topbella

Tuesday, January 3, 2012

பாதாம் கேக்...!


தேவையான பொருட்கள்:

பாதாம் பருப்பு - 1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 1/4 கப்
பால் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன்

செய்முறை:

  1. பாதாம் பருப்பை குறைந்தது ஒரு நான்கு மணி நேரம் வெது வெதுப்பான தண்ணீரில் ஊறவைத்து, அதன் தோலை, நீக்கி விடவும்.
  2. பின்னர் அதனுடன் பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். (ரொம்ப மையாக அரைக்க வேண்டாம்)
  3. பின்னர் ஒரு அடி பிடிக்காத கனத்த பாத்திரத்தில் சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் விட்டு, அது நன்கு கரைந்ததும், அரைத்த விழுதை போட்டு மிதமான தீயில் கிளற வேண்டும்.
  4. குறைந்தது ஒரு 30 நிமிடமாவது ஆகும். விடாமல் கிளறி விட வேண்டும். இல்லை என்றால் அடி பிடித்து விடும்.
  5. முதலில் கிளறும் போது, வெளியில் தெறிக்கும்... நேரம் ஆக ஆக.. தெறிப்பது குறைந்து விடும்.
  6. இதனுடன் ஏலக்காய் பொடி சேர்த்து, நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி வந்தால்... பாத்திரத்தில் ஒட்டாமல் வர ஆரம்பிக்கும். அப்படி வரும் போது.. ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி... நன்கு ஆறிய பிறகு வில்லைகள் போடவும்.


~அன்புடன் ஆனந்தி 

Saturday, December 31, 2011

அகிலம் காப்போம்..!


அன்னை தந்தை பாசம் பெற்று
அறுசுவை உணவும் பெற்று
அடைக்கலமாய் இடமும் கிடைத்து
அணிவதற்கு நல்லாடை அமைந்து
அவனியில் எத்தனை பேர் உள்ளனர்?

இவையனைத்தும் இயல்பாய்
இலகுவாய் பெற்ற பலர்
இறுமாப்புடன் அருமை தெரியாது
அலட்சியமாய் அனுபவித்தே
அவர் வாழ்வு வாழ்கின்றார்...

அனைத்தும் படைத்த ஆண்டவா
படைக்கும்போதே பாகுபாடு எதற்கு?
அளவற்ற செல்வம் ஓரிடத்தே
அன்றாட வாழ்வை அசைக்கவே
படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும்
பல பேர்கள் பேரிடத்தே...!

புத்தாண்டு பொலிவுடன் சிறக்க
புறவேற்றுமை ஒழிய வேண்டும்
அரசியலை மட்டும் அண்டாது
ஆண்டவனை மட்டுமே நம்பாது
அவரவர் அறிவினை நம்பி
அயராது உழைத்து
அரியாசனம் ஏறவேண்டும்

எரிமலைகள் எம் தேசத்தில்
எங்கும் எரியும் ஏழ்மைத் தீயும்..
எதையும் செய்யத் தூண்டும்
பதவிப் பேயும் எட்டி ஓடவே

இளைஞர் சமுதாயமே
இந்நேர நிலையுணர்ந்து
எடுக்கும் முயற்சியை
ஏற்றமுறச் செய்தே
எதிர்கால இந்தியாவை
இமயம் அடையச் செய்வீர்....!

எவரேனும் வந்து
ஏதேனும் புரட்சி செய்து..
எம் வாழ்வு செழிக்கச்
செய்ய வல்லாரோ
என்றெண்ணியே....

ஏமாற்றம் அடையாது
அவரவர் சக்திக்கு
ஆக்க முடிந்ததை
அக்கறையாய் செய்தே
அகிலம் காப்போம்!

அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!


~அன்புடன் ஆனந்தி


(படம்: கூகிள், நன்றி)

Tuesday, December 27, 2011

ராகி முறுக்கு...!

யாரும் கலரை பார்த்து பயப்பட வேண்டாம்... டேஸ்ட் சூப்பர்-ஆவே இருக்கு. கண்டிப்பா செஞ்சு பாருங்க.


தேவையான பொருட்கள்:

ராகி மாவு - 3 கிண்ணம்
அரிசி மாவு - 2 கிண்ணம்
உளுந்து மாவு - 1 கிண்ணம்
பெருங்காயம் பொடி - சிட்டிகை
எள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர்
எண்ணெய்

செய்முறை:

  1. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  2. உளுந்து மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  3. அதனுடன் அரிசி மாவு, ராகி மாவு, உப்பு, எள், காயம், வெண்ணெய் கலந்து தேவையான தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
  4. தேன்குழல் (முறுக்கு) அச்சில் மாவை போட்டு, மிதமான சூட்டில் உள்ள எண்ணையில் பிழிந்து, பொறித்து எடுக்கவும்.
  5. (சத்தம் அடங்கியதும் எடுத்து விட வேண்டும்... ராகி நிறத்தில் பொன்னிறம் எல்லாம் கண்டு பிடிக்க முடியாது)

எளிமையான செய்முறை... குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செஞ்சு பார்த்து சொல்லுங்க.


~அன்புடன் ஆனந்தி 





About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)