topbella

Wednesday, September 29, 2010

அமெரிக்க வாழ்க்கை ....பாகம் 3

ஒரு வழியா லைசென்ஸ் வாங்கி.. இந்த ஊருக்குள்ள...யாருக்கும் பிரச்சன ஏதும் இல்லாம வண்டி ஓட்டிட்டு இருக்கேங்க.. அதுல பாருங்க.. ஒரு விசேஷம்.. என்னால மத்தவங்களுக்கு தான் பிரச்சின இல்லன்னு சொன்னனே தவிர... எனக்கு சில பல தொல்லைகள்....!

ஒரு முறை வெளியூர் போயிட்டு வீடு திரும்பினோம்.. அப்போ வந்ததும், தலை வலிக்குது ஒரு காஃபி குடிச்சா தேவலாம்னு தோனுச்சு.. நீங்க போயிட்டு வாங்கன்னு சொன்னா... நம்ம ஆளு அப்போ தான், இப்போ தானே இவ்ளோ நேரம் டிரைவ் பண்ணிட்டு வந்தேன்.. நீ போயிட்டு வாயேன்னு சொல்ல, கர்ர்ர்ர் னு எரிச்சலாகி சரி..கோவப்பட்டா காஃபி வருமா?? போயி வண்டிய எடுத்தேன்... அப்போ நாங்க இருந்த அபார்ட்மென்ட்-டில் கார் விட ஷெட் இருந்தது. அதிலிருந்து வண்டியை பாக்-அப் பண்ணும் போது... அந்த பில்லர்ல ஒரு இடி இடிச்சி, அங்கயே நின்னுட்டேன்... மவளே காஃபி ரொம்ப முக்கியம் இப்போ? னு என்னையே திட்டிட்டு இருந்தேன்...


இது போலத் தான் இன்னொரு முறை ஆச்சு.. வெளியூர் செல்ல, பிளான் பண்ணிட்டு, AAA ஆபீஸ் போய் மேப்ஸ் (maps ) வாங்கிட்டு வந்திருன்னு சொல்லிட்டு வேலைக்கு போய்ட்டாங்க.. நானும் பந்தாவா கிளம்பி போயி... மேப் எல்லாம் கேட்டு வாங்கிட்டு, வெளில வந்து, வண்டிய ஸ்டார்ட் பண்ணி ரிவர்ஸ்-ல பின்னாடி வரதுக்கு பதிலா.... அவ்வ்வ்வவ் ஆக்சிலரேட்டர் அழுத்தி  முன்னாடி வேகமா போய்ட்டேன்..... அப்புறம் என்ன, டமால் தான்... அங்க இருந்த சிமெண்ட் பார்-ல மோதி, பிரான்ட் பம்பர் உடைஞ்சு தொங்கிட்டு இருந்தது.... ஆக்சிடன்ட் ஆனா.. AAA கு போன் பண்ணுவோம்... ஆனா AAA வாசல்லயே ஆக்சிடென்ட் பண்ணிட்டனே....!! என்னத்த சொல்ல.. ! (AAA என்பது இங்கே உள்ள இன்சூரன்ஸ் ஆபீஸ் )

இந்த மாதிரி... அப்பப்ப வீர சாஹசம் எல்லாம் செய்றது உண்டுங்க.. அதெல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லி, பேர டேமேஜ் பண்ண வேணாம்னு பாக்குறேன்..


அடுத்து, இங்க அமெரிக்கா-ல என்னை கவர்ந்த விஷயம், இங்க உள்ள கடைகளில் எல்லா பொருளுக்கும் (Expiration Date ) காலாவதி தேதி... போட்டிருப்பாங்க..
அந்த தேதி முடியறதுக்குள்ள... நீங்க வாங்கின பொருளில் ஏதேனும், பிரச்சினை வந்த கொண்டு போய்க் கொடுத்தால் ஒரு வார்த்தை சொல்லாமல் மாற்றி கொடுத்து விடுவாங்க. (உடனே..ஏன் நம்ம ஊர்ல கூட தான் இருக்குன்னு....கேட்டு சண்டைக்கு வரப்பிடாது..) இத ஏன் ஸ்பெஷல்-ஆ சொல்றேன்னா.. இங்க உள்ள இந்தியன் கடைகளில்.. எதாச்சும் சில பொருளை எடுத்து பாத்தீங்கன்னா தெளிவா எக்ஸ்பயரி தேதியை கிளீன்-ஆ சொரிஞ்சு வச்சிருப்பாங்க...! என்ன பண்றது.. ஒன்னும் பண்ண முடியாது.

அப்புறம் இங்க அமெரிக்கன் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது, 30 முதல் 90 நாட்கள்  வரை, திரும்ப குடுக்க பாலிசி உண்டு.. அது உண்மையில் உபயோகமான பாலிசி. வாங்கிய துணி சைஸ் சரியில்லைன்னா கொண்டு போய் குடுத்து வேற மாத்திட்டு வரலாம். (ஆனா...அதையும் மிஸ் யூஸ் பண்ற ஆளுங்களும் இருக்காங்க..) எல்லா கடைகளிலும் பெரும்பாலும் கஸ்டமர் கேர் நல்லாவே இருக்கும்.  வாங்கிய பொருளை... அப்படியே பத்திரமாய் கொண்டு போய் குடுத்து மாத்திட்டு வந்திரலாம்.. எதுவும் தேவை இல்லாத கேள்விகளோ, அல்லது, முகத்தில் எரிச்சலை காட்டுவதோ பெரும்பாலும் இருக்காது. நம்ம ஊர்ல எதுவும் மாற்ற இந்த வசதி இருப்பதில்லை.. (ஆனா. நம்ம ஊர் மக்கள் கூட்டத்திற்கு... இப்படி பாலிசி வச்சா.. பின்னே கடையை இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்.. அதுவும் இருக்கு...)

 .....தொடரும்
(நன்றி: கூகிள் இமேஜஸ்)


Wednesday, September 22, 2010

நமக்குள் நாம்...!!

உனக்குள் நான் என்றாய்...
எனக்குள் நீ என்றாய்...
நமக்குள் நாம் ஆவது எப்போது??

ஓர் நாள் பேச்சில்...
ஓராயிரம் வார்த்தைகள் நான் பேச..
ஓர் நொடிப் பார்வையில்
எனை ஊமையாக்கி விட்டாயே...!!

பார்த்துக் கொண்டிருந்தாலே..
பரவசம் ஆகிறதே....
பட்டெனத் தொட்டு விட்டு
பரிதவிக்க விட்டு
வேடிக்கை பார்க்கிறாய்..!!

எதிர்பார்க்கா நேரத்தில்
என்னருகில் நீ வந்து...
எதேச்சையாய் வருவது போல்
எனையணைத்து நீ சென்றாய்...!!

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி
எனை ஏங்கச் செய்வதில் தான்
எத்தனை சுகம் உனக்கு..!

...அன்புடன் ஆனந்தி

Thursday, September 16, 2010

அமெரிக்க வாழ்க்கை ....பாகம் 2


நான் எழுதிய கல்யாண வைபோகமே.... பதிவை தொடருமாறு நண்பர்கள் ஆசையாக, ஆர்வமாக விரும்பி கேட்டதால்... (நா எப்படா கேட்டேன்னு எல்லாம் கேக்கபிடாது) நான் அதை அமெரிக்க வாழ்க்கை தொடரில் தொடரலாம்னு நினைக்கிறேன்.. (ஆமாமா,  ரெம்ப சீக்கிரம் தொடர்ந்திட்டன்னு சொல்றது கேட்டுருச்சி. ஹிஹி...
இவ்ளோ நாள் ஒண்ணா மண்ணா பழகிட்டு என் சுறுசுறுப்பு பத்தி உங்களுக்கு தெரியாதாங்க.. )


நா ஏதோ விளையாட்டா 1008 விஷயம் இருக்குன்னு சொன்னேன்.. ஆனா நீங்க இவ்ளோ சீரியஸா வெயிட் பண்றீங்க போல இருக்கு.. :)

சரி... எங்க விட்டேன்... ஹ்ம்ம்..  ஏர்போர்ட்ல இருந்து வெளில வந்து பாத்தா 6 - 7 இன்ச் பனி... இவரோட ப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து, லிமோசின்-ல எங்கள பிக்கப் பண்ண ஏற்பாடு பண்ணியிருந்தாங்க.. அது என்னங்க... அவ்ளோ நீள காரு.. ஒரு பக்கம் நானும், மறுபுறம் அவரும், மற்றும் சில ப்ரண்ட்சும் கூட வந்தாங்க... எல்லாரும் ஏதேதோ பேசிட்டு வந்தாங்க.. எனக்கு தான் ஒன்னும் மண்டையில ஏறல.. (ஏறிட்டா மட்டும்.....என்ன செஞ்சிரப் போறேன்)

என் கவலை எல்லாம், இவ்ளோ குளிரில் இங்க எப்படி இருக்கபோறோம்னு  தான்.. இவங்க தங்கி இருந்த அப்பாட்மெண்டுக்கு கூட்டிட்டு போனாங்க.. எல்லாரும் அறிமுகப்படுத்திட்டு போய்ட்டாங்க.. எங்களுடன் ரெண்டு மூன்று பிரண்ட்ஸ் மட்டும் தங்கி இருந்தாங்க..


காலைல முதல் வேலையா பொறுப்பா காஃபி போடலாம்னு பாத்தா பால் இல்லை... பிரண்ட் ஒருத்தங்க.. இதோ பொறுங்க.. வாங்கிட்டு வரேன்னு போயிட்டு, திரும்பி வரும் போது ஒரு பெரிய பிளாஸ்டிக் கேன் பாலை தூக்கிட்டு வந்தார்.. கிட்ட தட்ட மூணே முக்கால் லிட்டர்...!!  நானும், என்னடா இது அமெரிக்கால காஃபி போட பால் கேட்டா... அபிஷேகமே பண்ணிரலாம் போல இருக்கேன்னு நினச்சேன்..!

எல்லா பொருளுமே.. கொஞ்சம் சைஸ் பெரிது தான்... போல..! நம்ம சமைக்கிற அழகு தான் ஊருக்கே தெரியுமே.. இருந்தாலும்... நா காரக்குழம்பு செய்யிற ஐடியா-ல கத்தரிக்காய், வெங்காயம்  கேட்டேன்.. அவங்களும், மின்னல் வேகத்துல போயி வாங்கிட்டு வந்தாங்க.. கத்தரிக்காய் சைஸ் பாத்து, அசந்து போய்ட்டேன்..!  எப்படியோ சமையல் புக் பாத்து ஒரு மாதிரியா காரக்குழம்பு, செஞ்சு முடிச்சேன்.. அந்த ஏரியாவே ஒரு யுத்த களமா ஆயிருச்சு.. அதையும், (நா பீல் பண்ண கூடாதுன்னு...இருக்கும் போல) நல்லா இருக்குன்னு சாப்ட்டாங்க எல்லாரும்..! பாவம் அவங்க கஷ்டம் அவங்களுக்கு..!

அவங்க எல்லாம் கிளம்பி வேலைக்குப்  போனதும்,  வீடே வெறுச்சோடி இருக்கும்... உண்மையிலயே எனக்கு தனியா இருக்க பயமா இருக்கும்.. அப்போ தான் அம்மா, அப்பா நினைப்பு வேற வரும்.. வேற என்ன... ஓரமா உக்காந்து... பிழிஞ்சு பிழிஞ்சு அழுது பீல் பண்ணிட்டு இருப்பேன்...!


கொஞ்ச  நாள்லயே அதை பாத்துட்டு, இது கதைக்கு ஆவாதுன்னு நினச்சாங்க போல... நிறைய தமிழ் பட வீடியோஸ் எடுத்து தந்தாங்க... இவ்ளோ நாள் பார்க்காத கணக்குக்கும் சேர்த்து வச்சு.. அவ்ளோ படம் பாத்திருக்கேன்... இப்பெல்லாம் படம் பார்க்கணும்னு சொன்னாலே எரிச்சலா இருக்கு.. பின்னே, பனிஷ்மென்ட் மாதிரி அவ்ளோ படம் பாத்தா?


வந்த புதிதில்.. இந்தியா-வில் நாம் பேசி பழகிய  இங்கிலீஷ்-ம், இங்கே அமெரிக்காவில் பேசுற இங்கிலீஷ்-உம் வேற மாதிரி இருந்தது..   வீட்ல தனியா இருக்கும் போது, போன் வந்தா எடுக்கறதே இல்ல..எல்லாம் ஒரு பயம் தான்.. போன்-ஐ எடுத்து அவங்க எதாவது பாஸ்ட் இங்கிலீஷ்ல சொல்லி.. எனக்கு புரியாம மெசேஜ் சொல்ல முடியாம போயிருமோன்னு தான்..! சில நேரங்கள்-ல தைரியத்த வரவழைத்து போன்-ஐ எடுத்தா "ஹாய்.. கேன் ஐ ஸ்பீக் டு யுவர் பேரன்ட்ஸ்... 
ஆர் எனி அடல்ட்ஸ் இன் தி ஹவுஸ்  ஸ்வீட் ஹார்ட்??" னு கேட்டு மானத்த வாங்குவாங்க.. முதல்ல.. கடுப்பா வந்தது... ஆமா எங்க அம்மா, அப்பா இந்தியால இருக்காங்கன்னு சொல்லணும் போல வரும்..

அமெரிக்கா வந்ததும், கிட்டத்தட்ட...எல்லா கனவான்களும் பண்ற ஒரு முக்கியமான டியூட்டி எங்கள கார் டிரைவிங் கத்து குடுத்து லைசென்ஸ் வாங்க வைக்கிறது தான்.. அப்பவும் சிக்கல் ஆச்சு.. டிரைவிங் ஸ்கூல் போனா, எங்கடா அவன் சொல்லித்தறது நமக்கு புரியாம, வண்டிய கொண்டு போய் எங்கயும் முட்டிட்டு நிக்க கூடாதேன்னு நினச்சு.. நீங்களே சொல்லித் தாங்கன்னு இவர் கிட்ட பொறுப்ப குடுத்தாச்சு.. அப்புறம் என்ன.. எல்லா அர்ச்சனையும் வாங்கி.. (தலையில குட்டு ஒண்ணு தான் வாங்கலை.... அவ்ளோ பொறுமையை டெஸ்ட் பண்ணிட்டோம்ல....ஹிஹி)

அதிலும், எங்க ஆளு விண்டர்ல வண்டி ஓட்ட கத்துகிட்டியானால், எங்கயும் வண்டி ஓட்ட ஈசியா இருக்கும்னு சொல்லி வண்டி கத்துக்க வச்சார்.. எப்படியோ, படிச்சி கிழிச்சு ரிட்டன் டெஸ்ட் எழுதி பாஸ் பண்ணி, வண்டி ஓட்டி காமிச்சு ப்ராக்டிகல்  டெஸ்ட்-டிலும் பாஸ் பண்ணிட்டேன்... (ஒரே அட்டெம்ப்ட் தான் தெரியுமா?? )

(தொடரும்...........)

உங்க எல்லாருடைய ஆதரவிற்கும்  ரொம்ப ரொம்ப நன்றிங்க... :) 
                                                                                                         
(நன்றி: கூகிள் இமேஜஸ்)



Friday, September 10, 2010

அமெரிக்க வாழ்க்கை ....பாகம் 1

அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்  வணக்கம்..... சில நண்பர்கள் இந்த தலைப்பில், உங்க பாணியில் எழுதுங்களேன் என்று கேட்டுக்கொண்டதால் எழுத முயற்சி செய்யப் போகிறேன்.. ஓகே ஓகே.. அப்படியே ஒரு ப்ளோவில செந்தமிழ் வந்திருச்சு.. சரி இப்ப நம்ம பேச்சு நடைக்கு போவமா...?? ஹ்ம்ம். எங்க இருந்து தொடங்கறது..?  (எங்கிருந்தாவது தொடங்கம்மா.. மனுஷனுக்கு 1008 வேலை வெட்டி இருக்குன்னு சொல்றது கேட்டிருச்சு....) 

சில பல விஷயங்கள் எனக்கு தெரிஞ்சத சொல்றேன்.. நா இங்க வந்த புதுசுல.. ரொம்ப ஆச்சர்யப் பட வச்ச விஷயம்... இங்க உள்ள ரோடுகள்... நல்ல விஸ்தாரமா, சுத்தமா.... அவங்க அவங்க... ட்ராபிக் சிக்னலுக்கு மதிப்பு குடுத்து வண்டி ஓட்டுறது... எல்லாமே..!!


அதிலும், இங்க உள்ள ரோடுகளில் இடத்திற்கு தகுந்தாற்போல ஸ்பீட் லிமிட்ஸ்... போர்டு அங்கங்கே இருக்கும்... (அதை சரியாக கடைபிடிக்கலன்னா சகல மரியாதையோட... மாம்ஸ் வருவாங்க.. அதாங்க அமெரிக்கா போலீஸ் காரங்களை சொன்னேன்) அவங்க வருவதே ஒரு அழகு தான்.. சும்மா பளிச் பளிச்னு ரெண்டு மூணு கலர்-ல லைட் போட்டு... சர்ருன்னு வந்து உங்க வண்டி பின்னாடி வந்து நிப்பாங்க பாருங்க.. அட அட.. என்ன அழகு? என்ன அழகு..?? (ஹ்ம்ம் கும்ம்... சரி சரி மேட்டருக்கு வரேன்.. அழகை ரசிக்க விட மாட்டேங்குறாங்க..) அதிலும்.. இங்க உள்ள மாம்ஸ்.. எல்லாம் கொஞ்சம் ஸ்மார்ட்டாவே வேற இருப்பாங்க.. அதாவது... எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் (நா தொப்பைய சொன்னேன்) ஏதும் இல்லாம..! (அதுக்காக ஸ்பீடா போய் எல்லாம் டிக்கெட் வாங்க கூடாதுப்பா).



ஏதோ ஒரு காரணத்தால் மாம்ஸ் உங்க வண்டிய நிறுத்தினா.. இறங்கி வந்து, ஸ்டைல்-ஆ உங்க லைசென்ஸ் ப்ளீஸ்... னு கேப்பாங்க.. அப்புறமா.. உங்கள எதுக்காக நிறுத்தினேன் தெரியுமான்னு  கேப்பாங்க.. அப்பாவியா மூஞ்ச வச்சிட்டு தெரியல ஆபீசர்-னு சொன்னா, நீங்க என்ன தப்பு பண்ணிங்களோ அத சுட்டி காட்டி... பிறகு அதுக்கு என்ன நடவடிக்கையோ அதை எடுப்பாங்க.. (சில நேரங்கள்-ல கொஞ்சம் ஸ்பீட்-ஆ போனதுக்கு பிடிச்சா... தற்காலிகமா எச்சரிக்கை பண்ணி விட்ருவாங்க) இல்லைன்னா டிக்கெட் எழுதி கொடுத்துட்டு போயிருவாங்க.. (டிக்கெட் என்பது.. உங்க டிரைவிங் ஹிஸ்டரியை பாதிக்கும்.. பைனும் கட்ட வேண்டி வரும்..) (அதெல்லாம் சரி.. இம்புட்டு விலாவாரியா சொல்றியே... சொந்த அனுபவமான்னு எடக்கு மடக்கா கேள்வி கேக்க பிடாது.. சொல்லிட்டேன்...)

சரி சரி.. முக்கியமான  விஷயம் சொல்றேன் கேளுங்க.. டிக்கெட்-ம் எழுதி குடுத்துட்டு ஸ்டைல்-ஆ "ஹவ் அ நைஸ் டே" ன்னு வேற சொல்லிட்டு போவாங்க.. (அவ்வ்வ்வ்.. அதான் டிக்கெட் எழுதிட்டியே.. அதுக்கு அப்புறம் எங்க நைஸ் டேன்னு..... பீலிங்க்ஸ்சோட போக வேண்டியது தான்).

அப்புறம் இன்னொரு விஷயம்.. பிடிச்சது.... இங்க ரோடுகள்ல எங்கேனும் விபத்து நடந்தால் உடனடியா... (அதாவது.. உண்மையில் உடனடியா) போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி எல்லாம் வந்திருவாங்க.. அந்த சின்சிஆரிட்டி எனக்கு ரொம்ப பிடிக்கும்.. வந்து தேவை இல்லாம வள வளன்னு பேசாம... மட மடன்னு விசாரிச்சு, வேலைய முடிக்கிறாங்க. உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம்ங்க.. 

என்னோட சொந்த அனுபவத்தில் இதை பார்த்தேன்.. நாங்க ஒரு முறை விபத்தில் சிக்கிக் கொண்டோம்.. அப்போ மோதிய வேகத்தில் காரில் உள்ள ஏர் பாக் (airbag ) வெளியில் வந்து.. செம ஷாக்.. வண்டி முன்பகுதி அப்பளம் போல் ஆகிவிட்டது.. எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாம தப்பியது கடவுள் ஆசி தான்.. அந்த நேரம் தான் கண்கூடா பாத்தேன்.. எவ்ளோ சீக்கிரம் போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் வந்ததுன்னும், எவ்ளோ வேகமா வேலை செஞ்சாங்கன்னும்...! இருந்த அதிர்ச்சியில் கூட கவனித்தேன்.. முதலுதவி செய்றவங்க.. என்கிட்டயும், என் கணவர் கிட்டயும் திரும்ப திரும்ப.. "ஆர் யூ ஓகே....?" ன்னு கேட்டுட்டே இருந்தாங்க.. எனக்கு கொஞ்சம் மோதிய வேகத்தில் கழுத்து வலி இருந்தது, அதை சொல்ல பயம்.. (எங்க நா சொன்னா ஆம்புலன்ஸ்-ல ஏத்தி கூட்டிட்டு போயிருவாங்களோன்னு தான்.. எனக்கு ஆஸ்பத்திரி என்றாலே பயம்... தெனாலி ஸ்டைல்ல படிங்க...) எங்க கார் "டோட்டல்" ஆகி விட்டது... (டோட்டல் அப்படின்னா.. இனிமேல் உபயோகிக்க முடியாத அளவு)

நா அடிக்கடி யோசிப்பேன்.. நம்ம ஊர்ல எங்கயும் விபத்து நடந்தா.. அத போலீஸ்ல சொல்றதுக்கே நம்ம ஆளுங்க தயங்குவாங்க.. காரணம் என்னன்னு நமக்கே தெரியும்..படங்கள்ல சில நேரம் காமெடி-ஆ காட்டுற விஷயம்... ஆனா நெஜத்துல அதான் உண்மை. விபத்து நடந்த இடத்துக்கு வந்து... சுத்தி கட்டம் போட்டு... படம் வரைஞ்சு இவங்க விசாரணை பண்றதுக்குள்ள.. கிழிஞ்சிரும்.. அதுல வேற ரொம்ப லாஜிக்-ஆ கேள்வி எல்லாம் வேற கேப்பாங்க.. நீ  எத்தன டிகிரி ஆங்கிள்ல வந்து மோதினே...அவன் எப்படி போய் விழுந்தான்னு... அறிவா கேப்பாங்க..!

அப்புறம் எங்கயாச்சும் ட்ராபிக் சிக்னல் லைட் வொர்க் ஆகலன்னா, அங்க உடனே போலீஸ் கார்ஸ் வந்து நின்னு.. ஸெல்ப் சிக்னல்ஸ் காமிச்சு ஒழுங்கு  பண்றாங்க.. அதாவது.. பொது மக்களோட ட்ராபிக் அனுபவம் குழப்பமில்லாம நடக்கறதுக்கு..! இங்க.. பெரும்பாலும் (ஏன், அப்படி சொல்றேன்னா இங்கயும்.. நீ என்ன ரூல்ஸ் போடறது.. நா என்ன அத பாலோ பண்றதுன்னு அலையுற ஆளுகளும் திரியுதுங்க) எல்லாரும் டிராபிக் சிக்னல்ஸ், ஸ்பீட் லிமிட், ஸ்டாப் சைன் எல்லாத்துக்கும் மதிப்பு குடுக்குறாங்க.. 


ஒரு சின்ன நகைச்சுவை சம்பவம்.. என் கணவர் சொன்னது...


இவங்களுக்கு தெரிஞ்ச நண்பர் ஒருவர்.. ப்ரீவே-ல  (நெடுஞ்சாலை மாதிரி) போயிட்டு இருக்கும் போது, கொஞ்சம் ஸ்பீட் அதிகமாக செல்லவே, மாம்ஸ் வந்து லைட் போட்டு, வண்டிய நிறுத்தி லைசென்ஸ் கேட்ட்ருக்காங்க.. நம்ம ஆளு, "ஏன் ஆபீசர்.. ஏன் என்னைய நிறுத்தினீங்க... நா சரியா தானே வந்தேன்.. ஏன்னு சொல்லுங்க.."ன்னு கேட்டிருக்கார்.. போலீஸ் ஆபீசர்-ம் பொறுமையா.. "முதல்ல உங்க லைசென்ஸ் ப்ளீஸ்" அப்படின்னு கேட்டிருக்கார்.. இவரு ரெம்ப ஸ்டைல்-ஆ இந்தாங்கன்னு அவரோட "இன்டர்நேஷனல் லைசென்ஸ்" ஐ கொடுத்திருக்கார்.. போலீஸ் ஆபீசர் டென்ஷன் ஆய்ட்டாராம்... "சார், நீங்க இந்த லைசென்ஸ் வச்சு இங்க வண்டி ஓட்ட கூடாது.. இங்க உள்ள லைசென்ஸ் இல்லாம... வண்டியே ஓட்ட கூடாதுன்னு" சொல்லி.. அதுக்கு என்ன ஆக்க்ஷன் எடுக்கணுமோ அதை செஞ்சாராம்.. அமெரிக்கா போலீசையே கலக்கிய நண்பர்னு சொல்லி சிரிச்சாங்க..
(இங்கே  எந்த மாநிலத்தில் இருக்கிறோமோ, அங்க உள்ள லைசன்ஸ் கண்டிப்பா வேணும்)

இதுல இருந்து நா சொல்ல வருவது, என்னவென்றால்... இங்க உள்ள டிராபிக் சிஸ்டம் அருமையா இருக்குங்க.. நம்ம நாட்டிலும் அப்படி வந்தால் ரொம்ப சந்தோசமா இருக்கும்.. ஹ்ம்ம்.. "இப்ப வருமோ..... எப்ப வருமோ....அரசியல் வாதிங்க மனசு வச்சா அப்ப வருமோ...?? ".. ரஜினியோட பாட்டு.. ஒரு கோலக்கிளி.... அந்த மெட்டுல பாடுறேன்.. :-)) அடுத்த பாகத்தில் சந்திப்போம்..!!


Tuesday, September 7, 2010

பள்ளி முதல் நாள்...!!


சின்னக் குயில்கள்
சிங்காரமாய் சிறகடித்து  
பள்ளிக்குச்  செல்ல
பாங்காய் தயாராக....


இதுவரை அடித்த லூட்டியில்
எப்போதடா பள்ளி திறக்கும்
என்றிருந்த எனக்கோ
இப்போது குழந்தை கூட இருக்காதே
என்று மெலிதாய் ஒரு சலனம்..


பள்ளியின் வாசலில் செல்லும் வரை
பத்திரம் கண்ணே என்றவாறே நானும்
போக மாட்டேன் என்று சிணுங்கலில்
என் குழந்தையும்......


உணர்ச்சி பெருக்கில்
உள்ளமெல்லாம் நெகிழ
பள்ளியில் விடவே மனமில்லாமல்
பார்த்து போடா... அம்மா மாலை வருகிறேன்
கண்களில் துளி கண்ணீருடன் நான்.....


என்னைப் பார்த்து சிரித்தவாறே 
என் கைகளை விட்டு விட்டு
"பை பை அம்மா....." என்று
பள்ளிக்குள் சென்றது என் குழந்தை..!!



இது உண்மையில் நான் கண்டது.. நான் என்னவோ.. ஓவர் பீலிங்க்ஸ்ல உருகி போயி இருந்தா, என் குட்டி.. இப்படி சொல்லிட்டு போயிருச்சு.. வகுப்பு வாசலையே கொஞ்ச நேரம் நின்னு பார்த்துட்டு வந்தேன்... :-))) வேற என்ன பண்ண முடியும்?? (வீட்டில இருக்கும் போது, பயபுள்ள குடுத்த பில்ட்-அப் என்ன??? பள்ளி வந்ததும் பை சொல்லி போன அழகு தான் என்ன??  )

""இது தான் பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லா.....??"" (சரி சரி விடுவோம்.. ஒண்ணாம் வகுப்புக்கு இந்தப் பழமொழி எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்...!! )

பி.கு.: இன்று நான் வசிக்கும் பகுதியில் பள்ளித் துவக்கம்.. :-))


Wednesday, September 1, 2010

நீங்காத உன் நினைவு...!!



நீங்காத உன் நினைவோ
நெருஞ்சி முள்ளாய் எனைத் தைக்க...
நினைவிலே கலந்து நெஞ்சிலே நிறைந்து..
கனவினைக் கலைத்தாய்....!!

ஆயிரம் அலுவல்கள் இடையிலும்
நீ கொஞ்சும் போது குழந்தை ஆகிறேன்...
கொஞ்சா நேரமோ எதுவோ
குறைந்தது போல் உணர்கிறேன்....!!

உட்கார்ந்து யோசித்தாலும்
ஒன்றுமே புரிவதில்லை....
ஓர் நிமிடம் ஓர் நொடி உன்னருகே
உடனே வர ஆசை அன்பே..!!

சொந்தமாய் உனை நினைத்து
சொர்க்கத்தில் உலா வந்தேன்...
சொல்லாமல் நீ சென்று எனை
கொல்லாமல் கொல்வதேனோ??

....அன்புடன் ஆனந்தி




 




About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)