topbella

Tuesday, July 16, 2013

மௌனத்தின் மொழி...!


விடியலுக்கான விடை தேடி விதி வழிப் பயணம்... எல்லாம் மாயையா... இறைவன் வைத்த வேள்வியா... எதற்காக பாசம் வைத்தாய்.. இழந்த பின் துடிப்பதற்கா... எதுவும் நிரந்தரம் இல்லை என்ற எண்ணம் அறிவால் உணர்ந்தாய்... வைத்த அன்பில் அதை மறந்தாய்... வாழ்க்கை சுழலில் வந்தார் நிற்பதில்லை... சென்றார் மீண்டு வருவதில்லை..  அவரவர் கடமை முடிந்ததும்... கடைத்தேறி காணாமல் மறைந்து விடுகிறோம்.  எதுவும் இங்கே உண்மை இல்லை... எவர் உறவும் இங்கு நிதர்சனம் இல்லை.. கரை காணும் நோக்கம் உண்டாகில், கண் மூடி கடவுளிடம் சரண் அடைந்து விடு.. என்றே சத்தியம் உரைக்கின்றது.. அதைச் சபல உள்ளம் மறுக்கின்றது.

உண்மை அறிந்தும் உழலும் உள்ளத்தை என்ன செய்வது.. எதிலும் நாட்டம் இல்லை.. எதன் மீதும் பற்று இல்லை.. எல்லாம் பார்த்தாகி விட்டது.. இருந்து செய்ய போவது என்றே இங்கே எதுவும் இல்லை.. கர்மாவின் விளைவால் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறோம். ஞானம் வந்து விட்டதாய் சொல்பவன் எல்லாம் ஞானி அல்லவே.. தனக்கு எல்லாம் தெரிந்து விட்டதாயும், அதை பிறர் உணர பிரயத்தனம் செய்வதாயும் சொல்லித் திரிபவர்கள்.. மூடர்கள்.  உணர்ந்த சத்தியத்தை உள்ளத்தோடு நிறுத்திக்கொள்... உலகிற்கு உணர்த்துவது உன் வேலை அல்ல.. 

கணத்திற்குள் காலம் உன்னை கடந்து கரைந்து சென்று விடுகிறது.. நினைத்தாலும் அதனை நீ எட்டிப் பிடிக்க இயலப்போவதில்லை.. உலகம் தெரிந்து கொள்.. உண்மை அறிந்து கொள்.. உனக்குள் அமிழ்ந்து கொள்... உள்ளமை உணர்ந்து கொள்... உனக்குள் உன்னை தேடுவதை தவிர உன்னதமான செயல் வேறொன்றும் இல்லை. உண்மை உணர்ந்த நிமிடம் நாம் ஊமையாகி விடுகிறோம்.. பேச ஒன்றும் இல்லை.. பெரிதாய் சொல்ல எதுவும் இல்லை.. மௌனத்தின் உன்னதம் மனதிற்கு உரைக்கும் தருணம் உள்ளுக்குள் அமைதி சூழ.. மற்றவை எல்லாம் மறைந்து விடக்கூடும்.

எண்ணத்தின் தெளிவு ஏகாந்தம் தரக்கூடும்... திணிக்கப்படாத சிந்தனை தூய தீபமாய் ஒளிரக்கூடும். போகும் இடம் தெரிந்து விட்டால்... வாழும் இடம் வசந்தமாகிப் போகும்... மௌனத்தின் மகிமை அறிந்தவர்.. அதை உணர்ந்தவர்.. அன்றாட நிகழ்வுகளின் இரைச்சலைக் கூட ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.. ஆழ்ந்த அமைதியின் அருமை உணர்ந்து விட்டால்... மற்றதெல்லாம் இங்கே மதிப்பிழந்து போய் விடுகிறது...!

மௌனம் மகத்துவமானது... மௌனித்தல் அவ்வளவு எளிதில் சாத்தியமல்ல... பல சந்தர்ப்பங்களில் சத்தியம் உணர்ந்தும்.. லௌகீக வாழ்வின் சாகசங்கள் நம்மை சடுகுடு ஆடத்தான் செய்து விடுகிறது.. உட்கார்ந்து யோசிக்க ஒன்றும் இல்லை.. உள்ளத்தின் ஓசைக்கு செவி மடுத்தே.. உண்மையின் பாதையில் ஊமையாய் நகர்தல் உத்தமம்...!

வார்த்தைகள் மௌனிக்கும் போது வாழ்க்கைத் தத்துவம் உணர முடிகின்றது. மௌனத்தின் மொழி மனதின் ஒலி.

...அன்புடன் ஆனந்தி


(படம்: கூகிள் நன்றி)

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// உனக்குள் உன்னை தேடுவதை தவிர உன்னதமான செயல் வேறொன்றும் இல்லை... //

வாழ்த்துக்கள்...

Yaathoramani.blogspot.com said...

மௌனத்தின் ஓசை கேட்கவே
புற வெளிஓசையற்ற இடங்களுக்கு ஓடி ஓடிக்
களைத்து காண இயலாது தவிக்கின்றனர் பலர்
இருப்பிடத்தில் தன்னிடத்தில் காணப்படுவதற்காகவே
அது தவமிருக்கிறது என அறிந்தவனே பாக்கியவான் ஞானவான்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்


sathishsangkavi.blogspot.com said...

..
வார்த்தைகள் மௌனிக்கும் போது வாழ்க்கைத் தத்துவம் உணர முடிகின்றது. மௌனத்தின் மொழி மனதின் ஒலி. ..

உண்மையான வரிகள்..

இராஜராஜேஸ்வரி said...

மௌனத்தின் மொழி மனதின் ஒலி.

அருமையாய் ஒலித்த கவிதை ..!பாராட்டுக்கள்..

TBR. JOSPEH said...

வார்த்தைகள் மௌனிக்கும் போது வாழ்க்கைத் தத்துவம் உணர முடிகின்றது. மௌனத்தின் மொழி மனதின் ஒலி.//

அழகா இருக்குங்க உங்க நடை. ஒரு அழகான கவிதையை prose வடிவத்துல கொடுத்துருக்கீங்க. இருந்தாலும் படிக்கறப்ப ஒரு கவிதையை படிச்ச சந்தோஷன் கிடைச்சிது.

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்க.

ராஜி said...

திணிக்கப்படாத சிந்தனை தூய தீபமாய் ஒளிரக்கூடும்.
>>
இதை குழந்தைகளிடம் செயல்படுத்தினா நல்லா இருக்கும். பகிர்வுக்கு நன்றி

'பரிவை' சே.குமார் said...

வார்த்தைகள் மௌனிக்கும் போது வாழ்க்கைத் தத்துவம் உணர முடிகின்றது. மௌனத்தின் மொழி மனதின் ஒலி.

-------

அருமை.... அருமை...
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

Spoken English Online said...

அருமை... அருமை...வர்ணனையில் அந்த கவியரசையும் மிஞ்சி விட்டிர்கள் போங்கள் ...Online Learning Solutions

அம்பாளடியாள் said...

வணக்கம் !
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன் .முடிந்தால் அவசியம் வாருங்கள் இங்கே
http://blogintamil.blogspot.ch/2013/07/3_25.html

திண்டுக்கல் தனபாலன் said...

Visit : http://blogintamil.blogspot.in/2013/07/3_25.html

வாழ்த்துக்கள்...

ஜெய்லானி said...

//"மௌனத்தின் மொழி...!"//

பால முரளி கிருஷ்னாவின் ”மெளனத்தில் விளையாடும் மனசாட்சியே” பாடல் நினைவுக்கு வருகிறது . https://www.youtube.com/watch?v=RPBTtUwNeWA.

:-)

Prabu M said...

//வார்த்தைகள் மௌனிக்கும் போது வாழ்க்கைத் தத்துவம் உணர முடிகின்றது. மௌனத்தின் மொழி மனதின் ஒலி.
//

ஸாரிங்க எனக்கு மன்மோகன் சிங் ஞாபகம் அடிக்கடி வந்திட்டே இருந்திச்சு மௌனத்தைப் பத்தி வாசிக்க வாசிக்க! :-))

ஜோக்ஸ் அபார்ட்.... ரொம்ப அழகா பேசியிருக்குங்க உங்க மௌனம் இந்தப் பதிவில்!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@திண்டுக்கல் தனபாலன்
தங்கள் கருத்துக்கும், வலைச்சர அறிமுக செய்திக்கும் மிக்க நன்றி.


@ரமணி. S
உண்மை.. தங்கள் கருத்திற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி.


@சங்கவி
மிக்க நன்றி.


@இராஜராஜேஸ்வரி
தங்கள் பாராட்டிற்கு நன்றி.


@TBR JOSEPH
வாழ்த்துக்கு நன்றி.


@ராஜி
உண்மை ராஜி.. மிக்க நன்றி.



@சே. குமார்
தங்கள் கருத்திற்கு நன்றி.



@Spoken English Online
கருத்திற்கு நன்றி.



@Ambal adiyal
வலைச்சர அறிமுகத்திற்கு நன்றிகள்.



@2008rupan
வாழ்த்துக்கு நன்றி.



@ஜெய்லானி
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.



@ Prabu M
தங்கள் கருத்திற்கு ரொம்ப நன்றி.

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)