topbella

Tuesday, November 14, 2017

ராசலீலை..!


அவன் குழல் இசைக்க
மான்கள் துள்ளி ஓடிவர
மயில்கள் ஆடி வர
இடியோசை அங்கே
இனிமையாய் கேட்க
மின்னல் மனம் நெருட
சலசலவென அருவி
அங்கே ஆர்ப்பரிக்க
ராதை வரவை நோக்கி
கண்ணன் அங்கு காத்திருக்க
மாலை நேரமும் நெருங்க
மங்கை மெல்ல நடந்து
பக்கம் வந்து சேர
கண்களில் காதல் மிளிர
மாலை நேர மலர்கள்
மணமாய் விரிந்து மலர
குழல் ஓசை தொடர
கூக்குயில் உடன் பாட
ராதை அதற்கு இசைந்து ஆட
அங்கே ராசலீலை படர்ந்தது..!!!

~அன்புடன் ஆனந்தி

(படம்: கூகிள், நன்றி)

Tuesday, November 7, 2017

நெடும் கனவே..!!!



விதைத்த அன்பில்
விளைந்த உறவே
விழியின் மொழி அறிந்த
விந்தை மனமே..

விமரிசையாய் விளங்க வைத்தும்
வில்லங்கம் செய்யும் அழகே
விசித்திர விதமாய் நேசிக்கும்
விண் முட்டும் காதலே..

கனவில் கதை பேசி
கருவில் காத்து வந்த
கலையே காவியமே
கண் வரைந்த ஓவியமே..

ஒரு வரிக் கவிதையே
ஓயாது ஒலிக்கும் ரீங்காரமே
ஒப்புமை செய்ய இயலா
ஓருயிரே ஓங்காரமே..

ஊஞ்சலாய் ஆடும் நெஞ்சில்
உல்லாசமாய் நின்று கொண்டு
உள்ளுணர்வில் மெல்லிசையாய்
உள்ளமை உணரச் செய்த உயிரே..

நிலைத்து நிற்கும்
நிதர்சனமே நிஜமே
நீங்காத வரமே
நீண்ட நெடும் கனவே..!!!

~அன்புடன் ஆனந்தி 

(படம்: நன்றி கூகுள்)

Wednesday, October 18, 2017

சர்வமும் நீ...!


நினைத்தும் பார்க்கவில்லை
உன் நெஞ்சில் நான்
நீங்காமல் நிறைவேன் என்று
கடந்து வந்த பாதையை
காத்திருந்த வேளையை
கைகோர்த்து நடந்த நொடிகளை
காலம் கரை சேர்த்த கதையை
எண்ணி மகிழ்கிறேன்
உனை எண்ணி கரைகிறேன்
நெருஞ்சி முள்ளாய்
நிறைத்த பாரம்
நீ நெருங்கிய நொடி
உடனே தீரும்..
பார்வையில் படரும் பாசம்
பால் நிலவாய் நெஞ்சில் வீசும்..
மின்வெட்டு பார்வையில்
மென்பட்டாய் இளகும் நெஞ்சம்
உன் கண் காணா நேரம்
கவிதை நூறு பேசும்..
மிச்சம் வைத்த வார்த்தைகளை
அச்சம் இன்றி தந்தவனே
சத்தம் இன்றி சொல்கிறேன்
என் சர்வமும் நீ என்று..!!!

~அன்புடன் ஆனந்தி


நன்றி: கூகிள் (படம்)

Friday, January 13, 2017

அது அந்தக் காலம்...!


அதிகாலை 5 மணிக்கெல்லாம் 
அம்மாவின் அழைப்பு
காதில் விழுந்தும் விழாதது போல் 
கம்பளிக்குள் ஒளிந்து கொள்வோம்..
எழுந்து குளித்து ஏதாவது உதவி செய் என்பாள் அம்மா..
எப்போதும் போல் ஆதரவாய் வந்தே
இன்னும் சற்று உறங்கட்டுமே என்பார் அப்பா..
ஒரு வழியாய் எழுந்து குளித்து வாசல் வந்தால்
அழகாய் தெளித்து கோலமிட்டு 
முற்றத்தில் விளக்கேற்றி வைத்து 
வாழை இலை முழுக்க 
வகை வகையாய் காய்கறிகளும் 
சீப்பு சீப்பாய் வாழை பழங்களும்
அம்சமாய் அடுக்கி வைத்து 
அருகிலேயே கரும்பும் வைத்து 
மஞ்சள் கிழங்கு கட்டி
விபூதி பட்டையிட்டு 
நடுவில் குங்குமம் வைத்து
தண்ணீர் தளும்ப ஊற்றி
இரு பானைகள் அடுப்பில் ஏற்றி வைத்து
கண்களில் புகை அடிக்க
அம்மா கவனமாய் பொங்கல் செய்து கொண்டிருக்க
தம்பியையும் துணைக்கழைத்து
காய்ந்த தென்னை ஓலைகளை 
பதமாய் பிய்த்துக் கொடுத்து 
பொங்கல் பொங்குவதற்காய் 
பொறுமையாய் காத்திருப்போம் 
பொங்கல் நுரையாய் பொங்கி வர
அப்பா தேங்காய் ஒன்றை உடைத்தே 
பானைக்குள் ஊற்றியபடி 
பொங்கலோ பொங்கல் என்பார் 
அம்மா குலை விட்டபடியே 
அதனை கிளறி விடுவாள் 
பூரிப்பில் பார்த்திருப்போம்
புன்னைகையால் பூத்திருப்போம் 
பொங்கலை இறக்கி பூஜை முடித்து விட்டு
இலையில் வெண்பொங்கலும் சர்க்கரை பொங்கலும் 
உடைத்த தேங்காயில் இருந்து ஒரு துண்டும்
உரித்த வாழை பழம் ஒன்றும் வைத்தே 
காக்கைக்கு முதலில் வைத்தே 
பின்பு நம் கைகளில் அம்மா தருவாள்
இதெல்லாம் முடியும் முன்பே 
இனிதே இமை திறந்தே 
எட்டி பார்ப்பான் ஆதவனும்...!!!

#அது அந்தக் காலம்#


~அன்புடன் ஆனந்தி


(படம்: கூகிள், நன்றி)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)