topbella

Tuesday, September 24, 2013

கத்தரிக்காய் காரக்குழம்பு...!


தேவையான பொருட்கள்:

அரைக்க:

சின்ன வெங்காயம் - 10 (அல்லது) பல்லாரி வெங்காயம் - 1
தக்காளி - 1
தேங்காய் துருவல் - 1/2 கப்
மிளகாய் வத்தல் - 6 (காரத்திற்கு ஏற்ப)
மல்லி விதை - 3 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது

வதக்க: 

சின்ன வெங்காயம் - 10 (அல்லது) பல்லாரி வெங்காயம் - 1
தக்காளி - 1 (வெங்காயம், தக்காளி சிறியதாக நறுக்கி கொள்ளவும்)
கத்தரிக்காய் - 5 சிறியது (நீளவாக்கில் கீறி வைக்கவும்)

புளி கரைசல் - தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நீளவாக்கில் கீறி வைத்திருக்கும் கத்தரிக்காய்களை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அதை தனியே எடுத்து வைக்கவும்.
  • பின் அதே பாத்திரத்தில் மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து அது சூடானதும் கடுகு சேர்த்து, கடுகு வெடித்ததும், வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும்.
  • வெந்தயம் வாசம் வந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து அதனுடன் சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • தக்காளி நன்கு வதங்கியதும், புளிக்கரைசல் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து.. நன்கு கொதிக்க விடவும்.
  • குழம்பு வற்றி எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.


...அன்புடன் ஆனந்தி 







Saturday, September 14, 2013

எதுவென்றேன்...!


இன்பம் எதுவென்றேன்
இனியவள் உன்னுடன்
இயைந்து இருப்பதென்றாய்..

துன்பம் எதுவென்றேன்
நீ இவ்வாறு தூர இருந்தே
என்னை துயரத்தில்
ஆழ்த்துவதென்றாய்...

காதல் எதுவென்றேன்
உன் கண்களோடு என்
கண்கள் கலப்பதென்றாய்...

காமம் எதுவென்றேன்
உனைக் கண்டவுடன் என்
கைகளுக்குள் சிறை
வைப்பதென்றாய்...

மோகம் எதுவென்றேன்
மூச்சிலும் பேச்சிலும்
முக்காலமும் நீயே
நிறைந்திருப்பதென்றாய்..

தேடல் எதுவென்றேன்
தெரிந்தும் என்னுயிரை
உனக்குள் தேடித்
திரிவதென்றாய்...!!!

...அன்புடன் ஆனந்தி


(படம்: கூகிள், நன்றி)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)