டும். போர்த் தொழில் பழகு என்னும் சிறுகதை மூலம் ஆசிரியர் தவறு செய்தால் தட்டிக் கேட்க வேண்டும் என்கிறார். மாணவர்களுக்கு மட்டுமான கதையாக அல்லாமல் ஆசிரியர்களுக்கானதாகவும் உள்ளது. 

அனு என்னும் சிறுமி வீட்டில் பீங்கான் கப்பை போட்டு உடைத்து விடுகிறாள். அம்மா திட்டுவாள் என பயந்து பழியை வேலைக்காரி மீது போட்டு விடுகிறாள். அவளும் குழந்தைக்காக பழியை ஏற்று அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொள்கிறாள். மறுநாள் பள்ளியில் பாரதிதாசனின் ஆத்திச்சூடியை வாசிக்கும் போது உள்ளதைப் பேசு என்றதை வாசிக்கும் போது தன் தவறை உணர்ந்து அம்மாவிடம் உள்ளதைச் சொல்லிவிடுகிறாள். அம்மாவும் தன் அவசரபுத்தியை எண்ணி வேலைக்காரியிடம் மன்னிப்புக் கேட்க முடிவெடுக்கிறாள். இக்கதையின் தலைப்பு உள்ளதை பேசு. எப்போதும் உள்ளதையே பேச வேண்டும் என்கிறது கதை. உள்ளதை பேசினால் நல்லதே நடக்கும் என்கிறார். 

தொலைக் காட்சிப் பெட்டிகள் பெரும் தொல்லையாகிவிட்டது இன்று. பெரியவர்களை மட்டுமின்றி சிறுவர்களையும் சீரழிக்கிறது. சிறுவர்கள் தொலைக்காட்சியை பார்க்க நேர்ந்தால் நேரம் போவதே தெரியாமல் பார்த்துக் கொண்டேயிருப்பார்கள். இரவு நேரங்களில் நீண்ட நேரம் கண்விழித்துப் பார்ப்பதும் உண்டு. இதனால் கண் பார்வையும் மங்கலாக தெரியவும் வாய்ப்புண்டு. இரவினில் தூங்கு என்னும் சிறுகதை மூலம் இரவினில் நீண்ட நேரம் உறங்காமல் தொலைக்காட்சி பார்ப்பதே கண் பார்வைக் குறைவிற்குக் காரணம் என மருத்துவர் கூறுவதாக கூறியுள்ளார். பொதுவாகவே தொலைக்காட்சி அதிக நேரம் பார்ப்பது கூடாது. 

ஒற்றுமை வெல்லும் என்பது பொதுவான கருத்து. உண்மையும் ஆகும். நண்பர்களாக இருக்கும் மாணவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மனக்கசப்பால் விளையாட்டில் கிடைக்கக் கூடிய வெற்றி எதிரணிக்கு போய்விடுகிறது. விளையாடும் போது வெற்றியே குறியாக இருக்க வேண்டும், எதிரணியை வீழ்த்துவதில் ஒற்றுமை இருக்க வேண்டும். தங்களுக்குள் இருக்கும் சண்டையை மைதானத்திற்கு வெளியிலேயே விட்டுவிட வேண்டும். விளையாட்டில் வெற்றிப்பெற ஒற்றுமை தேவை என்கிறது ஒற்றுமை வெல்லும் கதை. 

பாவேந்தர் பாரதிதாசன் ஒரு வரியில் ஆத்திச்சூடியில் சொன்ன கருத்தைக் கொண்டு மாணவர்களுக்கு ஏற்ப சிறுகதைகளாக எழுதி தந்துள்ளார் எழுத்தாளர் நெல்லை அன்புடன் ஆனந்தி. பாவேந்தரின் ஆத்திச்சூடியையும் வாசிக்கத் தூண்டியுள்ளார். அதன்படி நடக்க அறிவுரைத்துள்ளார். கண்ணாடி வேண்டாமே பாப்பா என்னும் இத்தொகுப்பில் உள்ள ஏழு சிறுகதைகளையும் பள்ளிச் சூழலை மையப்படுத்தியே எழுதியுள்ளார். கதைகளை வாசித்தவுடன் சிறுவர்கள் மனத்தில் ஒரு சிந்தனையை உருவாக்கும் வண்ணம் உள்ளன. கதைக்களமும் கதையமைப்பும் கதை மொழியும் கதைநடையும் சிறுவர்களுக்கு பொருத்தமா சிறப்பாக உள்ளன.  சிறுவர்களுக்கு எதைச் சொல்ல வேண்டுமோ எப்படி சொல்ல வேண்டுமோ அப்படியே சொல்லியுள்ளார். நூல் வடிவமைப்பிலும் கவிஞர் கன்னிக் கோவில் இராஜா கவனம் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறுவர்கள் சார்பாக எழுத்தாளர் நெல்லை அன்புடன் ஆனந்திக்கு நன்றி. மற்றும் என் வாழ்த்துகள். 

வெளியீடு 
லாலிபாப் பதிப்பகம் சென்னை 
9841236965 

எழுத்தாளர் நெல்லை அன்புடன் ஆனந்தி 

பொன். குமார் 9003344742 
***

Sunday, April 12, 2026

தமிழால் இணைவோம் ஏப்ரல் 12 கவியரங்கம், சிவகாமியின் சபதம்

தமிழால் இணைவோம் உலகத் தமிழ்ப் பேரியக்கம்  

நிகழ்ச்சி நிரல்

12-04-2026
************

இரவு

19.00 7914 சிவகாமியின் சபதம் 33
20.00 7915 கவியரங்கம் - மக்கட்பேறு

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/5169345164?pwd=Wm9RLzB1L2xxNkVPYXdPZTBSanBXZz09&omn=82939366443

Meeting ID: 516 934 5164
Passcode: 247247

அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

Saturday, April 11, 2026

Durandhar 2 : The Revenge


இனிய வணக்கம். அனைவரும் நலமா? வலைத்தளத்தில் எழுதி வருடங்கள் ஆகிவிட்டது. மீண்டும் எழுதுவதில் மகிழ்ச்சி.

என்னதான் சொல்லுங்க? படம்னா தியேட்டர்ல போய் தான் பாக்கணும். அதுவும் துரந்தர் மாதிரி படம் எல்லாம் தியேட்டரில் மட்டும் தான் பார்க்கணும்.

செம படம்.. அடி தூள் தான். துரந்தர் 1 வெளிவந்த போது  தியேட்டரில் போய் பார்க்கிறதுக்கான சந்தர்ப்பம் அமையல.

அதனால வீட்டிலேயே பார்த்தாச்சு. பொதுவா படம் ரொம்ப நல்லா இருந்தாதான் முழு படமும் உக்காந்து பார்ப்பேன்.

படம் சுமாரா இருந்துச்சுன்னா தவணை முறைல தான் பார்க்கறது.. ஆனா, துரந்தர் படம் மூணு மணி நேரம் போனதே தெரியாமல் முழு படத்தையும் பார்த்து முடிச்சேன்.

அப்படி ஒரு விறுவிறுப்பான படம். எனக்கு மட்டும் இல்லாம என் மகள்களுக்கும் ரொம்ப பிடிச்சுப் பார்த்த படம்.

தனது தாய் நாட்டிற்காக உளவாளியாக, இன்னொரு இடத்தில் போய், எதிரி நாட்டில் போய் மாட்டிகிட்டு உளவாளி படுற அவஸ்தையைக் காட்டும் படம்.  அதை எல்லாம் பார்க்கும் பொழுது மனசை என்னவோ பண்ணுது. அப்படி ஒரு பதைபதைப்பை ஏற்படுத்தியது.

அதில் இரண்டாவது பாகம் வருதுன்னு தெரிந்த உடனே எப்ப வரும் என்று காத்திருந்தோம். இந்த முறை தியேட்டரில் போய் பார்த்து விடணும்னு நினைச்சிட்டு இருந்தேன். போன தடவை மாதிரியே உடனே பார்க்க போக முடியல. அதற்கான சந்தர்ப்பம் அமையல.

இங்கல்லாம் பொதுவா நம்ம திரைப்படங்கள் தியேட்டர்களுக்கு வந்தால் ஒரு வாரம் 10 நாட்கள் ஓடிட்டு இருக்கும். அந்த 2 வாரத்திற்குள் போக முடியலேன்னா அப்புறமா Netflix அல்லது Amazon Prime ல வரும் வரை காத்துக் கிடக்க வேண்டியது தான்.

இன்று ஒரு தோழியிடம் பேசும் போது, துரந்தர் 2 பார்த்தியான்னு அவங்க கேட்க, இல்லன்னு சொன்னதும்.. அட கட்டாயமா தியேட்டர்ல போய் பார்த்திருக்கணும்னு உசுப்பேத்தி விட்டுட்டாங்க.

சரி எதுக்கும் எதாச்சும் தியேட்டர்ல இன்னும் ஓடுதான்னு பார்க்காலாம்னு பார்த்தா... நம்ம வீட்டுல இருந்து ஒரு பத்து பதினஞ்சு நிமிஷம் தொலைவிலேயே இருக்கும் MJR தியேட்டர்ல போட்டிருந்தாங்க.

எனக்கு ஆச்சரியமா இருந்தது.  படம் வந்து இவ்வளவு நாளாகியும், இன்னும் இங்கே ஓடிட்டு இருக்கிறது பெரிய விஷயம்தான். அதுவும் நமக்கு இன்னைக்கு சனிக்கிழமை வேறயா.. வசதியாப் போச்சு.. கிளம்ப வேண்டியதுதான்னு கிளம்பியாச்சு.

தியேட்டரில் நுழைந்து டிக்கெட் வாங்கும் இடத்திற்கு சென்று டிக்கெட் வாங்கிவிட்டு, மெம்பர்ஷிப் எதுவும் உள்ளதான்னு கேட்டேன். ஏன்னா, பசங்க சின்னதா இருக்கும் போது தியேட்டர் மெம்பர்ஷிப் வச்சிருந்தேன்.

அது எதுக்குன்னா குறிப்பிட்ட நாட்களில் மெம்பர்ஷிப் கார்டு உள்ளவர்களுக்கு டிக்கெட் விலையில் 50% தள்ளுபடி அல்லது எந்த படம் வேண்டுமானாலும் 5 டாலர் மட்டுமே அல்லது இலவசமா ஒரு பக்கெட் பாப்கார்ன் இப்படி ஏதாச்சும் இருக்கும்.

இதிலும் என்ன சுவாரஸ்யம்னா அந்த மெம்பெர்ஷிப் கார்டுக்கு எந்த கட்டணமும் கிடையாது. அதனால் தான் கேட்டேன். அந்தப் பெண்மணி ஏதோ வேலையில் மும்முரமாக இருந்ததால் அதெல்லாம் இல்லையே என்று சொன்னார்.

என் கணவரும் பரவால்ல வா.. அப்புறம் ஆன்லைன்ல தேடிப்பார்க்கலாம். இப்ப படம் தொடங்குவதற்கான நேரம் ஆகிருச்சுன்னு அவசரப்படுத்தவே நானும் படம் பார்க்கும் ஆவலில் வந்துட்டேன்.

படம் ஆரம்பிச்ச நொடியிலிருந்து, அப்பப்பா அப்படியே நம்மை கட்டிப்போட்டு விட்டதுன்னு சொல்லலாம். நாலு மணி நேரம் போனதே தெரியல.. எங்கயும் எந்த தொய்வும் இல்லாத காட்சி அமைப்புகள். பொதுவாக படங்களில் தொய்வு ஏற்பட்டால் நமக்கு தூக்கம் வந்துரும், இல்லேன்னா மனம் அங்கே லயிக்காது. ஆனா,  படம் ஆரம்பித்ததிலிருந்து முடிஞ்சவரைக்கும் அப்படி ஒரு விறுவிறுன்னு போச்சு.

ஒவ்வொரு காட்சியையும் ரொம்ப சிரத்தையுடன் எடுத்து இருந்தாங்க. ஒரு உளவாளியாக போகிறவர்களுடைய வலி,  முதல்ல அவங்க எப்படி ஒரு உளவாளியாக போறாங்க? அதன் பின்னால் இருக்கிற ஒரு பின்னணி எல்லாம் பார்க்கும் பொழுது நமக்குள் ஒரு நெகிழ்ச்சியும் வலியும் வந்து விடும்.

எவ்வளவோ பேர் இப்படி தன்னோட வாழ்க்கையையும் உயிரையும் தன் தாய் நாட்டிற்காக துச்சமாக மதித்து அவங்க பணிகளைச் செய்றாங்கன்னு யோசிக்க வைக்குது.

இராணுவ வீரர்களும், உளவாளிகளும் தங்களுடைய பணிகளை செவ்வனே செய்வதனால்தான் இன்னிக்கு நம்ம எல்லாரும் பாதுகாப்பா, பயமின்றி நிம்மதியா இருக்குறோம்.

இந்த மன நிலையோட படத்தைப் பார்க்கும் போது ஏதோ ஒரு மனநிறைவு கொடுத்ததுன்னே சொல்லலாம். எந்த ஒரு தேவையில்லாத காட்சிகளும் கிடையாது. ஒவ்வொரு காட்சியுமே சும்மா திட்டமிட்டுத் தீட்டி இருக்கிறார்கள்.

அவ்வளவு நல்லா இருந்தது. படத்தின் கதாநாயகன் ரன்வீர் சிங் தன்னுடைய அபாரமான நடிப்பில் நம் மனதைத் தொடுகிறார். மாதவன், சஞ்சய் தத், சாரா உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தத்தம் கதாபாத்திரத்தை கச்சிதமாய் கையாண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

இந்த படத்த பத்தின விமர்சனத்துக்கு  ஒரு தனி பதிவே போடலாம் போல இருக்கு. அவ்வளவு பேசலாம் இந்த படத்தை பற்றி. முடிந்தால் எழுத முயற்சி செய்கிறேன்.

இன்னிக்கு சனிக்கிழமை என்பதால் டிக்கெட் விலை அதிகமாய்த் தான் இருக்கும் என நினைத்தேன். ஆன்லைனிலேயே புக் பண்ணிவிட்டு போகலாம் தான். ஆனால் அதற்கு concession fee என்று 3 டாலருக்கு மேல் எடுப்பார்கள். அதனால் நேரிலேயே சென்று விட்டோம்.

இன்று  டிக்கெட் 7 டாலர் தான். எனக்கு ஆச்சரியமாப் போச்சு. ஆஹா.. பொதுவா நம்ம தமிழ்த் திரைப்படங்கள் அதிலும் இந்த மாதிரியான பிக் பட்ஜெட் படம் எல்லாம் வந்தால் டிக்கெட் குறைந்தது ஒரு 15 டாலர் இருந்து 20 டாலர் இருக்கும்.

அதுவும் ரஜினி போன்ற பிரபல நடிகர்களின் படம் எல்லாம் சில நேரங்களில் 25 டாலர் கூட ஆகும்.

நான் அப்படித்தான் ஏதாவது இருக்கும்னு நெனச்சேன். ஒருவேளை படம் வந்து  இரண்டு வாரங்களுக்கு மேல் ஆனதால் கூட இருக்கலாம்.

படம் பார்த்து வெளியே வரும் போது மீண்டும் எனக்கு மெம்பர்ஷிப் விசயம் நினைவு வந்தது. எல்லா தியேட்டர்களிலும் மெம்பர்ஷிப் வச்சிருந்தால் ஏதாவது சலுகைகள் கட்டாயம் இருக்கும் என்று அறிவேன்.

சரி.. திரும்பவும் கேட்டு பார்ப்போம்னு கேட்டேன். இப்பவும் அதே பெண்மணி தான் கவுண்டரில் இருந்தாங்க. அவர்களிடம் போய்,  "எனக்கு ஒரு சந்தேகம். மற்ற தியேட்டர்களில் குறிப்பிட்ட நாட்களில் ஏதாவது சிறப்பு சலுகைகள் பெற மெம்பர்ஷிப் கார்டு தராங்களே அது போல் இங்கு இல்லையா?" எனத் தெளிவாகக் கேட்டேன்.

"ஆமாமா.. செவ்வாய்க்கிழமை தோறும் நாங்க ஃபிரீ பாப்கான் கொடுக்கிறோம், அது மட்டுமில்லாம செவ்வாய் தோறும் எல்லாப் படமும் 5 டாலர்கள் மட்டுமே, அது தவிர ஒவ்வொரு முறை நம்ப டிக்கெட் வாங்கும் பொழுதும் அதற்கான ரிவார்டு பாய்ண்ட்டுகள் சேர்ந்து கொண்டே இருக்கும். 50 பாய்ண்ட்டுகள் சேர்ந்தால் 5 டாலர் குறைப்பார்கள் என்று இன்னும் சில சலுகைகளையும் சேர்த்துச் சொன்னார்."

அவர்கள் கேட்ட தகவல்களைக் கொடுத்துவிட்டு கையோடு மெம்பர்ஷிப் கார்டையும் வாங்கிவந்து விட்டேன்.

என் கணவரும் "பரவால்லயே.. அப்ப இல்லன்னு சொன்னாங்க. இப்ப மட்டும் எப்படின்னு கேட்டாரு.".

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்னு சும்மாவா பெரியவங்க சொல்றாங்க.. அப்போ படம் பார்க்கும் அவசரத்தில் போய்ட்டேன். அதான் திரும்ப கேட்டுப் பார்க்கலாமேன்னு கேட்டேன், கிடைச்சிருச்சுன்னு சொன்னேன். அவரும் அதுவும் சரிதான்னு சொன்னார். நமக்கு வேணும்னா நம்ம தான் கேட்கணும்.

ஒரு வழியா படத்தை தியேட்டரில் பார்த்த மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தாச்சு. கண்டிப்பா நீங்களும் பாருங்க.

ஏம்மா.. ஒரு படத்தைப் பார்த்துட்டு வந்ததுக்காம்மா இந்தப்பேச்சுன்னு திட்டப்பிடாது. மீண்டும் சந்திப்போம்.

நெல்லை அன்புடன் ஆனந்தி
ஏப்ரல் 11, 2026

Friday, April 10, 2026

திறனாய்வு களம்

#திறனாய்வு_களம்

நூலேணி பதிப்பகம் Nooleni publications

மற்றும்

Lollipop Children's World Publications  

பதிப்பக நூல்களை திறனாய்வு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம். தொகுப்பு நூல்களும் திறனாய்வு செய்ய வரவேற்கிறோம்.

திறனாய்வு செய்வதற்கான நேரம் 20 நிமிடங்கள்

திறனாய்வு செய்ய விருப்பமுள்ளவர்கள் இக்குழுவில் இணைக.

திறனாய்வு WhatsApp group:

திறனாய்வு களம்#01 மாதிரி காணொளி

அமெரிக்கத் தமிழ்ப் பெண் ஆளுமைகளின் நேர்காணல் தொகுப்பு வெளியீடு - ஏப்ரல் 10 2026

அமெரிக்காவில் வாழும் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் முதல் நேர்காணல் தொகுப்பில் எனது நேர்காணல் இடம் பெற்றுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொகுப்பாசிரியர் மேனகா நரேஷ் Naresh Kumar அவர்களுக்கு வாழ்த்துகள்.

நெல்லை அன்புடன் ஆனந்தி

Thursday, April 9, 2026

இலை சொட்டும் மழைத்துளி - தன்முனைத் தொகுப்பு நூல் - விரைவில்...

விரைவில்...

#இலை_சொட்டும்_மழைத்துளி

பன்னாட்டுக் கவிஞர்களின் தன்முனைத் தொகுப்பு நூல்

நூலேணி பதிப்பகம் Nooleni publications  வெளியீடு

#கன்னிக்கோவில்_இராஜா அவர்களின் வடிவமைப்பு

தொகுப்பாசிரியர்கள்:
#நெல்லை_அன்புடன்_ஆனந்தி 
#கன்னிக்கோவில்_இராஜா

ஏகாந்தம்

திறனாய்வு களம் #1 - கரடி டாக்டர்

#நூலேணி_பதிப்பகம் Nooleni publications 
#கவிச்சிறகுகள் குழுமம் 

இணைந்து வழங்கும்

#திறனாய்வு_களம் -1

#நெறியாள்கை
#நெல்லை_அன்புடன்_ஆனந்தி 
Nellai Anbudan Ananthi 

#திறனாய்வாளர்
Kamala Murali 
கமலா முரளி

#சிறப்புரை
#கன்னிக்கோவில்_இராஜா 
Kannikovil Raja

நிகழ்ச்சிக்கான YouTube link:

Tuesday, April 7, 2026

கொக்கரக்கோ ஏப்ரல் 2026 இதழில் எனது மொழிபெயர்ப்பு கவிதை

கொக்கரக்கோ ஏப்ரல் 2026 இதழில் எனது பங்களிப்பு..

மாயா ஏஞ்சலோவின் மொழிபெயர்ப்பு கவிதை

நெல்லை அன்புடன் ஆனந்தி

Sunday, April 5, 2026

பறவை மட்டும் பறக்கும் வானம் - அணிந்துரை: நெல்லை அன்புடன் ஆனந்தி - நூலாசிரியர்: அகவலன்

கவிஞர் அகவலன் அவர்களை எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் வாயிலாக அறிவேன்.

அவருடைய ஹைக்கூ நூல் பறவை மட்டும் பறக்கும் வானம் என்ற நூலிற்கு அணிந்துரை எழுதச் சொல்லி இருந்தார்.

அருமையான கவிதைகளுக்கு அணிந்துரை எழுதும் இனிய வாய்ப்பில் பெருமை கொண்டேன்.

கவிதைகளால் நம்மை மகிழ்வித்து இன்று காலத்துடன் கைகோர்த்துச் சென்ற கவிஞருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓம் சாந்தி!
*****************************
கவிஞர் அகவலன் அவர்கள் அனுப்பிய செய்தி:

வணக்கம் கவிதாயினிக்கு 
நூலேணி பதிப்பகம் வெளியிடும் எனது இரண்டாவது ஹைக்கூ நூலான "பறவை மட்டும் பறக்கும் வானம்" எனும் நூலிற்கு தங்களது அணிந்துரை தேவையானதாக பயன் படுகிறது, அணிந்துரை தருவீர்களென நம்புகிறேன்.

அன்புடன் 
  அகவலன்
செப்.26.2025
*************************************

பறவை மட்டும் பறக்கும் வானம் நூலிற்கு நான் எழுதிய அணிந்துரை:

இலக்கிய உலகில் இதயத்தைத் தொடும் விதமாக எத்தனையோ படைப்புகள் வந்த வண்ணமே இருக்கின்றன. கவிதைகள், கதைகள், கட்டுரைகள், பாடல்கள் எனப் பல்வேறு வகைமைகளில் நம்மோடு பயணித்துக் கொண்டே வருகின்றன.

கவிதைகளில் பல்வேறு வடிவங்கள் இருப்பினும்.. இன்று பலரால் விரும்பப்பட்டு எழுதப்பட்டு வருகிற ஹைக்கூ வடிவம் குறுகத் தரித்த குறளைப் போன்றே.. விதைக்குள் விருட்சத்தை அடைக்கும் வித்தை! ஹைக்கூ கவிதையின் சிறப்பு அதை வாசிக்கும் வாசகரின் மனதில் அக்காட்சிகளை விரியச் செய்வதே ஆகும்.

படித்தவுடன் கடந்து விட்டால் அந்தக்கவிதை நம்மை சிந்திக்க விடுவதில்லை. படித்த பிறகும் நம் நினைவுகளில் சுழன்று வந்தால் அதுவே அக்கவிதையின் வெற்றி.

நூலாசிரியர் அகவலன் அவர்கள் நூலின் தலைப்பை "பறவை மட்டும் பறக்கும் வானம்" என்று கவித்துவமாகப் படைத்திருக்கிறார்.
இக்கவிதை நூலில் சுமார் 124 ஹைக்கூ கவிதைகள் உள்ளன.

பெரும்பாலான கவிதைகள் நமக்கு ஜென் கவிதைகளை நினைவூட்டுகிறது. கூடவே
தாவோவும், பாஷோவும் அவ்வப்போது வந்து போகிறார்கள்.

கவிதை என்பது..
மயிலிறகாக மெல்லிய வருடலாய் இருக்கலாம்..
புயல் காற்றாக நம்மைப் புரட்டிப் போடலாம்..
நிதானித்து அசைபோடும் அளவுக்கு ஆழ்ந்த
கருத்துகளுடன் இருக்கலாம்..
கண்மூடி தியானிப்பது போன்ற உணர்வினைக் கொடுக்கலாம்..
மெல்லிசை தீண்டுவது போன்ற இன்பத்தை வழங்கலாம்..
தென்றல் காற்றின் குளுமையாக இருக்கலாம்..
தேமதுரத் தமிழின் சுவையாக இருக்கலாம்..

இப்படி ஏதோ ஒன்றை நமக்குள் ஏற்படுத்தி விட்டால் அந்தக் கவிதைக்கு ஒரு சபாஷ் போட வேண்டியதுதான். அப்படி நாம் சபாஷ் போடும் விதமாக நூலாசிரியர் அகவலன் நிறைய கவிதைகளைப் படைத்திருக்கிறார்.

முதல் கவிதையிலேயே குளிர் மாலைப் பொழுதில் நம்மை ஒரு குளத்தருகே நிற்க வைத்து விடுகிறார்.

நிலவொளி
தியானிக்கும் அல்லித்தண்டு
புத்தனாக

மாலை நேரத்தில் அமைதியான குளக்கரையில் நிலவொளி வீசிக் கொண்டிருக்க.. அங்கே புத்தனைப் போல் தியானிக்கும் அல்லித் தண்டைப் பற்றி எழுதியிருக்கிறார்.

எவ்வளவு அழகான காட்சி. மௌனமான நிலவொளியில் ஆடாமல் அசையாமல் அங்கே தியானித்துக் கொண்டு இருப்பது போல நின்று கொண்டிருக்கும் அல்லித்தண்டினை புத்தருக்கு இணையாகப் பார்த்திருப்பது கவிதைக்குச் சிறப்பு. நிலவொளி என்றாலே மயக்கம் தருவது தான்.. அப்படிப்பட்ட நேரத்தில் தியானம் செய்வது என்பது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியது. அப்படிப்பட்ட அழகிய தருணத்தைத் தொடக்கக் கவிதையாகப் படைத்திருப்பது சிறப்பு.

மரம் நட்டேன்
ஒரு வருடம் போனது
ஜெகரந்திப் பூ

ஜெகரந்திப் பூ மலைப் பகுதிகளில் பூக்கக்கூடிய ஒரு மலர். மரம் முழுக்க நீல வண்ணத்தில் அருமையாகக் காட்சியளிக்கும்.

ஒரு பூச்செடியை நட்டவுடன் பூப்பூத்து விடாதா என்ற ஆவல் அனைவருக்கும் இருக்கும் தான். ஒரு வருடம் காத்திருந்து.. அந்தப் பொறுமைக்குப் பரிசாக  மலர்ந்த பூக்களைக் கண்டதும்.. காத்திருந்ததெல்லாம் மறந்து விடும். அழகான கவிதைக்கு வாழ்த்துகள்.

 
வெற்றுக்கிளை
அந்தியில் காகம்
மறையும் சூரியன்

ஹைக்கூ கவிதைகளில் இயற்கை காட்சிகள் எப்போதுமே சிறப்பு தான். அந்தி நேரத்தில் மறையக் கூடிய சூரியனையும்.. அந்த மாலை நேரத்தில்.. மரத்தில் அமர்ந்திருந்த காகம் பறந்து போன பிறகு அங்கே வெற்றுக்கிளையாக காட்சி அளிப்பதையும் மனக்கண் முன் நிறுத்துகிறார் கவிஞர்.
மறைந்தது சூரியன் மட்டுமல்ல மரத்திலிருந்த காகமும் தான் என்பதற்கு அழகான காட்சிப்படுத்துதல்.

சேவலின் குரல்
அதிகாலை எழுகிறது
உதிக்கும் சூரியன்

அதிகாலை வேளையில் சேவல் கூவி மனிதர்களை எழுப்பக் கேட்டிருக்கிறோம். இங்கு சேவலின் குரல் தான் அதிகாலைச் சூரியனையே எழுப்புகிறது என்ற காட்சிப்படுத்துதல் மிகச்சிறப்பு.

கொட்டும் மழை
பூவின் மீது சத்தம்
வண்டின் பாடல்

மழைபெய்யும் காட்சியே மனதிற்கு ரம்மியமானது. அப்படிக் கொட்டும் மழையில் பேரிகைச் சத்தம் போல் பூவின் மீது என்ன சத்தம்? என்று நம்மை யோசிக்கச் செய்கிறார். அங்கே வண்டின் பாடல் கேட்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார். மென்மையான மலரின் மீது சத்தம் கேட்கிறதாம்.. அங்கே வண்டின் ரீங்காரம்.

இடம் மாறும் பூச்செடி
பழகிக் கொண்டது
வண்ணத்துப்பூச்சி

ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச்
செடியை மாற்றி வைக்கும் பொழுது.. அது வேர் பிடித்து நிற்பதற்கு கொஞ்சம் காலம் ஆகும் தான். அது விட்டு வந்த இடத்தில் இருந்து பிரிந்து வந்த அதிர்ச்சியில் இருக்கும். இடம் மாறியதை அப்பூச்செடி பழகிக் கொள்கிறதோ இல்லையோ.. இங்கே வண்ணத்துப்பூச்சி அந்த மாற்றத்தை பழகிக் கொண்டது என்று எழுதியிருக்கிறார்.

மார்கழி உதிர்கிறது
பூவின் மேல் பூ
காலை பனித்துளி

மார்கழிப் பனி நம்மை நடுங்க வைக்கும்.
அந்த மார்கழியே உதிர்வதாய் எழுதியிருக்கிறார். உதிர்ந்த மார்கழி பூவின் மேல் பூப்போல் அமர்கிறது. காலைப் பனித்துளி பூவில் அமர்ந்திருப்பது போல அழகிய காட்சியாக கவிஞருக்குத் தெரிந்திருக்கிறது.

பூ அறிக்கை
வேப்பம்பூ உதிர்கிறது
இனிக்கும் பூமி

எவ்வளவு அழகிய அறிக்கை! வேம்பு என்றாலே கசப்பு என்று நாம் அறிவோம். அத்தகு வேப்ப மலர்கள் உதிர்ந்ததில் பூமி இனிக்கிறதாம். அழகிய முரணான கவிதை.

கட்டிய புது வீடு
தனியறை கட்டியது
குளவிகள் கூடு

வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தைப் பண்ணிப்பார் என்று சொல்வார்கள். அவ்வளவு சிரமமான விசயம் அது. பார்த்துப் பார்த்து கட்டிய புது வீட்டில்.. எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தன் போக்கில் தனியறை கட்டிக் கொண்டிருக்கிறது குளவிகள் என்று ஒரு அழகான காட்சியைச் சொல்லியிருக்கிறார்.

தூசி தட்டினேன்
வீடெங்கும் இசை
கொலுவில் வைத்த வீணை

அதுவரை மீட்டப்படாமல் தூசி படிந்து கொண்டிருந்த வீணை.. கொலுவில் வைப்பதற்காக தூசி தட்டப்படுகிறது.. அந்த நேரத்தில் அதில் இருந்து வரும் இசை வீடெங்கும் கேட்கிறதாம்.

பூவை வரைந்தேன்
மணமாக இருக்கிறது
காகிதம்

பூ என்று சொன்னதுமே நமக்குள் ஒரு மலர்ச்சி வரத்தான் செய்யும். அதிலும் வண்ண வண்ண மலர்களைப் பார்க்கும் பொழுது அதன் நிறமும், மணமும் நம் மனதை அசைக்கத் தான் செய்யும். வரைந்த பூவிலும் கூட வாசம் வருகிறது.

இப்படி ஒவ்வொரு கவிதைகளையும் சிறப்பான காட்சிகளாய்  நமக்குக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர்.

சில கவிதைகள் படித்ததும் புரிந்து போகும்.. சில கவிதைகள் அசைபோடப் போட நம்மை அசைத்துப் போகும்..
அப்படி மனதை அசைக்கும் பல கவிதைகளைப் படைத்திருக்கும் கவிஞருக்கு வாழ்த்துகள்.

இயற்கைக் காட்சிகளையும்.. தான்  ரசித்த அழகியலையும்..  ஹைக்கூ கவிதைகளாகச்  சமைத்துக் கொடுத்திருக்கும் நூலாசிரியருக்கு சிறப்பு வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்.

மென்மேலும் அவரின் தமிழ்ப்பணி தொடர மனமகிழ் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன்.

இந்த நூலினை மிகச்சிறப்பாக வடிவமைத்து வெளியிடும் நூலேணி பதிப்பகத்திற்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க வளமுடன்!

நெல்லை அன்புடன் ஆனந்தி
மிச்சிகன் அமெரிக்கா
இதழாசிரியர், நூலேணி இதழ்
துணை இயக்குனர், லாலிபாப் சிறுவர் உலகம்
பன்னாட்டு இயக்குனர், தமிழால் இணைவோம்
நிறுவுனர், அமெரிக்கத் தன்முனைக் கவிதைக்கூடம்

Friday, April 3, 2026

விரைவில்... ஹைக்கூ திருவிழாவில்... காற்று துரத்திய இலை

Thursday, April 2, 2026

தினத்தந்தி தேவதை இதழில் - அமெரிக்காவில் தமிழ் வளர்க்கும் ஆனந்தி


பட்டிமன்ற நடுவராக திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம் நியூஜெர்சியில் கலந்து கொண்ட மகிழ்வான தருணம்

எனது இலக்கியப் பயணத்தில்.. 
நியூ ஜெர்சி, அமெரிக்காவில் உள்ள திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தில் இருந்து.. 
NJ Thiruvalluvar Tamil Sangam  

தீபாவளியை முன்னிட்டு நடந்த நேரடி நிகழ்விற்காக..

சிறப்புப் பட்டிமன்ற நடுவராக..
அழைத்திருந்தார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

பரிந்துரை செய்த Deebapriya Periyasamy அவர்களுக்கும், திருவள்ளுவர் தமிழ்ச்சங்க பொறுப்பாளர்கள் அனைவருக்கும் என் இனிய நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

நெல்லை அன்புடன் ஆனந்தி

வான் மழையே வா - நூல் விமர்சனம் - R. சேகர் - திரு.வி.க. பேச்சுப் பயலரங்கம்

திரு.வி. க. அமைப்பைச் சார்ந்த அன்பிற்கினிய ஆளுமை R_சேகர் ஐயா அவர்கள் எனது 6-ஆம் நூலான #வான்_மழையே_வா நூலினை வாங்கிப் படித்து தனது அன்பான கருத்தினைப் பதிவிட்டு இருக்கிறார்கள். 

இது போன்ற அன்பான கருத்துகள் பின்னூட்டங்கள் ஒரு எழுத்தாளரை மென்மேலும் செதுக்கக்கூடிய ஊக்கம் தரக்கூடிய வித்துகள். அத்தகைய வித்தினை அன்போடு விதைக்கும் ஆளுமைகளுக்கும் தோழமைகளுக்கும் என் அன்பும் நன்றியும்.

மனமார்ந்த நன்றி #R_சேகர் ஐயா..
*****

#R_சேகர் ஐயா அவர்களின் பின்னூட்டம்:

🍋🍎🍌📜📜🍌🍎🍋

     *வான் மழையே வா !* 
    *குறள்* *அமுதைத் தா !* 

             உலக உயிர்களின் ஜீவிதத்தில்,மனித உயிர் மட்டுமே உண்ணும் கனி குறள்கனி. 

           ஆனாலும்,அக்குறள் கனிகளை உண்ணும் கோடானு கோடி மனிதர்களுள் ஒரு சிலர் மட்டுமே அதன் கருத்து விதைகளை மனித மனங்களில் விதைக்கும் பேறு பெறுகிறார்கள் . 

    அத்தகைய பாவலர்களுள் ஒருவராக,  அற்புதக்குறள்கள் 200ன் ஆழ்ந்த நுட்பங்களை, சிறுச்சிறு கவிதை விதைகளாய் சுருக்கி விதை
த்திருக்கும் தங்களின், அணுவைத் துளைத்து சிறுகத் தரித்த நல்லுரை

        வானுயர் வள்ளுவரின் குமரிச் சிலை நாற்பதோடும் ஜமாலின் குறள்சிந்தும் ஓவியங்களோடும், ராஜனின் மழைக்குடை சிறுமியின் துள்ளல் போன்றும்,மணிவா
சகத்தால் மிளிரும் தங்கள் குறள் எண்ணங்கள் அத்தனையும்,

சின்னக் குழந்தைகளின் எண்ண வானில் சிந்தும் தேன் மழை போன்றது. அதில் நனைந்து மகிழ்ந்த போது ….. நானும் ஓர் சிறு குழந்தையானேன் .

பரிமேலழகர்,ஜி.யு. போப், W.H.ட்ரூ, வ.வே.சு, மு.வ, கலைஞர் எனும் உலகத் திருக்குறள் உரை நாயகர்களின் வரலாற்று வரிசையில் இனி தங்களது பெயரும் 

    *நெல்லை அன்புடன்* 
            *ஆனந்தி *

என்று , *தங்கமென* *மின்னும்* *மேடம்* .

🌏🌏  🌟🌟🌟 🌏🌏

வான் மழையே வா - நூல் விமர்சனம் - முனைவர் ச. சந்திரகலா

அன்பிற்கினிய தோழமை #முனைவர்_ச_சந்திரகலா அவர்கள் எனது 6-ஆம் நூலான #வான்_மழையே_வா நூலினை வாங்கிப் படித்து தனது அன்பான கருத்தினைப் பதிவிட்டு இருக்கிறார்கள். 

இது போன்ற கருத்துகள் பின்னூட்டங்கள் ஒரு எழுத்தாளரை மென்மேலும் செதுக்கக்கூடிய ஊக்கம் தரக்கூடிய வித்துகள். 

மனமார்ந்த நன்றி #சந்திரகலா தோழி..
*****

#முனைவர்_ச_சந்திரகலா தோழி அவர்களின் பின்னூட்டம்:

வணக்கம் 
வள்ளுவத்தை சுவாசித்து இன்றைய சிறார்களுக்காக கொடுத்த சொல்லாடல் மிக அருமை... 
இடை இடையே சொல்லாடலுக்கு ஏற்ற ஓவியம் மிக அருமை வாழ்த்துக்கள் அன்புடன் ஆனந்தி அம்மா 💐💐

முனைவர் ச.சந்திரகலா
தமிழ்த்துறைத் தலைவர்,
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்.

சோர்விலாள் பெண் - நூல் விமர்சனம் - அன்புப்பாலம் இதழ்

#அன்புப்பாலம் இதழின் 'நூல் விமர்சனம்' பகுதியில் எழுத்தாளர் Nellai Anbudan Ananthi அவர்களின் 'சோர்விலாள் பெண்' நூல் குறித்த பார்வை

என்னுயிர் நீயன்றோ - நூல் விமர்சனம்

நூல்:
என்னுயிர் நீயன்றோ

நூல் விமர்சனம்:
வாழும் வரலாறு அ. சுப்ரமணியன்

வெளியீடு:
மணிவாசகர் பதிப்பகம்

கவிதை நூல்கள் என் கைகளில்.
நன்றி மட்டும் சொல்வது நயமல்ல.
நானறிந்த நல்லவற்றை
நவில்கின்றேன் கருத்தாக.
அன்றலர்ந்த பூப்போல
நன்று மலர்ந்த நல் கவிதை.
அது அந்தக்காலம்
தைமகளின் தளிர்க்கரத்தில்
தாய் தந்த மலர்கரம்.

ஏகாந்தம் இதுவே
இளமையின் இன்பமெல்லாம்
இப்போதும் நினைவில்.

என் இறுதியென்றால்
வாழ்வின் வசந்தம்

உள்ளமேகோயிலாய்
வாழ்கையின் வழிகாட்டி

மனிதர்கள் பலவிதம்
மனம் போல் வாழ்வு

மேகமே
நீல வானம் நிகழ்த்தும்
நித்த நித்த அதிசயங்கள்.

நிதர்சனம் நீ
காதலுக்கு விமர்சனம்

எதுவென்றேன்
காதலும்‌‌ காமமும் கலந்துதான் வாழ்வு

சூழ்கொண்ட மங்கை
வானம் சூழ் கொள்ள
வையம் நலம் கொள்ளும்.

விடியல்
கதிரவனின் ஆட்சியில்
கண்ட காட்சி.

என்னுயிரில். சித்திரமாய்
காதலின் தவிப்பு

யாருமில்லா வானத்தில்
அகநானூற்றின் அடையாளம்

அன்னைக்காக
பெண்ணே அன்பின் பெருவடிவம்.
மண்ணே விதைக்கு உயிர் வடிவம்.

நீங்காத அழகு
நிலவின் ஒளியழகு
நீங்காத தனியழகு.

புதுக்கவிதை
இலக்கணம் தாண்டிக்கிடைக்கும்
இன்பப்புதையல்.

தயைசெய்
விடியாத இரவே
முடியாத இன்பம்

முழுதாய் என்னை
கோயிலிலே வரும் காதல்.
கூடுமென நினைத்தாலும்
இடையில் வந்தகாதல்
இடம் மாறிப்போய்விடும்.

இத்தனையும் மொத்தமாய் என்னுயிர் நீயன்றோ எடுத்தியம்பும்
நித்தில வார்த்தை யன்றோ.

எனக்காய் பிறந்தவளே.
வண்டாடும் சோலையிலே
மலர்ச்சென்டாக நானிருந்தேன்
கொண்டாட வந்தவளே எனைத்
திண்டாடும் படி ஏன் செய்தாய்.
என்னுயிர் நீயன்றோ
மனதை வருடும் வரிகள்
மனதை நிறைத்த கவிதை.
வாழ்த்துக்கள்

மதிப்புறு முனைவர் அ. சுப்ரமணியன்
தலைமைச் செயலர், தமிழால் இணைவோம் உலகத்தமிழ்ப் பேரியக்கம்

தும்பியின் தூறல்கள் - நூல் விமர்சனம்

என்னுயிர் நீயன்றோ - நூல் விமர்சனம்

அன்பான வணக்கம்.

எனது முதல் கவிதை நூல் என்னுயிர் நீயன்றோ-விற்கு கவிஞர் கோவை சசிகுமார் அவர்களின் நூல் விமர்சனம்.

மிக்க நன்றி.


என்னுயிர் நீயன்றோ
#நூல்_விமர்சனம்

நூலாசிரியர்:
நெல்லை அன்புடன் ஆனந்தி

பதிப்பகம்: மணிவாசகர் பதிப்பகம்

மனிதனை தன் நெறி தவறாது ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டமைப்போடு விட்டுக்கொடுக்க முடியாத அன்போடு வாழவைப்பது காதல். கணவன் மனைவி என்ற நல்ல பந்தத்தை உருவாக்குவதும் காதல்தான். காதல் வயப்படாத மனிதன் இல்லையெனறுதான் சொல்ல முடியும். வாழ்க்கையின் பெரும்பகுதி நிம்மதியைத் தரக்கூடியது காதல் வாழ்ககைதான். மனிதன் தன் வாழ்க்கைமுறையில் எவ்வளவு மாற்றங்களைக் கொண்டுவந்தாலும் மாற்றமுடியாத ஒன்று காதல். அனைவரும் இதை கடந்துவந்துதான் ஆக வேண்டும். பெண் மீது ஆணுக்கும், ஆண் மீது பெண்ணிற்கும் அன்பின்பால் ஈர்ப்பு உருவாகி உனக்கென நானும் எனக்கென நீயும் என்ற புரிதலுடன் கூடிய வாழ்க்கையின் எல்லைவரை பயணிக்கவும், அன்பு, பாசம், நேசம், காத்திருப்புக்கள், ரசனை, உரையாடல், ஸ்பரிசங்கள் என ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் கடைசி வரை வாழும் வாழ்க்கைதான் காதலுக்குச் சான்று.  இப்படியாக காதல் ரசனையில் "என்னுயிர் நீயன்றோ" என்ற கவிதை தொகுப்பை கவிஞர் அன்புடன் ஆனந்தி அவர்கள் நமக்கெல்லாம் வழங்கியிருக்கின்றார். தொகுப்பு முழவதும் காதல் ரசனையைச் செறிவூட்டியிருக்கின்றார். அலாதிப் பிரியங்களை சொற்களில் அள்ளிக் கொட்டுகின்றார். நூல் முழுக்க சலிப்பில்லாமல் ஒரு காதல் வாழ்க்கையை வாழும் அளவுக்கு எளிமையான கவிதை நடையில் மிகச்சிறப்பாக அமைத்திருக்கின்றார். தொகுப்பு முழுவதும் காதலின் சாம்ராஜ்யத்தில்  பவனி வருவதுபோல் தோன்றுகிறது. மொட்டுக்களில் விரிந்த நூறு கவிதை மலர்களை தலைப்பிட்டு கவிதையாக்கி இருக்கின்றார் கவிஞர் அன்புடன் ஆனந்தி. வாசிப்போரின் உள்ளம் கொள்ளை கொள்ளும் அளவுக்கு காதல் ரசனைகள், நினைவுகள், பிரிவுகள், கற்பனைகள், ஸ்பரிசங்கள் என அனைத்தையும் மற்றும் சமூகம் சார்ந்தும் தனது எழுத்துக்களில் ரசிக்க வைத்திருக்கும் நூலாசிரியர் அன்புடன் ஆனந்தி அவர்களுக்கு வாழ்த்துகள்.

சிறப்பாக மலர்ந்திருக்கும் நூறு காதல் மஞ்சரிகளில் நறுமணமாய் ஐந்து கவிதைமலர்களின் வாசனையை எனது விமர்சனத்தில் மணக்கச் செய்கின்றேன்
****************************

காதல் தனது தொடக்கத்திலும்  காதலிக்கும்போதும் உள்ளத்தை உருக வைத்து மெலிதான உதட்டோர புன்னகையை தனது காதல் இணைக்குத் தெரியும்படி சமிக்கை செய்யும் ரகசியம்தான் காதல். 
காதல் ரசனை ரகசியமாய் பேசவைத்து அதை தனிமையில் அந்த நினைவுகளை ரசிக்க வைத்து சிரிக்க வைக்கும். சில நேரங்களில் இது என்ன உணர்வு? என சிந்திக்க வைத்து தனக்குள் ஒரு தேவதையாய் மாற்றி சிறகடித்துப் பறக்க வைக்கும். மேலும் காதல் என்பது பல இரவுகளை விழிக்கச் செய்து பகலில் உறங்க வைக்கும். காதலென்ற உலகத்தில் பயணிக்கும்பொழுது வெளியுலகத்தின் நிகழ்வுகளை மறக்கச் செய்யும். மனதில் கற்பனைக் கோட்டை கட்டி தனக்கான காதல் மாளிகையில் அருவி, மரம், குருவி, மற்றும் பலவற்றுடன் பேச வைத்து மனதுக்குள் மத்தளம் அடிக்க வைக்கும். அன்பின் அணுசரனையைக் கற்றுக்கொடுக்கும். நிறைய பேச வைக்கும். தன இணையின் மனதிற்காக நிறைய சாதிப்பதற்கான வலிமையைக் காதல் கொடுக்கும். விதியைக் கூட வெல்லும் என்கிறார். இப்படியான உணர்வுகளைக் காதல்தான் கொடுக்கும் என்பதை பக்கம் 50ல் "இதன் பேர்தான் காதலா" என்ற தலைப்பில் காதல் இம்சைகளைப் பதிவு செய்கின்றார்

#கவிதை பக்கம் 50
தலைப்பு: #இதன்_பேர்தான்_காதலா

உள்ளத்தை உருகச் செய்யும்..
உதட்டில் புன்னகை வருவிக்கும்..
ரகசியம் பேசச் சொல்லும்..
ராத்திரியில் சிரிக்க வைக்கும்..

தனித்தமர்ந்தே சிந்தனை செய்யும்..
தாவி விண்ணில் பறக்கச் செய்யும்..
துடிப்புடன் இருக்கச் செய்யும்..
தூக்கத்தையும் கெடுத்துச் செல்லும்..

உலக நடப்புகளை உதறித் தள்ளும்..
உள்ளுக்குள் ஒய்யார நடை போடும்.
கனவுலகில் வாழ்க்கை நடத்தும்..
நிகழ்வுகளில் கனாக்காணும்..

மனத்திற்குள் மாளிகை கட்டும்..
மாளிகையில் தன் துணை நிறுத்தும்..
மரம், அருவி, குருவியுடன் பேசித் திரியும்..
மத்தளமே இல்லாமல் வகையாய் வாசிக்கும்..

அனுசரணையாய் நடந்து கொள்ளும்..
ஆத்திரப்பட ஆழ்ந்து யோசிக்கும்..
சாத்திரம் பேசிச் செல்லும்..
சாதிக்க வலிமை கொடுக்கும்..

விண்மீண்களை விலை பேசும்..
விட்டு நகர்ந்தால் தர்க்கம் செய்யும்
விவரணையாய் பேசச் சொல்லும்
விதியையும் வெல்லச் செய்யும்...!
***********************

காதல் வாழ்வியல் நியதிக்கு உட்பட்டது. காதலின் இன்பம் காதல் துணை தன்னுடன் இருப்பதும், துன்பம் என்பது பிரதலில் தன்னைவிட்டு தூரமாய் சென்று ஏங்க வைக்கின்றது  என்கிறார் நூலாசிரியர். எதுவெல்லாம் என்பதில் கண்களில் கலப்பதும், அன்பின் வழி அடைக்கலமாய் காமம் கட்டாயச் சிறையாக்குவதும், மோகம் எதுவெனில் பேச்சிலும் மூச்சிலும் லயித்திருப்பதும், உனக்கு நான் எனக்கு நீயென்ற தேடல்களின் உயிர்ப்பும் ஆகியன காதலில் எதுவென்றேன் என்ற தலைப்பில் பக்கம் 59ல் அழகு செய்கின்றார் கவிஞர் அன்புடன் ஆனந்தி.

#கவிதை பக்கம் 59
தலைப்பு: #எதுவென்றேன்

இன்பம் எதுவென்றேன்
இனியவள் உன்னுடன்
இயைந்து இருப்பதென்றாய்..

துன்பம் எதுவென்றேன்
தூர இருந்தபடியே
ஆறாத் துயரத்தில்
ஆழ்த்துவதென்றாய்..

காதல் எதுவென்றேன்
கண்கள் நான்கும் 
கலப்பதென்றாய்..

காமம் எதவென்றேன் 
உன்னைக் கண்டவுடன் கைகளுக்குள்
கட்டாயம் சிறை
வைப்பதென்றாய்..

மோகம் எதுவென்றேன்
மூச்சிலும் பேச்சிலும்
முக்காலமும் உனையே
மோகித்திருப்பதென்றாய்..

தேடல் எதுவென்றேன்
தெரிந்தும் என்னுயிரைத் 
தேடித் தேடித்
திரிவதென்றாய்...
******************************

வாழ்க்கையின் பெரும்பகுதி எதுவும் நிரந்தரமில்லாதது. நினைவுகள், வாழ்வியலின் பல தருணங்கள் என அனைத்தும் கடந்து செல்லக் கூடியவைகள். 
மலர்கள் உலர்ந்து போவோம் என்று தெரியாமல் இதழ்விரித்துச் சிரிக்கின்றன எனவும், இலைகள் உதிர்ந்து விடுவோம் என்று தெரியாமல் சலசலக்கின்றன எனவும், கண்களைக் கவரும் வண்ணக் கோலங்கள் கலைந்து போவோம் என்று உணர்வதில்லை 
எனவும் மெழுகுவர்த்தி கரைந்துபோவோம் என்று கலங்காமல் ஔியை வீசுவதாகவும் விட்டில் பூச்சிகள் எரிந்துவிடுவோம் என்று தெரியாமல் நம்பிக்கையில் வாழ்வதாகவும் வாழ்வியலில் எதுவும் நிரந்தரமில்லாமல்தான் வாழ்கிறோம் என்பதை மிக அருமையாக பக்கம் 88ல் எது நிரந்தரம்? என்ற தலைப்பில் பதிவு செய்கின்றார்.

#கவிதை பக்கம் 88
தலைப்பு: #எது_நிரந்தரம்?

உலர்ந்த போவோம்
என்றறியாமல்
உதடு விரித்துச் சிரிக்கும்
உன்னத மலர்கள்..

உதிரப்போவதை
உணராமல்..
உற்சாகமாய்ச்
சலசலக்கும் இலைகள்..

கலைந்து போவோம்
என்று உணராக்
கண் கவரும்
வண்ணக் கோலங்கள்..

கரைந்து போவோம்
என்பதறியா 
ஏராள விட்டில் பூச்சிகள்
எல்லாம் வாழும்
நம்பிக்கையில்...

எழுதிய கவிதை
அழிந்து போவதில்லை
எடுத்த பிறவி
எதுவுமற்றுப் போவதில்லை...

எதுவும் நிரந்தரம் இல்லை
எதாரத்தத்தை மனத்தில் ஏற்றி
எண்ணியதை ஈடேற்றி
ஏகாந்தமாய் வாழ்வோம்...!
******************************

பெற்றோர்கள், சகோதர சகோதரிகள் என பல உறவுகள் என இருந்தாலும் தனக்கென உயிர்ப்புள்ள ஓர் உறவை ஏற்படுத்தி அதனை தனதாக்கி அவன் எனக்கானவன்/அவள் எனக்கானவள் என்ற புதிய உறவை ஏற்படுத்துவது காதல்தான். அந்த உறவு வாழ்க்கையின் எல்லைவரை தனக்குள் வைத்திருக்கும் அன்பின் வசம் காதல் புதிய உறவை வலுப்படுத்துகின்றது. எக்காரணத்திற்காகவும் அந்த உறவை விட்டுக் கொடுக்காமலும், ஒருபோதும் பார்க்காமலும் இருக்க முடியவில்லை எனவும், அந்த உறவை நிராகரித்து நினைத்த மாத்திரம் காகிதமாய் கசக்கி வீச முடியாது எனவும், நினைத்தவுடன் கலைத்துவிட இந்த உறவானது கருவில்லை எனவும், இவ்வாறான உயிரில் கலந்த உறவை பக்கம் 117ல் உணர்ச்சி மிகுந்ததாய் உயிரப்பூட்டி இருக்கின்றார் கவிஞர் அன்புடன் ஆனந்தி.

#கவிதை பக்கம் 117
தலைப்பு: #உயிரில்_கலந்த_உறவு

உதிரத்தில் உனை ஊற்றி
உன் பெயரை எனில் ஏற்றி
உளளார்ந்த அன்பினாலே
ஊமையாய் வலம் வந்தேன்... 

எத்தனைத் திங்கள் என்று
எனக்கேதும் புரியவில்லை
எதிர் பார்க்காமல் என்னால்
இருக்கவும் முடிவில்லை...

நினைத்த மாத்திரத்தில்
கலைத்துவிட இது கருவுமல்ல
கசக்கி எறிந்து விடவோ
இது காகிதமும் அல்ல....

நினைவோடும் உயிரோடும்
ஒன்றாகி விட்ட உரு...
ஏனோ உன் நிம்மதிக்காய்
என்னெதிரில் நீ இருந்தும்
எவரோ போல் நானிருந்தேன்...

என்னை அசைய விடாமல்
எதிர்த்து நிற்கும் காதலிடம்
நான் என்ன சொல்லி
இசையச் செய்வேன்

உணர்வில் கலந்த உறவை
உயிராய் மாறிவிட்ட திருவை
உனது நிம்மதிக்காய் ஒன்றும்
இல்லாதது போல் இன்று நான்..!
****************************

எண்ணங்களைப் பிரதிபலிப்பது முகம். முகத்தைப் பிரதிபலிப்பது கண்ணாடி. எப்படியெல்லாம் மனம்போல் முகம் மாறுகின்றதோ அதைக் கண்ணாடி அப்படியே உண்மையாகப் பிரதிபலித்துக் காட்டும். எண்ணங்களில் கோபத்தின் போது குரூரனாகவும், எலனலாவற்றிற்கும் சிரித்துக் கொண்டே இருந்தால் ஏமாளியாகவும், எவ்வித உணர்வுமில்லாமல் இருந்தால் எமட்டனாகவும், எரிச்சலைக் காட்டினால் எதிரி எனவும், எதிர்மறை உணர்ச்சிகளைக் காட்டினால் எள்ளலுக்கும் உள்ளாக நேரிடும் எனவும், மாறாக எழில், சிரிப்பு, ஒயிலான சிரிப்பு, சாந்தமான பார்வை இப்படிப் பலவாறாக முகத்தில் உண்டாக்கிக் கொண்டால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக உருவாகலாம் என்பதை கவிஞர் பக்கம் 157ல் கவிதையாக்கித் தந்திருக்கின்றார்

#கவிதை பக்கம் 157
தலைப்பு: #முகம்

உன் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி...
உன் கோபத்தைக் காட்டினால் குரூரனாவாய்..
எலனலாவற்றுக்கும் சிரித்தாய் என்றால்
ஏமாளி ஆகிப் போவாய்
எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் இருந்தால்
எமட்டன் ஆவாய்..
எரிச்சலைக் காட்டினால் 
எதிரி ஆகிப் போவாய்..
எதிர்மறை உணர்ச்சி காட்டினால்
எள்ளலுக்கு ஆளாகிப் போவாய்...சரி பிறகு
எப்படித்தான் என் முகத்தை வைத்திருப்பது?
எழிலாக ஒரு சிரிப்பு...
ஒயிலாக ஒரு நகைப்பு...
சாந்தமாய் ஒரு பார்வை...
சக்தி தருவதாய் ஒரு முறுவல் சங்கேதமாய் ஒரு சேதி..
சாஸ்வதமாய் ஒரு புன்னகை..
இத்தனையும் உன் முகத்தில் 
இயல்பாய் வருமென்றால் உன்னைப்போல்
இவ்வுலகில் அதிர்ஷ்டசாலி யாருளரோ?
*************************

176 பக்கங்களில் நூறு கவிதைகளாக ரசனையோடும் வலியோடும் நிதர்சனமாய் மெல்லிய இழையோடும் மிருதுவான உணர்வுகளில் காதலையும் ஆங்காங்கே சமூக உணர்வையும் வெளிப்படுத்திய பாங்கு சிறப்புக்குரியதாகும்.  அமெரிக்காவில் பல இணையங்கள் மற்றும் தமிழ் நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் கவிஞர் அன்புடன் ஆனந்தி அவர்களுக்கு #என்னுயிர்_நீயன்றோ நூல் வழி எனது அன்பிற்கினிய பாராட்டுதலையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்

சிறந்த முறையில் அட்டைப்படம் மற்றும் அச்சேற்றிய மணிவாசகர் பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள்

கவிஞர் கோவை சசிகுமார்

வான் மழையே - நூல் விமர்சனம் - வ. வெ. ராஜாமணி, பெங்களூர்

வான் மழையே வா நூலுக்கு எழுத்தாளர் அன்பிற்கினிய ஆளுமை #கவிஞர்_இராஜாமணி ஐயா அவர்களின் விமர்சனம்..

மகிழ்ச்சியின் நெகிழ்வில் நான்...
நன்றி ஐயா

#நெல்லை_அன்புடன்_ஆனந்தி

******

               வ.வெ. இராஜாமணி  (இலக்கியக் கவி மாமணி)                                
                  35D, 26th Main, 4th T Block பெங்களூர்- 560 041
                           கை பேசி 9940010831
                                                        நாள் 27-06-2023

அன்புக்குரிய ஆனந்தி,

“வான் மழையே வா” கவிதை நூல் கிடைக்கப் பெற்றேன். அதில் படைத்துள்ள அத்துனை கவிதைகளையும் படித்து இன்புற்றேன். 

எல்லாக் கவிதைகளும் அருமையாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. திருக்குறலின் மையக் கருத்துக்களை உள்ளடக்கி எழுதப்பட்டு இருப்பதாலோ என்னவோ திருக்குறளையே படிப்பது போன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. ஒன்றே முக்கால் அடிக் குறலின் கருத்துக்களை அப்படியே உள்ளடக்கி கவிதையாக்கி வழங்கி இருப்பது மிகச் சிறப்பு.

முழுக் கவிதைகளையும் இக்கடிதத்தில் சுட்டிக்காட்டி கருத்துத் தெரிவிப்பது என்பது இயலாது என்பதால் சில கவிதைகளை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

1. கொட்டும் மழை என்ற தலைப்பில் 
             “மழையாலே உலகமெல்லாம் 
             இங்கே வாழுது 
             அதனாலே மழை இங்கே 
             அமிழ்தம் ஆகுது 
மிகச் சிறப்பான வரிகள். உலகம் வாழ்வதாலேயே மழை அமிழ்தம் ஆகிறது.
ஒரு பொருளின் உபயோகத்தாலேயே அது சிறப்புப் பெறுகிறது என்பதை சுட்டிக்காட்டிய வரிகள்.

2. தானமோ தவமோ என்ற தலைப்பில்
             யாராக இருந்தாலும் 
             மழை இல்லாமல்
             நேரான வாழ்க்கையும் 
             இங்கு இல்லையே
மழை என்பது மனிதருக்கு மிக அவசியம். அது இல்லாமல் புல் பூண்டு கூட உலகில் வாழ முடியாது என்ற கருத்தை வலியுறுத்தும் பாடல் வரிகள் சிறப்பானவை.

3. கண நேரம் தங்காது என்ற தலைப்பில்
                   எல்லா உயிரிடத்தும்             
                   அன்பாக இருப்பவர்
                   அவரே அறவோர் 
                   அவரே அந்தணர்
அன்பே கடவுள் என்ற கருத்தினை வலியுறுத்தும் வரிகள் இவை. அன்பு இல்லாதோர் அறவோராகவோ அல்லது அந்தணராகவோ கருத முடியாது என்பதை இந்த வரிகள் விளக்குகின்றன.

4. ஏற்ற துணை என்ற தலைப்பில்
                    துணையாக வந்தவள் 
                    இணக்கமாக இல்லையெனில்
                    வேறென்ன சிறப்பிருந்தும்  
                    அவ்வாழ்க்கை வீணேயாம்
மனைவியாக இருப்பவள் இல் வாழ்க்கையில் அனுசரிப்புடன் இருத்தலின் அவசியத்தைப் புரிய வைக்கும் வரிகள்.இரட்டை மாட்டு வண்டியில் ஒரு மாடு சண்டித்தனம் செய்தால் வண்டி எப்படி ஓடும். வாழ்க்கையின் இலக்கணத்தைச் சிறிய வரிகளில் விளக்கி இருப்பது சிறப்பு.

5. அறம் கூறும் நன்மை என்ற தலைப்பில்
                    பின்னாலே புறம்கூறிப்      
                    பேசுவதைக் காட்டிலும்
                    கண்ணெதிரில் கடுமையாய்ப் 
                    பேசினாலும் தப்பில்லை
முன்னால் இன்முகம் காட்டிப் பின்னால் வன் முகம் காட்டும் பழக்கத்திற்கு இது ஒரு சாட்டை அடி. மிகச் சிறப்பு. 

பொதுவாக இந்த நூல் யாவராலும் படிக்கப்பட வேண்டிய நூல். பாகம் ஒன்றே சிறப்பாக இருக்கிறது. மற்ற பாகங்கள் இதே சிறப்போடு இருக்கும் என்றும் எதிர் பார்க்கலாம்

இலக்கியப்பணிஎன்றும் தொடரட்டும். வாழ்த்துக்கள்

அன்புடன்
வ.வெ. இராஜாமணி

சூரரைப் போற்று - நூல் விமர்சனம்

சூரரைப் போற்று - மகாகவி பாரதியார் புதிய ஆத்திச்சூடி தன்முனைக் கவிதைகள் - நெல்லை அன்புடன் ஆனந்தி - ஒரு பார்வை - பொன். குமார்

தமிழ் மூதாட்டி ஒளவையார் முதன் முதலில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் முதன் முதலில் ஆத்திச்சூடி எழுதினார். ஒளவையாரைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டில் மகாகவி பாரதியார் புதிய ஆத்திச்சூடி எழுதியுள்ளார். ஒளவையார் எழுதியது 109. பாரதியார் எழுதியது 110. 

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் ஆந்திரா மாநிலத்தில் டாக்டர் கோபி என்பவர் நானிலு என்னும் நான்கு வரிக்கவிதையை அறிமுகப்படுத்தினார். நானிலுவை தன்முனைக்கவிதைகள் என கவிஞர் கா. ந கல்யாண சுந்தரம் இறக்குமதி செய்தார். 

மகாகவி பாரதியாரின் ஆத்திச் சூடியின் கருத்தைக் கொண்டு தன்முனைக் கவிதைகளில் தனித்து விளங்கும் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி 110 தன்முனைக் கவிதைகள் எழுதித் தந்திருக்கும் தொகுப்பு சூரரரைப் போற்று. தன்முனை நாயகர் கா. ந. கல்யாணசுந்தரம் அவர்களுக்கே தொகுப்பை சமர்ப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

அச்சம் தவிர் என்னும் முதல் ஆத்திச்சூடிக்கு எழுதிய தன்முனை
 
எதைக் கண்டும் அஞ்சாது
எதிர் நீச்சல் போடுவோம்
எதிர்வரும் துன்பத்தை
அச்சமின்றித் தடுப்போம்

வாழ்வில் எது வந்தாலும் எது நிகழ்ந்தாலும் அச்சம் என்பது சிறிதுமின்றி துணிந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அச்சமே பலரை முன்னேறாமல் தடுக்கிறது என்பதை உணர்த்தியுள்ளார். உச்சிமீது வானிடிந்து வீழ்ந்த போதிலும் அச்சம் என்பது இல்லையே என்னும் பாரதியின் வரியே நினைவிற்கு வருகிறது. 

ஓய்வு என்பது ஒருவகையான சோம்பேறித்தனம். ஓய்வின்றி உழைப்பவரே உயர முடியும். ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என்று பாடியவரும் பாரதியாரே. அவரே ஆத்திச்சூடியில் ஒற்றைச் சொல்லில் ஓய்தலொழி என்று வலியுறுத்தியுள்ளார். இக்கருத்தை வலியுறுத்தும் விதமாக கவிஞர் எழுதிய தன்முனை 

சோம்பித் திரிந்தவர்கள்
என்றும் வெல்வதில்லை
ஓயாமல் உழைப்பவர்க்கே
உறுதியாய் வெற்றியாம்

சோம்பேறித்தனமாக இருக்கும் மனிதர்களுக்கு வெற்றி வெகுதூரமே என்கிறார். ஓயாமல் உழைப்பவர்களே வெற்றிப் பெறுவர் என்று தெரிவித்துள்ளார். 

கல்வி கற்பது என்பது வேறு. கைத்தொழில் கற்பது என்பது வேறு. கல்வி கை விட்டாலும் கைத்தொழில் கைவிடாது. கைத்தொழில் மனிதரைக் காப்பாற்றும். 

கைத்தொழில் ஒன்றேனும்
கற்றுக் கொள்வோம்
காலமெல்லாம் நமக்குக்
காவலாய் நிற்கும்

என கவிஞரும் கைத்தொழில் கற்றுக்கொணெடால் காலமெல்லாம் காவலாய் இருக்கும் என்கிறார். கல்விக்கு ஏற்ப எவரேனும் வேலை கொடுத்தால் உண்டு. கைத்தொழில் கற்றவனுக்கு வேலை தேடும் வேலை இருக்காது. இத் தன்முனைக்கான ஆத்திச்சூடி கைத்தொழில் போற்று. 

ஒரு செயலைத் தொடங்கும் முன் துணிவுடன் தொடங்க வேண்டும். துணிவுடன் தொடங்குவது வெற்றிக்கு வழிவகுக்கும். நீச்சல் கற்றுக் கொள்பவனுக்கு துணிவு மிக முக்கியம். மகாகவியும் செய்வது துணிந்து செய் என்றார். 
கவிஞரும்

செய்யும் செயலைத்
துணிந்து செய்க
எதற்கும் அஞ்சாது
தொடர்ந்து வெல்க

என்று ஆத்திச்சூடியின் கருத்தை தன்முனையில் முன்மொழிந்துள்ளார். துணிந்தவனுக்கு துணிவே துணையாகும் என்பதையும் நினைவுப்படுத்துகிறது. 

ஞேயங் காத்தல் செய் என்பது அன்பைக் காப்பாற்று என்பதாகும். அன்பு என்பது மனிதர்க்கு அவசியம். அன்பின்றி அமையாது வாழ்வு. அன்பைக் காத்தல் மட்டுமின்றி அன்பை பரிமாறவும் வேண்டும். 
   
சக உயிர்களிடம்
கருணை கொள்
நேயம் காத்து
நேசிப்பால் வெல்

என கவிஞரும் நேயம் கொள்வதுடன் காத்துக் கொள்ளவும் வேண்டும் என்கிறார். நேசிப்பால் வெல் என கூடுதலாகவும் கூறியுள்ளார். 

தையல் சொற் கேளேல் என்றார் ஒளவையார். ஆனால் தையலை உயர்வு செய் என்கிறார். 

பெண் உயர்ந்தால்
சமூகம் உயரும்
மாதரைப் போற்றிட
நானிலம் மலரும்

என்னும் தன்முனை மூலம் பாரதியை விட ஒரு படி உயர்ந்து பெண் உயர்ந்தாலே சமூகம் உயரும் என்கிறார். மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று பாரதியாரே பாடியுள்ளார். பெண்ணை சமூகம் போற்ற வேண்டும். பெண்ணை போற்றும் சமூகமே முன்னேறிய சமூகமாகும். 

நேர் படப்பேசுதல் நல்லது. மனிதர்க்கும் நல்லது. நேர் படப்பேசியவர்கள் நெஞ்சை நிமிர்ந்து வாழலாம். நேர் படப் பேசுபவர்களையே மற்றவர்களுக்கு பிடிக்கும்.  பாரதியார் நேர் படப்பேசு என்று கூறியதை முன்வைத்து

உள்ளதை உள்ளபடி
நேர்மையாய்ப் பேசு
கள்ளம் கபடமின்றி
கருத்தாய்ப் பேசு

என்று நேர் படப்பேசியுள்ளார். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல் கூடாது என்கிறார். 

வாழ்வில் இலக்கினைப்
பெரிதாய்க் கொள்க
உயர்ந்த எண்ணங்களை
இலட்சியம் ஆக்குக

என்னும் தன்முனைக்கான ஆத்திச்சூடி பெரிதினும் பெரிது கேள். உயர்ந்த சிந்தனையை உடையவராய் மனிதர் இருக்க வேண்டும். பெரிதான இலக்கைக் கொண்டிருந்தாலே சிறியதாக ஏதேனும் அடையமுடியும். பணம் கேட்பவரிடத்தும் அதிகமாக கேட்டாலே குறைந்த அளவாவது கிடைக்கும். கவிஞரும் பாரதி கூறியது போல் இலட்சியத்தையும பெரிதாகக் கொள் என்கிறார். 

மெல்லத் தெரிந்து சொல் என்பது மெதுவாக தெரிந்து சொல் என்பதாகும். அதாவது அவசரப்பட்டு சொல்லாதே என்று பொருள்படும். கவிஞர் 

முழுமையாக அறிந்து
எதையும் பேசு
புரிந்து உணர்ந்ததை
பக்குவமாய்ப் பேசு

என்கிறார்.  ஒன்றை பேசுவதற்கு முன் அது குறித்து முழுமையாக தெரிந்து வைத்துக் கொண்டு பேச வேண்டிய இடத்தில் பக்குவமாக பேசுவது சிறந்தது என்று பேசியுள்ளார். 

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
நெறி முறை செய்தே தலைவன்

என்றார் வள்ளுவர். நீதி குறித்து நிறைய நீதி நூல்களும் உண்டு. பாரதியார் நீதி தவறேல் என்று நேரடியாகவே கூறியுள்ளார். 

நெறிமுறைகள் தவறாது
ஒழுங்குடன் வாழ்ந்திடு
அத்து மீறினால்
ஆபத்தென உணர்ந்திடு

என்று கவிஞர் தன்முனையில் பாடியுள்ளார். நீதி தவறாமல் வாழ்வதை விட நீதி தவறினால் ஆபத்து என்றும் எச்சரித்துள்ளார். நீதி தவறாதவர்களை நாட்டில் காண்பது அரிதாகிவிட்டது. நீதி மன்றங்களில் கூட நீதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 

உலோகம் பயன்பாட்டிற்கு வந்து காலங்கள் பல ஆகின்றன. உலோகம் மனித வாழ்வில் தேவைப்படும் ஒரு பொருள். உலோகத்தின் உபயோகம் அவசியம். உலோகத்தை உணர்ந்த பாரதியார் (உ)லோக நூல் கற்றுணர் என்று ஆத்திச்சூடியில் அறிவுரைத்துள்ளார். 

உலோகத்தின் பயன்பாடு
உணர்ந்து அறிந்து கொள்
உலக வளர்ச்சிக்கு
உதவிடக் கற்றுக் கொள்

என்று ஆத்திச்சூடியை உணர்ந்து உலோகத்தின் பயன்பாட்டை உணர்ந்து அறிந்து கொள் என்பதுடன் உலக வளர்ச்சிக்கு உதவிடவும் வேண்டும் என்கிறார். 

வெளவுதல் நீக்கு என்பது இறுதி ஆத்திச்சூடி ஆகும்.  வெளவுதல் என்றால் கைப்பற்றுதல். வெளவுதல் நீக்கு என்றால் கைப்பற்றுதலை கைவிடு. 
பிறர் பொருளை
அபகரிக்க எண்ணாதே
உரிமை இல்லாதவற்றை
எடுக்க நினைக்காதே

என கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தியும் அடுத்தவர்க்கு உரிமையானதை அபகரிக்க எண்ணுதல் தவறு என்று எச்சரித்துள்ளார்.

பொதுவாகவே தன்முனைக் கவிதைகளில் ஒரு செய்தி இருக்கும். ஒரு கருத்து இருக்கும். ஓர் அறிவுரை இருக்கும். மகாகவி பாரதியார் புதிய ஆத்திச்சூடியில் அறிவுரைத்த 110 அறிவுரைகளைக் கொண்டு 110 தன்முனைக் கவிதைகளை எழுதியுள்ளார். ஆத்திச் சூடியின் சாராம்சத்தை முழுமையாக உள்வாங்கி சாராம்சம் மாறாமல் தன்முனையாக்கித் தந்துள்ளார். ஒவ்வொரு தன் முனையும் ஆத்திச்சூடிக்கான கவிதை வடிவத்திலான  தெளிவுரைப் போலிருந்தது. ஆத்திச் சூடி ஆனந்திச் சூடியாகி உள்ளது. மகா கவி பாரதி மீதான மதிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். இருபதாம் நூற்றாண்டில் எழுதிய பாரதியின் ஆத்திச் சூடியை இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மக்களுக்குக் கொண்டு சென்றுள்ளார். தன்முனைக் கவிதைகளையும் தந்துள்ளார். தன்முனைக் கவிதைகளுக்கு தலைப்பிருக்காது. கவிஞர் ஆத்திச்சூடியையே தலைப்பாக வைத்துள்ளார். தன்முனைக் கவிதைகள் எழுதுவதில் தனி முனைப்புடன் இயங்கும் நெல்லை அன்புடன் ஆனந்தியின் பயணம் தொடர வாழ்த்துகள். 

வெளியீடு: 
நூலேணி பதிப்பகம், சென்னை 
98412 36965 

நூலாசிரியர்:
கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி 

நூல் விமர்சனம்:
பொன். குமார் 9003344742

Wednesday, April 1, 2026

நூல்கள் கொடை - படைப்பு அமைப்பு

படைப்பு அமைப்பிற்கு நூல்கள் கொடை வழங்கிய தருணம்

Tuesday, March 31, 2026

நடைபாதை நளினங்கள்

நடைபாதை நளினங்கள்
நமை மயக்கும் 
நயங்கள்

வானுயர்ந்த மரங்கள்
இலை உதிர்ந்தும் 
இதங்கள்

சலசலக்கும் நீரோடை
சங்கேதமாய் பேசும்
தருணங்கள்

சரசரவெனச் செல்லும்
சாலை கடக்கும்
மகிழ்வுந்துகள்

சங்கேதமாய் பேசியே
துள்ளி ஓடும்
அணில்கள்

விரைந்த நடைக்குத்
தடை போடும்
விண்மழைத்துளிகள்!

நெல்லை அன்புடன் ஆனந்தி 

Sunday, March 29, 2026

மெட்டுக்குப் பாட்டு - மார்ச் 2026


YouTube link:

இன்று ஒரு நூல் (Talking McCaw-பேசும் பஞ்சவர்ணக்கிளி)

இன்று ஒரு நூல் அறிமுகத்தில்

எழுத்தாளர் கல்லை மலரடியான் அவர்கள் எழுதிய..

Talking McCaw / பேசும் பஞ்சவர்ணக்கிளி நூல் அறிமுகம்

நெல்லை அன்புடன் ஆனந்தி
நூல் அறிமுகம் காண:

படைப்புகள் பார்வைக்கு (Talking McCaw-பேசும் பஞ்சவர்ணக்கிளி)

Saturday, March 28, 2026

மார்ச் 2026 - பாட்டும் கதையும் லாலிபாப் சிறுவர் உலகம் - தமிழ் அமெரிக்கா TV நிகழ்வு

மார்ச் 28 சனிக்கிழமை இந்தியக் காலை 8:00 மணி

தமிழ் அமெரிக்கா TV மற்றும் லாலிபாப் சிறுவர் உலகம்

இணைந்து நடத்தும்....
பாட்டும் கதையும்

*பங்கேற்கும் பிள்ளைகள்*

*கதை சொல்லும் குழந்தைகள்*

1.    கவிஸ்ரீ (கனவா நினைவா)
2.  அ.இ. நன்மாறன்
3.  பி.மகிழ் வெண்பா

*பாடல் பாடும் குழந்தைகள்*

1. கவிநயா ஸ்ரீராம்( சின்னஞ்சிறு கிளியே) பாரதியார்.
2. மு.உ. ஸ்ரீ லக்ஷன்யா (கடலின் ஆழம், அழ வள்ளியப்பா)
3. M. வர்ஷினி (விழிப்புணர்வு பாடல், வர்ஷினி)

சிறப்பு விருந்தினர்:
எழுத்தாளர் ஆசிரியர் செங்காந்தள் வீரராகவன்

வாழ்த்துரை/நன்றியுரை:
எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா

நெறியாளர்:
நெல்லை அன்புடன் ஆனந்தி

மார்ச் 28 2026 - தமிழால் இணைவோம் நிகழ்வுகள்

தமிழால் இணைவோம் உலகத்தமிழ்ப் பேரியக்க நிகழ்வுகள்

7:00 மணி:
திருவிளையாடற்புராணம்
8:00 மணி:
மெட்டுக்குப் பாட்டு

Wednesday, March 25, 2026

நேசத்தைக் கூட்டுது... நெல்லை அன்புடன் ஆனந்தி

நீங்கா நினைவலை
நெஞ்சத்தை வாட்டுது
நித்தமும் தப்பாமல்
நேசத்தைக் கூட்டுது

நெல்லை அன்புடன் ஆனந்தி

ஏக்கத்தின் எதிரொலி..நெல்லை அன்புடன் ஆனந்தி

ஏக்கத்தின் எதிரொலிப்பு
எனக்குள்ளே கேட்கிறது
எண்ணற்ற கனவுகள்
கேள்வியாய்ப் பார்க்கிறது

நெல்லை அன்புடன் ஆனந்தி

மறக்கத்தான் நினைக்கிறேன் - நெல்லை அன்புடன் ஆனந்தி

மறக்கத்தான் நினைக்கிறேன்
மறுபடியும் தொலைகிறேன்
முடியாமல் தவிக்கிறேன்
முயன்றும் தோற்கிறேன்

~நெல்லை அன்புடன் ஆனந்தி

தன்முனைப் பா நூல்கள் போட்டி - தன்முனைத் தமிழி - முதல் பரிசு - நெல்லை அன்புடன் ஆனந்தி

நூலேணி பதிப்பகம் Nooleni publications   மற்றும் 
மழை துளிப்பா (ஹைக்கூ) வரலாற்று ஆவண இதழ் நடத்திய 

தன்முனைப் பா (கவிதை) நூல் போட்டியில்.. 

எனது தன்முனைத் தமிழி நூல் முதல் பரிசு 🎁 பெற்றுள்ளது என்பதை மகிழ்வுடன் பகிர்கிறேன்.

நெல்லை அன்புடன் ஆனந்தி

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)