topbella

Thursday, August 25, 2011

ஏனிந்த நாடகம்...!


சொல்லில் அடங்கா
சோகம் என்னுள்...
சோதித்துச் செல்வதுன்
சுந்தர வதனம்....!

கண்டும் காணாது
நின்றும் தோணாது
சென்றும் பார்க்காது
ஏனென்றும் கேட்காது
ஏனிந்த நாடகம்...!

எட்டு வைத்தால்
எதிரில் உன்னுருவம்..
கண்ணை மூடினால்
கருத்தில் உன் முகம்..

எடுத்துக் கோர்த்தேன்
எழுதிச் சேர்த்தேன்
படித்துப் பார்த்தேன்
பத்திரமாய் காத்தேன்..!

~அன்புடன் ஆனந்தி

Tuesday, August 16, 2011

அமெரிக்காவில் வரலக்ஷ்மி விரதம்...!

இந்த மாத ஸ்பெஷல் வரலக்ஷ்மி தேவியின் விரத பூஜை..! எங்கள் வீட்டில் அந்த பழக்கம் இல்லை என்றாலும்.. எனது நண்பர்கள் வீட்டில் பூஜையில் கலந்து கொண்டேன்.  ஒவ்வொரு வீட்டிலும்... கலசத்தின் மேல், அம்மனின் முகத்தை வைத்து, அதில் அழகழகாய் அலங்காரம் செய்து... பின்னர் அந்த அம்மனை ஒரு பீடத்தில் வைத்து... தத்தம் வசதிக்குத் தகுந்தாற்போல் 3, 5 அல்லது 9 பிரசாதம் செய்து பூஜை செய்தனர்.

இந்நாளில் லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் வழக்கம்.  மாலை ஒரு 6:30 மணி அளவில், வீட்டில் இருந்து கிளம்பி.. ஏழு நண்பர்கள் வீட்டில் சென்று மஞ்சள், குங்குமம் வாங்கி வந்தேன்.  எல்லா இடத்திலும் அம்மனின், அழகிய தோற்றம் மனதிற்கு... நிறைவைத் தந்தது.  எனக்கு தெரிந்த அம்மா ஒருவர், என்னிடம் 'வரலக்ஷ்மி நோம்பு' அன்னிக்கு ஒரு மூன்று அம்மனை தரிசித்தல் பாக்கியம்-ன்னு சொன்னாங்க.  உண்மையில், அன்று ஏழு முறை அம்மனின் தரிசனம் கிடைத்ததை பெறும் பாக்கியமாய் நினைக்கிறேன்.

ஒருவரை ஒருவர் மிஞ்சும் அளவுக்கு.. அம்மனை அலங்கரித்து வச்சிருந்தாங்க. இதில் குறிப்பாக, எனது வீட்டின் அருகில் உள்ள தோழி நிருபமா... அலங்கரித்திருந்த விதம்.. இன்னமும் என் கண்ணிலேயே நிற்கிறது.  ஒவ்வொரு வருசமும்.. ஒரு தீம் வச்சிருப்பாங்க.. அதாவது.. அம்மனின் வாகனம்...! இந்த வருடம்... 'வண்ண மயில்' அம்மனின் வாகனம்!

ஒரு கூடை வாங்கி.. அதனை மயிலின் உடலாய் வைத்து.. அழகான நீல வண்ணத்தில் துணியினை வைத்து.. சுற்றிலும் தைத்து.. மயிலின் நீண்ட கழுத்திற்கும்.. இளநீல வண்ணத்தில் துணியினை தைத்து... பின்னால் நீண்ட தோகைக்கு மயில் இறகுகளை வைத்து அலங்கரித்து... மயிலின் அலகிற்கு தங்க நிறத்தில் காகிதம் வடிவமைத்து... மயிலின் உடலெங்கும்... வண்ண வண்ண கற்கள் பதித்து.. அதன் மேல்... அம்சமாய் அலங்கரிக்கப்பட்ட தேவியை ஏற்றி வைத்திருந்தார்கள்.

(மயில் வாகனத்தில் வரலக்ஷ்மி தேவி...! )

அம்சமாய் என்று நான் சொன்னதில்.. ஆயிரம் விசயங்கள் உண்டு.. எதில் இருந்து ஆரம்பிப்பது? தலையில் அழகிய கிரீடம்.. நெற்றியில் வெள்ளையும், சிவப்புமாய் கற்கள் பதித்த நெற்றி சுட்டி.. மின்னும் மூக்குத்தி... ஒளிவிடும் காதணி... கழுத்தில் கற்கள் பதித்த அட்டிகை.. அதன் கீழே அடுக்கடுக்காய்... பொருந்தி நிற்கும்... முத்தும், கற்களும் பதித்த மாலைகள்... அம்மனின் ஜடையில் தங்க நிற மலர்களுடன் பொருத்தமாய் அலங்காரம்.  சிவப்பும், மயில் நீல வண்ணமும் கலந்த... பட்டு புடவையுடன்... கம்பீரமாய் வீற்று இருந்த அழகை சொல்ல ஓர் நாள் போதாது...!
அழகு மயிலின் மேல்
அம்மா உன் ஆசனம்
அருகில் உன்னை பார்த்ததில்
அடைந்தேன் நான் பாக்கியம்..!
தோழியின் பெற்றோர் இந்தியாவில் இருந்து இங்கே வந்திருக்கிறார்கள். சின்ன சின்ன விஷயம் கூட... அவர்கள் பார்த்து பார்த்து.. உதவி செய்த விதம்.. அவர்களுக்கு என் தோழி மீது உள்ள அளவில்லா அன்பினை காட்டுகிறது. அவங்க கணவர் மற்றும் தங்கை குடும்பத்தாரும், நெருங்கிய நண்பர்களும் இணைந்து உதவி செய்தாங்க. என்னால் முடிந்த சிறு உதவிகளையும் செய்ததில் எனக்கு திருப்தி!! மாலையில் விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம், ஹனுமான் சாலிசா, சௌந்தர்ய லஹரி அனைத்தும் பாராயணம் செய்து.... என் தோழியின் அப்பா.. அம்பாளுக்கு நாம அர்ச்சனை செய்து.. பூஜை செய்தாங்க..  அதில் கலந்து கொண்டதில், ரொம்ப சந்தோசமா இருந்தது.

பூஜை முடிந்த பிறகு... உணவு இடைவேளையில் பிரசாதமாய் பல உணவு வகைகள்... அதன் பிறகு.... சாந்த பிரகாஷ் மற்றும் சித்ரா இருவரும் தங்களின் அருமையான குரல் வளத்தால் அனைவரையும் ஆக்கிரமித்தார்கள்.  அவர்கள் இருவரின் தேன் குரல், கடவுளின் பரிசு...!  சுமார் ஒரு மணி நேரம் இன்னிசை மழையில் நனைந்தோம்!  பூஜை முடிந்து செல்பவர்களுக்கு... தாம்பூலம் கொடுக்க.. மூன்று சிறுமிகளை... நீல வண்ணத்தில் அழகாய் உடை உடுத்தி.. ஜடை போட்டு... மலர் சூடி... நகைகள் அணிந்து.... அமர்த்தி இருந்தாங்க...!

ஒரு குழந்தை குங்குமம் கொடுக்க, அடுத்த குழந்தை மலர் கொடுக்க, அடுத்த குழந்தை தாம்பூலம் கொடுத்தாள்..! பார்ப்பதற்கே மனதிற்கு சந்தோசமாக இருந்தது! ஆலயம் சென்று வந்த ஆத்ம திருப்தி அத்தனை அம்மனின் தரிசனத்தில் உணர்ந்தேன்...!

எனது தோழி கலா தனது வீட்டில் அம்மனை வசீகரமாய்.. அலங்கரித்து வச்சிருந்தாங்க. பூக்களால் பீடத்தை அலங்கரித்து... அம்மனுக்கு பச்சை நிறத்தில் பட்டுடுத்தி.... பல்வேறு நகைகள் சூட்டி..... அழகிய மலர் மாலைகளால் அலங்கரித்து இருந்தாங்க.

(எளிமையான அலங்காரத்தில் எழிலாய் வரலக்ஷ்மி...! )

வெளி நாட்டில் இருந்தாலும் நம் நாட்டின் கலாச்சாரம் மாறாது.. அதை முழு மூச்சுடன் தொடர்ந்து வரும் அனைவருக்கும் மனதார்ந்த வாழ்த்துக்கள்...! வாழ்க இந்தியா... வளர்க நம் பண்பாடு..!!


...அன்புடன் ஆனந்தி

Wednesday, August 10, 2011

மண்வாசம்... தொடர் பதிவு.....!

பிறந்த ஊர் பற்றி... எழுதியிருந்த சே.குமார் அவர்கள்.. என்னையும் அந்த தலைப்பில் தொடர சொல்லியிருந்தார்கள்.  இவ்வளவு நாள் தாமதத்திற்கு மன்னிக்கவும். எனக்கு ஊர் பற்றி விலாவாரியாக சொல்லத்தெரியல.... ஆனா, எங்க ஊரில் நான் வளரும் போது உள்ள அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


பிறந்த ஊர்.. திருநெல்வேலி...! (உடனே அல்வான்னு மட்டும் தின்க் பண்ண பிடாது...). எங்க ஊர்ல பிரசித்தி பெற்ற... நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவில் இருக்கு... விசேஷ நாட்களில் அங்கே அம்மா கூட்டிட்டு போவாங்க.. கோவில் முன்னாடி போனதும்.. வாசலில்... கமகமன்னு வாசனையோட.. அருகம்புல் மாலை கட்டிட்டு இருப்பாங்க.. அதில் ஒன்றை வாங்கி... உள்ளே  போயி முதலில் இருக்கும் விநாயகருக்கு போட்டுட்டு... பிறகு சந்நிதானத்துக்கு உள்ளே போவோம். தரிசனம் முடிந்து வரும்போது மனதுக்கு நிறைவாய் இருக்கும்!

பொதுவா தியேட்டருக்கு கூட்டிட்டு போக மாட்டாங்க.. ஆனா, பொங்கல், தீபாவளி நேரங்களில்... புது துணி எடுக்கறதுக்காக எல்லாரும் போவோம்.  அங்கே நல்லி, ஆர்.எம். கே.வி. போன்ற கடைகளில் துணிகளை எடுத்துட்டு.. மதியம் லஞ்ச்.. அங்கயே ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுட்டு.... மேட்னி ஷோ படம் எதாச்சும் பார்த்துட்டு.. சாயங்காலம் வீட்டுக்கு வருவோம்.

திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் அருகில் இருக்கும் சாந்தி ஸ்வீட்ஸ்.. ஹ்ம்ம்.. எப்போ அங்கே போனாலும்.. அல்வா... வாங்காமல் வருவதில்லை. அங்க தான் அரசு பொருட்காட்சி நடக்கும்... எல்லா முறையும் போவதில்லை என்றாலும்.. பெரும்பாலும் கூட்டிட்டு போவாங்க.. அங்க ராட்டினத்தில் ஏறி...  பெரிய அப்பளம் மாதிரி ஒரு ஸ்நாக் சாப்பிட்டு....  ஒன்னையும் விடுறதில்ல.



வார இறுதி நாட்களில்... பாளையம்கோட்டையில் இருக்கும் மார்க்கெட் சென்று வருவது உண்டு.  என் அம்மாவின் அம்மா இருந்த இடத்தின்... அருகில் தாமிரபரணி ஆற்றுத் தண்ணியில் குளிக்கும் வசதி உண்டு.. ரொம்ப ஆசையா இருக்கும்... (ஆனா எனக்குத் தான் தண்ணி என்றாலே பயம் என்று.. ஊருக்கே தெரியுமே...) வெளில இருந்து... வேடிக்கை பார்த்துட்டு இருப்பேன்.  என் தம்பி, தங்கை உள்ள இறங்கி குளிச்சிட்டு.. அச்சோ மீன் கடிக்குது கடிக்குதுன்னு சொல்லிட்டு இருப்பாங்க.. (இதெல்லாம் யோசிச்சு தான் நாங்க தெளிவா.. கரையில் இருக்கோமாக்கும்..)

அப்புறம்.. கோவில் தசரா வரும்... அந்நேரம் தான் ரொம்ப பிடிச்ச டைம். ஆச்சி வீட்டில் போயி டேரா போடா வேண்டியது.. நைட் ரொம்ப நேரம்.. வில்லுப்பாட்டு, கச்சேரி..ன்னு வேடிக்கை பார்க்க வேண்டியது... இன்னும் கூட எனக்கு அந்த ஜவ்வு மிட்டாய் காரர்... ஒரு கம்பு மேல பொம்மைய கட்டி வச்சிட்டு... அது கைல இருக்குற... சின்க்..சா / சிங்கிய.... (அவ்வவ்... அதுக்கு பேரு சரியா தெரியலயே...) தட்டிட்டே... வாட்ச், மோதிரம், நெக்லஸ்... எல்லாம் செஞ்சு தரது ஞாபகம் இருக்கு..! அதே போல.. நைட் வேலைல.. தெருவுல.. குல்ஃபி ஐஸ், தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்... சோன்பப்டி... இதெல்லாம் கூட கொண்டு வருவாங்க..!

பொங்கல் நேரத்தில்... தெருவோட.. எல்லாம் ஒருத்தரோட ஒருத்தர் போட்டி போட்டு.. பெரிய கோலமா போட்டு.. காலைல... சீக்கிரமா எழும்பி... அம்மா பொங்கப் பானை வச்சி... பொங்கல் விடுறதை.. ஒரு தூக்கக் கலக்கத்தில வந்து எட்டி பார்த்து... அம்மா.. போயி முதல்ல குளிச்சிட்டு வான்னு... திட்டறது வாங்கி... அப்புறம் குளிச்சிட்டு வந்து... பொங்கல் விட்டதை.. சூரியனுக்கு படைத்து... அதில் கொஞ்சம் எடுத்து.... அதனுடன் தேங்காய், வாழைப்பழம், சக்கரை பொங்கல் எல்லாமும் வச்சு.... காக்கைக்கு வைப்பாங்க.. எல்லாத்தையும் விட்ருவோம்.. அந்த மாதிரி வச்சு கேட்டு சண்டை போட்டு சாப்பிடுவோம்.


வீடெல்லாம்.... கரும்பு தின்னு சக்கையா போட்டு... அதுக்கு திட்டு வாங்கி... அப்புறம் அம்மா... வைக்கிற சாம்பார், அவியலோட.... மதியம் செமையா ஒரு வெட்டு வெட்டிட்டு.... டீவி-ல வர பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி எல்லாம் பாத்துக்கிட்டு... ஒரு குட்டி தூக்கம் மதியம் போட்டு எழுந்திருச்சு.. திரும்பவும் முதல்ல இருந்து சாப்பிட வேண்டியது! (நெஜமா அதெல்லாம் ரொம்பவே மிஸ் பண்றேன்...)

இதே போலத்தான் திருக்கார்த்திகை பண்டிகையும்... எல்லார் வீட்லயும்... ஜகஜோதியா விளக்குகள் எரியும்.... அம்மா.. கொழுக்கட்டையில் விளக்கு செய்வாங்க... அதை ஒரு தாம்பாளத்தில் வைத்து... நெய் ஊற்றி விளக்கேற்றி வீட்டின் முன் வாசலில் வைப்பாங்க.... சூப்பர்-ஆ இருக்கும்.... மறுநாள்.... சொக்கப்பனை என்று சொல்வாங்க.. சூந்துகுச்சி (வெள்ளை கலரில் இருக்கும்.... உங்க ஊர்ல என்ன சொல்வீங்கன்னு தெரியல...) அப்புறம், சைக்கிள் டயர் எல்லாம் போட்டு ஒரு இடத்துல கொளுத்துவாங்க.. பார்க்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்கும்!


என் அப்பாவோட கனவு தான் நாங்க குடியிருந்த வீடு... அளவோட ஆறு அறைகளுடன்... வீட்டைச் சுற்றி.. செடி கொடிகளுடனும்... தென்னை மரத்துடனும்... பூக்களுடனும்.... வீட்டிற்கு வந்தாலே.. அவ்ளோ நிம்மதியா இருக்கும்.  சில நேரம் பள்ளி முடிஞ்சு வீட்டுக்கு வரும் போது... அம்மா எங்கயாச்சும் வெளில போயிருப்பாங்க.. அந்நேரம் காம்பவுண்ட் சுவர் மேல ஏறி.. நெல்லிக்காய் மரத்தில ஏறி... என் தம்பி நெல்லிக்காயை பறிச்சு போடுவான். நா கீழ நின்னு, அது மண்ணுல விழுந்துராம பிடிச்சு.. மோட்டார் ஆன் பண்ணி அதை கழுவி சாப்பிடுவோம். கொய்யா மரம் கூட உண்டு.. சீனி கொய்யான்னு சொல்வாங்க.. செமையா இருக்கும். அதையும் விடுறதில்ல. 

இப்படி ஓராயிரம் விசயங்கள் இருக்கு... சொல்லிட்டே போகலாம்..! இருந்தாலும் உங்க நன்மை கருதி.. இத்துடன் என் பதிவை முடித்துக் கொள்கிறேன். படித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்! :)


எங்க ஊர்ல எதை மிஸ் பண்றேனோ இல்லியோ.... இந்த அல்வாவை ரொம்ப..... மிஸ் பண்றேன்!! :)


...அன்புடன் ஆனந்தி 


(படங்கள்: நன்றி கூகிள் )

Friday, August 5, 2011

உற்ற நண்பன் யாரோ...?


எதிர்ப்படும் ஏராளமான மக்களில்
எவர் நம்மின் உற்ற நண்பன்?
அன்றாட வாழ்க்கையில்
அவரவர்க்கு ஆட்டிப்படைக்கும்
ஆயிரமாயிரம் வேலைகள்...!

ஓடியாடி வேலை செய்து
ஓய்ந்து உட்காரும் நேரத்தில்
உள்ளன்போடு செவி சாய்க்க
ஓர் ஜீவன் இருந்தாலும்
அதுவே நம் உற்ற நண்பன்...!

அறியா வயதில் ஆறேழு நண்பர்கள்
அறிந்த வயதில் ஓரிருவர் இருப்பினும்
ஒளிவு மறைவின்றி நடிப்பு நாடகமின்றி
நல்ல துணையாய் நண்பன் அமைய
நாம் செய்திருக்க வேண்டியது தவம்...!

இன்பத்தில் இணைந்து இருந்தும்..
இடர் வரும் வேளையில்
இரு கைநீட்டி அரவணைத்தும்
இதயத்தில் அமர்ந்து இருப்பவனே
உண்மையான உற்ற நண்பன்...!

காசு பணம் எதிர்பார்த்தோ..
காரியம் நடக்க வேண்டும் என்று
கை கோர்த்தோ நட்பு படர்ந்தால்
காலத்துக்கும் உடன் வராது
கரை சேரவும் தோதுபடாது....!

எதையும் எதிர்பார்க்காமல்
ஏமாற்றி ஏய்க்காமல்
எள்ளளவும் கலப்படமின்றி
நமக்கொரு நண்பன் அமைந்தால்
நானிலத்திலும் நாமே பாக்கியசாலி!

கோடி நண்பர்கள் கூடி வந்தாலும்.. கடைசி வரை கூடவே இருப்பவனே உயிர்த் தோழன்.  உங்களுக்கும் உற்ற துணையாய்... உயிர்த் தோழன் அமைய வாழ்த்துக்கள்..!!



...அன்புடன் ஆனந்தி



(படம்: நன்றி கூகிள்)
August 07: Friendship day

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)