topbella

Tuesday, September 9, 2014

வாழ்க்கை அழகானதே...!


அன்றாட அவசரங்கள் கடந்து அந்தியில் ஆதவன் மறைந்து அனைவரும் உறங்க சென்றிருக்கும் நேரம்.. இருக்கும் அமைதி அலாதியானது... அடர்ந்திருக்கும் அந்த இருளும் அழகே.. ஆங்காங்கே கண்சிமிட்டும் நட்சத்திரமும் அழகே.. அதது தனது வேலையை அம்சமாய் செய்வதை அப்படியே பார்த்திருந்து விட்டு.. அடிமனதில் புதைத்து வைத்துக் கொண்டாகி விட்டது.. படர்ந்திருக்கும் இருளில் வானத்தை பார்த்திருப்பது கூட, பிடித்த இசையை மீண்டும் மீண்டும் கேட்பதற்கு இணையே.. எந்த ஒரு சலனமும் இன்றி இருக்கும் இருளே எல்லாவற்றிக்கும் ஆதாரம்.. எதுவுமற்று இருப்பது போல் இருப்பதில் தான் எல்லாவற்றின் சூட்சுமமும் அடங்கி இருக்கிறது.. 

வாழ்க்கை அழகானதே... வாழும் மனிதர்கள் அதை அறியாது அதன் அழகைக் குலைத்து விட்டு.. ஆயிரம் குறைகள் சொல்லி கொண்டு அமைதியற்று திரிவதில் அர்த்தம் ஏதுமில்லை... எதையும் அதன் போக்கில் விட்டு ஆழ்ந்து யோசித்து செயல்படுவது என்பது அநேக பேருக்கு சிம்ம சொப்பனம் தான்.. எதுவாய் இருப்பினும் உடனே அவசர கதியில் யோசித்து அதற்கு ஒரு முடிவெடுத்து.. அந்த முடிவும் தவறாகிப் போக பின் அதையே எண்ணித் தவித்திருக்கும் வாய்ப்புகள் அதிகம்.. மனம் கலங்கிய நிலையில் எதையும் யோசிக்கும் திறன் இருப்பதில்லை.. அந்நிலையில் எதையும் முடிவு செய்யாதிருப்பதே உத்தமம்.

இயந்திர மயமான இவ்வாழ்வில் இயற்கையின் உன்னதமான படைப்புகள் நம் கண்ணிலும் கருத்திலும் படுவதில்லை.. எப்பொழுதும் எதையோ தொலைத்து விட்டு தேடுவது போன்ற பரபரப்பு.. இக்கணமே இவ்வாழ்வு முடிந்து விடுவது போல் ஒரு படபடப்பு... எதற்காக இதை செய்கிறோம்.. ஏன் இதை செய்ய வேண்டும்... செய்வதால் என்ன பயன்... செய்யாவிடில் என்ன நஷ்டம்... இதெல்லாம் பொறுமையாய் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படுவதில்லை... எல்லாமே எக்ஸ்பிரஸ் வேகம் தான்.. அடிப்படையில் அமைதி தொலைத்துவிட்டு ஆங்காங்கே தேடிக் கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கைச் சுமைகளுக்கு மத்தியில்... அதன் சுவாரஸ்யங்கள் அடி பட்டுப் போய் விடுகிறது. எதற்காய் இதை சுமக்கிறோம் என்று கூட உணரும் முன் எல்லாமும் முடிந்து விட வாய்ப்புண்டு.. இப்பொழுதெல்லாம் செய்வதையே தினமும் திரும்ப திரும்ப செய்வது ஒரு வித அலுப்பை தந்து விடுகிறது.. எதை எதையோ செய்ய எண்ணுவதுண்டு.. ஆனால் எண்ணியது எல்லாம் ஈடேற்றும் முன் வாழ்க்கை எங்கோ நம்மை இழுத்துச் சென்று விடுகிறது.. திரும்பிப் பார்த்தால் சொல்லிக் கொள்வது போல் ஒன்றுமே இருப்பதில்லை.

வாழ்வது ஒரு முறை... அதை ரசனையோடு.. வாழ்வது மட்டும் முக்கியம் அல்ல.. ஏதோ வந்தோம்.. இருந்தோம்.. சென்றோம்.. என்று இல்லாமல் ஏதேனும் சாதித்து செல்ல வேண்டும்.. நமக்கு நாமே நேரம் ஒதுக்கி நம்மோடு நாம் பேச.. நிறைய விஷயங்கள் புரிந்து கொள்ள முடியும்.. ஆட்டத்தை தொடங்கி விட்டாகி விட்டது.. ஆடும் முறை, ஆடும் நேரம்.. ஆடிய பிறகு வரும் எதிரொலி எல்லாமே ஏகஇறை ஏற்கனவே எழுதி விட்டது தான்.. அது அறியாது அங்குமிங்குமாய் அலை பாய்வதால் எதுவும் நடக்க போவதில்லை. 

அவசரம் நமக்குள் ஆவேசத்தை உசுப்ப.. அமைதி இன்றி ஆர்ப்பாட்டம் செய்து, அவ்விடத்தில் நிம்மதி தொலைந்து விடுகிறது. தொலைத்த இடத்திலேயே மீண்டும் நிம்மதி கிடைக்க வாய்ப்புண்டு.. நமக்கு தோன்றிய இடத்தில் அல்ல.. சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட பெரும் முக்கியத்துவம் கொடுத்து பல நேரங்களில் நமக்கு அதை பாரமாக்கிக் கொள்கிறோம்.. எதையும் எளிதாய் எடுத்துக் கொள்ளும் யுக்தி எல்லோருக்கும் எட்டி விடுவதில்லை. 

ஒரு விஷயம் நிகழ்ந்தால் நம்மால் அதை மாற்ற இயலுமானால் அதை பற்றி தீவிரமாய் யோசித்து ஏதேனும் வழி தேட முயற்சிப்பது தவறில்லை.. நம் கையில் இல்லாத.. அல்லது நம் கை மீறிப் போன விசயங்களை எண்ணி எண்ணி வருந்தியோ.. வேதனை பட்டோ எதுவும் நடக்க போவதில்லை. கவலைப் படுவதால் காரியம் நடந்து விட போவதில்லை.. பிறகு ஏன் தேவையில்லாத வீண் மனக்குழப்பம்.. நடந்ததை மறந்து விட்டு அடுத்த அடி எடுத்து முன்னேறிப் போக வேண்டியது தானே.. அது சரி, சொல்வது அனைவருக்கும் சுலபம்.. அதைச் செய்வது தானே கடினம்... அப்படி செய்ய இயலுமாயின் நாம் சென்று கொண்டிருக்கும் பாதை.. நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் ஐயம் இல்லை..!


...அன்புடன் ஆனந்தி



(படம்: கூகிள்)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)