topbella

Wednesday, November 28, 2012

நீங்காத உன் பிம்பம்...!


எப்போதும் அவள் 
கடந்து செல்லும் வீதி...
ஏக்கங்கள் நிறைத்துப் 
போட்டிருக்கும் என் மனம்..

காலம் இழுத்து வந்த பாதை 
காதல் கடந்து வந்த மீதி..
எனதுயிரை சுமந்து போகும் பாதை..
ஏக்கங்கள் நிறைத்து 
என்னுள்ளம் தொலைத்து 
எதுவுமறியாத எல்லைக்கோடு...

காரணம் தேவையில்லை 
அவள் கைகளில் நான் பிள்ளை
யாரவள் என் வாழ்வில் 
எனை தாலாட்டும் வீணை...

தேடலில் தெரிந்த சொந்தம்
தீண்டியும் தீராத பந்தம்...
மோனத்தில் உதிர்ந்த இன்பம்
உன் மௌனத்தால் 
உணர்ந்த துன்பம்...

கலைந்த எண்ணத்தில் 
கவனச் சிதறலில் கூட 
கலையாத உன் வண்ணம் 
நிறைத்த எண்ணத்தில் 
நீங்காத உன் பிம்பம்...!

~அன்புடன் ஆனந்தி



Tuesday, November 6, 2012

பக்கோடா...!


தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1 கப்
வெண்ணெய் - 2 tsp (அல்லது) சூடான எண்ணெய் - 1 கரண்டி
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சோடா உப்பு - 1 சிட்டிகை
வெங்காயம் - 1 பெரியது
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி - 1 சிறிய துண்டு
உப்பு - தேவைக்கேற்ப
வேர்க்கடலை (அல்லது) முந்திரி பருப்பு - கொஞ்சம்

செய்முறை:

  • வெண்ணெய் (அ) எண்ணெய் , மிளகாய் தூள், சோடா உப்பு, உப்பு - சேர்த்து கலக்கவும்.
  • இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும். 
  • இதனுடன் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து, தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாய் தெளித்து பிசையவும். 
  • வாணலியில் எண்ணெய் காய வைத்து, பிசைந்து வைத்த மாவில் இருந்து சிறிது சிறிதாக.. பிய்த்து போடவும். 
  • பொன்னிறமாக வெந்து, எண்ணெய் சத்தம் அடங்கியதும் எடுக்கவும்.



~அன்புடன் ஆனந்தி




Wednesday, October 10, 2012

நில்லாமல் சென்றாயோ..!



இறுக்கமான உள்ளம் கூட 
இயல்புக்கு திரும்பும் வண்ணம்
இயல்பாய் அசைந்து அசைந்து 
இலை உதிர்க்கும் மரங்கள்...

தன்னியல்பு மாறாது 
தனித்தன்மை குறையாது 
தன்னலம் கருதாது 
தயங்காது தரை தொடும் 
தன்னிகரில்லா இலைகள்...

பிரதி பலன் எதிர்பார்க்காது 
பின் விளைவுகளை எண்ணாது 
பிரகாசிக்கும் வண்ணத்துடன் 
புத்துணர்வோடு வலம் வந்தாய்...

உத்திரவாதம் ஏதுமின்றியே
உதிர்ந்து போகும் போதும்
உன்னழகில் எமை வென்று 
உல்லாசமாய் செல்கிறாய்...

எதையும் எதிர்பார்க்காது
எவர் உதவியும் நாடாது 
நீ நீயாய் இருந்து போவென்றே 
சொல்லாமல் சொல்லி
நில்லாமல் சென்றாயோ..!

~அன்புடன் ஆனந்தி

Wednesday, October 3, 2012

பஜ்ஜி...!


தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 1/2 கப்
அரிசி மாவு - 1 கரண்டி
பெருங்காயம் - சிறிது
மிளகாய்த்தூள் - தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 1 பல்
பஜ்ஜி மிளகாய் - 5
வெங்காயத் தாள் - 5 (ஒரு கட்டு)
 
செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயம், மிளகாய்த் தூள், இடித்த பூண்டு, உப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
  • மிளகாய் மற்றும் வெங்காயத்தாளை நீள வாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். (மிளகாய் மிகவும் காரம் என்றால் உள்ளே உள்ள விதைகளை நீக்கி விடவும்)
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடானவுடன் மிளகாய் மற்றும் வெங்காயத்தாளை ஒவ்வொன்றாய் கரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்து, மெதுவாய் (எண்ணெய் தெறித்து விடாமல்) போட்டு, நன்கு வெந்து சத்தம் அடங்கியவுடன் எடுக்கவும்.
  • கத்தரிக்காய், குடை மிளகாய், உருளைக்கிழங்கு, வெங்காயம், அப்பளம், சௌ சௌ, காலிபிளவரிலும் கூட இதே மாவினை உபயோகித்து பஜ்ஜி செய்யலாம்.
 

~அன்புடன் ஆனந்தி

Thursday, September 27, 2012

நான் நானாக...!


யாருமற்ற வெளியில்
ஏக இறையின் துணையில்
ஏகாந்த சிலிர்ப்பில் 
எதைப் பற்றியும் எண்ணாது
நான் நானாக இருக்க வேண்டும்...

என் ஈசன் பாதம் பற்றி 
என் ஆசை அவன் 
தாள் பணிதல் ஒன்றே 
என்றென் எண்ணம் 
உரைத்தல் வேண்டும்....

சலனமில்லாத பயணம்
சஞ்சலமில்லாத உள்ளம்
சறுக்கல் இல்லா பாதை 
காயமில்லாத நெஞ்சம்
காண்பேன் அவன் தஞ்சம்...

உறுத்தல் வேண்டாம் 
உளறல் வேண்டாம்
கருத்து வேறுபாடு 
கடுகளவும் வேண்டாம்

கைகட்டி யார்முன்பும்
நிற்கவும் வேண்டாம்
கண்டதை எண்ணிக் 
கலங்கவும் வேண்டாம்...

காண்பேன் அவன் எழில் 
பாடுவேன் அவன் நாமம்
தேடுவேன் மெய்ஞானம் 
உள்ளன்போடு சேர்ந்திடுவேன் 
அவன் பொற்பாதம்....!

~அன்புடன் ஆனந்தி


(படம்: கூகிள், நன்றி)

Sunday, September 23, 2012

இன்ஸ்டண்ட் கேரட் தோசை..!


தேவையான பொருட்கள்:

காரட் - 1 கப் (துருவியது)
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 கரண்டி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும். இதனுடன் கேரட் துருவலையும் சேர்க்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கரைத்த மாவுடன் சேர்க்கவும்.

தோசை கல்லில் ஒரு கரண்டி மாவை ஊற்றி, சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி இரு புறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.

தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
செய்து சாப்பிட்டு பாருங்க.





~அன்புடன் ஆனந்தி 





Monday, September 10, 2012

காத்திருப்பு...!



கவிதையே என்னை
காதல் செய்ய
கண்மூடி நேசிக்கிறேன்...

உன் வரிகளை
புரட்டிப் பார்த்தே
உன் வார்த்தைகளில் 
வசந்தமாய் வசிக்கிறேன்...

அரைக் கணத்தில்
ஆயிரம் கவிதை செய்தே
அங்கங்கே எனை
ஆளுமை செய்தே
ஆட்கொண்டாயே அன்பே...

உன் நினைவுகளில்
என் நிமிடங்கள் கரைய
நெஞ்சுக்குள் நீ ஒரு
கவிதை வரைய
கண்ணா உன் வருகைக்காய்
என் காத்திருப்பு...!

~அன்புடன் ஆனந்தி

(படம்: கூகிள், நன்றி)

Monday, August 27, 2012

யாருமில்லா வனத்தில்...!



யாருமில்லா வனத்தில் 
கவலைகள் கடந்த கணத்தில்..
இயற்கையின் எழிலின் சிலிர்ப்பில் 
இறைவா உன் நினைப்பில் 
என் துணையோடு 
ஒரு தொடர் பயணம்...

இயந்திர வாழ்வின் 
இறுக்கம் தளர்த்திப் போட்டு 
எல்லையில்லா பரபரப்பின் 
கட்டுக்கள்  உடைத்துப் போட்டு 
மெட்டுப் போட்ட படியே 
மெதுவாய் உன்னோடு நடப்பு....

காலைக் கதிரவனின் 
கண்கொள்ளாக் காட்சியை 
என் காதல் கணவனின் 
கை கோர்த்து கண்ட படியே
கூவித் திரியும் குயில்களின் 
குரலோசை கேட்டபடி 
நான் மேவித் திரிந்தே 
மெதுவாய் நடை பயில்வேன்..

பல நாள் கனவின் ஒலி 
எனைச்  சிலை போல் 
செதுக்கக் கண்டேன் 
பச்சை மரங்களின் அழகில் 
இச்சை நான் கொண்டே
பதறாது ஒரு கணமும் சிதறாது
கோர்த்து வைத்தேன்...

ஒற்றையடிப் பாதையில் 
உன்னோடான உயிர்ப்பில் 
உறவே உனை உள்வாங்கி
உலகத்தை நான் வெல்வேன்..

காளை உன் கை கோர்த்தபடி 
கவிதைகள் நாம் செய்வோம் 
கடந்து போகும் பாதையெல்லாம் 
மிதந்து போகும் காற்றை கொய்வோம்...

ஏட்டில் எழுதாத 
ஏகாந்தம் பலவற்றை 
எண்ணற்ற ஆசைகளை 
எளிதாய் பேசியபடியே 
ஏக்கங்கள் தீர தீர 
எடுத்துக்காட்டாய் வாழ்வோம்...

கண்முன்னே விரிந்து கிடக்கும் 
காலைப் பனியில்...
கண்மூடித் த்யானம் செய்வோம்
காதருகே கவிதைகள் பல சொல்லி 
காவியம் நாம் படைப்போம்...

வேளை தப்பாது 
விண்மீனை கைது செய்தே 
விரல் சொடுக்கி 
வேலை  வாங்குவோம்
நாளை என்னவென்ற
கவலை சிறிதுமின்றி 
நாட்டியம் நாம் பயில்வோம்...

காதலே உன்னுடன் 
கவிதை செய்வேன்... 
என் கவிதையே உன்னைக் 
காதல் செய்வேன்....!


~அன்புடன் ஆனந்தி

Thursday, June 7, 2012

தயை செய்வாய் எனக்கு...!

Royalty-Free photo: Person holding pink petaled flower during ...

சிந்தையில் நாளும்
சிதறாமல் உலவுகின்றாய்
கண்மூடி தூங்கையிலும்
கைதட்டி எழுப்புகிறாய்...

கரம் பிடித்து விரல் பிரித்து
கதைகள் பல சொல்கிறாய்
உன் சிரம் சாய்த்து
என் நெஞ்சில்
ஸ்வரம் மீட்டி நகர்கிறாய்..

உள்ளங்கையில் தாங்குகிறாய்
உயிருடன் ஊஞ்சலாடுகிறாய்
எண்ணத்தில் கலகம் செய்கிறாய்
உன் நெஞ்சத்தில் சிறை வைக்கிறாய்..!

உனைச் சேரத் துடிக்கும் உயிரை
காணத் தவிக்கும் காதலை
காதல் செய்யும் என்னை
கை பிடிப்பது எப்போது..!

ஏதும் பெரிதில்லை
எதுவும் தேவையில்லை
அன்பன் உன் அன்பு
ஒன்றே அடைக்கலம் எனக்கு
தஞ்சம் புகுந்தேன் உன்னிடம்
தயை செய்வாய் எனக்கு..!


...அன்புடன் ஆனந்தி
(படம்: கூகிள், நன்றி)

Wednesday, May 30, 2012

உள்நெஞ்சின் உரசல்...!

Pin di Anime

நிர்ச்சலனமான அமைதி
நிலைகுலைய வைக்கும்
நினைவுகளின் நீட்சி..
எண்ணத்தின் திண்ணத்தில்
ஏதோ ஒரு ஏக்கம்...

கட்டுக்கடங்கா காதலின்
கவலை தோய்ந்த தேடல்
கார்முகிலின் கருமையாய்
மனமுகிலில் மங்கிய இருட்டு..

உணர்ச்சிகளின் உச்சத்தில்
உதிரும் வெப்பத்தில்
உள்ளார்ந்த காதலைத் தான்
உன்னிடம் உளறுகிறேன்...

கோபம் கொந்தளிக்க...
மீறும் காதல் கரையுடைக்க
தாயின் மடி தேடி தவழும்
குழந்தையாய் என் மனது...

உன்னடி தேடும்...
அன்பை உணர்வாயா
உன் தயை தேடும் தளிரை
தாங்கிப் பிடிப்பாயா இல்லை
தவிக்க விட்டே செல்வாயா?

உள்ளுணர்வின் உண்மை நிலை
யாரும் உதவமுடியா ஊமை நிலை
உயிராய் இருப்பவனே
உள்நெஞ்சின் உரசல் அறியாயோ?


~அன்புடன் ஆனந்தி

படம்: கூகிள், நன்றி.

Friday, May 25, 2012

ஸுக்கினி பொரியல்...!



தேவையான பொருட்கள்:

ஸுக்கினி - 2
வெங்காயம் - 1 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது 

பெருங்காயம் - சிறிது
மஞ்சள் பொடி - சிறிது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 மேஜைகரண்டி


செய்முறை:

ஸுக்கினியை சிறிய துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

வெங்காயம் சிறிது வதங்கியதும், நறுக்கி வைத்திருக்கும் ஸுக்கினியை சேர்த்து, சிறிது மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும். மிதமான தீயில், மூடி வைத்து ஒரு 5 நிமிடம் வேக வைத்தால் நன்கு வெந்து விடும்.

பிறகு மூடியை திறந்து அதில் மிளகாய் தூள், பெருங்காயம் சேர்த்து நன்கு கிளறி விடவும். ஒரு இரண்டு நிமிடம் கழித்து அதில் துருவிய தேங்காய் சேர்த்து இறக்கவும்.



~அன்புடன் ஆனந்தி 

Wednesday, May 23, 2012

உயிர் சுமந்து...!

Royalty-Free photo: Hands holding red rose | PickPik

எதார்த்தங்களின் எழுச்சியில்
எண்ணற்ற வலிகள்...
முந்திக்கொண்டு நிற்கும்
முரண்பாடுகள்...

கண்ணுக்கு தெரியாத
கவலை ரேகைகள்...
எண்ணத்தில் சிக்கி நிற்கும்
எதிர்ப்பு உணர்ச்சிகள்...

உள்ளத்தில் ஒளிந்து கிடக்கும்
உன்னத உறவினை
உள்வைத்துச் சிறை பூட்டி
உணர்ந்து மட்டுமே
உயிர் சுமந்து அலைகிறேன்..

கண் சுமந்த காதல்
கருத்தில் நிறைந்த தேடல்
காரணம் சொல்ல
கண்ணீர் துளி போதும்..

ஏதும் நினைக்காமல்
எதையும் மறைக்காமல்
என்னுடனே நீ இருந்தும்..
யாதும் நன்மைக்கே என்று
யாம் வாழ்ந்து செல்வோம்...!


~அன்புடன் ஆனந்தி


\


(படம்: கூகிள், நன்றி)

Saturday, April 28, 2012

நீ நீயாக இரு....!


நீ நீயாக இரு...
நினைவுகளில் கூட
தூய்மையாய் இரு...
நிஜத்தில் இரு....
அன்புடன் இரு...
பணிவுடன் இரு..
பாசத்துடன் இரு...
பண்புடன் இரு..
நேர்மையாய் இரு..
நெகிழ்வாய் இரு..
ஏமாளியாய் இராதே...
ஏய்ப்பவனுடன் இராதே...
கடவுளை மறவாதே...
கண்டதை எல்லாம் நம்பாதே...
உண்மையை மறைக்காதே...
உள்ளதனைத்தும் சொல்லாதே...
உறுதியில் பிறழாதே...
உற்சாகத்தை இழக்காதே...
நேசத்தில் மூழ்காதே..
நேர்ந்ததை எல்லாம் நினையாதே..!
 ~அன்புடன் ஆனந்தி

படம்: கூகிள், நன்றி. 




Thursday, April 12, 2012

நல்வரவு நந்தன ஆண்டே...!


நாளை பிறக்கப் போகும்
நந்தன ஆண்டிலாவது
ஆள்பவர் அமளி துமளி இன்றி
மின் இணைப்பு மிளிரட்டும்...

அன்பின் அணைப்பில்
ஆண்டும் கழியட்டும்...
இன்பமான உறவுகள்
இனிதே மலரட்டும்...

துன்பங்கள் நீக்கியே ஆண்டவன்
துணை இங்கு நிற்கட்டும்..
இல்லை என்ற சொல் இன்றி
எங்கும் ஏகாந்தம் நிலைக்கட்டும்..

நாளுக்கொரு சொல் சொல்வார்
நட்பு விலகி நன்மை விளையட்டும்...
நான் எனதென்ற அகங்காரம் நீங்கி
நாம் நமதென்ற நல்லெண்ணம் ஓங்கட்டும்..

இயற்கையின் சீற்றம்
இல்லாமல் போகட்டும்...
எல்லாம் வல்ல ஏக இறை
எம்முடன் இருந்து ஆளட்டும்...!

அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!



~அன்புடன் ஆனந்தி



(படம்: கூகிள், நன்றி)

Monday, March 26, 2012

எனை மீட்டுகின்ற உயிராய்...!

May | 2016 | the rose garden


சேமித்த நினைவெல்லாம்
சிற்பமாய் வடிவெடுக்க
வாதிட்ட நேரம் போக
வாழும் நேரம் எல்லாம்
வகையாய் உன்னோடு...

பாய்ந்தோடும் ஆறாய்
பாடல் மீட்டும் கருவியாய்
மீள முடியா சுழலாய்
எனை மீட்டுகின்ற உயிராய்...

எண்ணத்தில் உழன்ற
வண்ணக் கனவுகள்
எதிரேயே வந்து நின்று
கவிதை புனையச் செய்தே
கைகட்டிப் பார்ப்பதென்ன...

உணர்வுகளில் ஒளிந்திருந்த
ஓராயிரம் அசைவுகளும்
ஒரே நாளில் உயிர் பெற்றே
உன்னுடன் உறைந்ததென்ன...

நினைத்தே பார்க்கிறேன்
நிகழும் நிஜம் அனைத்தும்
கலையாத ஓவியமாய்
சிதறாத சித்திரமாய்
கருத்தில் வருவதென்ன...!

~அன்புடன் ஆனந்தி 




(படம்: கூகிள், நன்றி)

Wednesday, March 21, 2012

மௌனம் காத்தாவது...!



விரும்பும் ஒருவர் 
விளையாட்டாய் செய்யும்
விஷயம் கூட
வினையில் கொண்டு
விட்டு விடுகிறதே..

வெறுப்பாய் பேசும்
வார்த்தைகளில் கூட
விண்மீனாய் தோன்றும்
உன் காதல் வேகம்..

சொல்லிப் புரிய வைக்க
சொற்கள் கிடைக்க வில்லை..
தெளிவு படுத்தவோ
தெரிந்த வார்த்தை கூட
உதவ வில்லை..

கோபத்தில் வரும் வேகத்தில்
கொதித்துத் தான் போகிறாய்..
கொண்டவன் கொந்தளிப்பில்
நிர்கதியாய் நிற்கும் நிலை..

மயக்கும் வார்த்தைகள்
பேசத் தெரியாது உனக்கு
மனதின் காதல்
மறைக்கத் தெரியாது எனக்கு..

மௌனம் காத்தாவது உன்
மன்னிப்பை கேட்கிறேன்..
கரையாத உன் கோபம் கூட
குறையாத என் அன்பில் தீரும்...!


~அன்புடன் ஆனந்தி 


(படம்:கூகிள், நன்றி)

Thursday, March 15, 2012

என் செய்வேன்...!

Pin on Sad dpz

எழுதாத கவிதை பல
ஏற்றி வைத்தேன் இதயத்திலே..
எழுத வைத்தவன் நீ
எட்டி நின்று என்ன வேடிக்கை?

எவரெவரோ என் வாழ்வில்
எப்படியோ வந்து போக..
எதேச்சையாய் வந்தவன் போல்
என்னுயிரில் கரைந்து விட்டாய்..

எதார்த்தமாய் இருக்கத் தான்
எவ்வளவோ முயற்சிகள்
எங்கு சுற்றியும்..
என் கண் முன்னேயே
வந்து நிற்கும்
உன் நினைவு பட்சிகள்...

ஆழ்மனதில் ஆசை ஆயிரம்
எனை ஆள்பவன் நீ தரும்
சோதனையோ கோபுரம்...

பார்க்கும் போதெல்லாம் சளைக்காமல்
பதிவு செய்த ஒலிநாடா போல்
பிறகு வேறென்ன என்கிறாய்...
என்னவென்று சொல்வேன்...

எதிர்பார்க்காதே என்றே
எத்தனையோ முறை
எச்சரித்து விட்டேன்...
என் இதயம் கூட
என் பேச்சு கேட்காமல்
எதிர்த்தே நிற்கிறது
என் செய்வேன்.....!!!


~அன்புடன் ஆனந்தி

Tuesday, March 6, 2012

உருளைக் கிழங்கு போண்டா...!


தேவையான பொருட்கள்:

உருளைக் கிழங்கு - 5
பச்சை பட்டாணி - 1/4 கப்
வெங்காயம் (பெரியது) - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 5
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி இலை - சிறிது

கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
இஞ்சி - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:


  • உருளைக் கிழங்கையும், பட்டாணியையும் குக்கரில் வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடேறியதும், அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் சேர்க்கவும். 
  • கடுகு வெடித்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், பொடியாக நறுக்கிய தக்காளி, வேக வைத்த உருளை கிழங்கு, பச்சை பட்டாணி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு போல் கரைத்து கொள்ளவும். (பஜ்ஜி மாவு போல)
  • ஆறிய உருளைக்கிழங்கு மசியலை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும், ஒவ்வொரு உருண்டையாக எடுத்து, கரைத்த மாவில் தோய்த்து எண்ணையில் போட்டு, பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
  • இந்த போண்டாவிற்கு தேங்காய் சட்னி, தக்காளி சாஸ் ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

~அன்புடன் ஆனந்தி 

Monday, February 27, 2012

குடியிருந்த கோவில்..!



அம்மா என்ற சொல்லே... அன்பை குறிப்பது. அம்மா என்று சொல்லும் போதே அதன் உள்ளார்ந்த அன்பையும் சேர்த்தே அனுபவித்துச் சொல்கிறோம். எல்லாருக்கும் தான் அம்மா இருக்காங்க... இதிலென்ன பெரிய வித்தியாசம் இருக்குன்னு தோணும்... ஒவ்வொரு பெண்ணும்.. தான் தாய்மை அடையும் பருவத்தை தான்... புது ஜென்மமாக உருவகித்து வாழ்ந்துட்டு இருக்காங்க.  வயிற்றில் கரு உருவான நொடி தொட்டு.. தான் உண்ணும் உணவில் இருந்து.. படுக்கும் விதம் வரை பார்த்து பார்த்து எல்லாம் செய்து பத்திரமாய் பிள்ளை பெற்று எடுக்கிறாள்.  பெற்ற போது கண்டாளா அப்பிள்ளை கடைசி காலத்தில் கஞ்சி ஊற்றுமா.... இல்லை கசப்பாய் பேசி விடுமான்னு...!

எல்லாரும் நல்ல பிள்ளையைத் தான் பெற்று எடுக்கிறாங்க.  நல்ல மாதிரி தான் வளர்க்கிறாங்க.  நல்ல படிக்க வச்சு... வேலையிலும் இருத்தி வைக்கிறாங்க.  ஆனா எத்தனை பிள்ளை.. கடைசி காலம் வரை தன் தாயை தாங்கி நிக்குதுங்க?  பிறக்கும் போதே.... ஆண் என்றால் அவன் ஆளப் பிறந்தவன் என்றும்.. பெண் என்றால் இன்னொரு வீட்டில் வாழப் பிறந்தவள் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கு.. அது பாதி-ன்னா.. என் புள்ள... என் வாரிசு.... எனக்கு கொள்ளி போட வந்தவன்னு ஒரேயடியா பாராட்டு... சீராட்டு...!

இத்தன பாராட்டுக்கும் அந்த புள்ள தகுதியா இருந்தா சரி தான்.. மறு பேச்சுக்கு இடமே இல்லை...! பெரும்பாலும் தன் தாயை நல்ல மாதிரி தன்னோடு வைத்து கடைசி வரை காக்க வேண்டும் என்றே பிள்ளைகள் எண்ணுவதுண்டு... அப்போ... எங்க பிரச்சினை வருது? எதனால முதியோர் இல்லம் இருக்கு?  ஒரு ஆண் பிள்ளை திருமணம் ஆனதும் தான் மாறி விடுகிறான்.. அவன் மனைவி வந்து.. தான் இவனை மாற்றி விடுகிறாள் என்றெல்லாம் சொல்வது.... முற்றிலும் உண்மை இல்லை.

ஒரு மனைவியோ... தாயோ தன்னிடம் குறை கூறும் பட்சத்தில்.. இருவரிடமும்.. அவர்கள் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து கேட்டு விட்டு.. அதை அப்படியே... விட்டு விடுவது... கேட்டவருக்கும் நல்லது.. குறை சொன்னவர்களுக்கும் நல்லது.... அதை விடுத்து... ஏண்டி இப்படி செஞ்ச?? என் பொண்டாட்டிய ஏம்மா இப்படி சொன்னிங்க.ன்னு.. வரிஞ்சு கட்டிட்டு போய் கேட்டால்... அங்க தான்... செவன் தர்ட்டி.... சம்மணம் போட்டு உக்கார ஆரம்பிக்கும்...!

இல்ல தெரியாமத் தான் கேக்குறேன்... ஒருத்தர் நம்ம கிட்ட வந்து புலம்பும் போது.. சரி விடும்மா... சரி ஆயிரும்... பாத்துக்கலாம்.. ன்னு சொல்லிட்டு.. இருவருக்கும் பொதுவாக நடந்தால் என்ன குறை வந்து விட போகிறது...?  இதை விட்டு போட்டு..  அம்மா பேச்சை கேட்டு பொண்டாட்டிய இழுத்து போட்டு அடிக்கிறதும்.... பொண்டாட்டி பேச்சை கேட்டு அம்மா கிட்ட வந்து காட்டுக் கத்து கத்துறதும்.... ஹ்ம்ம் ஹும்.. எந்த நன்மையையும் செய்யப் போறதில்லை..!

அம்மாவோ, மனைவியோ பெரும்பாலும் என்ன எதிர்பார்க்கிறாங்க? தன்னிடம் பிரியமாய் இருக்கணும்... தனக்கு வேண்டியது புரிஞ்சு செய்யனும் ன்னு...! ஆண்களுக்கு 1008 அலுவல்... அன்றாடம் எதிர்கொள்ளும் பல பல பிரச்சினைகள்.. இவை எல்லாம் இருக்கு... வீட்டில் இருக்கும் பெண்கள்.. இதையும் மனதில் கொண்டு... அனுசரணையாக நடந்தால் எவ்ளோ நல்லா தான்...... இருக்கும்...!

அளவுக்கு அதிகமா பாசம் வைக்கிறதே தப்பு தான்னு சொல்வேன்.. ஓவர்-ஆ பாசத்தை கொட்டி வளர்த்துட்டு.. அப்புறம்... உன்ன அப்படி வளத்தேன்..... இப்படி வளத்தேனே...ன்னு புலம்பறதுக்கு... அளவோட அன்பை காட்டி... அதிக எதிர்பார்ப்பு எல்லாம் மனசில வச்சிக்காம இருந்தாலே.. பாதி பிரச்சினை சால்வ் ஆயிரும்...!  கூட்டுக் குடும்பம் எல்லாம் இப்பெல்லாம் கணிசமா குறைஞ்சி போச்சு... இப்பெல்லாம்.. பிள்ளைக்கு கல்யாணம் ஆய்ட்டாலே... ஐய்யா நான் பெத்த ராசா.... நீ தனிக்குடித்தனம் பண்ணுப்பா... அது உனக்கும் நல்லது.. எனக்கும் நல்லதுன்னு... சில பெற்றோர்.. ஆரம்பத்துலேயே.. தெளிவா முடிவு பண்ணிடறாங்க.

எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வருது.. சம்சாரம் அது மின்சாரம் படத்துல.. லக்ஷ்மி ஒரு வரி சொல்வாங்க.. "தள்ளி தள்ளி இருந்துக்கலாம்.. நீ நல்லா இருக்கியா...? நான் நல்லா இருக்கேன்..ன்னு கேட்டுக்கலாம்."ன்னு.  என்னைக் கேட்டா இதுவே ஒரு வகையில நல்லது...! அனாவசியமான மனஸ்தாபங்களை தவிர்க்கலாம்.  அமிர்தமே ஆனாலும் அளவுக்கு மீறினா அது நஞ்சு தான்... அப்படி தான்... அன்பும்... அளவோட.. அவங்கவங்க வேலைய பாத்துட்டு போறது...... எல்லாருக்கும் சேமம்..!

என்னவோ எழுத ஆரம்பிச்சு... ஏதேதோ புலம்பிட்டு இருக்கேன்..! ஹ்ம்ம்... சொல்ல வந்தது ஒண்ணே ஒண்ணு தான்...


கை பிடித்து கதை சொல்லி
கருத்தாய் வளர்த்தவளை
கண்ணீரில் ஆழ்த்தி விடாமல்...

தூக்கி வளர்த்த உயிரை...
தூரம் நிறுத்தி
துயரில் ஆழ்த்தி விடாமல்...

பார்த்து பார்த்து வளர்த்த தாயை
பரிதவிக்கச் செய்து விடாமல்...

நாம் குடி இருக்க
மடி தந்த அன்னையை
அன்பாய் காத்து...

பாசத்தோடு பார்த்துக் கொண்டாலே..
பாதி ஜென்மம் பூர்த்தியாய் விடும்...!

நீங்கள்... இதையெல்லாம் ஏற்கனவே செய்து.. தாயை அன்பாய் பார்த்துக் கொள்பவரா.. உங்களுக்கு தலை வணங்குகிறேன்..!




...அன்புடன் ஆனந்தி






(படம்: கூகிள், நன்றி)

Thursday, February 23, 2012

தேடி வருவதெப்போது...??





உன் அன்பிற்கும்..
ஆணைக்கும் அடங்கிப்
போய்விடும் மனது ஏனோ..

உன் நிராகரிப்பை
மட்டும் நிச்சயம்
தாங்கிக் கொள்ளாது..

நேசம் என்பது
நேரில் கண்டால் மட்டுமா?
பாசம் என்பது
பக்கத்தில் இருந்தால் தானா?

பகலிலும் இரவிலும்
பக்குவமாய் பிடித்த எல்லாம்
பார்த்து பார்த்து செய்தும்
பட்டென்று கோபம் கொள்கிறாய்..

விலகி இருத்தலே
விதி என்றாயின்
வேண்டி விரும்பிதான்
என்ன ஆகப் போகிறது?

ஆதாரம் நீ என்றே
ஆலயம் செல்லும் போதும்
ஆண்டவனிடம் சொல்கிறேன்
தெரிந்தும் கேட்கிறேன் எனைத்
தேடி வருவதெப்போது...??


~அன்புடன் ஆனந்தி 








(படம்: கூகிள், நன்றி)





Wednesday, February 15, 2012

எது நிரந்தரம்...?


உலர்ந்து போவோம்
என்றறியாமல்..
உதடு விரித்துச் சிரிக்கும் 
உன்னத மலர்கள்..

உதிரப் போவதை 
உணராமல்..
உற்சாகமாய் 
சலசலக்கும் இலைகள்..

கலைந்து போவோம் 
என்று உணரா
கண்கவரும் 
வண்ணக் கோலங்கள்..

கரைந்து போவோம் 
என்று கலங்காது 
ஒளியை வீசும் 
மெழுகு வர்த்திகள்..

எரிந்து போவோம் 
என்பதறியா 
ஏராள விட்டில் பூச்சிகள் 
எல்லாம் வாழும் 
நம்பிக்கையில்...

எழுதிய கவிதை 
அழிந்து போவதில்லை..
எடுத்த பிறவி
எதுவுமற்றுப்  போவதில்லை...

எதுவும் நிரந்தரம் இல்லை 
எதார்த்தத்தை மனதில் ஏற்றி
எண்ணியதை ஈடேற்றி 
ஏகாந்தமாய் வாழ்வோம்..!

~அன்புடன் ஆனந்தி



(படம்: கூகிள், நன்றி)

Friday, January 20, 2012

என்னுடன் நீ இருந்தும்...!


அழகன் உன் கை கோர்த்து
அருகருகே நடந்து வந்து
அடுக்கடுக்கான படிகளில்
அம்சமாய் அருகில் அமர்ந்து
அன்பன் உன் தோளில் சாய்ந்தேன்

கொளுத்தும் வெயிலில் கூட
கொண்டவன் உன் கூட இருந்தால்..
குளிர் நிலவின் குளுமை
என்னைக் கூடியே ஆளும்...

எனைப்பற்றி நீ எல்லாமறிய
அடுக்கடுக்காய் பேசிச் சென்றேன்..
அமைதியாய் கேட்டு வந்தே
அழுத்தமாய் என் கைகள் பற்றினாய்..

பற்றிய உன் கை பிடித்தே
பலப் பல கனவுகள் சொன்னேன்..
பதறாமல் நீயும் என் கவனம்
சிதறாது எல்லாம் சேகரித்தாய்..

எத்தனை நேரம்
என்னுடன் நீ இருந்தும்...
எதார்த்தமாய் என்னால்
விடை சொல்ல இயலவில்லை..
படரும் என் எண்ண ஓட்டத்தில்
தொடரும் இந்தப் போராட்டம்...!

~அன்புடன் ஆனந்தி


(படம்: கூகிள், நன்றி)

Saturday, January 14, 2012

மங்கலமாய் பொங்கல்...!

மஞ்சள் கிழங்கு கட்டி
மங்கலமாய் பொட்டும் வைத்து..
திங்கள் வெளிவரும் முன்..
திகட்டும் பொங்கல் வைத்தே...

தலை வாழை இலை விரித்து..
தனித்தனியாய் வகை பிரித்து..
பழங்களுடன் காய்கறிகள்
பாங்காய் அடுக்கி வைத்து...

அதிகாலை சூரியனும்..
அடி எழும்பி வருமுன்னே..
அவனுக்கு படையல் வைத்து
அதிலே சிறிதெடுத்து...

காக்கைக்கு வைத்து விட்டு
கட்டிக் கரும்பை கடித்து கொண்டு
அம்மாவின் கைச்சமையலை..
அணு அணுவாய் ரசித்தே உண்டு

தொலைகாட்சி பெட்டியில்
தொடர்ந்து வரும் நிகழ்ச்சி கண்டு
அக்கம் பக்கம் வீடு சென்று
அங்கே சிறிது பொங்கல் உண்டு..

ஆதவன் மறையும் வரை
ஆத்மார்த்தமான கொண்டாட்டம்
அதுவும் முடிந்து உறங்கி
அடுத்த நாளைக்கு எடு ஓட்டம்..!


அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்...!

~அன்புடன் ஆனந்தி 

(படம்: கூகிள், நன்றி)

Friday, January 13, 2012

வருவாய் வருவாய் என்றே...!!



வருவாய் வருவாய் என்றே
வக்கணையாய் ஏற்பாடுகள்..
வந்தாய் நீயும் வந்த சுவடே
பார்ப்பதற்குத் தெரியாமல்..

வரும் வேளைகளில்..
சாலை எங்கும் சரமாரியாய்
உப்பை வாரி இறைத்தும்
உன் மழுமழுப்பில்
உற்சாகமாய் செல்ல இயலாமல்
ஊரையே கலங்கச் செய்வாய்...

வெளியே வந்து வண்டியேறி
வேகமாயும் செல்ல இயலாது
வேடிக்கை காட்டவென்றே
வெட்டும் வெயிலிலும்
கட்டுக் குலையாமல்
கல் போன்றே காத்திருப்பாய்..

வாராது போனாலோ..
அரசிற்கோ வைப்புத் தொகை
ஆயிரமாயிரம் கணக்கில்
ஆண்டு முழுமைக்கும் மிச்சம்...

உனை நம்பி வாடிக்கையாய்
தொழில் செய்யும் மக்கட்கோ
நித்தம் கடத்துவதே
நீண்ட சுமையாகும் சொச்சம்..

வெண் பனியே
வெள்ளிச் சரமே.... உனை
வீட்டுக்குள் இருந்து கொண்டே
வேடிக்கை பார்ப்பதில்
வேட்கை சிலருக்கு...

புதுப்பனி வீழும் போது
புத்துணர்ச்சியோடு பனிப்
பொம்மை செய்யும் நிமிடமே
பாக்கியமாய் பலருக்கு...

இன்பமும் துன்பமும்
இரண்டற கலந்ததே
இவ்வுலக வாழ்வென்பதற்கு
இதை விட வேறென்ன
இனிய சான்று வேண்டும்...!!

~அன்புடன் ஆனந்தி


(படம்: கூகிள், நன்றி)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)