topbella

Wednesday, January 22, 2014

நிதர்சனம் நீ...!!!

Travel Photographer Captures Gorgeous Flowing Gowns Against ...
கலையாத கனவுக்குள் 
கவிதையாய் நீ வந்தாய் 
வரைந்து வைத்த ஓவியம் போல் 
வகையாய் என்னுள் இடம் கொண்டாய்..

போராட்டம் பல வரினும் 
ஏதேனும் இடர் வரினும் 
புரிதலின் பூரிப்பில் 
புதுப்பூவாய் பூக்கச் செய்வாய்..

உன் புன்னகை அழைப்பில் 
என்னையே மறக்கச் செய்வாய்..
உனக்குள் அமிழ்ந்தே 
உன்னுயிரில் கரையச் செய்வாய்..

இமைகளுக்குள் புகுந்தே
இரவுகள் தொலைக்கச் செய்வாய்..
இதமான உன் அன்பில்
இவ்வுலகம் மறக்கச் செய்வாய்.. 

உன்னை வரையறுக்க 
உவமைகள் தேவையில்லை
உண்மைக் காதலுக்கு 
உவமானம் தேவையில்லை...

எந்நிலையிலும் எனை நீங்கா 
நின்னுயிர் ஒன்றே நிதர்சனம்...
நின்னடி சேர்வதொன்றே 
என்னுயிரின் நிர்ணயம்....!!!

...அன்புடன் ஆனந்தி 

(படம்: கூகிள், நன்றி)

Sunday, January 19, 2014

இச்சை தரும் இம்சை...!




அன்றாட வாழ்க்கைக்கான அடிப்படை வசதிகள் ஒரு மனிதனின் தேவையாக இருப்பது இயற்கை.. குடியிருக்க ஒரு இடம், பசித்த வேளைக்கு உணவு, உடம்பு மறைக்க உடை... இவைகளே அடிப்படை தேவைகளாக கருதப்படுகிறது..  இதற்குத்தான் அனைவரும் இந்த பாடு படுகிறார்களா..?  இது தவிர்த்து நமக்கு தேவைப்படுவன அனைத்தும் நம் மனதின் இச்சைகள். இச்சைகளுக்கு எல்லைகளே இல்லை.. 

யோசித்துப் பார்த்தால்... அடிப்படை தேவை மட்டுமே ஒருவரின் எல்லையாக இருக்கும் பட்சத்தில்.. அது சார்ந்து உழைத்து நகரும் போது... எந்த வித இன்னல்களும் வர வாய்ப்பில்லையே என்று தோன்றுகிறது... இச்சை என்று எதை வரையறுப்பது...? தேவைக்கு மீறி நாம் அடைய விரும்பும் அனைத்துமே.. இச்சைகள்.

இச்சைகள் தொடங்கும் இடத்தில் இம்சைகளும் உடன் வந்து விடுகிறது. இருக்கும் வீட்டில் ஆரம்பித்து.. உடுத்தும் உடை வரைக்கும்... அடுத்தவர் என்ன நினைப்பார்கள் என்று எண்ணியே வாழ்வை அழித்துக் கொண்டிருக்கிறோம்... இப்பொழுதெல்லாம் அவரவர் தாம் வசிக்கும் வீட்டை விசாலமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர.. அவர் தம் மனம் விசாலமாக இருப்பதும் இல்லை.. உண்மையான மகிழ்ச்சியோடு இருப்பதும் இல்லை..

அம்மா, அப்பா, குழந்தைகள் சில.. என்று உள்ள ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய வீடு தேவைப்பட போகிறது..? ஆனால் இப்போது காலக்கொடுமை... வீடுகள் பெரிதாகிக்கொண்டே போகிறது.. வீட்டில் உள்ள மனிதர்கள் எண்ணிக்கையும்... அவர்களுக்கான தொடர்புகளும் குறைந்து கொண்டே வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் சிவம்.. தொடரில் சமீபத்தில்.. இந்த தேவைக்கும் இச்சைக்கும் உள்ள வேறுபாட்டை சிவன் கூறுவது போல் வரும்.. அதில் ஒரு சிறிய கதை சொல்வார்.. ஒரு வணிகன் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தான்.. அவன் தொழிலும் சிறப்பாக அமைந்து.. அவனது தேவைகளுக்குப் போதுமான பொருளும் ஈட்டினான்.. அவன் மனைவி மக்கள் மகிழச்சியாக இருந்தனர்.. ஆனால் வணிகருக்கோ.. மனநிறைவு ஏற்படவில்லை..  

மேலும் பொருள் ஈட்ட வேண்டும்.. நிறைய நில புலன்கள் வாங்க வேண்டும்... பெரிய செல்வந்தனாக வேண்டும் என்று எண்ணம் மேலோங்க... இறைவன் விஷ்ணுவை வேண்டி தவம் செய்ய துவங்கினான்.. பல ஆண்டுகள் அன்னம் ஆகாரம் இன்றி அவன் செய்த கடுமையான தவத்திற்கு பலனாய் இறைவன் விஷ்ணு அவன் முன் தோன்றி.. தவத்தால் உள்ளம் குளிர்ந்தேன்.. வேண்டும் வரம் என்ன என்று கேட்க.. வணிகனும்.. "நான் கண்ணால் காணும் இடம் எல்லாம் எனக்கே சொந்தமாக வேண்டும் என்றான்..". இறைவனும் யோசித்து விட்டு.. "சரி.. உன் கண்ணில் நீ காணும் இடமெல்லாம்  உனக்கே சொந்தமாகும்.. உன் கண்ணில் படாதவை உனக்கு சொந்தமல்ல".. என்று சொல்லிவிட்டு மறைந்தார். 

வணிகனுக்கு தலை கால் புரியவில்லை.. நானே இந்த உலகத்தில் பெரும் செல்வந்தன் என்று கூறிய படியே.. தன் எதிரில் கண்ட இடங்கள் எல்லாவற்றையும்.. இது எனது.. என் இடம்.. எனக்கே சொந்தம்.. என்று கூறியவாறே.. சென்றான்.. வெகுதூரம் வந்தும்.. அவன் ஆசை அடங்கவில்லை.. மேலும் நிறைய இடங்களை கண்ணால் கண்டுவிட வேண்டும் என்ற பேராசையில்... ஓடிக்கொண்டே இருந்தான்... விளைவு.. அவன் மன வேகத்திற்கு.. உடல் ஒத்துழைக்க வில்லை.. அன்ன ஆகாரம் இன்றி.. உயிர் நீத்தான்...!

மனம்... ஒரு குரங்கு என்று சொல்லக்கேட்டிருக்கிறோம்... மனதை கட்டுக்குள் வைக்காது அதன் போக்கில் அலைய விட்டால்... அல்லல்களே எஞ்சும். நிறைவான மனதில் நிம்மதி குடியிருக்க தொடங்கும்.. நிறைவடையாத மனமோ... எது நிறைவென்றே அறியாது எதனெதன் பின்னோ அலையும்..!

மனதின் இச்சைகள் அடக்கி.. ஆள... பக்குவப்பட்டு விட்டால்... இன்னல்கள் தவிர்த்து இன்பமாய் வாழ வாசல் திறக்கும்..!


...அன்புடன் ஆனந்தி 


(படம்: கூகிள், நன்றி)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)