topbella

Tuesday, April 27, 2010

முகம்..!

கவிதை ஒண்ணு எழுதலாம்னு நினைச்சேங்க.. சரி எழுதறது தான் எழுதறோம்.. அதையே என் தோழி ஒருவர் அழைப்பிற்கிணங்க  "கவிதை முகத்தில்" போடலாம்னு... எழுதி போட்டாச்சு..

அப்படி என்ன தான் எழுதினேன்னு நீங்க பார்க்க வேண்டாமா??

வளர்ந்து வரும் "கவிதை முகத்தில்", சென்ற வாரம், கொடுக்கப்பட்ட தலைப்பு "முகம்"... அதையே முதல் வார்த்தையாய் கொண்டு கவிதை எழுத வேண்டும்..!!


அத்தலைப்பில் நான் சமர்ப்பித்த கவிதை.. இங்கே உங்களுக்காக...!!  
 

உன் எண்ணத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி..
உன் கோபத்தை காட்டினால் குரூரனாவாய்..
எல்லாவற்றுக்கும் சிரித்தாய் என்றால்
ஏமாளி ஆகி போவாய்...
எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் இருந்தால்
எமட்டன் ஆவாய்..
எரிச்சலைக் காட்டினால்
எதிரி ஆகிப் போவாய்..
எதிர்மறை உணர்ச்சி காட்டினால்..
எள்ளலுக்கு ஆளாகி போவாய்.. சரி பிறகு
எப்படித்தான் என் முகத்தை வைத்திருப்பது?
எழிலாக ஒரு சிரிப்பு..
ஒயிலாக ஒரு நகைப்பு..
சாந்தமாய் ஒரு பார்வை..
சக்தி தருவதாய் ஒரு முறுவல்..
சங்கேதமாய் ஒரு சேதி..
சாஸ்வதமாய் ஒரு புன்னகை..
இத்தனையும் உன் முகத்தில்
இயல்பாய் வருமென்றால் உன்னை போல்
இவ்வுலகில் அதிர்ஷ்டஷாலி யாருளரோ??
...அன்புடன் ஆனந்தி 

Sunday, April 25, 2010

தக்காளி சட்னி

தக்காளி சட்னி:
தேவையான பொருட்கள்:

தக்காளி - 2 பெரியது
வெங்காயம் - 1 பெரியது
பூண்டு / பூடு - 2 (அ) 3 பல்
புளி - சிறிது
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல்- 5 (அ) 6 காரத்திற்கு ஏற்ப
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை- சிறிது
கடுகு - 1 /4 ஸ்பூன்


செய்முறை:

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, மிளகாய் வற்றல், உ.பருப்பு சேர்த்து வறுக்கவும்.  கடுகு வெடித்து, உ. பருப்பு நிறம் மாறியதும், வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
சிறிது நேரம் வதக்கிய பின், தக்காளி சேர்த்து வதக்கவும்..
தக்காளி நன்கு வதங்கியதும், உப்பு, புளி சேர்த்து.. மிக்சியில் அரைக்கவும்.. மையாக அரைத்துவிட  வேண்டாம். அரைக்கும் முன்பு சிறிது நேரம் ஆற வைத்து அரைக்கவும்..

அரைத்த பின்பு,  சிறிது எண்ணையில் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சட்னியுடன் சேர்க்கவும்..


(தமிழ் வாசிக்க தெரியாத நண்பர்கள் சில பேருக்காக இங்கிலீஷ்-ல் ஒருமுறை....)

Tomato Chatni:
Needed things:


Tomato - 2 big ones
Onion - 1 big
Garlic pods - 2 or 3
Tamarind - little
Urad dhal - 2 tbsp
Red chillies - 5 or 6 (as needed)
Mustard seeds - 1/4 sp
Curry leaves - little
Salt - as needed


Method:

In a pan, put little oil and add mustard seeds, red chillies, urad dhal and fry them for little bit..
After the mustard seeds pops, and the urad dhal turns little brown,
add onion, garlic and fry for little.
After 2 minutes of frying, add tomato. now after the tomoatos get cooked add tamarind and salt and grind it. (coarsely). Let it cool for little time before you grind it. 

After grinding, season it with mustard seeds, curri leaves, urad dhal..




Sunday, April 18, 2010

இதமான இளவேனில்....!!!



சப்பாஹ்..... ஒரு வழியா குளிர் காலம் முடிஞ்சு இளவேனிற்காலம் தொடங்கியாச்சு.... ஏதோ, பனியைப் பார்க்க நல்லா இருக்கும் தான்.. ஆனா.. ரொம்ப பாதுகாப்பா வீட்டுக்குள்ள உக்காந்துகிட்டு பாக்க தான் நல்லா இருக்கும்.. ( நீ நல்லா இருக்கியா?? நா நல்லா இருக்கேன்னு கேட்டுக்கற மாதிரி தான்.....!! )


வெளில கிளம்பனும்னாலே... செம கடியா இருக்கும்... முதல்ல ஒரு டிரெஸ்ஸை போட்டு, அதுக்கு மேல விண்டர் ஜாக்கெட் போட்டு, , கையில க்லௌஸ் போட்டு, கால்ல சாக்ஸ் போட்டு, பூட்ஸ் போட்டு, தலையில விண்டர் காப் போட்டு......சொல்றதுக்கே டயர்ட்ஆ இருக்கே... அப்போ எங்க நிலமைய யோசிங்க.. யார் வீட்டுக்கும் போகணும்னா, ஒரு கடைக்குப் போகணும்னா கூட.. இத்தன செட் அப்பா தான் போகணும்..  (ஒரு வழியா கிளம்பி, போறதுக்குள்ள போகிற ஆசையே போயிரும்...!!)


இதுல வேற 1008 லொள்ளு.. பனியில நடக்கும் போது பார்த்து நடக்கணும்...


கொஞ்சம் அப்படி, இப்படி பாக்காம, ஸ்டைல்-ஆ நடந்தோம்.. தொலைஞ்சோம்.. பனியில, வழுக்கி  விழற வாய்ப்பு ஜாஸ்தி....!! அப்படி மீறி விழுந்தா, உங்க பாடி உங்க கண்ட்ரோல்-ல இருக்காது...!! (ஹ்ம்ம்ம்ம்ம்ம் ... என் பிரச்சன எனக்கு.. அத ஏன் இப்போ ஞாபக படுத்திட்டு..)


அப்புறம்..சரியாக கவர் பண்ணி போகலன்னா உடம்புக்கு வேற வந்திரும்..!!


பனியில வண்டி ஓட்டுற மாதிரி ஒரு கொடும எங்கயும் கிடையாது..!! நாம சொல்றத வண்டி கேக்காது, வண்டி சொல்றத ரோடு கேக்காது...!! நெசமா தான் சொல்றேன்.. டிரைவிங் ரொம்ப கஷ்டங்கோ....!!


இப்படியாக..சில பல தொல்லைகள் குளிர் காலத்தில் இருக்கிற காரணத்தினால்...நான் வசந்தமே வருக வருக...என்று இரு கை நீட்டி வரவேற்கிறேன்..!!


வசந்தத்தை உணர்த்தும் விதமாக... என் வீட்டு தோட்டத்தில் மலர்ந்த மலர்களை...உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்....!!



மனதைக் கவரும் 
மஞ்சள் மலரே...
மயக்கத்தை தருவதேன்
சொல்லு மலரே..!!



வெளிச்சத்தை உணர்த்தும்
வெள்ளை மலரே..!! உன்னை..
வீதியை அலங்கரிக்க
விட்டது யாரோ??

(இங்க கவர்மென்ட்ல இருந்து.. எங்க தெருவில உள்ள எல்லா வீட்டு முன்னாடியும் வச்சிருக்காங்க..)


வசந்தத்தை வரவேற்கும்
வண்ண மலரே..
உன் வண்ணத்தின் அழகில்
என் எண்ணத்தில்
என்னென்ன  ஏகாந்தம்...!!




விரிந்தும் விரியாத
ட்யுலிப் மலரே.. 
கண்ணுக்கு விருந்தாய்
வந்ததென்ன சொல்லு மலரே..!!



இவ்ளோ பூக்கள் தான் இப்போதைக்கு பூத்திருக்கு...
மிச்ச சொச்சம் எதாச்சும் பூத்தா... பூவோட வரேங்க...!!
வந்ததற்கு ரொம்ப நன்றி..!!
மறக்காம கொஞ்சம் பூக்கள் எடுத்துட்டு போங்க...!!

...அன்புடன் ஆனந்தி




Wednesday, April 14, 2010

கார் சாவி காணாமல் போன கதை..


 
** சித்ரா, பித்தன் அவர்களை தொடர்ந்து..
** கொசுவத்தி சுத்தியதால் வந்த நினைவு..
பதிவுலகம்.... இந்த வாரம்ம்ம்ம்.... தொலைச்ச கதையெல்லாம் தோண்டுற வாரம்....
(டிவி-ல வர "குங்குமம்" விளம்பரம் மாதிரி படிச்சுக்கோங்க...)

சரி நம்ம கதைக்கு போவமா...??

அன்றொரு நாள்.. 
என் மகளை.. எப்பவும் போல.. ..பரத நாட்டியம் கிளாஸ்-கு கூட்டிட்டு போனேன் அன்னிக்கு ஒரு ஸ்பெசல் டே.. குழந்தைகள் மேடை ஏறும் முன்னாடி, ஒத்திகை பார்க்கும் நாள்.. அதனால மொத்த குழந்தைகள், அவங்க பெற்றோர்-னு ஒரே கூட்டம்..


எப்பவும் போல வண்டிய பார்க் பண்ணிட்டு..கையில கீஸ் எடுத்துட்டு.. கிளாஸ் உள்ள போனேன்.. (அவ்வளவு தான் ஞாபகம் இருக்கு).. ஒரு ஒரு க்ரூப்பா ஆடினாங்க..  ஹ்ம்ம்ம்ம்.... எல்லாம் நல்லாத் தான் போச்சு....


எல்லாம் முடிஞ்ச பிறகு.. டீச்சர் கிட்ட பை எல்லாம் சொல்லிட்டு, பந்தாவா ஹாண்ட்பாக் எடுத்துட்டு, வெளில வந்து கார் சாவிய தேடுறேன்....தேடுறேன்... கிடைக்கவே இல்ல..! அப்ப கூட ஒன்னும் பெருசா பயப்படல.. நாம யாரு..??

கிளாஸ் உள்ள வரும் முன்னாடி, பின்னாடி.. என்னென்ன பண்ணினேன் எல்லாம் யோசிச்சு யோசிச்சு பாத்து.. டான்ஸ் கிளாஸ் முழுக்கத்  தேடியாச்சு.. எங்கயும் சாவி இல்ல.. இந்த லட்ச்சனத்துல என்னோட கார் சாவியுடன், வீட்டு சாவி, வீட்டு செக்யூரிட்டி அலாரம் கீ... எல்லாம் இருந்தது வேற..  அப்போ தான் டென்ஷன் ஆரம்பம் ஆச்சு... இப்ப வீட்டுக்கும் போக முடியாது..


அப்புறம் என்ன..?? (ஆபத்பாண்டவன்........இருக்கவே இருக்காரே?) என் ஹஸ்பன்ட்டுக்கு போன் பண்ணி, (அவர் கொடுத்த ப்ரீ அர்ச்சனையையும் வாங்கிட்டு........ஹிஹிஹி.....அதெல்லாம் பப்ளிக்-ல சொல்லி இமேஜ் ஸ்பாயில் பண்ண பிடாது.......) ஸ்பேர் கீ கொண்டு வர சொல்லி, கார் எடுத்துட்டு போனோம்.. ஆனா..அன்னிக்கு முழுக்க தூக்கமே வரல.. ஒரே பயம்.. யாரும் வேண்டாதவங்க கையில கீஸ் கிடசிருமொன்னு...தான்..


அப்புறம் ஒரு வழியா.. சாமிய வேண்டிக்கிட்டு தூங்கிட்டேன்.. விடிஞ்ச பிறகு, ஒரு பிரண்ட் போன் பண்ணி, ரொம்ப ரொம்ப சாரி.. என் சின்ன பொண்ணு தான் எங்க கீஸ் மாதிரியே இருக்குன்னு, எங்க வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டா.. இப்ப தான் கவனிச்சேன்னு சொன்னாங்க.. (ரொம்ப நல்லத்தான் கவனிக்கிறாங்க....)


ஸப்பாஹ்ஹ்ஹ்ஹ.... ஒரு வழியா கீஸ் கெடச்சதுன்னு சந்தோசப்பட்டேன்.. இதுல ஜோக் என்னன்னா.. எங்க குரூப் ல இருந்த எல்லா பிரண்ட்கும் போன் பண்ணி கேட்டேன்.. என்னோட கார் கீஸ் பாத்தாங்கலான்னு.. அதுல இப்ப கால் பண்ணின பிரண்டும் ஒருத்தங்க.. ஒரு பக்கம் கீஸ் கிடைச்சது சந்தோசம் தான்னாலும், இத நா போன் பண்ணப்பவே நல்லா பாத்து சொல்லிருக்க கூடாதான்னு நினச்சேன்... (என்ன சின்ன புள்ளத் தனமா இருக்குன்னு சொல்லலாம் தான் ... ஆனா எடுத்துட்டு போனதே ஒரு சின்ன புள்ளையாச்சே...!!)


கீஸ் தொலைந்ததும், ஒரே ஒரே அட்வைஸ் / என்கொயரி.... நீ ஹாண்ட்பாக் சரியா க்ளோஸ் பண்ணி இருக்க மாட்டே, கார் லாக் பண்ணும் போது கீழ போட்டுட்டியா... எனக்கு எதுவும் சரியா ஞாபகம் இல்லையா, அதான் வாய மூடிட்டு அமைதியா இருந்தேன்.. வேற என்ன பண்றது??? உங்க ரவுண்டு என்ஜாய்-னு விட்டுட்டேன்..


இதுல என் ஹஸ்பண்ட், அடுத்த மாசம் வெளியூர் போகிற வேலை இருந்தது.. ... அதை வேற சொல்லி, ஏதோ, நா இருந்தேன் வந்து பிக்-அப் பண்ண முடிஞ்சது, ஊர்ல இல்லன்னா என்ன பன்னிருப்பன்னு, அறிவுப்பூர்வமா கேள்வி வேற..!!   தெரிஞ்சா சொல்ல மாட்டோமா....!! நல்லா  கேக்குறாங்க  கேள்வி...!!


இப்படி வர போற பிள்ளைங்க சாவி எடுத்துட்டு போகும்னு நா என்னத்த கண்டேன்..!!

இதனால.. ஊரு சனங்களுக்கு தெரிவிக்கறது என்னன்னா.. எங்க போனாலும்  உங்கள்  உடைமைகளை கவனமாக  பார்த்துக்கோங்க..!!

 ஓகே ஓகே.. கொசுவத்தி சுத்தி நின்னுருச்சு.... படிச்ச எல்லாருக்கும் ரொம்ப நன்றிங்கோ..!!  மீண்டும்  வருக..!!


Monday, April 12, 2010

வென்றது யாரோ.....???




Thursday, April 8, 2010

காதல்..... காதல்..... காதல்.....!!



காதல் என்றாய் கன்னம் சிவந்தேன்..
கண்ணிமைகள் படபடக்க
கதவோரம் சென்று மறைந்தேன்..!!
கதவருகே வந்து நின்று
கை விரலால் எனைத் தீண்ட
கண்மூடி ஒரு கணமே
உன் கைகளுக்குள் நான் புகுந்தேன்..!!
கைகளுக்குள் புகுந்த என்னை
காதலால் நீ தழுவ
கணநேரத்தில் சுதாரித்தே நான்
கலவரமாய் விலகி நின்றேன்..!!
ஏனென்று நீ கேட்க
வெட்கத்தில் நான் பூக்க..
கற்பனையில் விரிந்ததுவே நம்
அற்புதமான காதல் வாழ்க்கை..!!

              .......அன்புடன் ஆனந்தி


Monday, April 5, 2010

காரணம் யாரோடி..??

பதிவுலகில் என் பயணம்  தொடங்கிய கதை...
காரணம் யாரோடி..??
 
  
அடர் கேசமும் உனக்கு அழகு தானோ? உன்
அன்பாலே நீ அனைவரையும் ஆட்டி வைப்பதேனோ?
ஆரம்பத்தில் உனை அதிகம் அறியா விடினும்
அறிந்த பிறகோ உன்னிடம்
அன்பு அதிகம் என்றே சொல்வேனடி..!
அனைத்தையும் எளிதாகவே எடுத்துக்கொள்ளும்
உன் மனோதிடம் கண்டே வியந்தேனடி...!
உன்னைப்போல் ஓரளவேனும் இருக்க முடிந்தால்
உவகையுடன் இவ்வுலகிலே வலம் வருவேனடி...!
பதிவுலகிற்கு  என்னை நீ
பரவசமாய் அழைத்து வந்தாய்..!
நீ அறிந்தவற்றை எல்லாம்
என்னுடன் அன்புடனே பகிர்ந்தும் கொண்டாய்..!
நன்றி உனக்கு நான் சொல்லவும் வேண்டுமோ
இல்லை எனதன்பாலே உனை நான்
கொள்ளை கொள்ளவும் வேண்டுமோ..!

காலங்கள் செல்லச் செல்ல நம்
நட்பின் ஓட்டமும் விரிவாகட்டும்..!
உன்னுடன் கைகோர்த்து பதிவுலகில்
உற்சாகமாய் வலம் வர காத்திருக்கும் அன்பு தோழி....!
 ... அன்புடன் ஆனந்தி


என் அன்பிற்குரிய தோழி சித்ராவிற்கு இந்த இடுகை பரிசு..!!         

Thursday, April 1, 2010

திக்கு முக்காட வைத்த திருப்பதி.. தரிசனம்..


திருப்பதி என்றதும் நினைவிற்கு வருவது, பளபளக்கும் பெருமாளும், அருமையான லட்டும் தான்.. (அதுலயும் எனக்கு திருப்பதி லட்டுன்னா.. ரொம்பவே பிடித்தம்..) சரி சரி மேட்டருக்கு வரேன்..


தமிழ்நாடு டூரிசம், ரொம்ப நல்லா....பிளான் பண்ணி கலக்கிருவாங்கன்னு நம்பி... டிக்கெட்ஸ் புக் பண்ணி நல்லாத்தான் கிளம்பினோம்.. ஸ்டார்டிங்-ல பிளான் எல்லாம் நல்லா தான் போட்டாங்க.... சென்னைல இருந்து கிளம்பி, சில பல இடை நிறுத்தங்களுக்கு பிறகு.. ஒரு வழியா திருப்பதி போய் சேர்ந்தோம்..


போயி இறங்கினதும், டூரிஸ்ட் கைடு, எல்லாரையும் மொத்தமா கூப்பிட்டு.. யாரும் ஷாப்பிங் அங்க, இங்கன்னு எங்கயும் போயிராதீங்க.. உங்களுக்கு ஸ்பெஷல் தரிசனம் டிக்கெட்ஸ் இருக்கு, இந்த லைன்ல போயி சாமிய பார்த்துட்டு அப்படியே வெளில வந்தீங்கன்னா நா லட்டோட வெளில வெயிட் பண்றேன்னு சொன்னாரு.. என்னவோ காஃபி / டீ குடிச்சிட்டு வாங்கன்னு சொல்ற மாதிரி சொல்லிட்டு அவரு போயிட்டாரு..!


சரி, இவ்வளோ உறுதியா கைடு சொல்றாரேன்னு நம்பி லைன்ல போனோங்க..!!

சப்பாஹ்.... கொஞ்சம் பொறுங்க ஒரு பெருமூச்சு எடுத்துக்கரேன்.. 
அப்போ மணி காலை 11 :30 .

அப்பவே கேட்டோம், ஏன் சார், லஞ்ச் டைமுக்கு வெளில வந்திரலாம் தானேன்னு? ஆமாமா, வந்துறலாம்னு சிரிச்சிக்கிட்டே அனுப்பி வச்சாருங்க..

லைன்ல போகும் போது, ஆரம்பமெல்லாம் நல்லா தான் இருந்திச்சு.... கொஞ்ச தூரம் போனதுமே.. இதே மாதிரி நாலா திசையில இருந்தும் மக்கள் கூட்டம் வந்து, ஒரே இடமா சேர்த்து விட்டுர்ராங்க.. கூட்டம்னா.. உங்க வீட்டு கூட்டம்.. எங்க வீட்டு  கூட்டம் இல்லைங்க  அவ்ளோ கூட்டம்... சரி பரவாயில்ல.. மணி தான்  12 :30 ஆச்சுதே சீக்கிரமா பெருமாளை பார்த்துட்டு, வெளில போகலாம்னு நினைச்சா...

மணி 1 ஆச்சு, 2 ஆச்சு, 3 ஆச்சுங்க... வரிசை ஆமை வேகத்தில் நகர்கிறது.. சின்ன சின்ன குழந்தைங்க வேற, வயசானவங்க வேற இருக்காங்க.. எங்கள எல்லாம் யாரும் இடித்து தள்ளி விடாமல் காப்பதே, ஆண்களுக்கு பெரிய வேலையா போச்சு..!!



அதான் சாப்பாடு நேரத்துக்கு வந்திருவமேன்னு நினச்சு, கையில எதுவும் எடுத்துக்கலை.. குட்டீஸ் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் தண்ணி வேணும், பாத்ரூம் போகணும்னு ஒவ்வொண்ணா  ஆரம்பிச்சிட்டாங்க..... பாவம் அவங்களும் தான் என்ன பண்ணுவாங்க.. காத்து கூட சரியா இல்ல... இப்படியாக, மணி நாலு ஆச்சு, அஞ்சு ஆச்சு...  சுவாமிய பாக்கற அறிகுறியே இல்ல.. ரொம்ப மெதுவா நகர்ந்தது..  என் சின்ன பொண்ணு உம்மாச்சி நாளைக்கு பாக்கலாம் வீட்டுக்கு போகணும்னு ஒரே அழுகை...!!

ஒரு வழியா, 6 மணி போல கோவில் உள் பிரகாரம் வந்தால், அங்கே இன்னொரு பக்கமிருந்து மக்கள் கும்பலா வந்து  சேர்ந்தாங்க..

மம்மிமிமிமிமி....னு அழணும் போல இருந்தது.. எனக்கு..!!

எப்படியோ, எல்லாம் கடந்து பெருமாள் சந்நிதானம் வந்து சேர்ந்தால், சுவாமிய நின்னு ஒரு நிமிஷம் பாக்க விடாம.. ரண்டி..ரண்டின்னு....... இழுத்து வெளியில அனுப்பிர்றாங்க...... செம டென்ஷன்-ஆ இருந்திச்சு....!!

இத்தன கெடுபிடி எல்லாத்துலயும் ஒரே ஒரு நிம்மதி என்னன்னா... இவ்வளவு கஷ்டபட்டாலும் பெருமாள் முகத்தைப் பார்த்தது சில நொடிகளே ஆயினும், என் மனதில் அப்படி ஒரு சிலிர்ப்பு, நிறைவு ஏற்பட்டது என்னவோ உண்மை தான்......!!


கடைசியிலே வெளில வந்து, ஏன் இப்படி லேட் ஆச்சு, என்ன பிரச்சனைன்னு கேட்டா, யாரோ ஒரு அரசியல் தலைவர் தரிசனத்துக்கு வந்ததால் பொது மக்கள் வரிசையை நிறுத்தி வைத்தார்களாம்..!! எனக்கு வந்த கோவத்தை சொல்லி மாளாது..!!

என்ன கொடும சார்... தனிப்பட்டவங்க வசதிக்காக பொது மக்களை இப்படி கஷ்டபடுத்தறது.. கொஞ்சம் கூட நல்லா இல்லை...!! யார் கேட்பது.. இதையெல்லாம்.??
  
எல்லா விஷயத்துலயும் தான் தலையீடு இருக்கு.. அட்லீஸ்ட் ஸ்வாமியையாவது விட்டு வையுங்களேன்...!!

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)