topbella
Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

Wednesday, March 30, 2016

வெறும் சாட்சியாய்...!


என்னெதிரில் வெற்று பக்கம்... எதையும் தன்னில் ஏந்திக் கொள்ளாமல் எத்தனை அழகு இதன் வெறுமையில்.... ஏதோ எழுதுவதாய் எண்ணியே இயற்கை அழகை சிதைத்தும் ஆனது... மனதும் இவ்வாறே வெறுமையாய் இருக்க வரம் வாங்கி வந்திருக்க வேண்டும்... இருக்கும் இம்மி இடமும் வெறுமை இல்லாது விளையாட்டாய் வேடிக்கையாய் வெவ்வேறு விஷயங்கள்.. அவைகள் வேர் ஊன்றி விடாதிருக்க முளையிலேயே வெட்டி எரிந்து விட எண்ணம் இருந்தும் செயலில் இயலாது பரிதவிப்பு.. 

ஏன் இத்தனை குழப்பங்கள்? எதற்காய் இத்தனை ஜோடனைகள்? இயல்பில் இனிமையாய் வாழ என்னென்ன இடைஞ்சல்கள்... கண் முன்னே...!  

ஏக்கம், எதிர்பார்ப்பு ஒரு புறமிருக்க... 
எதிர்வரும் தடைகளின் தாக்கம் 
நம்மை உலுக்கியே நிறுத்த... 
என்னென்ன செய்தால் 
எமக்கிங்கு நிம்மதி கிடைக்கும் 
என்றே ஏங்கியபடி எமதுள்ளம்.. 

அடர்த்தியான இருளில் அத்தனையும் ஒன்றே.. இயல்பாய் இருக்க எண்ணினால் முதலில் இயல்பில் இருக்க வேண்டும்.. மனதிற்குள் ஆயிரம் விஷயங்கள் ஓடிக்கொண்டிருக்க எங்கிருந்து நிம்மதி நாடுவது. எதையும் எளிதாய் எடுத்துக்கொள்ள ஏகப்பட்ட பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்கிறது. சொல்வது எளிது.. செயல்படுத்துதல் கடினம்.. 

ஒரு விஷயம் நமக்கு எதிராய் நடக்கும் போது அதையே நினைத்து வருந்தி அமைதியை குலைத்துக் கொள்கிறோம். ஓரமாய் உக்கார்ந்து ஒரு மணி நேரம் வருந்தினால் உன் பிரச்சினை சரி ஆகி விடும் என்று யாராவது சொன்னால் ஒரு மணி என்ன? ஓராயிரம் மணி நேரம் உக்கார்ந்து வருந்தலாம்.. ஆனால் அப்படி அல்ல நடைமுறை. நடப்பது எதுவும் நம் கையில் இல்லாத போது அதற்காய் வருந்தி என்ன பலன்? 

உறவுகள் பல விதம்.. நம்மிடம் எதிர்பார்க்கும், எதிர்பார்த்தது நடக்காத போது ஏமாற்றத்தில் ஏளனம் செய்யும்..  எதையாவது செய்தால் இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என்று கருத்து வரும்.. அதையே எதுவும் செய்யாமல் இருந்தால், சுயநலவாதி என்ற பட்டம் பரிசாய் கொடுக்கும்.. எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் வெறும் சாட்சியாய் மட்டும் இருத்தல் பல பிரச்சினைகளை தவிர்க்கும்.

ஏக இறையால் கூட எல்லாருக்கும் 
ஏற்றவனாய் இருக்க இயலாது.. 
நாம் எல்லாம் சாமானியன் 
இவர்களிடமெல்லாம் சான்றிதழ் பெற்று
சரித்திரமா படைக்க போகிறோம்....?! 

சின்ன சின்ன விசயங்களில் புதைந்து கிடக்கும் பேரானந்தம் நம்மில் பலர் உணர்வது கூட இல்லை.. இருபத்து நாலு மணி நேரமும் காலில் சக்கரம் கட்டாத குறையாய் ஓடி அலைகின்றனர். ஒரு விஷயம் படித்தது நினைவுக்கு வருகிறது. இளம் வயதில் உடலில் தெம்பும் வேகமும் இருக்கும்.. பல விஷயங்கள் அனுபவிக்க பணம் தேவைப்படும். ஆனால் அப்போது பணமிருக்காது. முதுமையில் பணம் இருக்கும், எதையும் அனுபவிக்க உடலில் தெம்பும் வேகமும் இருக்காது. ஒன்றிருந்தால் மற்றொன்று இருப்பதில்லை. இதுவே இயற்கை..!


...அன்புடன் ஆனந்தி




( படம்: கூகிள், நன்றி )








Monday, March 28, 2016

மனிதர்கள் பலவிதம்..!


உள்ளதை விட்டு விட்டு
உரிமையை மறந்து விட்டு
எண்ணத்தின் போக்கில் 
வாழ்வோர் பலபேர்..

நல்லதே செய்த போதும்
நலம் மட்டுமே நாடிய போதும்
எள்ளளவும் இரக்கமின்றி 
தொல்லையாய் ஆவோர் சிலபேர்..

எல்லாம் அமைந்து இருந்தும் 
அதன் அருமை உணராமல்
எதையோ தேடியவண்ணம்
வாழ்க்கை கழிப்பார் சிலபேர்..

பரமனே நேரில் வந்தாலும் 
பக்குவமாய் பேசினாலும்
பதட்டமாகவே இருந்தபடி
பரிதவிப்பார் சிலபேர்..

எதுவும் நடக்கட்டும்
எனக்கென்ன வந்ததென்றே
எவர் பற்றியும் எண்ணாமல் 
அவர் வழி நடப்பார் சிலபேர்..

எல்லாமும் தன் உடமை என்றே
கல்லாவை நிரப்புதல் போன்று..
கரிசனமே இல்லாமல் 
களித்து வாழ்வார் சிலபேர்..

ஊழியம் செய்தபடி 
உரிமை இழந்த படி 
உறவுக்காய் ஏங்கியபடி 
உண்மையாய் இருப்பர் சிலபேர்..!


...அன்புடன் ஆனந்தி


( படம்: கூகிள், நன்றி )

Monday, March 21, 2016

உணவே மருந்து...!

இப்போ எல்லாம் நாலு பேர் சேர்ந்து பேச ஆரம்பிச்சாலே அதுல முக்கிய டாபிக் டயட், எக்சர்சைஸ் தான். என்ன இப்படி இளச்சிட்டீங்கன்னு ஒரு ஆள் கேக்கும்.. அதுக்கு உடனே இன்ஸ்டண்டா பதில் வரும்.. டயட்ல இருக்கேன்னு. அப்படி என்ன டயட் சொல்லுங்களேன்னு கேட்டா லிஸ்ட கேட்டே மயக்கம் வந்திரும் நமக்கு.. அவுக சொல்ற அளவெல்லாம் கேட்டு நெஞ்சு வலியே வந்திரும்.. இப்படி தான் ஒருத்தங்க என்கிட்டே ஒரு நாளைக்கு கால் கப் ரைஸ் தான் சாப்பிடணும்ன்னு சொன்னாங்க.. உடனே தெளிவா கேட்டேன்ல.. கால் கப்-ன்னு நீங்க சொன்னது சமைச்ச அரிசியா? சமைக்காத அரிசியான்னு? அடிக்க வந்துட்டாங்க போங்க.

எத்தனையோ வித விதமா உணவு கட்டுப்பாடு, உடல்பயிற்சின்னு எல்லாரும் ரூம் போட்டு யோசிக்காத குறை தான்.. சாப்பிடுற உணவே மருந்து. எதை.. எப்போ.. எவ்வளவு.. எப்படி சாப்பிடணும்னு பக்குவம் தெரிஞ்சு இருந்தா எந்த பிரச்சினையும் இல்ல. ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்னு சொல்லி கேட்டு இருக்கோம்.. வயித்துல போடுறதையும் அளந்து போட்டுட்டா பாதி அவதி இல்ல.

சில பேர் ஏழே நாளில் உடம்பு குறைக்கிறோம்னு பட்டினியா கிடந்து  ப்ரோடீன் ஷேக்ன்னு எதை எதையோ பொடிய வாங்கி கலக்கி குடிச்சிட்டு.. எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆய்ட்டேன் பாருன்னு ஒரேயடியா உடம்ப குறைச்சிட்டு வந்து நிக்குற அடுத்த சில மாசங்கள்ல.. குறைச்சத விட டபுளா வெயிட் போட்டு கஷ்ட படுறதையும் பாக்கிறோம். இயற்கையா உடம்புக்கு எந்த பாதிப்பும் இல்லாத மாதிரி உடம்ப குறைச்சால் ஒழிய அதை அப்படியே கட்டுக்குள்ள வைக்கிறது கஷ்டம் தான்.

பசிக்கும் போது சாப்பிட்டா போதும். அட்டவணை போட்டு அடிச்சு நிமித்த கூடாது.. பொதுவா இப்போ இருக்குற கால கட்டத்துல நாம உபயோகிக்கிற பொருட்கள்ல பெரும்பாலும் நச்சு தன்மை தான் கூடுதலா இருக்கு. வீட்ல தயாரிக்கிற எளிமையான சாப்பாடு ஆயிரம் வகை இருக்கு.. பயறு வகைகள், பச்சை காய்கறிகள், பழங்கள் ன்னு டெய்லி சாப்பாட்டுல சேர்த்துக்கிட்டா நல்லதாம்..

அதையும் எங்க ஒழுங்கா சாப்பிட விடுறாங்க.. பயறு வகைல கலரா பளிச்சுன்னு இருக்கணும்னு இஷ்டத்துக்கு கலர் அடிச்சி விக்கிறாங்க.. காய்கறி பழங்கள் மேல சீக்கிரம் அழுகி போய்ட கூடாதுன்னு மருந்து அடிச்சி வைக்கிறாங்க. மசாலா பொடில இருந்து மஞ்சள் பொடி வரை எல்லாத்துலயும் எதாச்சும் எக்ஸ்ட்ரா பிட்டிங் சேர்த்து வச்சிர்ராங்க.

காலம் கலி காலம் ஆயிருச்சு.. எல்லா பொருளும் நாம என்னவோ காசு கொடுத்து தான் வாங்குறோம்.. கூட அஞ்சு பத்து அதிகம் வாங்கிட்டாலும் பரவாயில்ல.. இப்படி கண்டதை சேர்க்காம இருந்தா நல்லா இருக்கும்.  அந்த காலத்துலேயே மாசத்துல குறைஞ்சது ரெண்டு நாளாச்சும் எதாச்சும் ஒரு காரணம் சொல்லி விரதம் இருப்பாங்க. உடலுக்கு அரைக்கிற வேலைல இருந்து ஓய்வு கொடுக்குற ஐடியாவா இருக்கும். அதையெல்லாம் இப்போ யாரு ஃபாலோ பண்றோம்...?!

நம்ம நாட்டுல பாரம்பரியமா தாத்தா பாட்டி காலத்துல சாப்பிட்டு வந்த கம்பு, கேழ்வரகு, திணை, குதிரைவாலி, சாமை, கருப்பட்டின்னு எத்தனையோ நல்ல விசயங்கள் இன்னைக்கும் கிடைக்க தான் செய்யுது. அதையெல்லாம் நம்ம சாப்பாட்டுல சேர்த்துக்கலாம்.

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாச்சும் எதாச்சும் உடற்பயிற்சி அவசியம்னு டாக்டர்ஸ் சொல்றாங்க. நியாயமாத்தான் சொல்றாங்க.. அந்த ஒரு மணி நேரம் எப்போ செய்யலாம்னு யோசிச்சி முடிக்கவே ஒன்பது மணி நேரம் வீணாப் போயிருது.. அதே போல சாப்பிடுற அளவு தான் ரொம்ப முக்கியமாம். மூணுவேளை அட்டவணை போட்டு சாப்பிடுறதுக்கு பதிலா அதையே பிரிச்சு கொஞ்சம் கொஞ்சமா ஆறு வேளை கூட சாப்பிடலாம்னு சொல்றாங்க. இப்படியா ஆளுக்கு ஒரு கருத்து எல்லாரும் சொல்லிட்டே தான் இருக்காங்க...

சமீபத்துல படிச்ச விஷயம்.. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இனியன் என்னும் முன்னாள் இராணுவ வீரர், 13 வருஷமா தேவைப்பட்டால் வெறும் தண்ணீர் மட்டும் குடிச்சுட்டு காற்றுணவுல உயிர் வாழுறாராம்.  இதை யோக வாழ்வுன்னு சொல்றார். மத்தவங்களுக்கும் கற்றுக் கொடுக்கிறாராம். அவர் குறிப்பிட்ட விசயங்கள்ல ஒண்ணு சித்தர் ஒருவரின் கூற்று என் எண்ணத்தை கவர்ந்தது.. "ஒருவேளை உண்பான் யோகி, இருவேளை உண்பான் ரோகி, மூவேளை உண்பான் போகி". இதுல நம்ம என்ன ரகம்னு நாமளே முடிவு பண்ண வேண்டியது தான்...!!!

...அன்புடன் ஆனந்தி 


Monday, January 12, 2015

நேர்த்திகடனா.. நன்றிக்கடனா...?!



சின்ன வயசுல இருந்தே நமக்குள்ள ஊற்றப்பட்ட.. ஊறிப்போன விசயங்கள்ல ஒண்ணு சாமிக்கு நேந்துக்குறது... கண்ணு வலி, கால் வலி, வயித்து வலி, காய்ச்சல், தலைவலின்னு இன்னதுன்னு இல்லாம.... உடம்புக்கு என்ன குறை வந்தாலும்... டாக்டர் கிட்ட போறமோ இல்லையோ.. டாண்ணு சாமிக்கு ஒரு ரூபாய் நேர்ந்து ஒரு மஞ்சள் துணில முடிஞ்சு சாமி முன்னாடி வச்சிருவாங்க.. இன்றும் இந்த வழக்கம் தொடர்கிறது...

பொதுவா நாம பலவீனமா இருக்குற சமயத்துல நமக்கு மேல ஏதோ ஒரு மேலான சக்தி இருந்து நம்மை காப்பதா நினைக்கிறது இயல்பு.. அந்த எண்ணம் நமக்குள் நேர்மறையான அதிர்வுகளை உண்டாக்கும்.. அதுவே உடம்பிற்கு வலுவினை தந்து விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும் வைக்கலாம்..

இந்த நேர்த்திகடன் வழக்கம் ஏதும் இக்கட்டான சூழல் வரும்போதும் கூட செய்றது உண்டு.. நேர்த்திக்கடன்னா என்ன... எனக்கு இந்த கஷ்டம்.. சரி ஆயிருச்சுன்னா உன் கோவிலுக்கு வரேன்.. மாவிளக்கு எடுக்குறேன்.. மொட்டை போடுறேன்...இந்த மாதிரி பல வகைகள் இருக்கு.. அடிப்படையில சாமிகிட்ட போடுற டீலிங் தான்... எனக்கு இது செய் அது செய்.. அப்படி செஞ்சா நான் உனக்கு இதை செய்றேன்.. அதை செய்றேன்னு ஒப்பந்தம் பண்ணிக்கிறது தான்...

இதுல கொடுமை என்னென்னா... நிறைய நேரங்கள்ல எந்த கோவிலுக்கு எப்போ வரோம்னு சொன்னோம்... எந்தெந்த கோவிலுக்கெல்லாம் நேர்ந்தோம்.. என்னென்ன செய்றதா சொன்னோம்... இதெல்லாம் வருஷ கணக்குல செய்யாமலே விட்டுட்டா பல நேரங்கள்ல மறக்கவும் வாய்ப்பு உண்டு... அப்புறம் எதாச்சும் ஒன்று நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் தவறாய் நடக்கும் சமயம்..  ஒருவேளை கோவில் விஷயம்  செய்யாம விட்டதால சாமி குத்தமா இருக்கும்னு டென்ஷன் ஆக வேண்டியது...

எனக்கு என்ன சந்தேகம்னா எந்த சாமி நம்ம கிட்ட ஒப்பந்தம் பண்ண சொல்லுச்சு? முதல்ல... எனக்கு நீ இதை செய்தால் நான் உனக்கு அதை செய்வேன்னு.. வியாபார ரீதில செய்ற ஒப்பந்தம் மாதிரி இந்த அணுகுமுறையே தவறா இருக்கு... நமக்கான கடமைய ஒழுங்கா செஞ்சாலே பலன் தன்னால கிடைக்கும்... நமக்கு எப்போ எதை கொடுக்கணும்னு படைச்ச ஆண்டவனுக்கு தெரியாதா?? முதல்ல நேந்துக்கவும் வேண்டாம்... அப்புறம் அத செய்யலன்னு நொந்துக்கவும் வேண்டாம்... அதுக்கு பேசாம... நாம மனசுல நினச்ச ஒரு காரியம் நல்ல முறையில் கை கூடினால்... அதுக்கு நன்றிகடனா கோவிலுக்கு போயிட்டு வரலாம்..

இதுல இன்னொரு காமெடி வேற இருக்கு... அவனவனுக்கு தான் போட்ட ஒப்பந்தமே அதாவது தான் நேர்ந்துகிட்டதே நினைவுல இருக்கறது கஷ்டம்... இதுல நட்புகள் கொடுக்கும் அன்பு தொல்லைக்கு எல்லையே இல்லை... நம்ம பாட்டுக்கு சிவனேன்னு இருப்போம்.. நீங்க ஒண்ணும் கவலையே பட வேண்டாம்... (நான் எப்ப கவலை பட்டேன்....?! ) நான் உங்களுக்காக மாங்காடு மாரியம்மன் கிட்ட வேண்டிருக்கேன்.. வடபழனி முருகன் கிட்ட வேண்டி இருக்கேன்.. (சொல்லவே இல்ல.....?!) அடுத்த முறை இந்தியா போகும் போது மறக்காம போயிட்டு வந்திருங்கன்னு போற போக்குல அள்ளி விட்டுட்டு போவாங்க... (இதென்ன நேர்த்திகடனா? இல்ல நேயர் விருப்பமா? என்ன கொடும சார் இது...?)

இன்னும் சில பேர் ஒரு படி மேல போயி உங்களுக்காக நான் கோவில்ல வேண்டி இருக்கேன் நீங்க மறக்காம இந்த நாள்ல போயி பூஜை பண்ணிட்டு வந்திருங்க.. செய்யாம விடுறது நல்லது இல்லைன்னு வேற சொல்வாங்க... (நான் எப்ப சொன்னேன்.. எனக்கு நேர்ந்துக்கோங்கன்னு...? ஏன் இப்டி....??? ). அக்கறை இருக்கலாம்.. அதுக்காக எதிராளிக்கு முடியுமா முடியாதான்னு கூட யோசிக்காம அவங்களா ஒரு முடிவுக்கு வந்து நேர்ந்திட்டு.. அதை நம்ம மேல திணிக்கிறது கொஞ்சம் அபத்தமாத்தான் தோணுது. மொத்தத்துல சாமி கிட்ட ஒரு வருசத்துக்கு அப்புறம் நான் உன் சன்னிதானம் வரேன்னு இப்பவே வேண்டிக்கிட்டு சாமியையும் குழப்பி நாமும் குழம்புறதுக்கு ஒரு வருஷம் கழிச்சு முடிஞ்சா போயிட்டே வந்திரலாமே..!


...அன்புடன் ஆனந்தி




(படம்: கூகிள், நன்றி)


Wednesday, November 26, 2014

கரை தேடும் அலைகள்...!


கண்ணிமைக்கும் நேரத்தில் காலம் கடந்து விடுகிறது... எதிர்பாராத நிகழ்வுகள் எம்மை எட்டித் தள்ளி விட்டே.. நிமிஷமும் நிற்காது... நிதானமாய் கடந்தும் சென்று விடுகின்றது... என்ன நடந்தது என்று எண்ணி இமைப்பதற்குள்.. ஏதேதோ நடந்து எம் வாழ்வு எம்மை நோக்கியே.. என்ன என்று கேட்கிறது.

உறைந்து விட்ட கண்ணீர்.. உயிர் வலியை உணர்த்தும் தருணம்.  நிலையாமை தத்துவம்.. நிதர்சனத்தில் உணர்ந்தாலும்.. நிச்சயத்தில் உணரும் போது.. நிலைகுலைந்து விடத்தான் நேர்ந்து விடுகிறது.  கரை தேடும் அலைகள் போல்.. காலம் முழுவதும் எதையோ தேடிய வண்ணம் எம் வாழ்வு.. இருக்கும் இடத்திலும் நமக்கென்று சாச்வதமாய் ஸ்தலம் இல்லை.. உருவான இடத்திலும்.. உட்கார்ந்து ஆசுவாசப்படுத்த உரிமையும் இல்லை.

எந்த இடத்தில் எம் நிலை?? தொலைந்து போன உறவுகள்.. மறந்து போன கனவுகள்.. மரித்தே போன உணர்வுகள்... எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத நிலையில் இன்று.. இருக்கிறது ஆனால் இல்லை... எது நிலையானது... எது எமக்கென்று இருப்பது... எது சத்தியம்...?? எல்லாம் அறிந்தும் அறியாதது போல் மாயை கண் மறைக்க... மறுபடியும் முதலில் இருந்து மூச்சு இறைக்க ஓட தயாராகி விட்டானது.

எண்ணற்ற சிந்தனைகள்.. எதிரில் தாண்டவமாட.. எதிலும் நிலைக்காது... நிலையான சத்தியம் தேடி.. நிற்காது தொடரும் எம் பயணம்... கருவறைக்குள் கடுகளவும் பயமின்றி கச்சிதமாய் வாழ்ந்த நேரம்.. கடவுள் நமக்களித்த ஆசுவாசப் படுத்திக்கொள்ளும் நேரம்.. ஓட்டத்திற்கு முன்பு உட்கார்ந்து ஓய்வெடுத்துக்கொள்.. வெளியே வந்து விட்டால்.. விடாது கறுப்பு.. என்பது போல... வெறித்தனமாய் ஓட வேண்டி இருக்கும் என்றோ...?!

மௌனிக்கும் தருணம் இது..... மனதிற்கு அமைதி வேண்டும்.. உடலின் சோர்வு.. உள்ளத்தின் அயர்ச்சி.. உயிர் வரை சென்று உழல செய்யாதிருக்க... மௌனித்து விடு மனமே.. அமைதி கொள்.. அடக்கமாய் இரு.. சவமாய் இரு... சர்வமும் சிவமே என்றிரு... சத்தியம் அதுவென்றிரு..!

எதுவும் நிரந்தரம் இல்லை... எல்லாமுமாய் உன்னை வரித்துக் கொண்டு... ஏமாந்து போகாதே... ஏதும் நீ இல்லை... நீ என்ற ஒன்றே இல்லை... உண்மைகள் உணர்ந்திருந்தால் உள்ளத்தில் அமைதி கொள்... நிகழும் எல்லாமே நியாயமில்லை... மாதவம் செய்தால் கூட மாண்டார் மீள்வதில்லை... கடமைகளில் கட்டுண்டு.. கரை காண தவிக்கிறாய்...! காலமே அதற்கு மருந்து... இறைவன் கணக்கு என்றும் தப்பியதில்லை... எல்லாம் அவன் விருப்பப்படி இனிதே நடக்கிறது.. 

வேடிக்கை பார்த்து கொண்டிரு.. விதண்டாவாதம் விட்டு விடு.. உணர்வின் தாக்கத்தில்.. உள்ளத்தின் ஏக்கத்தில் உண்மை உணர்ந்து விடு.. வலிகள் உணரப் பட வேண்டும்.. வாழ்க்கை அறியப் பட வேண்டும். எல்லைகள் உடைக்கப் பட வேண்டும்.. எங்கும் ஏகாந்தம் நிறைக்கப்பட வேண்டும். இறையின் வழி சென்று குறை களைய முயற்சி செய்.. எந்த அடையாளமும் இல்லா இவ்வுடல் விடுத்து.. இறைவனடி சேரும் நேரத்திற்காய் ஏக்கத்தோடு காத்திரு..!

...அன்புடன் ஆனந்தி



படம்: கூகிள், நன்றி 

Monday, October 20, 2014

நினைவுகள்...!


ஒவ்வொரு வயதிலும் புதுப்புது அனுபவங்களுடன் வாழ்க்கை சுவாரஸ்யமானது தான்... இளவயதில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் என்றாலே ஏக மகிழ்ச்சி... முதல் காரணம் பள்ளி விடுமுறை.. புது துணிமணிகள்.. பட்டாசு... இனிப்பு... என்று எண்ணிலடங்கா சந்தோசங்கள்... சிறு வயதில் நம்மை மகிழ்விக்கவும் நம் மனம் நிறைவு கொள்ளவும் அதிக பிரத்யேக முயற்சிகளோ அல்லது விஷயங்களோ தேவையாய் இருக்கவில்லை... ஆனால் இப்போது...?!

இதோ தீபாவளி வரவிருக்கிறது... பழைய ஞாபகங்கள் மெல்ல எட்டிப் பார்க்கிறது... தீபாவளிக்கு இரு வாரங்களுக்கு முன்பாகவே பண்டம் செய்யவென்று பாமாயில் எண்ணெய் வாங்குவதும், அரிசியை மிஷினில் கொடுத்து திரித்து வாங்குவதுமாய்... பரபரவென்று வேலை நடக்கும்... முறுக்கு, அதிரசம், நெய்விளங்காய் என்று வீடே களைகட்டும்.. முறுக்கின் மொருமொருப்பு அப்படியே இருக்க வேண்டும் என்று.. தகர டப்பாக்களில் அடைத்து வைப்பாங்க.. முறுக்கை சுட ஆரம்பிக்கும் போதே பக்கத்திலேயே உட்கார்ந்து இருப்போம்.. முறுக்கு முழுதாய் வேகும் முன்பே வெளியில் எடுத்து தருவாங்க....அதை வெள்ளை முறுக்குன்னு சொல்வாங்க.. இந்த வெள்ளை முறுக்குக்கு அடி பிடி சண்டை தான்.. அவ்வளவு ருசியாய் இருக்கும்.. 

பொதுவாய் சனி, ஞாயிறுகளில் பகலில் எல்லா வீட்டு வேலைகளையும் முடித்து விட்டு இரவு சாப்பாட்டுக்கு பிறகு தான் அம்மா பண்டம் செய்வாங்க.. இப்போது நினைத்து பார்த்தால் ஒருவேளை நாங்களும் வீட்டில் இருக்கும் போது செய்ய வேண்டும் என்றே அப்படி செய்திருக்க கூடும்.. நெய்விளங்காய் என்று நாங்கள் சொல்லும் பண்டம் பொரிகடலை மாவும், சீனியும், நெய்யும் சேர்த்து செய்யும் உருண்டை வகை.. எனக்கு மிகவும் பிடித்தது.. அம்மா ஒரு பெரிய ஈய பாத்திரத்தில் எல்லா பொருளையும் கொட்டி கலந்து தருவாங்க... அந்த வட்ட பாத்திரத்தை சுற்றி உக்கார்ந்து எல்லாரும் பேசிக்கொண்டே உருண்டை பிடிப்போம்.. உருண்டையை பிடித்து டப்பாவில் அடுக்குகிறோமோ இல்லையோ... பாதி உருண்டை வயித்துக்குள்ள தான் போகும்... இப்போது என்ன தான் அதே போல் பொருட்களை சேர்த்து பக்குவமாய் செய்தாலும் அம்மாவின் கைமணம் வருவதே இல்லை... 

எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு பண்டம்... அதிரசம்.... அம்மா சுடும் அதிரசம் வெளியில் கரகரவென்றும்.. உள்ளுக்குள் பஞ்சு போல் மெத்துமெத்தென்றும் இருக்கும்.. அளவே தெரியாமல் உள்ளே தள்ளிக் கொண்டிருப்பேன்.. என்ன தான் அம்மா செய்வதை பலமுறை கண்டும்... கேட்டும் இருந்தாலும் ஏனோ அதிரசம் மட்டும்... வருவேனா பார் என்று அடம் பிடிக்கத்தான் செய்கிறது.. என்ன தான் அதி சிரத்தையாய் கவனமாய் செய்தாலும் அம்மா அளவிற்கு இன்று வரை வந்ததில்லை.. அது என்னவோ தெரியலை... ஆட தெரியாதவளுக்கு தெரு கோணலாம்...ன்னு ஒரு பழமொழி சொல்வாங்க.. அந்த மாதிரி அதிரசம் நல்லாத்தான் வந்திருக்கும்.. இங்க உள்ள மாவு தான் சரியில்ல... வெல்லம் சரியில்லன்னு சொல்லிட்டு மனச தேத்திக்கிறேன்... 

இது தவிர தீபாவளிக்கு துணி எடுக்க போகும் படலம் இன்னும் ஏக குஷியான விஷயம்.. வார இறுதியில் காலை உணவு முடித்துவிட்டு கிளம்பி விடுவோம்.. கடை கடையாக ஏறி இறங்கி பிடித்த ஆடைகளை எடுப்பதில் தான் எவ்வளவு ஆனந்தம்.. அதிலும் நாம் எடுத்து தர சொல்லி பார்த்து கொண்டிருக்கும் துணியை தான் பக்கத்தில் இருக்கும் பெண்மணி உற்று பார்த்து கொண்டிருப்பார்கள்.. நாம் அதை கீழே வைப்பது போல தெரிந்தால் போதும்.. ஓ.. உங்களுக்கு வேண்டாமான்னு எடுக்க தயாரா இருப்பாங்க... உடனே நமக்கு ஆஹா.. அம்புட்டு அழகாவா எடுத்து வச்சிருக்கோம்.. விட பிடாதுன்னு கையில கெட்டியா பிடிச்சிக்குவோம்... மனித இயல்பு... இப்போது நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.

அப்படி அலைந்து திரிந்து எல்லாருக்கும் பிடித்த துணிகளை ஒருவாறு வாங்கி முடிக்க மதிய உணவு வேளை வந்து விடும்.. அப்படியே ஒரு நல்ல உணவகம் போய் சாப்பிட்டு விட்டு... மிச்சம் மீதி வாங்க வேண்டிய பொருட்களையும் வாங்கி விட்டு... மாலை நேரம் பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்து... வந்ததும் வராததுமாய் அவரவர் வாங்கி வந்ததை கடை பரப்பி... சிலாகித்து.. ரெடி மேட் துணியாக இருந்து விட்டால் மீண்டும் ஒரு முறை போட்டு கண்ணாடியில் அழகு பார்த்து.. வீட்டில் எல்லாரிடமும் காட்டி சந்தோஷப் படுவதும் உண்டு... 

தீபாவளி அன்றோ விடிந்தும் விடியாமலும் அம்மா எழுப்பி விட்டு தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க சொல்வதும்.. குளித்து வருவதற்குள் வடை, சுசியம், பஜ்ஜி என்று எல்லாம் செய்து சாமி கும்பிட தயாராய் எடுத்து வைத்திருப்பதும்.. எப்போ சாமி கும்பிட்டு எப்போ சாப்பிட விடுவாங்கன்னு கவனம் எல்லாம் சுட்டு வச்சிருக்கும் பண்டம் மேலேயே இருக்க... ஒரு வழியாய் சாமி கும்பிட்டு.. வெடியெல்லாம் வெடிக்க எடுத்து தருவாங்க.. வெடியெல்லாம் வேடிக்கை பார்ப்பதோடு சரி.. சும்மா வேடிக்கை பார்க்கும் போதே போட்டிருக்கும் துணியில் எப்படியாச்சும் தீப்பொறி பட்டுவிடும்... அதெல்லாம் ட்ரேட் மார்க் மாதிரி... வருசா வருசம் இப்படி தான்... 

தீபாவளி முடிந்ததும் அடுத்து பள்ளி திறக்கும் தினத்தில் பள்ளி சீருடை அல்லாத துணிகள் அணிய அனுமதி உண்டு... இந்த நாளுக்காகவே காத்திருப்போம்... நண்பர்களிடம் ஒருவருக்கொருவர் புது ஆடை காண்பித்து மகிழ்வது ஒரு சுகம்... இப்படி எவ்வளவோ சின்ன சின்ன விஷயங்களில் திருப்தியும், ஆனந்தமும் அடைந்ததெல்லாம்.... இப்போது நினைத்தாலும் நெஞ்சம் நிறைய தான் செய்கிறது.. அப்படியே வாழ்நாள் எல்லாம் இருந்திருந்தால் எவ்வளவோ நன்றாய் இருந்திருக்கும்... 

இப்போதெல்லாம் அப்படி ஒரு மகிழ்ச்சியோ பரபரப்போ சுவாரஸ்யமோ ஏனோ இருப்பதில்லை.. பண்டிகையும் இன்னொரு தினமாகவே கடந்து செல்கிறது...

சிறு வயதில் சிலாகித்த 
சின்ன சின்ன சந்தோசங்கள்..
எளிமையில் கண்ட 
எண்ணற்ற மன நிறைவுகள்.. 
எல்லாம் இருந்தும் ஏனோ 
ஏங்க வைக்கும் இன்றைய தினங்கள்...

எது எப்படியோ... யார் தடுத்தும் நிற்காத இந்த கால சுழற்சிகளை மகிழ்வுடன் கடப்போம்....!

...அன்புடன் ஆனந்தி



படம்: கூகிள், நன்றி 

Tuesday, September 9, 2014

வாழ்க்கை அழகானதே...!


அன்றாட அவசரங்கள் கடந்து அந்தியில் ஆதவன் மறைந்து அனைவரும் உறங்க சென்றிருக்கும் நேரம்.. இருக்கும் அமைதி அலாதியானது... அடர்ந்திருக்கும் அந்த இருளும் அழகே.. ஆங்காங்கே கண்சிமிட்டும் நட்சத்திரமும் அழகே.. அதது தனது வேலையை அம்சமாய் செய்வதை அப்படியே பார்த்திருந்து விட்டு.. அடிமனதில் புதைத்து வைத்துக் கொண்டாகி விட்டது.. படர்ந்திருக்கும் இருளில் வானத்தை பார்த்திருப்பது கூட, பிடித்த இசையை மீண்டும் மீண்டும் கேட்பதற்கு இணையே.. எந்த ஒரு சலனமும் இன்றி இருக்கும் இருளே எல்லாவற்றிக்கும் ஆதாரம்.. எதுவுமற்று இருப்பது போல் இருப்பதில் தான் எல்லாவற்றின் சூட்சுமமும் அடங்கி இருக்கிறது.. 

வாழ்க்கை அழகானதே... வாழும் மனிதர்கள் அதை அறியாது அதன் அழகைக் குலைத்து விட்டு.. ஆயிரம் குறைகள் சொல்லி கொண்டு அமைதியற்று திரிவதில் அர்த்தம் ஏதுமில்லை... எதையும் அதன் போக்கில் விட்டு ஆழ்ந்து யோசித்து செயல்படுவது என்பது அநேக பேருக்கு சிம்ம சொப்பனம் தான்.. எதுவாய் இருப்பினும் உடனே அவசர கதியில் யோசித்து அதற்கு ஒரு முடிவெடுத்து.. அந்த முடிவும் தவறாகிப் போக பின் அதையே எண்ணித் தவித்திருக்கும் வாய்ப்புகள் அதிகம்.. மனம் கலங்கிய நிலையில் எதையும் யோசிக்கும் திறன் இருப்பதில்லை.. அந்நிலையில் எதையும் முடிவு செய்யாதிருப்பதே உத்தமம்.

இயந்திர மயமான இவ்வாழ்வில் இயற்கையின் உன்னதமான படைப்புகள் நம் கண்ணிலும் கருத்திலும் படுவதில்லை.. எப்பொழுதும் எதையோ தொலைத்து விட்டு தேடுவது போன்ற பரபரப்பு.. இக்கணமே இவ்வாழ்வு முடிந்து விடுவது போல் ஒரு படபடப்பு... எதற்காக இதை செய்கிறோம்.. ஏன் இதை செய்ய வேண்டும்... செய்வதால் என்ன பயன்... செய்யாவிடில் என்ன நஷ்டம்... இதெல்லாம் பொறுமையாய் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படுவதில்லை... எல்லாமே எக்ஸ்பிரஸ் வேகம் தான்.. அடிப்படையில் அமைதி தொலைத்துவிட்டு ஆங்காங்கே தேடிக் கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கைச் சுமைகளுக்கு மத்தியில்... அதன் சுவாரஸ்யங்கள் அடி பட்டுப் போய் விடுகிறது. எதற்காய் இதை சுமக்கிறோம் என்று கூட உணரும் முன் எல்லாமும் முடிந்து விட வாய்ப்புண்டு.. இப்பொழுதெல்லாம் செய்வதையே தினமும் திரும்ப திரும்ப செய்வது ஒரு வித அலுப்பை தந்து விடுகிறது.. எதை எதையோ செய்ய எண்ணுவதுண்டு.. ஆனால் எண்ணியது எல்லாம் ஈடேற்றும் முன் வாழ்க்கை எங்கோ நம்மை இழுத்துச் சென்று விடுகிறது.. திரும்பிப் பார்த்தால் சொல்லிக் கொள்வது போல் ஒன்றுமே இருப்பதில்லை.

வாழ்வது ஒரு முறை... அதை ரசனையோடு.. வாழ்வது மட்டும் முக்கியம் அல்ல.. ஏதோ வந்தோம்.. இருந்தோம்.. சென்றோம்.. என்று இல்லாமல் ஏதேனும் சாதித்து செல்ல வேண்டும்.. நமக்கு நாமே நேரம் ஒதுக்கி நம்மோடு நாம் பேச.. நிறைய விஷயங்கள் புரிந்து கொள்ள முடியும்.. ஆட்டத்தை தொடங்கி விட்டாகி விட்டது.. ஆடும் முறை, ஆடும் நேரம்.. ஆடிய பிறகு வரும் எதிரொலி எல்லாமே ஏகஇறை ஏற்கனவே எழுதி விட்டது தான்.. அது அறியாது அங்குமிங்குமாய் அலை பாய்வதால் எதுவும் நடக்க போவதில்லை. 

அவசரம் நமக்குள் ஆவேசத்தை உசுப்ப.. அமைதி இன்றி ஆர்ப்பாட்டம் செய்து, அவ்விடத்தில் நிம்மதி தொலைந்து விடுகிறது. தொலைத்த இடத்திலேயே மீண்டும் நிம்மதி கிடைக்க வாய்ப்புண்டு.. நமக்கு தோன்றிய இடத்தில் அல்ல.. சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட பெரும் முக்கியத்துவம் கொடுத்து பல நேரங்களில் நமக்கு அதை பாரமாக்கிக் கொள்கிறோம்.. எதையும் எளிதாய் எடுத்துக் கொள்ளும் யுக்தி எல்லோருக்கும் எட்டி விடுவதில்லை. 

ஒரு விஷயம் நிகழ்ந்தால் நம்மால் அதை மாற்ற இயலுமானால் அதை பற்றி தீவிரமாய் யோசித்து ஏதேனும் வழி தேட முயற்சிப்பது தவறில்லை.. நம் கையில் இல்லாத.. அல்லது நம் கை மீறிப் போன விசயங்களை எண்ணி எண்ணி வருந்தியோ.. வேதனை பட்டோ எதுவும் நடக்க போவதில்லை. கவலைப் படுவதால் காரியம் நடந்து விட போவதில்லை.. பிறகு ஏன் தேவையில்லாத வீண் மனக்குழப்பம்.. நடந்ததை மறந்து விட்டு அடுத்த அடி எடுத்து முன்னேறிப் போக வேண்டியது தானே.. அது சரி, சொல்வது அனைவருக்கும் சுலபம்.. அதைச் செய்வது தானே கடினம்... அப்படி செய்ய இயலுமாயின் நாம் சென்று கொண்டிருக்கும் பாதை.. நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் ஐயம் இல்லை..!


...அன்புடன் ஆனந்தி



(படம்: கூகிள்)

Sunday, January 19, 2014

இச்சை தரும் இம்சை...!




அன்றாட வாழ்க்கைக்கான அடிப்படை வசதிகள் ஒரு மனிதனின் தேவையாக இருப்பது இயற்கை.. குடியிருக்க ஒரு இடம், பசித்த வேளைக்கு உணவு, உடம்பு மறைக்க உடை... இவைகளே அடிப்படை தேவைகளாக கருதப்படுகிறது..  இதற்குத்தான் அனைவரும் இந்த பாடு படுகிறார்களா..?  இது தவிர்த்து நமக்கு தேவைப்படுவன அனைத்தும் நம் மனதின் இச்சைகள். இச்சைகளுக்கு எல்லைகளே இல்லை.. 

யோசித்துப் பார்த்தால்... அடிப்படை தேவை மட்டுமே ஒருவரின் எல்லையாக இருக்கும் பட்சத்தில்.. அது சார்ந்து உழைத்து நகரும் போது... எந்த வித இன்னல்களும் வர வாய்ப்பில்லையே என்று தோன்றுகிறது... இச்சை என்று எதை வரையறுப்பது...? தேவைக்கு மீறி நாம் அடைய விரும்பும் அனைத்துமே.. இச்சைகள்.

இச்சைகள் தொடங்கும் இடத்தில் இம்சைகளும் உடன் வந்து விடுகிறது. இருக்கும் வீட்டில் ஆரம்பித்து.. உடுத்தும் உடை வரைக்கும்... அடுத்தவர் என்ன நினைப்பார்கள் என்று எண்ணியே வாழ்வை அழித்துக் கொண்டிருக்கிறோம்... இப்பொழுதெல்லாம் அவரவர் தாம் வசிக்கும் வீட்டை விசாலமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர.. அவர் தம் மனம் விசாலமாக இருப்பதும் இல்லை.. உண்மையான மகிழ்ச்சியோடு இருப்பதும் இல்லை..

அம்மா, அப்பா, குழந்தைகள் சில.. என்று உள்ள ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய வீடு தேவைப்பட போகிறது..? ஆனால் இப்போது காலக்கொடுமை... வீடுகள் பெரிதாகிக்கொண்டே போகிறது.. வீட்டில் உள்ள மனிதர்கள் எண்ணிக்கையும்... அவர்களுக்கான தொடர்புகளும் குறைந்து கொண்டே வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் சிவம்.. தொடரில் சமீபத்தில்.. இந்த தேவைக்கும் இச்சைக்கும் உள்ள வேறுபாட்டை சிவன் கூறுவது போல் வரும்.. அதில் ஒரு சிறிய கதை சொல்வார்.. ஒரு வணிகன் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தான்.. அவன் தொழிலும் சிறப்பாக அமைந்து.. அவனது தேவைகளுக்குப் போதுமான பொருளும் ஈட்டினான்.. அவன் மனைவி மக்கள் மகிழச்சியாக இருந்தனர்.. ஆனால் வணிகருக்கோ.. மனநிறைவு ஏற்படவில்லை..  

மேலும் பொருள் ஈட்ட வேண்டும்.. நிறைய நில புலன்கள் வாங்க வேண்டும்... பெரிய செல்வந்தனாக வேண்டும் என்று எண்ணம் மேலோங்க... இறைவன் விஷ்ணுவை வேண்டி தவம் செய்ய துவங்கினான்.. பல ஆண்டுகள் அன்னம் ஆகாரம் இன்றி அவன் செய்த கடுமையான தவத்திற்கு பலனாய் இறைவன் விஷ்ணு அவன் முன் தோன்றி.. தவத்தால் உள்ளம் குளிர்ந்தேன்.. வேண்டும் வரம் என்ன என்று கேட்க.. வணிகனும்.. "நான் கண்ணால் காணும் இடம் எல்லாம் எனக்கே சொந்தமாக வேண்டும் என்றான்..". இறைவனும் யோசித்து விட்டு.. "சரி.. உன் கண்ணில் நீ காணும் இடமெல்லாம்  உனக்கே சொந்தமாகும்.. உன் கண்ணில் படாதவை உனக்கு சொந்தமல்ல".. என்று சொல்லிவிட்டு மறைந்தார். 

வணிகனுக்கு தலை கால் புரியவில்லை.. நானே இந்த உலகத்தில் பெரும் செல்வந்தன் என்று கூறிய படியே.. தன் எதிரில் கண்ட இடங்கள் எல்லாவற்றையும்.. இது எனது.. என் இடம்.. எனக்கே சொந்தம்.. என்று கூறியவாறே.. சென்றான்.. வெகுதூரம் வந்தும்.. அவன் ஆசை அடங்கவில்லை.. மேலும் நிறைய இடங்களை கண்ணால் கண்டுவிட வேண்டும் என்ற பேராசையில்... ஓடிக்கொண்டே இருந்தான்... விளைவு.. அவன் மன வேகத்திற்கு.. உடல் ஒத்துழைக்க வில்லை.. அன்ன ஆகாரம் இன்றி.. உயிர் நீத்தான்...!

மனம்... ஒரு குரங்கு என்று சொல்லக்கேட்டிருக்கிறோம்... மனதை கட்டுக்குள் வைக்காது அதன் போக்கில் அலைய விட்டால்... அல்லல்களே எஞ்சும். நிறைவான மனதில் நிம்மதி குடியிருக்க தொடங்கும்.. நிறைவடையாத மனமோ... எது நிறைவென்றே அறியாது எதனெதன் பின்னோ அலையும்..!

மனதின் இச்சைகள் அடக்கி.. ஆள... பக்குவப்பட்டு விட்டால்... இன்னல்கள் தவிர்த்து இன்பமாய் வாழ வாசல் திறக்கும்..!


...அன்புடன் ஆனந்தி 


(படம்: கூகிள், நன்றி)

Tuesday, July 16, 2013

மௌனத்தின் மொழி...!


விடியலுக்கான விடை தேடி விதி வழிப் பயணம்... எல்லாம் மாயையா... இறைவன் வைத்த வேள்வியா... எதற்காக பாசம் வைத்தாய்.. இழந்த பின் துடிப்பதற்கா... எதுவும் நிரந்தரம் இல்லை என்ற எண்ணம் அறிவால் உணர்ந்தாய்... வைத்த அன்பில் அதை மறந்தாய்... வாழ்க்கை சுழலில் வந்தார் நிற்பதில்லை... சென்றார் மீண்டு வருவதில்லை..  அவரவர் கடமை முடிந்ததும்... கடைத்தேறி காணாமல் மறைந்து விடுகிறோம்.  எதுவும் இங்கே உண்மை இல்லை... எவர் உறவும் இங்கு நிதர்சனம் இல்லை.. கரை காணும் நோக்கம் உண்டாகில், கண் மூடி கடவுளிடம் சரண் அடைந்து விடு.. என்றே சத்தியம் உரைக்கின்றது.. அதைச் சபல உள்ளம் மறுக்கின்றது.

உண்மை அறிந்தும் உழலும் உள்ளத்தை என்ன செய்வது.. எதிலும் நாட்டம் இல்லை.. எதன் மீதும் பற்று இல்லை.. எல்லாம் பார்த்தாகி விட்டது.. இருந்து செய்ய போவது என்றே இங்கே எதுவும் இல்லை.. கர்மாவின் விளைவால் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறோம். ஞானம் வந்து விட்டதாய் சொல்பவன் எல்லாம் ஞானி அல்லவே.. தனக்கு எல்லாம் தெரிந்து விட்டதாயும், அதை பிறர் உணர பிரயத்தனம் செய்வதாயும் சொல்லித் திரிபவர்கள்.. மூடர்கள்.  உணர்ந்த சத்தியத்தை உள்ளத்தோடு நிறுத்திக்கொள்... உலகிற்கு உணர்த்துவது உன் வேலை அல்ல.. 

கணத்திற்குள் காலம் உன்னை கடந்து கரைந்து சென்று விடுகிறது.. நினைத்தாலும் அதனை நீ எட்டிப் பிடிக்க இயலப்போவதில்லை.. உலகம் தெரிந்து கொள்.. உண்மை அறிந்து கொள்.. உனக்குள் அமிழ்ந்து கொள்... உள்ளமை உணர்ந்து கொள்... உனக்குள் உன்னை தேடுவதை தவிர உன்னதமான செயல் வேறொன்றும் இல்லை. உண்மை உணர்ந்த நிமிடம் நாம் ஊமையாகி விடுகிறோம்.. பேச ஒன்றும் இல்லை.. பெரிதாய் சொல்ல எதுவும் இல்லை.. மௌனத்தின் உன்னதம் மனதிற்கு உரைக்கும் தருணம் உள்ளுக்குள் அமைதி சூழ.. மற்றவை எல்லாம் மறைந்து விடக்கூடும்.

எண்ணத்தின் தெளிவு ஏகாந்தம் தரக்கூடும்... திணிக்கப்படாத சிந்தனை தூய தீபமாய் ஒளிரக்கூடும். போகும் இடம் தெரிந்து விட்டால்... வாழும் இடம் வசந்தமாகிப் போகும்... மௌனத்தின் மகிமை அறிந்தவர்.. அதை உணர்ந்தவர்.. அன்றாட நிகழ்வுகளின் இரைச்சலைக் கூட ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.. ஆழ்ந்த அமைதியின் அருமை உணர்ந்து விட்டால்... மற்றதெல்லாம் இங்கே மதிப்பிழந்து போய் விடுகிறது...!

மௌனம் மகத்துவமானது... மௌனித்தல் அவ்வளவு எளிதில் சாத்தியமல்ல... பல சந்தர்ப்பங்களில் சத்தியம் உணர்ந்தும்.. லௌகீக வாழ்வின் சாகசங்கள் நம்மை சடுகுடு ஆடத்தான் செய்து விடுகிறது.. உட்கார்ந்து யோசிக்க ஒன்றும் இல்லை.. உள்ளத்தின் ஓசைக்கு செவி மடுத்தே.. உண்மையின் பாதையில் ஊமையாய் நகர்தல் உத்தமம்...!

வார்த்தைகள் மௌனிக்கும் போது வாழ்க்கைத் தத்துவம் உணர முடிகின்றது. மௌனத்தின் மொழி மனதின் ஒலி.

...அன்புடன் ஆனந்தி


(படம்: கூகிள் நன்றி)

Thursday, May 16, 2013

கடந்து போகும் காலங்கள்...!


ஆசைகள் அடக்கி ஆண்டவனை ஆழ்மனதில் இருத்தி... அமைதியாய் அமர்ந்திருந்தால் அகிலமும் கைவசப் படும்.. நிறை குடம் என்றும் ததும்புவதில்லை... தனக்கு தெரிந்த எல்லாவற்றையும் எல்லாரிடத்தும் பறை சாற்றி... பெருமை பட்டுக்கொள்ளும் சுய சொறிதல்.. எங்கும் சூழ்ந்து விட்டது.  திறமை இருப்பவன்.. திமிராய் நடக்கிறான்... வகை இருப்பவன்.. வாழ்ந்தே காட்டுகிறான்... இங்கும் இல்லாது அங்கும் இல்லாது.. இடையில் கிடந்து.. தங்களுடன் இருப்பவர்களை இம்சை செய்பவர்களை என்னவென்று சொல்வது...?

இருந்தால் கொடு.. இல்லையென்றால்.. சும்மா இரு.  கொடுப்பவனை குற்றம் சொல்லாதே.. அதிலும் குறை காணாதே.. வழமையாய் வந்துவிட்ட விஷயம்.. வாய் கிழிய பேசுதல்... பேச்சு... இதில் தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.. சில நேரங்களில் வார்த்தைகளுக்குள் அடக்க முடியாத எண்ணற்ற விடயங்கள்.. வாய் பேசாதிருக்கும் போது... வந்து விழுகிறது. நம்மில் பலருக்கு தன் வீட்டு விசயங்களை விட.. அடுத்தவர் விசயங்களை அறிந்து கொள்வதில் தான் ஆனந்தம் அதிகமாய் கிடைக்கிறது என்று எண்ணம்.

ஒரு விஷயம்.. யோசித்துப் பார்த்தால்.. அவனவனுக்கு இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்கவே.. சந்தர்ப்பங்கள் சரியாய் வாய்ப்பதில்லை.. அப்படியே சந்தர்ப்பம் வாய்த்து அதைச் சரிவரச் செய்யினும்... பிரச்சினை என்னவோ பல நேரங்களில் தீர்ந்த பாடில்லை... இதில் அடுத்தவர் பிரச்சினைகளை அறிந்து என்ன செய்யப் போகிறோம்..? தெரிந்து என்ன நிறைந்து விடப் போகிறது.. இல்லை தெரியாவிடில் என்ன குறைந்து விடப் போகிறது... தேவையற்ற சுமை.. நம்மை கீழே தள்ளும் பழு... இப்படித் தேடிப் போய் பின்பு தெளிந்து விலகி.. தெய்வத்தின் துணை தேடி அலைவது உறுதி..!

யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்லர்.. அவரவர் திறமைக்கு ஏற்பத்... தகுதி அடைகிறார்கள்.. இங்கும் ஆயிரெத்தெட்டு அரசியல்... ஒருவன் நல்ல நிலைமையில் இருந்தால்.. என்னென்ன செஞ்சு இந்த நிலைமைக்கு வந்தானோ.. என்று ஒரு சொல்.. அதுவே... பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும்.. அவனை சும்மா விடுவது இல்லை... அங்கேயும் ஒரு இலவச கருத்துக் கணிப்பு... என்ன பாவம் பண்ணானோ... பிச்சை எடுத்துட்டு இருக்கான் பாருன்னு.. பிச்சையும் எடுக்க கூடாது... பில் கேட்ஸ்சாவும் இருக்க கூடாதுன்னா... ஒரு  மனுஷன் என்ன தான் செய்யணும்ரீங்க...?!

மனம் ஒரு குரங்கு.. ஒரு இடத்தில் அமைதியாய் நம்மை இருக்க விடாது.. அந்த மனதைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் தான் நம் சுய கட்டுப்பாட்டின் சூட்சுமம் அடங்கி இருக்கிறது. மனதை அடக்கினால் மகாதேவனை அடையும் மார்க்கம் தென்படும். மனதை எப்படிக் கட்டுப்படுத்துவது...? ஆர்வத்தின் அடிப்படையில் சில பல விடயங்கள் தம்மை அறியாது செய்து விட்டு பிறகு சிந்தித்துப் பார்க்கையில்... அவைகள் அவசியமே இல்லை என்று உணர்கையில்... மன அழுத்தம் ஏற்படுகிறது... நிம்மதி இழக்க நேரிடுகிறது... கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்தென்ன பலன்..? நமது சுயம் இழக்கச் செய்யும் செயல்களை விட்டு விலகுதல்.. நம் மன அமைதிக்கான ஆரம்பமாகலாம்... 

நமது செயல்களால், நம்மைச் சுற்றி இருக்கும் அனைவரையும் ஒருசேர நம்மால் திருப்தி அடையச் செய்ய முடியாது.. எதெது செய்தால்... யார் யார் மகிழ்வர் என்று கணக்கிட்டு செய்து செய்தே.. நம் காலங்கள் கடந்து போய்க் கொண்டிருக்கிறது... ஒருவருக்கு சாதகம் தரக்கூடும் என்று நாம் செய்யும் செயல் மற்றவருக்கு பாதகமாய் ஆகி விட வாய்ப்புகள் அதிகம் உண்டு.  அவ்வாறிருக்க எக்காலம் நாம் எதைச் செய்து... எவரெவர் மகிழ்ச்சி அடைந்து... நாம் இக்காலம் கடக்கப் போகிறோம்...?

விடை தெரியாத வினாக்கள்... விமரிசையாய் கண் முன்னே..!



...அன்புடன் ஆனந்தி




(படம்: கூகிள், நன்றி)

Tuesday, April 30, 2013

சிவம்....!


எல்லை மீறிய ஆனந்தம் அளிக்கக் கூடிய பிரம்மாண்டம் ஒன்றே... அது என் ஈசன் திருவடி.. அவனடி நாட ஆன்ம பலம் வேண்டும்.. இப்படித் தான் வழிபட வேண்டும் என்ற நியதிகள் தேவை இல்லை... நியமனங்கள் தேவை இல்லை... கட்டுக்கள் தேவை இல்லை.. கண் மூடி மெய் அடக்கி சரணாகதியாய் அவனிடம் வந்தால் சர்வமும் சாத்தியப்படும்.... 

மாய உலகமிது... உணர்வுகள் உதைக்கப்பட்டு... கனவுகள் கலைக்கப்பட்டு... கை நிறைய பணம் சேர்க்க மட்டுமே காத தூரம் ஓடும் ஜென்மங்கள்...! எதில் இருக்கிறது இன்பம்... பணம் பொருள் வீடு வாசல் வித விதமாய் சொத்துக்கள்... எல்லாம் சேர்த்து... அடுத்து என்ன செய்ய போகிறோம்... என்றதொரு பெரும் கேள்வி....? வாழ்க்கையை ரசிக்க வேண்டும்... அதன் வலிகளை அறிய வேண்டும்... வலிகளை உணர்ந்து.. ஊடுருவி... அது விடுத்து வெளி வர வேண்டும்.

ஒன்றிரண்டு விடயங்களில் உலகமே அடங்கி விடாது... உண்மையும் தெரிந்து விடாது.. கடந்து வந்த பாதைகளும்.. இனி நாம் கடக்கப் போகும் மீதியும்.. கடவுளுக்கே வெளிச்சம்.  அல்லது நம் கர்மாவின் உச்சம்.... சலசலப்பற்ற அமைதியான சூழலில்... சங்கீதம் கேட்பது போன்று வாழ்க்கை அமைய வேண்டும்.

சாக்கு போக்குகள் சொல்லிக் கொண்டு சாக்கடையில் உழல்வதால் சத்தியம் இதுவென்று அறிய சாத்தியம் குறைவே... அறிந்தது உணர்ந்து... உணர்ந்தது தெளிந்து.. தெளிந்ததை தாமதிக்காது தேடி செல்வதே உத்தமம். தனக்குள் அமிழ்ந்து தயக்கங்கள் தொலைத்து... அமைதி தேடி அமரவேண்டும்.  அதற்கு உதவும் த்யானம், கடை பிடிப்பது என்னவோ அவ்வளவு கடினம் அல்ல.. என்றாலும், அதற்கான நேரம் ஒதுக்குவது என்பதே எல்லோருக்கும் இயலாத காரியமாய் இருக்கிறது... 

உள்ளிழுக்கும் சுவாசம் உள்ளத்து அழுக்குகளை எல்லாம் துடைத்து வெளிக்கொணர்ந்தால் போல... சித்த சுத்தி கிடைக்கச் செய்வது... த்யான நிலையின் மையம்... த்யானம் செய்வது ஒரு வகையான பலம். நம் உள்ளம் மற்றும் உடலின் சக்தியனைத்தும் ஒருங்கிணைக்க நமக்கு கை கொடுக்கும் கேடயமே த்யானம்.

அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து.. ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து.. உள்வாங்கியதை முடிந்த வரையில் உள்ளுக்குள் நிறுத்தி... பிறகு சீராக வெளிவிடும் போது ஒரு புத்துணர்ச்சி வரத்தான் செய்கிறது.

ஆயிரம் அலுவல்களுக்கிடையில் நமக்கென காலம் ஒதுக்குவதில் என்ன தடை....? எதற்கும் ஒரு துவக்கம் வேண்டும்.. துவங்கப்பட்ட விடயத்திற்கு அதைத் தொடர்ந்து நடைமுறையில் வைக்கத் தூண்டுகோலும் வேண்டும்.. துவங்க முயற்சிப்போம்...!

~அன்புடன் ஆனந்தி

Wednesday, March 20, 2013

வாழ்வே தவம்...!


வாழ்க்கை எவ்வளவு அழகானது... அதை அனுபவிக்கக் கூட நேரம் இல்லாது அரக்க பறக்க அலைந்து கொண்டிருக்கிறோம்.. எளிமையான விசயங்களில் கூட நாம் ஏகாந்தத்தை உணர முடியும்.  எதற்கு இந்த ஓட்டம்... அப்படி நிற்காது ஓடி சம்பாதித்து என்னென்ன சாதித்து விட முடியும்... ஓட்டம் ஒரு நாள் நின்ற பின்.. நின்று நிதானமாய் திரும்பி பார்த்தால்.. நிதர்சனம் நம்மை சுடும்.  நினைத்ததெல்லாம் அடைந்தோமா? அடைந்ததெல்லாம் ரசித்தோமா? 

ஆர்ப்பாட்டம் இல்லாத காலை விடியலை எத்தனை பேர் கவலை மறந்து ரசித்து கண்டிருக்கிறோம்... இல்லை ஆதவன் அடங்கும் தருணம் அந்த அம்சத்தை எத்தனை பேர் ரசித்திருக்கிறோம்...? கண் விழிக்கும் போதே....அடடா நேரமாகி விட்டது.. என்று புலம்பியவாறே அடித்து பிடித்து ஆரம்பிக்கிறது காலை... இப்படி இயந்திரத்தனமான வாழ்வில் நாம் இழந்தது எத்தனை...எத்தனை.. எண்ணிலடங்கா....!

சின்ன சின்ன விஷயம் கூட உணர்ந்து, ரசித்து, உள்வாங்கி செய்ய நேரம் இல்லை. ஆவி பறக்கும் காலைக் காப்பியை அமர்ந்து ரசித்து பருகி ஆண்டுகள் ஆகி விட்டது.. செய்த உணவை சிறிது நேரம் அமர்ந்து உண்ண பொழுதில்லை.. சீக்கிரம் சீக்கிரம்... என்று ஓடி.. சிதறித் தான் போய் விட்டது.. சின்னச் சின்ன சந்தோசங்கள்...!

எழுத்து நடையில் செந்தமிழில் தான் எழுத வருகிறது... வாங்க பேச்சு நடைக்கு மாறி விடலாம்.. 

சரி இப்போ சொல்லுங்க.. காலை காப்பியை நீங்க ரசித்து அமர்ந்து குடித்து விட்டே.. அடுத்த வேலை பார்ப்பவரா... சபாஷ்.. நீங்கள் அதிர்ஷ்ட சாலி தான்.. அதுவே போட்ட காப்பியை பல தரம் மைக்ரோ ஓவனில் வச்சு சுட வச்சு.. மறந்து.. திரும்ப சுட வச்சு மறந்து... ஒரு வழியா காப்பி கதை முடிஞ்சு.. அடுத்து சாப்பாடு வந்தா... கோழி கொரிக்கிற மாதிரி.. வேக வேகமா என்ன உள்ள போகுதுன்னே தெரியாம எத்தனை பேர் சாப்பிடுறோம்...?? முதல்ல இந்த பழக்கத்தை மாத்தணும்... தனக்கென்று நேரம் ஒதுக்கி அந்த தனிமையை கூட ரசித்து வாழ தெரியணும்... 

"அட என்னங்க லைஃப்.. விடிஞ்சதும் தெரியல.. அடஞ்சதும் தெரியல.. பொங்க வேண்டியது.. திங்க வேண்டியது.. தூங்க வேண்டியது..." இப்படி எத்தனை பேர் சொல்லி இருக்கோம்? ஏன்.....? நமக்குன்னு நாம யோசிக்கிறதே இல்ல... ஒவ்வொரு கட்ட வாழ்க்கைலையும் யாருக்காச்சும் பொறுப்பா கடமை தவறாம வேலை செஞ்சிட்டு இருப்போம்... 

நான் ரசித்த ஒரு விஷயம் நினைவுக்கு வருது... ரெண்டு பிரண்ட்ஸ் பேசிக்கிறாங்க... ஒருத்தர் படுத்துகிட்டு கால் மேல கால் போட்டு ஆட்டிக்கிட்டே இருக்காரு.. அவர் கிட்ட. அடுத்தவர் கேக்குறாரு.. 
ஏண்டா.. உனக்கு எதைப் பத்தியும் கவலையே இல்லையா? ஏண்டா இப்டி இருக்க? 
ஏன்.. எப்படி இருக்கேன்? எதுக்கு கவலைப்படணும்?
ஹ்ம்ம்.. எதிர்காலம் பத்தி யோசிக்க மாட்டியா?
யோசிச்சு...?
சம்பாதிச்சு சேர்த்து....
சேர்த்து வச்சு...?
வீடு வாங்கலாம்....
வாங்கி?
கார் வாங்கலாம்?
அப்புறம்...?
வெளிநாடெல்லாம் சுத்தி பாக்கலாம்...
அப்புறம்...?
(இப்போ கேள்வி கேட்டவர் கொஞ்சம் கடுப்பாகி.... )
ம்ம்ம்...அப்புறம் என்னவா... பேங்க்ல நிறைய பணம், ஆசப்பட்டதெல்லாம் வாங்கிட்டா.. நம்ம பாட்டுக்கு ஹாயா... கால் மேல கால் போட்டு ஆட்டிட்டு இருக்கலாமே...?
(படுத்திருந்த நண்பர்... ஹா ஹா... சிரிச்சிட்டு)
அட நாயே... அத தானடா இப்போ பண்ணிட்டு இருக்கேன்..ன்னு.
(நண்பர் ஏக கடுப்பாகி எஸ்கேப் ஆய்ட்டாரு...)

அதுக்காக சும்மா படுத்துட்டு கால் மேல கால் போட்டுட்டு இருக்க சொல்லல... செய்ய வேண்டியத செய்யாம இருக்கறதும் கூட தப்பு தான்.. வாழ்க்கைய வாழணும்..... மிஷின் மாதிரி இல்லாம.. உயிரோட்டத்தோட இயல்பா இருக்கணும்... அவ்ளோ தாங்க...!

~அன்புடன் ஆனந்தி


(படம்: நன்றி கூகிள்)

Friday, January 11, 2013

உண்மையான உறவு...!


நட்பாகட்டும், உறவாகட்டும்.... உண்மையான பந்தம் எது? இந்த கேள்வி நம்ம எல்லார் மனசிலயும் அடிக்கடி வந்து போறது சகஜம்... பார்த்த இடங்களில் புதிதாய் ஒருவரை சந்திக்கும் போது, மரியாதை நிமித்தம்.. நலம் விசாரிப்பு... அப்படியே அவங்களுக்கும் நமக்கும் விருப்பங்கள் ஒத்து போகும் பட்சத்தில் மேற்கொண்டு பேச்சு... பிறகு ஒருவருக்கொருவர் தொலை பேசி எண் பரிமாற்றம்... சில பல முறைகள் தொடர்பு கொண்டு பேசுவது.. இப்படியா சில நேரங்கள்ல நட்பு ஆரம்பிக்கும். ஒருவரால் அடுத்தவருக்கு எந்த கஷ்டமோ, தொந்திரவோ இல்லாது இருந்தா... இது தொடரும். 

சில நேரங்கள்ல.. ரெடி மேட்-ஆக நட்புகள் அமையும். அதென்ன ரெடி மேட் நட்பு...? அதாவது, கல்யாணம் பண்ணி புதிதாய் வரும் போது, கணவருக்கு நண்பர்களாய் இருப்பவர்கள், அவர்களின் மனைவிகள் அவங்க எல்லாம் நமக்கும் நண்பர்கள் ஆவாங்க. இப்படி அறிமுகம் ஆகிற அத்தனை பேர் கிட்டயும் நம்ம நெருங்கி பழகுறது இல்ல.. சில பேர் கிட்ட ரொம்ப நெருக்கமா உணர்வோம், மீதி பேர் கிட்ட நல்ல நட்பா இருப்போம். சில பேர்கிட்ட விதியேன்னு பழகிட்டு இருப்போம்.. சில நேரங்களில் எதுக்கு தேவை இல்லாம இந்த டென்ஷன் எல்லாம்னு.. யோசிக்க வைக்கிற மாதிரி நிகழ்வுகள் இருக்கும்.

"அடுத்தவர் மனம் நோகாமல் நடப்பது", "குற்றம் பார்ப்பின் சுற்றம் இல்லை", "ஊரோடு ஒத்து வாழ்"... இதெல்லாம் சுலபமா சொல்லி வச்சிட்டு போய்ட்டாங்க... இங்க அதை எல்லாம் பின்பற்றி அவஸ்தை படுறது எத்தனை பேரு? எவ்வளவோ பார்த்து பார்த்து, இவங்க தப்பா நினைச்சிர கூடாது, அவங்க தப்பா நினைச்சிர கூடாதுன்னு பல விஷயங்கள் செஞ்சு.. நம்ம ஆப்பு வாங்குறது தான் மிச்சம்.. அப்படி வாங்கியும் பல நேரங்களில்.. ஒதுங்க முடியாமல் மாட்டிட்டு முழிக்க வேண்டியதா இருக்கும்.

இல்ல தெரியாம தான் கேக்குறேன்.. ஒருத்தங்க நல்ல பழகினா, அவங்ககிட்ட உரிமை எடுத்துக்குறது சரி தான்.. அதுக்காக அளவுக்கு மீறி தனக்கு சாதகமா உரிமை எடுத்துக்கறது தான் சகிக்க முடியறதில்லை.. பல சமயம், சரி போனா போகுது போன்னு.. சொல்றத கேட்டுட்டு,  கேட்டத செஞ்சிட்டு போயிட்டு இருக்க வேண்டியதா இருக்கு.. யோசிச்சுப் பார்த்தா இதெல்லாம் எதுக்கு...?? நல்ல நட்போ, உறவோ... மனசுக்கு நிம்மதி தரணும்... நினைவுகளை அசை போடும் சமயம் ஆனந்தம் தரக் கூடியதா இருக்கணும்... அத விட்டுட்டு... எப்பா சாமீ...... ஹ்ம்ம் ஹும்ம்... இந்த விளையாட்டுக்கு நா வரல... ஆள விடுங்கப்பான்னு சொல்ற மாதிரி இருக்கக்கூடாது.

நம்ம எல்லாருக்குமே நிறைய வாழ்க்கை அனுபவங்கள் இருக்கும்.. அமைதியா உக்கார்ந்து யோசிச்சு பார்க்கணும்... என்னென்ன பண்ணோம்... எது எதுக்காக பண்ணோம்... பண்ணது அவசியம்தானா... இது மாதிரி.. நம்மை நாமே சுயபரிசீலனை செய்து கொள்ளணும். நட்பும்,  உறவும்  இந்த வாழ்க்கைல தவிர்க்க முடியாத ஒரு விஷயம் தான்... அதே சமயம் எப்போ எது நமக்கு பிரச்சினைகளை கொண்டு வருதோ, மனநிம்மதியோட விளையாடுதோ.. அல்லது சுயசிந்தனையில் குறுக்கிடுறதோ அப்பவே அதை விடுத்து ஒதுங்கிறனும் .

எனக்கும் நண்பர்கள் இருக்காங்கன்னு சொல்றது பெருசு இல்ல.. அவங்க நம்மை நாமாக சுய கௌரவத்துடன் வாழ விடுறாங்களான்னு யோசிக்கணும்...  எப்பவும் திடமான மனதில் ஸ்திரமான எண்ணங்களுடன் சுயமரியாதையுடன் தனித்துவத்துடன் இருக்கணும்.

சரி ஓகே.. விட்டா பேசிட்டே இருப்பேன்.. உங்களுக்கு அப்படி நல்ல நட்போ, உறவோ ஏற்கனவே இருந்தா.. ரொம்ப சந்தோசம்... இல்லன்னா.. இனியாவது அமைய வாழ்த்துக்கள். அட அமையலேன்னா கூட ஒரு பிரச்சினையும் இல்ல... நமக்கு நாமே நண்பன்...!


~அன்புடன் ஆனந்தி



(படம்: நன்றி கூகிள்)

Monday, February 27, 2012

குடியிருந்த கோவில்..!



அம்மா என்ற சொல்லே... அன்பை குறிப்பது. அம்மா என்று சொல்லும் போதே அதன் உள்ளார்ந்த அன்பையும் சேர்த்தே அனுபவித்துச் சொல்கிறோம். எல்லாருக்கும் தான் அம்மா இருக்காங்க... இதிலென்ன பெரிய வித்தியாசம் இருக்குன்னு தோணும்... ஒவ்வொரு பெண்ணும்.. தான் தாய்மை அடையும் பருவத்தை தான்... புது ஜென்மமாக உருவகித்து வாழ்ந்துட்டு இருக்காங்க.  வயிற்றில் கரு உருவான நொடி தொட்டு.. தான் உண்ணும் உணவில் இருந்து.. படுக்கும் விதம் வரை பார்த்து பார்த்து எல்லாம் செய்து பத்திரமாய் பிள்ளை பெற்று எடுக்கிறாள்.  பெற்ற போது கண்டாளா அப்பிள்ளை கடைசி காலத்தில் கஞ்சி ஊற்றுமா.... இல்லை கசப்பாய் பேசி விடுமான்னு...!

எல்லாரும் நல்ல பிள்ளையைத் தான் பெற்று எடுக்கிறாங்க.  நல்ல மாதிரி தான் வளர்க்கிறாங்க.  நல்ல படிக்க வச்சு... வேலையிலும் இருத்தி வைக்கிறாங்க.  ஆனா எத்தனை பிள்ளை.. கடைசி காலம் வரை தன் தாயை தாங்கி நிக்குதுங்க?  பிறக்கும் போதே.... ஆண் என்றால் அவன் ஆளப் பிறந்தவன் என்றும்.. பெண் என்றால் இன்னொரு வீட்டில் வாழப் பிறந்தவள் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கு.. அது பாதி-ன்னா.. என் புள்ள... என் வாரிசு.... எனக்கு கொள்ளி போட வந்தவன்னு ஒரேயடியா பாராட்டு... சீராட்டு...!

இத்தன பாராட்டுக்கும் அந்த புள்ள தகுதியா இருந்தா சரி தான்.. மறு பேச்சுக்கு இடமே இல்லை...! பெரும்பாலும் தன் தாயை நல்ல மாதிரி தன்னோடு வைத்து கடைசி வரை காக்க வேண்டும் என்றே பிள்ளைகள் எண்ணுவதுண்டு... அப்போ... எங்க பிரச்சினை வருது? எதனால முதியோர் இல்லம் இருக்கு?  ஒரு ஆண் பிள்ளை திருமணம் ஆனதும் தான் மாறி விடுகிறான்.. அவன் மனைவி வந்து.. தான் இவனை மாற்றி விடுகிறாள் என்றெல்லாம் சொல்வது.... முற்றிலும் உண்மை இல்லை.

ஒரு மனைவியோ... தாயோ தன்னிடம் குறை கூறும் பட்சத்தில்.. இருவரிடமும்.. அவர்கள் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து கேட்டு விட்டு.. அதை அப்படியே... விட்டு விடுவது... கேட்டவருக்கும் நல்லது.. குறை சொன்னவர்களுக்கும் நல்லது.... அதை விடுத்து... ஏண்டி இப்படி செஞ்ச?? என் பொண்டாட்டிய ஏம்மா இப்படி சொன்னிங்க.ன்னு.. வரிஞ்சு கட்டிட்டு போய் கேட்டால்... அங்க தான்... செவன் தர்ட்டி.... சம்மணம் போட்டு உக்கார ஆரம்பிக்கும்...!

இல்ல தெரியாமத் தான் கேக்குறேன்... ஒருத்தர் நம்ம கிட்ட வந்து புலம்பும் போது.. சரி விடும்மா... சரி ஆயிரும்... பாத்துக்கலாம்.. ன்னு சொல்லிட்டு.. இருவருக்கும் பொதுவாக நடந்தால் என்ன குறை வந்து விட போகிறது...?  இதை விட்டு போட்டு..  அம்மா பேச்சை கேட்டு பொண்டாட்டிய இழுத்து போட்டு அடிக்கிறதும்.... பொண்டாட்டி பேச்சை கேட்டு அம்மா கிட்ட வந்து காட்டுக் கத்து கத்துறதும்.... ஹ்ம்ம் ஹும்.. எந்த நன்மையையும் செய்யப் போறதில்லை..!

அம்மாவோ, மனைவியோ பெரும்பாலும் என்ன எதிர்பார்க்கிறாங்க? தன்னிடம் பிரியமாய் இருக்கணும்... தனக்கு வேண்டியது புரிஞ்சு செய்யனும் ன்னு...! ஆண்களுக்கு 1008 அலுவல்... அன்றாடம் எதிர்கொள்ளும் பல பல பிரச்சினைகள்.. இவை எல்லாம் இருக்கு... வீட்டில் இருக்கும் பெண்கள்.. இதையும் மனதில் கொண்டு... அனுசரணையாக நடந்தால் எவ்ளோ நல்லா தான்...... இருக்கும்...!

அளவுக்கு அதிகமா பாசம் வைக்கிறதே தப்பு தான்னு சொல்வேன்.. ஓவர்-ஆ பாசத்தை கொட்டி வளர்த்துட்டு.. அப்புறம்... உன்ன அப்படி வளத்தேன்..... இப்படி வளத்தேனே...ன்னு புலம்பறதுக்கு... அளவோட அன்பை காட்டி... அதிக எதிர்பார்ப்பு எல்லாம் மனசில வச்சிக்காம இருந்தாலே.. பாதி பிரச்சினை சால்வ் ஆயிரும்...!  கூட்டுக் குடும்பம் எல்லாம் இப்பெல்லாம் கணிசமா குறைஞ்சி போச்சு... இப்பெல்லாம்.. பிள்ளைக்கு கல்யாணம் ஆய்ட்டாலே... ஐய்யா நான் பெத்த ராசா.... நீ தனிக்குடித்தனம் பண்ணுப்பா... அது உனக்கும் நல்லது.. எனக்கும் நல்லதுன்னு... சில பெற்றோர்.. ஆரம்பத்துலேயே.. தெளிவா முடிவு பண்ணிடறாங்க.

எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வருது.. சம்சாரம் அது மின்சாரம் படத்துல.. லக்ஷ்மி ஒரு வரி சொல்வாங்க.. "தள்ளி தள்ளி இருந்துக்கலாம்.. நீ நல்லா இருக்கியா...? நான் நல்லா இருக்கேன்..ன்னு கேட்டுக்கலாம்."ன்னு.  என்னைக் கேட்டா இதுவே ஒரு வகையில நல்லது...! அனாவசியமான மனஸ்தாபங்களை தவிர்க்கலாம்.  அமிர்தமே ஆனாலும் அளவுக்கு மீறினா அது நஞ்சு தான்... அப்படி தான்... அன்பும்... அளவோட.. அவங்கவங்க வேலைய பாத்துட்டு போறது...... எல்லாருக்கும் சேமம்..!

என்னவோ எழுத ஆரம்பிச்சு... ஏதேதோ புலம்பிட்டு இருக்கேன்..! ஹ்ம்ம்... சொல்ல வந்தது ஒண்ணே ஒண்ணு தான்...


கை பிடித்து கதை சொல்லி
கருத்தாய் வளர்த்தவளை
கண்ணீரில் ஆழ்த்தி விடாமல்...

தூக்கி வளர்த்த உயிரை...
தூரம் நிறுத்தி
துயரில் ஆழ்த்தி விடாமல்...

பார்த்து பார்த்து வளர்த்த தாயை
பரிதவிக்கச் செய்து விடாமல்...

நாம் குடி இருக்க
மடி தந்த அன்னையை
அன்பாய் காத்து...

பாசத்தோடு பார்த்துக் கொண்டாலே..
பாதி ஜென்மம் பூர்த்தியாய் விடும்...!

நீங்கள்... இதையெல்லாம் ஏற்கனவே செய்து.. தாயை அன்பாய் பார்த்துக் கொள்பவரா.. உங்களுக்கு தலை வணங்குகிறேன்..!




...அன்புடன் ஆனந்தி






(படம்: கூகிள், நன்றி)

Wednesday, December 21, 2011

புத்தாண்டில் புது குறிக்கோள்....!


ஒரு வழியா இந்த வருஷம் கடந்தேறி... புது வருசத்துக்கு ரெடி ஆயிட்டீங்களா?  புது வருஷம் பிறந்ததும்... நம்ம பிரண்ட்ஸ் சில பேர் போன் பண்ணி விஷ் பண்ணிட்டு... ஹ்ம்ம் அப்புறம்... இந்த வருசத்துக்கு என்ன Resolution ..ன்னு கேப்பாங்க (அப்டின்னா........??? ). நம்மளும்... பெருமையா... அதாவதுங்கன்னு... தொடங்கி... வருஷம் வருஷம் சொல்ற அதே குறிக்கோள் தான் சொல்வோம். (வாக்கு மாறக் கூடாதில்லையா..? எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு...)

எத்தனை பேர்... நினைச்சதை நினச்ச மாதிரி நிறைவேத்தி இருப்போம்.... ஒரு முடிவு எடுக்கறது எவ்ளோ சுலபமா இருக்கு.... ஆனா அதை நிறைவேத்துறதுல இல்ல இருக்கு மேட்டர்...! ஒரு உதாரணம் சொல்றேன்... கடந்த மூணு வருசமா நானும்.... எப்படியாச்சும்... ஒரு பத்து கிலோ எடை குறைத்தே ஆகணும்ன்னு பிளான் பண்றேன்... நாம ஒண்ணு நினச்சா... நம்ம கிரகம் ஒண்ணு நினைக்குது...!

சரி.....ஒரு வழியா... பிளான் ஸ்டார்ட் பண்ணிரலாம்னு... எங்க இருந்து ஆரம்பிக்கிறதுன்னு யோசிச்சா....... எல்லாரும் ஒட்டுமொத்த அட்வைஸ்.. டயட்...! ஹ்ம்ம் ஹும்ம்ம்.. ஐ ஆம் சாரி....அப்படி பட்டினி கிடந்து... உடம்பு குறையனும்னு எனக்கு அவசியம் இல்ல... நெக்ஸ்ட் ஐடியா... ப்ளீஸ்...!

எக்சர்சைஸ் பண்ணினா அப்படியே கொஞ்சம் கொஞ்சமா சுலபமா குறைக்கலாம்.. அப்டியா....? சொல்லவே இல்ல....இப்ப பாரு நானா....... எப்படி குறையறேன்னு கிளம்பி பக்கத்துல உள்ள ஜிம்-ல போயி கெஸ்ட் பாஸ் (Guest pass ) வாங்கி... சேர்ந்தேன்..! ஏக போக வரவேற்பு தான்... கரெக்டான இடத்துக்கு வந்திருக்கீங்க... எடை குறைக்குறது அழகுக்கு மட்டும் இல்ல... நல்ல ஆரோக்கியமான உடலுக்கும் தாங்கன்னு அருமையா.. சொன்னாங்க.. (பயபுள்ளைங்க பேச்செல்லாம் நல்லாத்தேன் இருக்கு....) சரி ரைட்டு... நா இப்போ என்ன செய்யனும்ன்னு சொல்லுங்கன்னு கேட்டேன்.

உடனே அழகா.. ஒரு அட்டையில் என் பேர் எழுதி, வரிசையா நம்பர் போட்டு.. இந்த ஆர்டர்ல எக்சர்சைஸ் ஸ்டார்ட் பண்ணனும்னு ஒரு தரம் காமிச்சி கொடுத்தாங்க.  சரி இதெல்லாம் ஜுஜிபின்னு அவங்க மாதிரியே... செஞ்சிட்டே வந்தேன்.. 20 நிமிசத்துல முடிஞ்சு போச்சு... அட இம்புட்டு தானா... அடடா... இவ்ளோ நாள் இது தெரியாம எவ்ளோ டைம் வேஸ்ட் பண்ணிட்டோம்ன்னு பீலிங்க்ஸ் வேற....!

அப்புறம் என்னன்னு பவ்யமா போயி கேட்டேன்.... கார்டியோ எக்சர்சைஸ் கொஞ்சம் செஞ்சு முடிச்சிரலாம்ன்னு சொல்லவே... நேர போயி ட்ரெட்மில்ல ஏறி.. ஒரு 10 நிமிஷம் நடந்துட்டு.... ஜாலி-ஆ கிளம்பி வீட்டுக்கு வந்துட்டேன்.  அப்படியே தொடர்ந்து ஒரு மூணு நாள் போனேன்... நாலாவது நாள்... வீட்டுக்கு வந்து தூங்கி எழுந்ததும்... தோள்பட்டை செமையா..வலி. என்ன மேட்டர்-னா... நல்ல வேகமா எக்சர்சைஸ் செஞ்சு சீக்கிரம் குறையறதா நினச்சு... ஓவர்-ஆ பண்ணி.... வலி வந்திருச்சு..!

அப்படியும் விடாம... முன் வச்ச கால பின் வைக்க கூடாதுன்னு போனேன்.. அந்த ஜிம்-ல நாமளா எக்சர்சைஸ் பண்றது தவிர... தனிப்பட்ட ட்ரைநர்ஸ் வந்து.. யோகா, பிலாடே....இது மாதிரி வேற கிளாஸ் எடுப்பாங்க... எந்த கிளாஸ்-ல வேணா நம்ம ஜாயின் பண்ணிக்கலாம்.. அப்படி ஒரு கிளாஸ்-ல சேர்ந்து சுறுசுறுப்பா நானும் எக்சர்சைஸ் பண்ணேன்..! ஹ்ம்ம் ஹும்ம்.. பின்விளைவுகள் செம.....! (ஒரு வேளை தொடர்ந்து போயிருந்தா.. பழகி இருக்குமோ என்னவோ?)

அப்புறம் என்னவா??? இதெல்லாம் எதுக்குடா வம்புன்னு வெற்றிகரமா திரும்பி வந்தாச்சு... இப்போ அடிக்கடி அந்த ஜிம்-ல இருந்து.. பாசமா போன் பண்ணி... நாங்க இப்போ வேற ஒரு திட்டம் கொண்டு வந்திருக்கோம்... கண்டிப்பா வந்து ட்ரை பண்ணுங்கன்னு சொல்வாங்க..! இப்படி எல்லாம் கூப்டா.. போயிருவமாக்கும்..! அவள் ஒரு தொடர்கதை மாதிரி... இதுவும் ஒரு தொடர் கதை...!

சரி பேசிட்டே இருந்து.. உங்கள கேட்க மறந்துட்டேன்... உங்களுக்கு இந்த வருஷம் என்ன குறிக்கோள் (Resolution )? (சுதாரிப்பா... என் ப்ளாக் பக்கமே வரக் கூடாதுன்னு இருக்கேன்ன்னு மட்டும் சொல்லிராதீங்க.. மீ பாவம்..!)

ஜோக்ஸ் அபார்ட்... உடல் ஆரோக்கியத்திற்கு.. சரியான நேரத்தில்.. சரியான விகிதத்தில் உணவு, தினமும் ஒரு 30 நிமிடமாவது உடற்பயிற்சி,  அமைதியான உறக்கம்.... இதெல்லாம் இருந்தாலே போதுங்க...!  (சரி.. சரி.. கோவப் படக் கூடாது)  உடல் ஆரோக்கியத்தோட.. மனமகிழ்ச்சியோட புது வருஷம் பிறக்க வாழ்த்துக்கள்...!

வாசித்த (வருந்திய...) அன்பு உள்ளங்களுக்கு நன்றி..!!!

~அன்புடன் ஆனந்தி

(படம்: கூகிள், நன்றி)

Saturday, October 15, 2011

சுத்தம் காத்து சுகாதாரம் பேணுக...!


சுத்தம் பேணுவதில்... இப்போதெல்லாம் எவ்வளவோ முன்னேற்றம் தெரிந்தாலும் இன்னமும் பொது இடங்களில் அதை பலர் பின்பற்றுவதில்லை.  பஸ் ஸ்டாண்டில்.... மற்றும் பலர் வந்து போய்கொண்டிருக்கும் இடங்களில்.... வெற்றிலை போட்டு துப்புவதும், மூக்கை சிந்தி போடுவதும்.... நீங்களே மனச தொட்டு சொல்லுங்க... யாராச்சும்... பஸ்ஸ்டாண்ட்ல... பயம் இல்லாம உக்கார முடியுமா?? நடுரோட்டில் நடந்து போகும் போது தான் சிலர்.. காறி துப்புவாங்க.. அதையும்... எதிரில் வரும் சக மனிதனின் மேலே விழுந்து விடுமோன்னு ஒரு அபிப்பிராயம் கூட இல்லாம துப்பிட்டு போய்ட்டே இருப்பாங்க...!

இன்னும் சில பேர்... பஸ்-ல், ரயிலில் போகும் போது ஜன்னல் ஓரமா உக்காந்து கிட்டு... அவுக சாப்பிட்டு முடிச்சதும்... ரெம்ப பொறுமையா... ஜன்னல் வழியா கைய வெளிய விட்டு... எச்சில் கைய கழுவுவாங்க..! அது அடிக்கிற காத்துல.. அடுத்தடுத்த கம்பார்ட்மன்ட்-ல இருக்குற அத்தனை பேருக்கும்.. அபிசேகம் பண்ணி விடும்!

சின்ன விசயங்களில் நாம் கவனம் செலுத்தி வந்தால் பல உபாதைகளில் இருந்து தப்பிக்க முடியும்.. உதாரணமா, என் அப்பா அடிக்கடி சொல்ற விஷயம், குடிக்கும் நீர் தவிர, எது சாப்பிட்டாலும் உடனே வாய் கொப்பளித்து விடுவது.. பற்களில் வரும் பல வித பிரச்சினைகளை சரி செய்து விடும்.  இன்று வரை, பின்பற்றுகிறேன்.. எந்த விதமான பல் பிரச்சினைகள் இன்றி!

இன்னொரு விஷயம்... நான் சுத்தமாக வெறுப்பது.. திறந்த வெளிகளில்....பஸ் நிறுத்தங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கி உண்பது! நீங்க நல்லா கவனிச்சு பாருங்க... வந்து போகிற.. அத்தனை பேருந்தில் இருந்தும் வெளிப்படும்.. புகை எல்லாம் அடிச்சு.. காற்றில் பறக்கும் தூசிகளும் மேலே பட்டு... இதுக்கு மேல வந்து உக்காரும் பூச்சிகள்.. வேறு!  தயவு செய்து.. இப்படி திறந்த வெளிகளில் விற்கும் பதார்த்தங்களை வாங்காதீங்க! (இப்போது எவ்வளவோ முன்னேற்றம் இருந்தாலும் இன்னும் சில பேர் இப்படி வெளியே கவனமில்லாது வாங்கி உண்ணத் தான் செய்கிறார்கள்)

எங்கே வெளியூர் சென்றாலும் எளிமையான உணவு பொருட்களை உடன் எடுத்துச் செல்வது நல்லது!  ரயில்களில் இடையில் வந்து விற்கப்படும் உணவு பதார்த்தங்களில் சுத்தம் எதிர்பார்க்க முடியாது தான்...!  குறிப்பாக எண்ணெய் பலகாரங்கள்... கூடவே கூடாது! அப்படி ஒருவேளை, உங்களுக்கு உணவு எடுத்து வர வசதி படவில்லை என்றால்.. குறைந்த பட்சம்.. பழங்கள்.. பிஸ்கட் இந்த மாதிரி எதாச்சும் சாப்பிடுவது மேல்!

அடுத்து நான் பார்த்து ரொம்ப வருத்தப்படும் விஷயம்... குப்பைத் தொட்டி தவிர எல்லா இடத்திலும் குப்பை எறிதல்! எந்த இடம்ன்னு பாக்கறது இல்லை.. கையில் உள்ள குப்பையை அங்கயே எரிந்து விடும் சிறந்த குணம்...நம்மில் பலருக்கு உண்டு..! வெளி நாடுகளில்.. போயி. அப்படி ரோடுகளில் குப்பை போட முடியுமாங்க? இல்ல.. நீங்க போட்டா தான் சும்மா விட்டுருவாங்களா?  பப்ளிக் லிட்டெரிங்..ன்னு சொல்லி.. பைசா வசூல் பண்ணிருவாங்க. (அதாங்க ஃபைன் போட்டிருவாங்க). 

அது ஏன்.. நமக்குன்னு வரும் போது மட்டும் எதையும் ஃபாலோ பண்றதில்லை..! வேதனையான விஷயம் தான்!

நம்ம ஊர்ல பெரியவங்க அப்பவே சொல்லி வச்சிருக்காங்க.. "கந்தை ஆனாலும்... கசக்கிக் கட்டு", "கூழ் ஆனாலும் குளித்துக் குடி..."ன்னு!  இதுக்கு விளக்கம்.. ஊருக்கே தெரியும்.. இருந்தாலும் சொல்றேன்..  உடுத்துற துணி கிழிஞ்சு இருந்தா கூட பரவாயில்லை.. ஆனா அழுக்கா இருக்கக் கூடாது.. அதனால சுத்தமா துவைத்து கட்டுன்னு சொல்றாங்க..! அதே போல தான்.. குடிப்பது கஞ்சியோ, கூழோ பரவாயில்லை.. ஆனா அதையும் சுத்தமா குளிச்சிட்டு சாப்பிடுன்னு.. சொல்றாங்க!

சில கடைகளில், டீ கிளாஸ் கழுவுவதைப் பார்க்க நேர்ந்தால்.. ஜென்மத்துக்கும் வெளியில் டீ, காபி குடிக்க மாட்டோம்...! அம்புட்டு சுத்தமா கழுவுவாங்க! ஒரு பக்கெட் தண்ணீர் வைத்து ஓராயிரம் கிளாஸ்.. கழுவி சாதனை புரிவாங்க. சின்ன குழந்தைகளுக்கு இளம் வயதில் இருந்தே... சில விசயங்களை சொல்லிக் கொடுத்தோமானால், காலத்துக்கும் அவங்களுக்கு நன்மையா இருக்கும்.. எப்போ, எங்க வெளில போயிட்டு வந்தாலும் கைய சோப்பு போட்டு கழுவ சொல்றது.... அப்புறம் எந்த பொருள் சாப்பிடறதா இருந்தாலும், கைய சுத்தமா கழுவிட்டு சாப்பிடறது.... காலை எழுந்ததும்..., இரவு படுக்கும் முன்பும்... இரு வேளையும் பல் துலக்குவது... இந்த மாதிரி இப்பவே சொல்லித் தரலாம்!

"இந்திய நாடு... என் வீடு.. இந்தியன் என்பது என் பேரு...ன்னு" சொல்றோம்.. சொல்றதோட சரி... அதை எத்தனை பேர் செய்றாங்க..?? சொல்றதொட நில்லாமல்.....நம்ம வீட்டை எப்படி பேணி சுத்தமா பாதுகாப்போமோ.. அதே போல நம் நாட்டையும் நினைத்தாலே... சுபீட்சம் அடைய முடியும்!

(பி.கு: திறந்த வெளிகளில், பஸ் நிறுத்தங்களில்.. வியாபாரம் செய்து பிழைக்கும் ஏழை வியாபாரியின் பிழைப்பை கெடுப்பதல்ல என் நோக்கம். அவர்களும், சுத்தமாக வைத்திருந்தால்... அவர்கள் உட்பட... அனைவருக்கும் நலம்)

காசு பணம் ஆயிரம் சம்பாதிச்சு.... என்னங்க புண்ணியம்??? நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...!!! சுத்தம் பேணி... நம்மைக் காத்து....நம் சுற்றமும் காக்க!!!


...அன்புடன் ஆனந்தி 

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)