topbella

Tuesday, December 24, 2013

நட்பு...(நடப்பு)...!!!


ஆயிரம் நண்பர்கள் இருக்காங்கன்னு சொல்லிக்கிறதுல.. பெருமை வேணா பட்டுக்கலாம்... ஆனா அதுல எத்தனை பேர் உங்களுக்கு ஒரு பிரச்சினைன்னா வந்து நிப்பாங்கன்னு யோசிக்கணும்... வயசு இருக்கும் போது.. வாலிபம் முறுக்கும் போது.. திமிரா அலைய தோணலாம்... அதுவே நாள் போகப்போக அதே நட்பு வட்டாரம் நம்மள சுத்தி இன்னமும் இருக்குதான்னு திரும்பிப்பார்த்தா.. அப்படி வெகு நாட்களா கூடவே இருக்கறவங்கள விரல் விட்டு எண்ணிறலாம்... 

ஏதோ சீசனுக்கு வர பறவைகள் மாதிரி.. ஒவ்வொரு கால கட்டத்துலயும் ஒவ்வொரு விதமான மக்களை நாம சந்திக்கிறோம்.. எண்ணங்கள் ஒத்துப் போயிருச்சுன்னா... உடனே அடிச்சு விழுந்து பழகி.. உயிர் நண்பர்கள்ன்னு ஊருக்குள்ள சொல்லிட்டு திரியுறோம்.. எனக்கு எப்பவும் ஒரு சந்தேகம் உண்டு.. உயிர் நண்பன்னா என்ன?? அதுக்கு முதல்ல விளக்கம் கண்டு பிடிச்சிட்டு தான்.. உயிர் நண்பன் யாருன்னு முடிவு பண்ண முடியும்.

டெய்லி பத்து போன் கால், அடிக்கடி சந்திச்சு பேசிக்கிறது, ஒண்ணா எங்கயாச்சும் சேர்ந்து சுத்துறது... இப்படியெல்லாம் இருந்தாத்தான் அவங்க நமக்கு ப்ரண்டுன்னு ஒரு கண்டிஷன் இருந்தா... அப்படி ஒரு நட்பு தேவை தானான்னு யோசிக்க வைக்குது..

பெரும்பாலும் அடுத்தவங்கள இம்ப்ரெஸ் பண்ணியே... நம்ம வாழ்க்கை வீணா போயிட்டு இருக்குது.. ஒரு காலத்துல சனி, ஞாயிறுன்னா... ஐ ஜாலி விடுமுறைன்னு சந்தோசப் பட்டிருக்கோம்.. இப்போ எல்லாம்... சனி, ஞாயிறு வந்தாலே... ஐயோ.. வீக்கெண்ட்-ஆ ன்னு அலறுறோம்... விடிஞ்சா அடைஞ்சா ஆயிரத்தெட்டு கமிட்மென்ட்... அதிலும் வீக்கெண்ட் ஏன் வருது.. எப்போ வருதுன்னே தெரிய மாட்டேங்குது..

ஒவ்வொரு விடுமுறை நாளும் வரதுக்கு முன்னாடி... இந்த வாரம் எப்படி ரிலாக்ஸ் பண்ண போறேன் பாருன்னு.. பிளான் எல்லாம் பக்காவாத்தான் போடுவோம்... ஆனா நடக்க தான் மாட்டேங்குது... அதான் சொல்லுவாங்களே... ஓபன்னிங் எல்லாம்.. நல்லாத்தேன் இருக்கும்.. பினிஷிங் தான் சரியா இருக்காதுன்னு... அப்படி தான் ஆகி போவுது...!

விடுமுறை நாள்ல... மெல்ல எழுந்து.. விடிகாலை இயற்கையை ரசிச்சு... சூடா ஒரு கப் காப்பி குடிச்சிட்டு... நிதானமா குளிச்சு... காலை உணவு சாப்பிட்டுட்டு.. அப்படியே டிவி-ல எதாச்சும் ஒரு நிகழ்ச்சிய பார்த்துட்டு.... கொஞ்ச நேரம் பிடிச்ச எதாச்சும் ஒரு புத்தகத்தை படிச்சிட்டு... மதிய உணவையும் மகிழ்ச்சியா முடிச்சிட்டு... கொஞ்ச நேரம்... அப்படியே கண் அயர்ந்து படுத்துட்டு... சாயந்தரமா அப்படியே வெளில ஒரு நடை போயிட்டு வந்தா.... எப்படி ரிலாக்ஸ்-ஆ இருக்கும்... ஹ்ம்ம்.. அதுக்கெல்லாம் கூட இப்பெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும் போல....!

அடிப்படை புரிதல் இல்லாத எந்த ஒரு ஆர்ப்பாட்டமான விசயமும் நம் அமைதிக்கு நாமே அமைத்துக் கொள்ளும் முட்டுக்கட்டை தான்.. எதார்த்தம் இல்லாத எதுவுமே ரொம்ப நாளைக்கு எஞ்சி இருக்குறதில்ல... எப்போது நம் நேரத்தை செலவழிப்பது நம் கையில் இல்லையோ அப்போதே நம் மனம் நிம்மதி தொலைத்து அலைபாயத் தொடங்கிவிடுகிறது.

நட்பே வேண்டாம்னு நான் இங்கே வாதம் பண்ணல... எதுவுமே இங்கே நிரந்தரம் இல்ல.. அப்படி இருக்க எல்லாமே அளவோட இருத்தல் நல்லதுன்னு நினைக்கிறேன்...அவ்ளோ தான். எப்போ ஒருத்தங்க கிட்ட.. அடடா  கமிட் ஆயிட்டமே.. வேற என்ன பண்றது.. .போயிட்டு வந்திருவோம்ன்னு தோணிருச்சோ அப்பவே நம்ம சந்தோசம்... அமைதி அங்க இல்லாம போயிருது. 

முதல்ல.. நமக்கு நாம நட்பாகி நம்மள பத்தி புரிஞ்சு தெரிஞ்சுக்குவோம்... அப்புறம் மத்தது பத்தி யோசிக்கலாம்...!!!


...அன்புடன் ஆனந்தி 


(படம்: கூகிள், நன்றி)











Wednesday, October 23, 2013

நிழலாய்...!


ஏகாந்த வெளியில் நிதம்
எண்ணத்தை எழுத்தாக்கி
எதார்த்தத்தை கவிதை
செய்து வைத்தேன்...

படித்தே என்னுள் அதை
பதியம் செய்து வைத்தேன்..
உரமாய் உன் அன்பை
ஊற்றியும் வைத்தேன்..

கனவுகளில் களித்தாடி
கலவரம் செய்யும் உன்னை..
கைது செய்தே என்னுள்
கட்டியும் போட்டு விட்டேன்..

உணர்வுகளில் உறைந்தவனை
உள்ளத்தில் பூட்டி வைத்தே..
உள்ளார்ந்த அன்பினாலே
உயிருக்குள் புதைத்து வைத்தேன்...

நிஜத்தில் உன்னையே என்றும்
நிழலாய் சூழ்ந்திருப்பேன்...
நித்தமும் உன் நினைவில்
நீக்கமற நிறைந்திருப்பேன்...!


...அன்புடன் ஆனந்தி 




(படம்: நன்றி கூகிள்)

Tuesday, September 24, 2013

கத்தரிக்காய் காரக்குழம்பு...!


தேவையான பொருட்கள்:

அரைக்க:

சின்ன வெங்காயம் - 10 (அல்லது) பல்லாரி வெங்காயம் - 1
தக்காளி - 1
தேங்காய் துருவல் - 1/2 கப்
மிளகாய் வத்தல் - 6 (காரத்திற்கு ஏற்ப)
மல்லி விதை - 3 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது

வதக்க: 

சின்ன வெங்காயம் - 10 (அல்லது) பல்லாரி வெங்காயம் - 1
தக்காளி - 1 (வெங்காயம், தக்காளி சிறியதாக நறுக்கி கொள்ளவும்)
கத்தரிக்காய் - 5 சிறியது (நீளவாக்கில் கீறி வைக்கவும்)

புளி கரைசல் - தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நீளவாக்கில் கீறி வைத்திருக்கும் கத்தரிக்காய்களை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அதை தனியே எடுத்து வைக்கவும்.
  • பின் அதே பாத்திரத்தில் மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து அது சூடானதும் கடுகு சேர்த்து, கடுகு வெடித்ததும், வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும்.
  • வெந்தயம் வாசம் வந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து அதனுடன் சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • தக்காளி நன்கு வதங்கியதும், புளிக்கரைசல் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து.. நன்கு கொதிக்க விடவும்.
  • குழம்பு வற்றி எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.


...அன்புடன் ஆனந்தி 







About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)