topbella

Tuesday, January 25, 2011

ஒரு வேண்டுதல்...!



உயிர் மூச்சை வரியாக்கி...
உன் உறவை கருவாக்கி....
உள்ளுணர்வை அதில் ஊற்றி..
உன்னிடமே ஒரு வேண்டுதல்...!

காலம் சென்றாலும்
காதோரம் நரைத்தாலும்
உன் கைகோர்த்து காலாற 
நடந்திடவே வேண்டும்..!

உன் கண்ணிரண்டும் கவி பாட
என் எண்ணமெங்கும் 
எதுவோ ஓட.....
எப்போதும் தப்பாமல்
என்னுடனே நீ வேண்டும்..!

அருகில் அமர்ந்தாலும் உன் 
அன்பில் நான் நனைந்தாலும்
ஒற்றைக் கண்ஜாடை தன்னில்
ஓராயிரம் கவி பேசிட வேண்டும்...!

நித்தமும்  காணாவிடினும்
நிமிடம் நீங்காமல் பேசாவிடினும்
நினைவிலேனும் நீங்காத
நிச்சயமான வரம் வேண்டும்...!

 ~அன்புடன் ஆனந்தி 


Thursday, January 20, 2011

அமெரிக்க வாழ்க்கை .....பாகம் 6

ரொம்ப நாளா இந்த தொடரை எழுத நினைத்து..இயலாமல் போய்விட்டது..! கால தாமதத்திற்கு மன்னிக்கவும்..!


இதற்கு முந்தைய பாகம் 5


          என் சின்ன பொண்ணை, நீயும் டான்ஸ் கிளாஸ் போறயான்னு கேட்டேன்.. உடனே யோசிக்காம பதில் வந்தது.. நோ அம்மா...ன்னு..!! ஏண்டான்னு? கேட்டேன்.. அதுக்கு அவ சொல்றா, "யு அண்ட் அக்கா, ஆல்வேஸ் பைட்ன்னு...!"ஆஹா, புள்ள நம்ம போடுற குஸ்தில பயந்து போயி தான் டான்ஸ் கிளாஸ் வேணாம்னு சொல்லுது..! எப்படியாச்சும், தேத்தி அடுத்த விஜயதசமியில்  டான்ஸ் கிளாஸ் சேக்கணும்னு பிளான் வச்சிருக்கேன்.. பாப்போம்..! (உடனே.. வரிஞ்சு கட்டிட்டு சண்டைக்கு வரபிடாது.. அதான் புள்ள, வேணாம்னு சொல்லுதே விட வேண்டியது தானேன்னு...) ஒரு நாள்.. அவ அக்கா மாதிரி டான்ஸ் கத்துக்கணும்னு சொல்றா.. ஒரு நாளா வேணாம்னு சொல்றா..! சரி ஒரு முடிவுக்கு வரட்டும்னு வெயிட் பண்றேன்..!


          இதெல்லாம் தவிர இங்கே ஸ்லோகம் கிளாஸ்-னு இருக்கு. ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் நடக்கும், 10 மணி முதல் 11 :30 மணி வரைக்கும் ஸ்லோகம், அப்புறம் ராமாயணம் கதை, சொல்வாங்க.. அதுக்கு பிறகு, தமிழ் பாடம் எடுப்பாங்க. என் குட்டீஸ் ரெண்டு வருஷமா போறாங்க.. ரொம்பவும் உபயோகமான கிளாஸ் இது. நம் பண்பாடு விட்டுப் போகாம இருக்க உதவியா இருக்கு. என் குட்டீஸ் ரெண்டும் சேர்ந்து எதாவது ஸ்லோகம் சொல்லும் போது, பார்க்க சந்தோசமா இருக்கும். ஸ்லோகம் முடிந்ததும், தமிழ் சொல்லித் தராங்க.. இப்போ என் குட்டீஸ்.. எழுத்துக் கூட்டி வாசிக்க முயற்சி செய்றாங்க....  (சரி நம்மளும், உருப்படியா ஏதோ பண்றோம்னு ஒரு திருப்தி தான்).மொத்தத்தில் எல்லா கிளாஸ்-ம் சேர்த்து விட்டுட்டு நாம புல் டைம் டிரைவர் ஆக வேண்டியது தான்..!


(இந்த படம் வருட கடைசியில் ஸ்லோகம் கிளாஸ்-இல் போட்ட பாலராமாயணம் நாடகம்)

          மத்தபடி இங்கே நம்ம பண்டிகைகள் எல்லாமே ஊரில் கொண்டாடுவதைப் போலவே விமரிசையா கொண்டாடுறோம்.. நவராத்திரியில் கொலு வைப்பது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்... அத பத்தி கொஞ்சம் சொல்லணும். குட்டீஸ்-க்காக தான் கொலு வைக்க ஆரம்பித்தேன். இப்போ 3 வருஷமா வச்சிட்டு இருக்கேன். நவராத்திரி தொடக்கத்திலயே அந்த பரபரப்பு வந்திரும். எல்லா பிரண்ட்ஸ்-யும் கூப்பிட்டு குங்குமம் குடுக்கறது பெரிய சந்தோசம்.  தோழி மேனகா, கொலு வைக்கறது பத்தி ஒரு பதிவு போட சொல்லி சொன்னாங்க.. அத தனி பதிவா போடறேன்..! (அடுத்த கொலுவுக்குள் பதிவு போட்டு விடுகிறேன் மேனகா...என் சுறுசுறுப்பு விவகாரம் தான் உங்களுக்கு தெரியுமே...!!)


          அடுத்து இங்க உள்ள தமிழ் சங்கம்... வருடத்தில் நாலைந்து முறையாவது, கண்டிப்பாக ப்ரோக்ராம் இருக்கும்... வரும் வாரங்களில் கூட பொங்கல் நிகழ்ச்சி இருக்கு..! அங்கே போனா.. நம்ம பிரண்ட்ஸ் எல்லாரையும் ஒரு சேர பார்ப்பது ரொம்ப ஜாலி-ஆ இருக்கும்... நம்ம ஊர்ல கல்யாண வீட்டிற்கு போல சந்தோசம் இங்கே கிடைக்கும்.. கலர் கலராக, அழகு அழகாக எல்லாரும் டிரஸ் பண்ணிட்டு வந்திருப்பதை பார்ப்பதே விருந்து தான்..! பெரும்பாலும் பெண்கள் எல்லாம் சேர்ந்து தான் இந்த ப்ரோக்ராம் எல்லாம் போறது.... வெயிட்..வெயிட்... நோ டென்ஷன்.. அது ஏன்னா.. எங்க குட்டீஸ் சின்ன பசங்களா இருக்கறதால.. அங்க போயி கொஞ்ச நேரத்தில் அவங்களுக்கு போர் அடிக்குது.... எப்போ வீட்டுக்கு போகலாம்னு கேட்டுட்டே இருப்பாங்க..... அதனால... நிம்மதியா வீட்லயே இருந்து விளையாடட்டும்னு ஒரு நல்ல எண்ணத்தில் தான் நாங்க மட்டும் போறது...! (அதாகப் பட்டது... எங்க தொல்லை இல்லாம அவங்களும் கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டுமேன்னு தான்... எப்புடி.. எங்க டூ இன் ஒன் ஐடியா..!)


          அப்புறம் போன வாரம் கொண்டாடிய பொங்கல்..... நம்ம ஊரில் வைப்பது போல், வெளியில் எல்லாம் வைத்து பொங்கல் விட முடியாது.. இப்போ இங்கே, கடுமையான பனிக்காலம் வேற..! வெளியில் முழுக்க முழுக்க ஐஸ் தான் இருக்கும்..! (உணர்ச்சி வசப்பட்டு வெளியில போனா..... பொங்கப்பானை....எல்லாம் இருக்கும்.. நம்ம தான் இருக்க மாட்டோம்.. அம்புட்டு குளிரு...) ஆனால், நம்ம ஊரில் செய்வது போல், முந்தைய நாட்களில், காய்கறிகள், கரும்பு.. எல்லாம் வாங்கி வந்து.. பொங்கல் அன்று விளக்கு ஏற்றி, சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாய் காய்கள், பழங்களுடன் படைத்து, வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கலிட்டு.. பூஜை செய்தோம்..! நீங்களும் அது தான் செஞ்சிருப்பீங்க.... ஏதோ உங்க கிட்ட என்னோட சந்தோசத்தை பகிர்ந்துக்கறேன்..!


.......(தொடரும்)

(படங்கள்: எல்லாம் சொந்த படங்கள் தான்..)

Friday, January 14, 2011

திரும்பிப் பார்க்கிறேன்....! (தொடர் பதிவு)

இந்த தொடர் பதிவிற்கு என்னை அழைத்த தோழி கௌசல்யா-விற்கு, நன்றி..! 2010 -ல் நான் செய்த பெரிய சாதனை (ஹி ஹி.. உங்களுக்கெல்லாம் சோதனைன்னு சொல்லலாம்) இந்த பதிவுலகிற்கு வந்தது தாங்க...! அதில் உண்மையான உறவாகவும், நட்பாகவும்...நிறைய பேர் கிடைச்சிருக்கீங்க... ரொம்ப நன்றி..!

அப்புறம் சென்ற வருடம் நடந்த சில, பல விசயங்களை சொல்றேன்..!

லக்ஷ்மன் ஸ்ருதி கான்செர்ட்
இங்க உள்ள தமிழ் சங்கத்தில் நடந்த கான்செர்ட்-டிற்கு பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து போனோம்.. அங்கே கிருஷ், மகதி, மாலதி லக்ஷ்மன் இவங்களை எல்லாம் சந்தித்தது.....அப்புறம் முதல் தடவையா டான்ஸ் எல்லாம் வேற ஆடினோம்.. (ஹி ஹி.. அதப் பாத்து எத்தனை ஜீவன் பாதிக்கப் பட்டாங்களோ.. தெரியல.. இன்னும் புள்ளி விவரம் கைக்கு வரலை.. சரி அதை விடுங்க.. அது நடந்து முடிந்த கதை.. இப்போது தொடங்கிய பிரச்சினைக்கு வாரும்.. அச்சச்சோ.... ஒன்னுமில்லைங்க.. நேத்து திருவிளையாடல் படம் பார்த்தேன்.. அந்த பாதிப்பு தான்... நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க.. )

சின்னக் குயில் சித்ரா கான்செர்ட்
இது நடந்தது ஒரு மலையாள சங்கத்தில்... (அதெல்லாம் இருக்கட்டும்மா.. நீ அங்க போயி என்ன பண்ணினன்னு தானே கேக்க நினச்சீங்க...) எல்லாம் ஒரு இசை ஆர்வம் தான்..  சித்ராவின் இனிமையான குரலில்.. நிறைய மலையாள பாட்டு பாடினாங்க.. இசைக்கு ஏது மொழி? நாங்களும் ரசித்தோம்.. அப்புறம் சித்ரா, அவங்க.. இங்க யாராச்சும் தமிழ் ரசிகர்கள் இருக்கிங்களான்னு கேட்டாங்க.. உடனே... எச்ச்சச்ச்ச்சச்ச்ச்ஸ் ன்னு.... விசில் அடிச்சு ஆர்ப்பாட்டம் பண்ணியாச்சு. அதுக்கு பின்னாடி நிறைய தமிழ் பாட்டு பாடினாங்க. ரொம்ப சந்தோசமா இருந்தது..!

தமிழ் சங்கம்.. கதம்பம் பத்திரிக்கை
நான் எழுதிய கவிதைகள்... "என்னுயிர் நீயன்றோ....", "எனக்காய்ப் பிறந்தவனே.." மற்றும் "பாடுவோர் பாடினால்..." லக்ஷ்மன் ஸ்ருதி கான்செர்ட் குறித்த எனது ஆர்டிகிள் இவை எல்லாம், கதம்பம் இதழில் வெளியானது.. இப்படி அங்கீகாரம் கிடைத்தது, இதுவே முதல் முறை..! மனதிற்கு சந்தோசமா இருந்தது..!

எந்திரன் படம்
பொதுவா இங்கே வெளியாகிற எல்லா படங்களும் பார்ப்பதில்லை.. ஒரு சில படங்களுக்கு தான் போறதே.. எந்திரன்... ஏற்படுத்திய எதிர்பார்ப்பில் தியேட்டர் போனோம்.. முதல் பாதி படம் முழுக்க.. சீட் ஓரத்துல உக்காந்து பாக்குற மாதிரி விறு விறுன்னு தான் இருந்தது.. அப்புறம் இரண்டாம் பாதி..தான் கொஞ்சம் படம் எப்போ முடியும்னு நினைக்க வச்சிருச்சு.. ரஜினி எப்பவும் போல்.. சூப்பர் ஸ்டார் தான்.. இப்படத்திலும்..! ஆனாலும் எனக்கென்னவோ ரஜினியை படத்தில் இங்கும் அங்கும் சொருகியது போல இருந்தது.. ஏன்னா ரஜினி வருவதை விட.. படத்தில் ரோபோட், கிராபிக்ஸ்.. தான் ஜாஸ்தி ஆக்கிரமிப்பு.

தெலுங்கு அசோசியேஷன் தீபாவளி ப்ரோக்ராம்
(சரி சரி.. உங்க பீலிங்க்ஸ் புரிது... இங்க என்ன பண்ணேன்னு தானே யோசிக்கிறீங்க..) மீண்டும் அதே.. இசை, கலை ஆர்வம் தாங்க.. கலைக்கு மொழி ஒரு தடையா இருக்கலாமா? இங்கே என் பொண்ணு, மற்றும் அவள் கூட உள்ள குட்டீஸ்...சேர்ந்து  MSS அவர்களின், "கீதகுனிக்குதக்க...." பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினாங்க..  அதில் கிருஷ்ண லீலைகள் குறித்த காட்சிகள் எல்லாம் வரும், குழந்தைகளின் முகபாவம் எல்லாம் பார்க்க ரொம்ப சந்தோசமா இருந்தது.. (இன்னும் திருத்தமா வரலை.. ஆனா..விடா முயற்சியா நானும், என் பொண்ணும் அடி பிடி சண்டை போட்டு கத்துக்கறோம்.. சாரி.. கத்துக்க வைக்கிறேன்.....)

பால ராமாயணம்.. டிராமா
இங்கே என் குழந்தைகள் செல்லும் ஸ்லோகம்  வகுப்பில், பால ராமாயணம் டிராமா போட்டோம்.. அதில் எல்லா பசங்களும்.. ரொம்ப அழகா.. வசனம் எல்லாம் மறக்காம பேசி, நடிச்சாங்க.. ரொம்ப பெருமையா இருந்தது.. நினைத்ததை விடவும், குழந்தைகளின் பங்களிப்பு.. அபாரமா இருந்துச்சு.. சந்தோசமா இருந்தது.. :-) அது எனக்கு மிகவும் மறக்க முடியாத நிகழ்வு...!

மன்மதன் அம்பு
அவ்வ்வ்வவ்.. இது ஒரு பெரிய சோக கதை.. ஒரு பிரண்ட் தீவிர கமல் ஃபேன்... அவங்க என்னை படத்துக்கு கூப்டாங்க.. நா என்ன பண்ணி இருக்கணும், சிவனேன்னு அவங்களோட போயிருக்கனும்.. அத விட்டு போட்டு... என்னோட மத்த பிரண்ட்சையும் வாங்க...போலாம்னு கிளப்பிட்டு போனேன்.... என்னை ஒரு கொடுமை.. நொந்து போய்ட்டேன்... முதல் பாதியாவது ஏதோ, பார்க்கிற மாதிரி இருந்துச்சு..... ரெண்டாம் பாதி.... ஹ்ம்ம் ஹும்ம்... ஒண்ணும் சொல்றதுக்கில்லங்க.. ஏதோ, கூட்டிட்டு போனதுக்கு.. கொல பண்ணாம விட்டாகளே.. அது வரையில் ஓகே... :D 

கரோகியில் பாடியது
பிரண்ட் ஒருத்தங்க.. ரொம்ப அழகா பாடுவாங்க...   அவர், கரோகி மெஷின், வச்சிருக்கார்.. ஒரு கெட் டுகதர் பார்ட்டி-க்கு.. அவருடன் சில பாடல்கள் பாடுவதாய் ஏற்பாடு.. (இது நாள் வரை வீட்டில் சும்மா பாடுறது, அப்புறம் ஐயப்பன் பூஜையில் பாடுறது.. அவ்ளோ தான்...இப்போ மட்டும் என்ன? சூப்பர் சிங்கர்-லயா பாடிட்டேன்னு கேக்கத் தோணுமே...) அப்புறம்.. பாட ஆரம்பிக்கும் போதே.. மைக் கைல வந்ததும்...உதறல் தான்.. முதல்.. பாட்டு சகிக்கல... ஏதோ, பாத்து வாசிச்ச மாதிரி இருந்தது... அப்புறம் போக போக.. ஏதோ சுமாரா வந்தது... (ஹலோ பாட்டைத் தான் சொல்றேன்.... ஏடாகூடமா தின்க் பண்ணப் பிடாது... என்ன கொடும சரவணா? ன்னு தானே.. சொல்ல நினச்சீங்க.. ஹிஹி.. தெரியுமே.. தெரியுமே..!) கரோகி-யில் பாடியது இது தான் முதல் முறை..!!

சரி சரி பேச்சு பேச்சா இருக்கட்டும்... நோ வயலன்ஸ்... நினைவலை கொஞ்சம் ஓவரா தான் அடிச்சிருச்சு.. இத்தோட நிறுத்திக்கிறேன்...! பொறுமையாய் படித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்...நன்றிகள் பல..!

உங்க எல்லாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!!


முத்தான தை திரு நாளில்
நம் சொத்தான சூரியனை
வணங்கி தத்தம் வித்தான
குடும்பத்தாருடன் எல்லா 
வளமும்  பெற்று வாழ்வாங்கு 
வாழ வாழ்த்துக்கள்...!!




....அன்புடன் ஆனந்தி 

Thursday, January 6, 2011

ஊடல்...!!!


அளவுக்கு அதிகமான உன்
அன்பை இன்று ஆக்ரோஷமாய்
வெளிக்காட்டினாய்...
அதிர்ச்சியில் உறைந்த நான்
அவசியம் நீ பேசச் சொல்லியும்
அவசரமாய் விலகி நின்றேன்...

என் கண்ணில் நீர் வழிந்தால்
உன் நெஞ்சம் ரணமாகும்
உண்மையறிந்தே நான்
எளிதில் வசமிழக்காமல்
எவ்வளவோ முயன்றேனே...

கண்மணியே உடனே வா என்று
கட்டளை பிறப்பித்தாய்.. நானும்
கட்டுப்பட்டே உன் கண்ணெதிரில்
கண்ணீரை மறைக்க இயலாமல்.....

உன் நெஞ்சம் வேதனை கொண்டால்
உயிர் வரை என்னைச் சுடுவதென்ன....
உடனே வந்தோடி எனை நீ
உணரும் வண்ணம் 
நான் அணைப்பதென்ன...

உன்னிடத்தில் எதையும் மறைக்க
எப்போதும் நான் எண்ணியதில்லை...
ஒரு வேளை மறைத்திருந்தால்
மன்னவா இக்காட்சி தான்  
மிஞ்சியிருக்குமோ...

அழுகையின் ஊடேயும் உன்
அன்பினால் எனை ஆண்டு
அக்கறையான வார்த்தையாலே
அங்கேயே சிரிக்கச் செய்தாய்...

இப்படி நான் சிரித்ததால்
இயல்பாய் இருக்கிறேன்
என்றே எண்ணிவிடாதே.....
உன்னை வேதனை படுத்திய
உணர்வு என்னுள் விருட்சமாய்
வீழ்ந்ததடி என்றாய்.....

அத்தனையும் மறந்து விட்டு
நம் அன்பில் மட்டும்
மலர்ந்து நிற்போம்
இக்கணமே இவ்விடமே
ஒன்றாகக் கலந்திருப்போம்...!!

....அன்புடன் ஆனந்தி 

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)