கவிஞர் அகவலன் அவர்களை எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் வாயிலாக அறிவேன்.
அவருடைய ஹைக்கூ நூல் பறவை மட்டும் பறக்கும் வானம் என்ற நூலிற்கு அணிந்துரை எழுதச் சொல்லி இருந்தார்.
அருமையான கவிதைகளுக்கு அணிந்துரை எழுதும் இனிய வாய்ப்பில் பெருமை கொண்டேன்.
கவிதைகளால் நம்மை மகிழ்வித்து இன்று காலத்துடன் கைகோர்த்துச் சென்ற கவிஞருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
*****************************
கவிஞர் அகவலன் அவர்கள் அனுப்பிய செய்தி:
வணக்கம் கவிதாயினிக்கு
நூலேணி பதிப்பகம் வெளியிடும் எனது இரண்டாவது ஹைக்கூ நூலான "பறவை மட்டும் பறக்கும் வானம்" எனும் நூலிற்கு தங்களது அணிந்துரை தேவையானதாக பயன் படுகிறது, அணிந்துரை தருவீர்களென நம்புகிறேன்.
அன்புடன்
அகவலன்
செப்.26.2025
*************************************
பறவை மட்டும் பறக்கும் வானம் நூலிற்கு நான் எழுதிய அணிந்துரை:
இலக்கிய உலகில் இதயத்தைத் தொடும் விதமாக எத்தனையோ படைப்புகள் வந்த வண்ணமே இருக்கின்றன. கவிதைகள், கதைகள், கட்டுரைகள், பாடல்கள் எனப் பல்வேறு வகைமைகளில் நம்மோடு பயணித்துக் கொண்டே வருகின்றன.
கவிதைகளில் பல்வேறு வடிவங்கள் இருப்பினும்.. இன்று பலரால் விரும்பப்பட்டு எழுதப்பட்டு வருகிற ஹைக்கூ வடிவம் குறுகத் தரித்த குறளைப் போன்றே.. விதைக்குள் விருட்சத்தை அடைக்கும் வித்தை! ஹைக்கூ கவிதையின் சிறப்பு அதை வாசிக்கும் வாசகரின் மனதில் அக்காட்சிகளை விரியச் செய்வதே ஆகும்.
படித்தவுடன் கடந்து விட்டால் அந்தக்கவிதை நம்மை சிந்திக்க விடுவதில்லை. படித்த பிறகும் நம் நினைவுகளில் சுழன்று வந்தால் அதுவே அக்கவிதையின் வெற்றி.
நூலாசிரியர் அகவலன் அவர்கள் நூலின் தலைப்பை "பறவை மட்டும் பறக்கும் வானம்" என்று கவித்துவமாகப் படைத்திருக்கிறார்.
இக்கவிதை நூலில் சுமார் 124 ஹைக்கூ கவிதைகள் உள்ளன.
பெரும்பாலான கவிதைகள் நமக்கு ஜென் கவிதைகளை நினைவூட்டுகிறது. கூடவே
தாவோவும், பாஷோவும் அவ்வப்போது வந்து போகிறார்கள்.
கவிதை என்பது..
மயிலிறகாக மெல்லிய வருடலாய் இருக்கலாம்..
புயல் காற்றாக நம்மைப் புரட்டிப் போடலாம்..
நிதானித்து அசைபோடும் அளவுக்கு ஆழ்ந்த
கருத்துகளுடன் இருக்கலாம்..
கண்மூடி தியானிப்பது போன்ற உணர்வினைக் கொடுக்கலாம்..
மெல்லிசை தீண்டுவது போன்ற இன்பத்தை வழங்கலாம்..
தென்றல் காற்றின் குளுமையாக இருக்கலாம்..
தேமதுரத் தமிழின் சுவையாக இருக்கலாம்..
இப்படி ஏதோ ஒன்றை நமக்குள் ஏற்படுத்தி விட்டால் அந்தக் கவிதைக்கு ஒரு சபாஷ் போட வேண்டியதுதான். அப்படி நாம் சபாஷ் போடும் விதமாக நூலாசிரியர் அகவலன் நிறைய கவிதைகளைப் படைத்திருக்கிறார்.
முதல் கவிதையிலேயே குளிர் மாலைப் பொழுதில் நம்மை ஒரு குளத்தருகே நிற்க வைத்து விடுகிறார்.
நிலவொளி
தியானிக்கும் அல்லித்தண்டு
புத்தனாக
மாலை நேரத்தில் அமைதியான குளக்கரையில் நிலவொளி வீசிக் கொண்டிருக்க.. அங்கே புத்தனைப் போல் தியானிக்கும் அல்லித் தண்டைப் பற்றி எழுதியிருக்கிறார்.
எவ்வளவு அழகான காட்சி. மௌனமான நிலவொளியில் ஆடாமல் அசையாமல் அங்கே தியானித்துக் கொண்டு இருப்பது போல நின்று கொண்டிருக்கும் அல்லித்தண்டினை புத்தருக்கு இணையாகப் பார்த்திருப்பது கவிதைக்குச் சிறப்பு. நிலவொளி என்றாலே மயக்கம் தருவது தான்.. அப்படிப்பட்ட நேரத்தில் தியானம் செய்வது என்பது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியது. அப்படிப்பட்ட அழகிய தருணத்தைத் தொடக்கக் கவிதையாகப் படைத்திருப்பது சிறப்பு.
மரம் நட்டேன்
ஒரு வருடம் போனது
ஜெகரந்திப் பூ
ஜெகரந்திப் பூ மலைப் பகுதிகளில் பூக்கக்கூடிய ஒரு மலர். மரம் முழுக்க நீல வண்ணத்தில் அருமையாகக் காட்சியளிக்கும்.
ஒரு பூச்செடியை நட்டவுடன் பூப்பூத்து விடாதா என்ற ஆவல் அனைவருக்கும் இருக்கும் தான். ஒரு வருடம் காத்திருந்து.. அந்தப் பொறுமைக்குப் பரிசாக மலர்ந்த பூக்களைக் கண்டதும்.. காத்திருந்ததெல்லாம் மறந்து விடும். அழகான கவிதைக்கு வாழ்த்துகள்.
வெற்றுக்கிளை
அந்தியில் காகம்
மறையும் சூரியன்
ஹைக்கூ கவிதைகளில் இயற்கை காட்சிகள் எப்போதுமே சிறப்பு தான். அந்தி நேரத்தில் மறையக் கூடிய சூரியனையும்.. அந்த மாலை நேரத்தில்.. மரத்தில் அமர்ந்திருந்த காகம் பறந்து போன பிறகு அங்கே வெற்றுக்கிளையாக காட்சி அளிப்பதையும் மனக்கண் முன் நிறுத்துகிறார் கவிஞர்.
மறைந்தது சூரியன் மட்டுமல்ல மரத்திலிருந்த காகமும் தான் என்பதற்கு அழகான காட்சிப்படுத்துதல்.
சேவலின் குரல்
அதிகாலை எழுகிறது
உதிக்கும் சூரியன்
அதிகாலை வேளையில் சேவல் கூவி மனிதர்களை எழுப்பக் கேட்டிருக்கிறோம். இங்கு சேவலின் குரல் தான் அதிகாலைச் சூரியனையே எழுப்புகிறது என்ற காட்சிப்படுத்துதல் மிகச்சிறப்பு.
கொட்டும் மழை
பூவின் மீது சத்தம்
வண்டின் பாடல்
மழைபெய்யும் காட்சியே மனதிற்கு ரம்மியமானது. அப்படிக் கொட்டும் மழையில் பேரிகைச் சத்தம் போல் பூவின் மீது என்ன சத்தம்? என்று நம்மை யோசிக்கச் செய்கிறார். அங்கே வண்டின் பாடல் கேட்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார். மென்மையான மலரின் மீது சத்தம் கேட்கிறதாம்.. அங்கே வண்டின் ரீங்காரம்.
இடம் மாறும் பூச்செடி
பழகிக் கொண்டது
வண்ணத்துப்பூச்சி
ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச்
செடியை மாற்றி வைக்கும் பொழுது.. அது வேர் பிடித்து நிற்பதற்கு கொஞ்சம் காலம் ஆகும் தான். அது விட்டு வந்த இடத்தில் இருந்து பிரிந்து வந்த அதிர்ச்சியில் இருக்கும். இடம் மாறியதை அப்பூச்செடி பழகிக் கொள்கிறதோ இல்லையோ.. இங்கே வண்ணத்துப்பூச்சி அந்த மாற்றத்தை பழகிக் கொண்டது என்று எழுதியிருக்கிறார்.
மார்கழி உதிர்கிறது
பூவின் மேல் பூ
காலை பனித்துளி
மார்கழிப் பனி நம்மை நடுங்க வைக்கும்.
அந்த மார்கழியே உதிர்வதாய் எழுதியிருக்கிறார். உதிர்ந்த மார்கழி பூவின் மேல் பூப்போல் அமர்கிறது. காலைப் பனித்துளி பூவில் அமர்ந்திருப்பது போல அழகிய காட்சியாக கவிஞருக்குத் தெரிந்திருக்கிறது.
பூ அறிக்கை
வேப்பம்பூ உதிர்கிறது
இனிக்கும் பூமி
எவ்வளவு அழகிய அறிக்கை! வேம்பு என்றாலே கசப்பு என்று நாம் அறிவோம். அத்தகு வேப்ப மலர்கள் உதிர்ந்ததில் பூமி இனிக்கிறதாம். அழகிய முரணான கவிதை.
கட்டிய புது வீடு
தனியறை கட்டியது
குளவிகள் கூடு
வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தைப் பண்ணிப்பார் என்று சொல்வார்கள். அவ்வளவு சிரமமான விசயம் அது. பார்த்துப் பார்த்து கட்டிய புது வீட்டில்.. எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தன் போக்கில் தனியறை கட்டிக் கொண்டிருக்கிறது குளவிகள் என்று ஒரு அழகான காட்சியைச் சொல்லியிருக்கிறார்.
தூசி தட்டினேன்
வீடெங்கும் இசை
கொலுவில் வைத்த வீணை
அதுவரை மீட்டப்படாமல் தூசி படிந்து கொண்டிருந்த வீணை.. கொலுவில் வைப்பதற்காக தூசி தட்டப்படுகிறது.. அந்த நேரத்தில் அதில் இருந்து வரும் இசை வீடெங்கும் கேட்கிறதாம்.
பூவை வரைந்தேன்
மணமாக இருக்கிறது
காகிதம்
பூ என்று சொன்னதுமே நமக்குள் ஒரு மலர்ச்சி வரத்தான் செய்யும். அதிலும் வண்ண வண்ண மலர்களைப் பார்க்கும் பொழுது அதன் நிறமும், மணமும் நம் மனதை அசைக்கத் தான் செய்யும். வரைந்த பூவிலும் கூட வாசம் வருகிறது.
இப்படி ஒவ்வொரு கவிதைகளையும் சிறப்பான காட்சிகளாய் நமக்குக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர்.
சில கவிதைகள் படித்ததும் புரிந்து போகும்.. சில கவிதைகள் அசைபோடப் போட நம்மை அசைத்துப் போகும்..
அப்படி மனதை அசைக்கும் பல கவிதைகளைப் படைத்திருக்கும் கவிஞருக்கு வாழ்த்துகள்.
இயற்கைக் காட்சிகளையும்.. தான் ரசித்த அழகியலையும்.. ஹைக்கூ கவிதைகளாகச் சமைத்துக் கொடுத்திருக்கும் நூலாசிரியருக்கு சிறப்பு வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்.
மென்மேலும் அவரின் தமிழ்ப்பணி தொடர மனமகிழ் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன்.
இந்த நூலினை மிகச்சிறப்பாக வடிவமைத்து வெளியிடும் நூலேணி பதிப்பகத்திற்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க வளமுடன்!
நெல்லை அன்புடன் ஆனந்தி
மிச்சிகன் அமெரிக்கா
இதழாசிரியர், நூலேணி இதழ்
துணை இயக்குனர், லாலிபாப் சிறுவர் உலகம்
பன்னாட்டு இயக்குனர், தமிழால் இணைவோம்
நிறுவுனர், அமெரிக்கத் தன்முனைக் கவிதைக்கூடம்

