topbella

Tuesday, April 14, 2026

கண்ணாடி வேண்டாமே பாப்பா - பாவேந்தரின் இளையார் ஆத்திச்சூடி கதைகள் - நெல்லை அன்புடன் ஆனந்தி - ஒரு பார்வை - பொன். குமார்

கண்ணாடி வேண்டாமே பாப்பா - பாவேந்தரின் இளையார் ஆத்திச்சூடி கதைகள் - நெல்லை அன்புடன் ஆனந்தி - ஒரு பார்வை - பொன். குமார்


ஆத்திச்சூடி என்பது ஒற்றை வரிக் கவிதை. ஆத்திச் சூடியை அவ்வையே தொடங்கி வைத்தாள். அவ்வைக்கு பிறகு ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மகாகவி பாரதி ஆத்திச் சூடியை அவர் பாணியில் பாடிவைத்தார். பாரதியைத் தொடர்ந்து அவர் சீடன் பாரதிதாசன், வாணிதாசன் என பலரும் ஆத்திச்சூடியைப்பாடினர். பாரதி தாசன் ஆத்திச்சூடியை வைத்து கல்லை மலரடியான் சிறார் நலம் தேடு என்னும் தலைப்பில் முப்பத்திரண்டு சிறுகதைகளை சிறுவர்களுக்காக எழுதியுள்ளார். தொடர்ந்து எழுத்தாளர் நெல்லை அன்புடன் ஆனந்தி கண்ணாடி வேண்டாமே பாப்பா என்னும் தலைப்பில் ஒரு தொகுப்பினை தந்துள்ளார். பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியை வைத்து சூரரைப் போற்று என்னும் தன்முனைக் கவிதைகள் அடங்கிய தொகுப்பைத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிறுவர்களுக்காக ஏற்கெனவே பல தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். 

அனைவரும் உறவினர் என்னும் முதல் கதையே  அற்புதமான கதை. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சமமாக பழகினாலும் சாதி பார்க்காவிட்டாலும் வீட்டிலிருக்கும் பாட்டிகள் இன்னும் சாதிகள் பார்க்கிறார்கள் என்கிறது. இளையோரிடம் சாதி இல்லை என்றாலும் பெரியவர்களிடமே இருக்கிறது, பெரியவர்களே திணிக்கிறார்கள் என்கிறது. அனைவரும் சமம் என்பதை அனைவரும் உறவினர் என்று ஆசிரியர் தெரிவித்துள்ளார். இளையோரிடையே சாதியை விதைக்க வேண்டாம் என்று வேண்டியுள்ளார். 

நன்றாக படிக்கும் மாணவர்கள் தைரியசாலிகளாக இருப்பதில்லை. தைரியசாலிகளாக இருக்கும் மாணவர்கள் நன்றாக படிப்பதில்லை. தைரியசாலிகளாக இல்லாத மாணவர்களை மற்றவர்கள் கேலி செய்வதுண்டு. அப்படி கேலி செய்யப்படுபவன் அழுகிறான். தைரியமானவன் அவனிடம் அழாதே அழுபவன் கோழை என முத்திரை குத்தி விடுவார்கள் என்று அறிவுறுத்தி தேற்றுகிறான். இக்கதையின் தலைப்பு அழுபவன் கோழை. மாணவர்கள் கோழைத்தனமாக அழக்கூடாது என்கிறது. 

எதையும் ஊன்றிப்பார் என்பது மூன்றாம் சிறுகதை. குமாரும் ரவியும் நண்பர்கள். ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். ஒரு பேச்சுப்போட்டியில் திரைப்படங்கள் தீமையைச் செய்கின்றன என்று குமாரும் திரைப்படங்கள் நன்மையைச் செய்கின்றன என்று ரவியும் எதிரெதிர் நிலையில் பேசுகிறார்கள். நடுவர் இருவருமே சிறப்பாக பேசினார்கள் என்று இருவருக்குமே பரிசளித்து திரைப்படங்களில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு நாமே ஊன்றிப் பார்த்து ஆராய்ச்சி செய்து நல்லது கெட்டது அறிந்து செயல்பட வேண்டும் என்கிறார். திரைப்படத்தில் மட்டுமல்ல எந்த ஒன்றிலுமே இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை உணர்ந்து ஊன்றிப் பார்த்து தேவையானதை எடுத்துக் கொள்ள வேண்டும். 

ஆண் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ, மாணவிகளுக்கு இன்னொரு தந்தை மாதிரி. வகுப்பில் படிக்கும் மாணவிகளை மகளாக பார்க்க வேண்டும். பாவிக்க வேண்டும். மாணவிகளை தனியாக அழைத்து சந்தேகம் தீர்ப்பதாக தேகம் தீண்டுவது கூடாது. அவ்வாறு ஆசிரியர் அத்துமீறும் பட்சத்தில் மாணவிகள் துணிச்சலாக நடந்து பாடம் நடத்தும் ஆசிரியருக்கு பாடம் கற்பிக்க வேண்டும். போர்த் தொழில் பழகு என்னும் சிறுகதை மூலம் ஆசிரியர் தவறு செய்தால் தட்டிக் கேட்க வேண்டும் என்கிறார். மாணவர்களுக்கு மட்டுமான கதையாக அல்லாமல் ஆசிரியர்களுக்கானதாகவும் உள்ளது. 

அனு என்னும் சிறுமி வீட்டில் பீங்கான் கப்பை போட்டு உடைத்து விடுகிறாள். அம்மா திட்டுவாள் என பயந்து பழியை வேலைக்காரி மீது போட்டு விடுகிறாள். அவளும் குழந்தைக்காக பழியை ஏற்று அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொள்கிறாள். மறுநாள் பள்ளியில் பாரதிதாசனின் ஆத்திச்சூடியை வாசிக்கும் போது உள்ளதைப் பேசு என்றதை வாசிக்கும் போது தன் தவறை உணர்ந்து அம்மாவிடம் உள்ளதைச் சொல்லிவிடுகிறாள். அம்மாவும் தன் அவசரபுத்தியை எண்ணி வேலைக்காரியிடம் மன்னிப்புக் கேட்க முடிவெடுக்கிறாள். இக்கதையின் தலைப்பு உள்ளதை பேசு. எப்போதும் உள்ளதையே பேச வேண்டும் என்கிறது கதை. உள்ளதை பேசினால் நல்லதே நடக்கும் என்கிறார். 

தொலைக் காட்சிப் பெட்டிகள் பெரும் தொல்லையாகிவிட்டது இன்று. பெரியவர்களை மட்டுமின்றி சிறுவர்களையும் சீரழிக்கிறது. சிறுவர்கள் தொலைக்காட்சியை பார்க்க நேர்ந்தால் நேரம் போவதே தெரியாமல் பார்த்துக் கொண்டேயிருப்பார்கள். இரவு நேரங்களில் நீண்ட நேரம் கண்விழித்துப் பார்ப்பதும் உண்டு. இதனால் கண் பார்வையும் மங்கலாக தெரியவும் வாய்ப்புண்டு. இரவினில் தூங்கு என்னும் சிறுகதை மூலம் இரவினில் நீண்ட நேரம் உறங்காமல் தொலைக்காட்சி பார்ப்பதே கண் பார்வைக் குறைவிற்குக் காரணம் என மருத்துவர் கூறுவதாக கூறியுள்ளார். பொதுவாகவே தொலைக்காட்சி அதிக நேரம் பார்ப்பது கூடாது. 

ஒற்றுமை வெல்லும் என்பது பொதுவான கருத்து. உண்மையும் ஆகும். நண்பர்களாக இருக்கும் மாணவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மனக்கசப்பால் விளையாட்டில் கிடைக்கக் கூடிய வெற்றி எதிரணிக்கு போய்விடுகிறது. விளையாடும் போது வெற்றியே குறியாக இருக்க வேண்டும், எதிரணியை வீழ்த்துவதில் ஒற்றுமை இருக்க வேண்டும். தங்களுக்குள் இருக்கும் சண்டையை மைதானத்திற்கு வெளியிலேயே விட்டுவிட வேண்டும். விளையாட்டில் வெற்றிப்பெற ஒற்றுமை தேவை என்கிறது ஒற்றுமை வெல்லும் கதை. 

பாவேந்தர் பாரதிதாசன் ஒரு வரியில் ஆத்திச்சூடியில் சொன்ன கருத்தைக் கொண்டு மாணவர்களுக்கு ஏற்ப சிறுகதைகளாக எழுதி தந்துள்ளார் எழுத்தாளர் நெல்லை அன்புடன் ஆனந்தி. பாவேந்தரின் ஆத்திச்சூடியையும் வாசிக்கத் தூண்டியுள்ளார். அதன்படி நடக்க அறிவுரைத்துள்ளார். கண்ணாடி வேண்டாமே பாப்பா என்னும் இத்தொகுப்பில் உள்ள ஏழு சிறுகதைகளையும் பள்ளிச் சூழலை மையப்படுத்தியே எழுதியுள்ளார். கதைகளை வாசித்தவுடன் சிறுவர்கள் மனத்தில் ஒரு சிந்தனையை உருவாக்கும் வண்ணம் உள்ளன. கதைக்களமும் கதையமைப்பும் கதை மொழியும் கதைநடையும் சிறுவர்களுக்கு பொருத்தமா சிறப்பாக உள்ளன.  சிறுவர்களுக்கு எதைச் சொல்ல வேண்டுமோ எப்படி சொல்ல வேண்டுமோ அப்படியே சொல்லியுள்ளார். நூல் வடிவமைப்பிலும் கவிஞர் கன்னிக் கோவில் இராஜா கவனம் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறுவர்கள் சார்பாக எழுத்தாளர் நெல்லை அன்புடன் ஆனந்திக்கு நன்றி. மற்றும் என் வாழ்த்துகள். 

வெளியீடு 
லாலிபாப் பதிப்பகம் சென்னை 
9841236965 

எழுத்தாளர் நெல்லை அன்புடன் ஆனந்தி 

பொன். குமார் 9003344742 
***

Sunday, April 12, 2026

தமிழால் இணைவோம் ஏப்ரல் 12 கவியரங்கம், சிவகாமியின் சபதம்

தமிழால் இணைவோம் உலகத் தமிழ்ப் பேரியக்கம்  

நிகழ்ச்சி நிரல்

12-04-2026
************

இரவு

19.00 7914 சிவகாமியின் சபதம் 33
20.00 7915 கவியரங்கம் - மக்கட்பேறு

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/5169345164?pwd=Wm9RLzB1L2xxNkVPYXdPZTBSanBXZz09&omn=82939366443

Meeting ID: 516 934 5164
Passcode: 247247

அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

Saturday, April 11, 2026

Durandhar 2 : The Revenge


இனிய வணக்கம். அனைவரும் நலமா? வலைத்தளத்தில் எழுதி வருடங்கள் ஆகிவிட்டது. மீண்டும் எழுதுவதில் மகிழ்ச்சி.

என்னதான் சொல்லுங்க? படம்னா தியேட்டர்ல போய் தான் பாக்கணும். அதுவும் துரந்தர் மாதிரி படம் எல்லாம் தியேட்டரில் மட்டும் தான் பார்க்கணும்.

செம படம்.. அடி தூள் தான். துரந்தர் 1 வெளிவந்த போது  தியேட்டரில் போய் பார்க்கிறதுக்கான சந்தர்ப்பம் அமையல.

அதனால வீட்டிலேயே பார்த்தாச்சு. பொதுவா படம் ரொம்ப நல்லா இருந்தாதான் முழு படமும் உக்காந்து பார்ப்பேன்.

படம் சுமாரா இருந்துச்சுன்னா தவணை முறைல தான் பார்க்கறது.. ஆனா, துரந்தர் படம் மூணு மணி நேரம் போனதே தெரியாமல் முழு படத்தையும் பார்த்து முடிச்சேன்.

அப்படி ஒரு விறுவிறுப்பான படம். எனக்கு மட்டும் இல்லாம என் மகள்களுக்கும் ரொம்ப பிடிச்சுப் பார்த்த படம்.

தனது தாய் நாட்டிற்காக உளவாளியாக, இன்னொரு இடத்தில் போய், எதிரி நாட்டில் போய் மாட்டிகிட்டு உளவாளி படுற அவஸ்தையைக் காட்டும் படம்.  அதை எல்லாம் பார்க்கும் பொழுது மனசை என்னவோ பண்ணுது. அப்படி ஒரு பதைபதைப்பை ஏற்படுத்தியது.

அதில் இரண்டாவது பாகம் வருதுன்னு தெரிந்த உடனே எப்ப வரும் என்று காத்திருந்தோம். இந்த முறை தியேட்டரில் போய் பார்த்து விடணும்னு நினைச்சிட்டு இருந்தேன். போன தடவை மாதிரியே உடனே பார்க்க போக முடியல. அதற்கான சந்தர்ப்பம் அமையல.

இங்கல்லாம் பொதுவா நம்ம திரைப்படங்கள் தியேட்டர்களுக்கு வந்தால் ஒரு வாரம் 10 நாட்கள் ஓடிட்டு இருக்கும். அந்த 2 வாரத்திற்குள் போக முடியலேன்னா அப்புறமா Netflix அல்லது Amazon Prime ல வரும் வரை காத்துக் கிடக்க வேண்டியது தான்.

இன்று ஒரு தோழியிடம் பேசும் போது, துரந்தர் 2 பார்த்தியான்னு அவங்க கேட்க, இல்லன்னு சொன்னதும்.. அட கட்டாயமா தியேட்டர்ல போய் பார்த்திருக்கணும்னு உசுப்பேத்தி விட்டுட்டாங்க.

சரி எதுக்கும் எதாச்சும் தியேட்டர்ல இன்னும் ஓடுதான்னு பார்க்காலாம்னு பார்த்தா... நம்ம வீட்டுல இருந்து ஒரு பத்து பதினஞ்சு நிமிஷம் தொலைவிலேயே இருக்கும் MJR தியேட்டர்ல போட்டிருந்தாங்க.

எனக்கு ஆச்சரியமா இருந்தது.  படம் வந்து இவ்வளவு நாளாகியும், இன்னும் இங்கே ஓடிட்டு இருக்கிறது பெரிய விஷயம்தான். அதுவும் நமக்கு இன்னைக்கு சனிக்கிழமை வேறயா.. வசதியாப் போச்சு.. கிளம்ப வேண்டியதுதான்னு கிளம்பியாச்சு.

தியேட்டரில் நுழைந்து டிக்கெட் வாங்கும் இடத்திற்கு சென்று டிக்கெட் வாங்கிவிட்டு, மெம்பர்ஷிப் எதுவும் உள்ளதான்னு கேட்டேன். ஏன்னா, பசங்க சின்னதா இருக்கும் போது தியேட்டர் மெம்பர்ஷிப் வச்சிருந்தேன்.

அது எதுக்குன்னா குறிப்பிட்ட நாட்களில் மெம்பர்ஷிப் கார்டு உள்ளவர்களுக்கு டிக்கெட் விலையில் 50% தள்ளுபடி அல்லது எந்த படம் வேண்டுமானாலும் 5 டாலர் மட்டுமே அல்லது இலவசமா ஒரு பக்கெட் பாப்கார்ன் இப்படி ஏதாச்சும் இருக்கும்.

இதிலும் என்ன சுவாரஸ்யம்னா அந்த மெம்பெர்ஷிப் கார்டுக்கு எந்த கட்டணமும் கிடையாது. அதனால் தான் கேட்டேன். அந்தப் பெண்மணி ஏதோ வேலையில் மும்முரமாக இருந்ததால் அதெல்லாம் இல்லையே என்று சொன்னார்.

என் கணவரும் பரவால்ல வா.. அப்புறம் ஆன்லைன்ல தேடிப்பார்க்கலாம். இப்ப படம் தொடங்குவதற்கான நேரம் ஆகிருச்சுன்னு அவசரப்படுத்தவே நானும் படம் பார்க்கும் ஆவலில் வந்துட்டேன்.

படம் ஆரம்பிச்ச நொடியிலிருந்து, அப்பப்பா அப்படியே நம்மை கட்டிப்போட்டு விட்டதுன்னு சொல்லலாம். நாலு மணி நேரம் போனதே தெரியல.. எங்கயும் எந்த தொய்வும் இல்லாத காட்சி அமைப்புகள். பொதுவாக படங்களில் தொய்வு ஏற்பட்டால் நமக்கு தூக்கம் வந்துரும், இல்லேன்னா மனம் அங்கே லயிக்காது. ஆனா,  படம் ஆரம்பித்ததிலிருந்து முடிஞ்சவரைக்கும் அப்படி ஒரு விறுவிறுன்னு போச்சு.

ஒவ்வொரு காட்சியையும் ரொம்ப சிரத்தையுடன் எடுத்து இருந்தாங்க. ஒரு உளவாளியாக போகிறவர்களுடைய வலி,  முதல்ல அவங்க எப்படி ஒரு உளவாளியாக போறாங்க? அதன் பின்னால் இருக்கிற ஒரு பின்னணி எல்லாம் பார்க்கும் பொழுது நமக்குள் ஒரு நெகிழ்ச்சியும் வலியும் வந்து விடும்.

எவ்வளவோ பேர் இப்படி தன்னோட வாழ்க்கையையும் உயிரையும் தன் தாய் நாட்டிற்காக துச்சமாக மதித்து அவங்க பணிகளைச் செய்றாங்கன்னு யோசிக்க வைக்குது.

இராணுவ வீரர்களும், உளவாளிகளும் தங்களுடைய பணிகளை செவ்வனே செய்வதனால்தான் இன்னிக்கு நம்ம எல்லாரும் பாதுகாப்பா, பயமின்றி நிம்மதியா இருக்குறோம்.

இந்த மன நிலையோட படத்தைப் பார்க்கும் போது ஏதோ ஒரு மனநிறைவு கொடுத்ததுன்னே சொல்லலாம். எந்த ஒரு தேவையில்லாத காட்சிகளும் கிடையாது. ஒவ்வொரு காட்சியுமே சும்மா திட்டமிட்டுத் தீட்டி இருக்கிறார்கள்.

அவ்வளவு நல்லா இருந்தது. படத்தின் கதாநாயகன் ரன்வீர் சிங் தன்னுடைய அபாரமான நடிப்பில் நம் மனதைத் தொடுகிறார். மாதவன், சஞ்சய் தத், சாரா உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தத்தம் கதாபாத்திரத்தை கச்சிதமாய் கையாண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

இந்த படத்த பத்தின விமர்சனத்துக்கு  ஒரு தனி பதிவே போடலாம் போல இருக்கு. அவ்வளவு பேசலாம் இந்த படத்தை பற்றி. முடிந்தால் எழுத முயற்சி செய்கிறேன்.

இன்னிக்கு சனிக்கிழமை என்பதால் டிக்கெட் விலை அதிகமாய்த் தான் இருக்கும் என நினைத்தேன். ஆன்லைனிலேயே புக் பண்ணிவிட்டு போகலாம் தான். ஆனால் அதற்கு concession fee என்று 3 டாலருக்கு மேல் எடுப்பார்கள். அதனால் நேரிலேயே சென்று விட்டோம்.

இன்று  டிக்கெட் 7 டாலர் தான். எனக்கு ஆச்சரியமாப் போச்சு. ஆஹா.. பொதுவா நம்ம தமிழ்த் திரைப்படங்கள் அதிலும் இந்த மாதிரியான பிக் பட்ஜெட் படம் எல்லாம் வந்தால் டிக்கெட் குறைந்தது ஒரு 15 டாலர் இருந்து 20 டாலர் இருக்கும்.

அதுவும் ரஜினி போன்ற பிரபல நடிகர்களின் படம் எல்லாம் சில நேரங்களில் 25 டாலர் கூட ஆகும்.

நான் அப்படித்தான் ஏதாவது இருக்கும்னு நெனச்சேன். ஒருவேளை படம் வந்து  இரண்டு வாரங்களுக்கு மேல் ஆனதால் கூட இருக்கலாம்.

படம் பார்த்து வெளியே வரும் போது மீண்டும் எனக்கு மெம்பர்ஷிப் விசயம் நினைவு வந்தது. எல்லா தியேட்டர்களிலும் மெம்பர்ஷிப் வச்சிருந்தால் ஏதாவது சலுகைகள் கட்டாயம் இருக்கும் என்று அறிவேன்.

சரி.. திரும்பவும் கேட்டு பார்ப்போம்னு கேட்டேன். இப்பவும் அதே பெண்மணி தான் கவுண்டரில் இருந்தாங்க. அவர்களிடம் போய்,  "எனக்கு ஒரு சந்தேகம். மற்ற தியேட்டர்களில் குறிப்பிட்ட நாட்களில் ஏதாவது சிறப்பு சலுகைகள் பெற மெம்பர்ஷிப் கார்டு தராங்களே அது போல் இங்கு இல்லையா?" எனத் தெளிவாகக் கேட்டேன்.

"ஆமாமா.. செவ்வாய்க்கிழமை தோறும் நாங்க ஃபிரீ பாப்கான் கொடுக்கிறோம், அது மட்டுமில்லாம செவ்வாய் தோறும் எல்லாப் படமும் 5 டாலர்கள் மட்டுமே, அது தவிர ஒவ்வொரு முறை நம்ப டிக்கெட் வாங்கும் பொழுதும் அதற்கான ரிவார்டு பாய்ண்ட்டுகள் சேர்ந்து கொண்டே இருக்கும். 50 பாய்ண்ட்டுகள் சேர்ந்தால் 5 டாலர் குறைப்பார்கள் என்று இன்னும் சில சலுகைகளையும் சேர்த்துச் சொன்னார்."

அவர்கள் கேட்ட தகவல்களைக் கொடுத்துவிட்டு கையோடு மெம்பர்ஷிப் கார்டையும் வாங்கிவந்து விட்டேன்.

என் கணவரும் "பரவால்லயே.. அப்ப இல்லன்னு சொன்னாங்க. இப்ப மட்டும் எப்படின்னு கேட்டாரு.".

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்னு சும்மாவா பெரியவங்க சொல்றாங்க.. அப்போ படம் பார்க்கும் அவசரத்தில் போய்ட்டேன். அதான் திரும்ப கேட்டுப் பார்க்கலாமேன்னு கேட்டேன், கிடைச்சிருச்சுன்னு சொன்னேன். அவரும் அதுவும் சரிதான்னு சொன்னார். நமக்கு வேணும்னா நம்ம தான் கேட்கணும்.

ஒரு வழியா படத்தை தியேட்டரில் பார்த்த மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தாச்சு. கண்டிப்பா நீங்களும் பாருங்க.

ஏம்மா.. ஒரு படத்தைப் பார்த்துட்டு வந்ததுக்காம்மா இந்தப்பேச்சுன்னு திட்டப்பிடாது. மீண்டும் சந்திப்போம்.

நெல்லை அன்புடன் ஆனந்தி
ஏப்ரல் 11, 2026

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)