topbella

Thursday, October 27, 2011

காலமே உன் காவலில்...!


கிட்டேயே இருக்கும்
கிறுக்கு பிடிக்க வைக்கும்
எதிரிலேயே இருக்கும்
எவர் தடுத்தும் நிற்காது
எதற்கும் மயங்காது...
ஏமாற்றியே சிரிக்கும்..

நெருங்கியே வரும்
நெருப்பாய் தாக்கும்..
அருகிலேயே அமர்ந்து
அணுவணுவாய் வதைக்கும்...

நெஞ்சம் நிறைத்து...
நினைவை கலைத்து...
கண்பார்வையில் கூட...
கஞ்சத் தனம் காத்து...
கழிவிரக்கம் சிறிதுமின்றி
கைது செய்தே 
காவலில் வைக்கும்...

உணர்வுகளை உருக்கி..
உள்மனதில் உறுத்தி..
உலக இயக்கம் கூட..
உருத் தெரியாமல்.. 
நிறுத்தி வைக்கும்... நீ 

எப்போது எனை நெருங்கி
தப்பாது மனம் விரும்பி
கை சேர்ப்பாய் கனவலையை..
காலமே உன் காவலில்
என் காதலே வேள்வியில்..!

...அன்புடன் ஆனந்தி 


(படம்: நன்றி கூகிள்)

Monday, October 17, 2011

வேட்டையாடும் வேங்கை...!


சமீபத்தில் நான் படித்த Warrior (தேவா) அவர்களின் வேட்டை...என்னும் பதிவு.. என்னை விசித்திரமாய் தாக்கியது....! அவரின் அனுமதியோடு அவர் படைப்பை என் வரிகளில்..... எழுதி பார்க்கிறேன்...!

அவரின் பதிவு...
எனது வரிகளில்....

உச்சியின் உக்கிரத்தில்
உயிர் மேல் பயமின்றி
புரவிகளின் குளம்படிச்சத்தம்
எந்தன் குருதியைச் சூடேற்ற..
எதிர்வரும் முரட்டு வீரனின்
நெஞ்சில் என் வாள் ஏற்றி..

எதிர்புறம் அதை கிழித்தெடுக்க
இடப்புறம் வந்த கள்ள எதிரியின்
கரம் கொய்து என் சிரம் நிமிர்த்தி...
எம் படையின் தலைமை வீரனுக்கு
தலைகளை கொய்ய ஆணையிட்டு
அடங்கா வெறியுடன் ஆடிய
அம்மிருகங்களை அடக்கும் ஈட்டியுடன்..!

மன்னிப்பிற்கு இடமில்லை
மரணம் ஒன்றே எமது பதில்
சத்தியத்தை சாகடித்த
சாக்கடை மனிதர்களுக்கு
சவுக்கடி கொடுக்க களமிறங்கினோம்..

காமுகன் உன்னை
காலனிடம் வழியனுப்ப..
உந்தன் கருவறுத்து
அவ்வேற்றை நெருப்புக்கிறைத்து
அச்சாம்பலை நீரில் கரைத்து
அதனாலே எம் தேசம் கழுவி..
உன் கால் பட்ட கறை நீக்குவோம்..!

எங்கிருந்தோ வந்த
எதிராளியின் அம்பு
எம் புஜத்தில் ஏறி இறங்கி
பதம் பார்த்தே பாதி வழியில்
நின்றே போனதடா....
வெட்கம்...வெட்கம்....
எம் புஜம் கிழிக்க
இயலா போர்வாள்
ஏந்தி.. போர்க்களம் 
வந்தாயடா மூடா..!

புஜத்தில் வழிந்த எம் ரத்தம்
ஏற்படுத்திய பதற்றம்
எம் நாட்டு வீரனின் விழிகளில்..
கலங்காதே வீரா....
இத்துரோகிகளை அளிக்காது
எம் உயிர் எமை நீங்கா...!!
அப்படியே நான் அழிந்தாலும்..
உனது லட்சியம் எதிரியை
அழித்து எம் குலம் காப்பதே..!

மேகத்தின் மறைவில் நின்றே
சூரியன் எட்டிப்பார்க்க
விண்ணதிரும் எமது 
சிங்கங்களின் கர்ஜனையும்
யானைகளின் பிளிறல்களும்...
எதிரி நாட்டு எத்தனவனை
எக்காளமாய் நோக்க...

எம் புஜம் பாய்ந்த வாள்
பிய்த்தெறிந்து பீரிட்ட
குருதியினை குதிரையின்
சேனையின் கீழ் இழுத்து வந்த
துணி வைத்துக் கட்டியும்...
ஊறி வெளிவந்த ரத்தம்
எனக்கு உயிர் பயம்
அற்றே போகச் செய்ய....

கடிவாளம் சொடுக்கி
களத்தில் உருண்டு கிடந்த
எதிரியின் சடலங்களை
மிதித்தேறி மீந்து நின்ற
பிசாசுகளின் தலைவனை
அடையாளம் கண்டே...
அவனின் இறுதியினை உறுதி செய்ய..

சரேலென்று பாய்ந்தே
அவன் அமர்ந்து வந்த
குதிரையின் கால்களை வெட்ட...
மூடனை ஏற்றி வந்த பாவத்திற்கு
மூச்சின்றி சரிந்தது...
சத்தியத்தை வாளாய்
ஏந்திப் பிடித்திருந்தேன்...

எம் குலத்திற்கு நீ இழைத்த
கொடுமைக்கு.. இதோ இதோ...
அவன் குரல் வளை தாண்டி
கொக்கரித்து வெளியேறியது என் வாள்..!

துடித்த ஜட உடம்பின்
துரோக ரத்தம் எம் தேகம் தொட..
எம் சுவாசம் ஆசுவாசப் பட்டது..!

என் கால்களை அவன்
நெஞ்சில் இருந்து அகற்றி
நிலத்தில் பதித்தேன்....
தலை கவசம் ஒரு கையிலேந்தி..
மறுகையில் எதிரியின் 
தலை கொய்த வாள் ஏந்தி...
எம் வீரர்களை நோக்கி
வெற்றி வெற்றி வெற்றி.. என்றே
வீரமுழக்கம் இட்டேன்!!!!!


...அன்புடன் ஆனந்தி 

Saturday, October 15, 2011

சுத்தம் காத்து சுகாதாரம் பேணுக...!


சுத்தம் பேணுவதில்... இப்போதெல்லாம் எவ்வளவோ முன்னேற்றம் தெரிந்தாலும் இன்னமும் பொது இடங்களில் அதை பலர் பின்பற்றுவதில்லை.  பஸ் ஸ்டாண்டில்.... மற்றும் பலர் வந்து போய்கொண்டிருக்கும் இடங்களில்.... வெற்றிலை போட்டு துப்புவதும், மூக்கை சிந்தி போடுவதும்.... நீங்களே மனச தொட்டு சொல்லுங்க... யாராச்சும்... பஸ்ஸ்டாண்ட்ல... பயம் இல்லாம உக்கார முடியுமா?? நடுரோட்டில் நடந்து போகும் போது தான் சிலர்.. காறி துப்புவாங்க.. அதையும்... எதிரில் வரும் சக மனிதனின் மேலே விழுந்து விடுமோன்னு ஒரு அபிப்பிராயம் கூட இல்லாம துப்பிட்டு போய்ட்டே இருப்பாங்க...!

இன்னும் சில பேர்... பஸ்-ல், ரயிலில் போகும் போது ஜன்னல் ஓரமா உக்காந்து கிட்டு... அவுக சாப்பிட்டு முடிச்சதும்... ரெம்ப பொறுமையா... ஜன்னல் வழியா கைய வெளிய விட்டு... எச்சில் கைய கழுவுவாங்க..! அது அடிக்கிற காத்துல.. அடுத்தடுத்த கம்பார்ட்மன்ட்-ல இருக்குற அத்தனை பேருக்கும்.. அபிசேகம் பண்ணி விடும்!

சின்ன விசயங்களில் நாம் கவனம் செலுத்தி வந்தால் பல உபாதைகளில் இருந்து தப்பிக்க முடியும்.. உதாரணமா, என் அப்பா அடிக்கடி சொல்ற விஷயம், குடிக்கும் நீர் தவிர, எது சாப்பிட்டாலும் உடனே வாய் கொப்பளித்து விடுவது.. பற்களில் வரும் பல வித பிரச்சினைகளை சரி செய்து விடும்.  இன்று வரை, பின்பற்றுகிறேன்.. எந்த விதமான பல் பிரச்சினைகள் இன்றி!

இன்னொரு விஷயம்... நான் சுத்தமாக வெறுப்பது.. திறந்த வெளிகளில்....பஸ் நிறுத்தங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கி உண்பது! நீங்க நல்லா கவனிச்சு பாருங்க... வந்து போகிற.. அத்தனை பேருந்தில் இருந்தும் வெளிப்படும்.. புகை எல்லாம் அடிச்சு.. காற்றில் பறக்கும் தூசிகளும் மேலே பட்டு... இதுக்கு மேல வந்து உக்காரும் பூச்சிகள்.. வேறு!  தயவு செய்து.. இப்படி திறந்த வெளிகளில் விற்கும் பதார்த்தங்களை வாங்காதீங்க! (இப்போது எவ்வளவோ முன்னேற்றம் இருந்தாலும் இன்னும் சில பேர் இப்படி வெளியே கவனமில்லாது வாங்கி உண்ணத் தான் செய்கிறார்கள்)

எங்கே வெளியூர் சென்றாலும் எளிமையான உணவு பொருட்களை உடன் எடுத்துச் செல்வது நல்லது!  ரயில்களில் இடையில் வந்து விற்கப்படும் உணவு பதார்த்தங்களில் சுத்தம் எதிர்பார்க்க முடியாது தான்...!  குறிப்பாக எண்ணெய் பலகாரங்கள்... கூடவே கூடாது! அப்படி ஒருவேளை, உங்களுக்கு உணவு எடுத்து வர வசதி படவில்லை என்றால்.. குறைந்த பட்சம்.. பழங்கள்.. பிஸ்கட் இந்த மாதிரி எதாச்சும் சாப்பிடுவது மேல்!

அடுத்து நான் பார்த்து ரொம்ப வருத்தப்படும் விஷயம்... குப்பைத் தொட்டி தவிர எல்லா இடத்திலும் குப்பை எறிதல்! எந்த இடம்ன்னு பாக்கறது இல்லை.. கையில் உள்ள குப்பையை அங்கயே எரிந்து விடும் சிறந்த குணம்...நம்மில் பலருக்கு உண்டு..! வெளி நாடுகளில்.. போயி. அப்படி ரோடுகளில் குப்பை போட முடியுமாங்க? இல்ல.. நீங்க போட்டா தான் சும்மா விட்டுருவாங்களா?  பப்ளிக் லிட்டெரிங்..ன்னு சொல்லி.. பைசா வசூல் பண்ணிருவாங்க. (அதாங்க ஃபைன் போட்டிருவாங்க). 

அது ஏன்.. நமக்குன்னு வரும் போது மட்டும் எதையும் ஃபாலோ பண்றதில்லை..! வேதனையான விஷயம் தான்!

நம்ம ஊர்ல பெரியவங்க அப்பவே சொல்லி வச்சிருக்காங்க.. "கந்தை ஆனாலும்... கசக்கிக் கட்டு", "கூழ் ஆனாலும் குளித்துக் குடி..."ன்னு!  இதுக்கு விளக்கம்.. ஊருக்கே தெரியும்.. இருந்தாலும் சொல்றேன்..  உடுத்துற துணி கிழிஞ்சு இருந்தா கூட பரவாயில்லை.. ஆனா அழுக்கா இருக்கக் கூடாது.. அதனால சுத்தமா துவைத்து கட்டுன்னு சொல்றாங்க..! அதே போல தான்.. குடிப்பது கஞ்சியோ, கூழோ பரவாயில்லை.. ஆனா அதையும் சுத்தமா குளிச்சிட்டு சாப்பிடுன்னு.. சொல்றாங்க!

சில கடைகளில், டீ கிளாஸ் கழுவுவதைப் பார்க்க நேர்ந்தால்.. ஜென்மத்துக்கும் வெளியில் டீ, காபி குடிக்க மாட்டோம்...! அம்புட்டு சுத்தமா கழுவுவாங்க! ஒரு பக்கெட் தண்ணீர் வைத்து ஓராயிரம் கிளாஸ்.. கழுவி சாதனை புரிவாங்க. சின்ன குழந்தைகளுக்கு இளம் வயதில் இருந்தே... சில விசயங்களை சொல்லிக் கொடுத்தோமானால், காலத்துக்கும் அவங்களுக்கு நன்மையா இருக்கும்.. எப்போ, எங்க வெளில போயிட்டு வந்தாலும் கைய சோப்பு போட்டு கழுவ சொல்றது.... அப்புறம் எந்த பொருள் சாப்பிடறதா இருந்தாலும், கைய சுத்தமா கழுவிட்டு சாப்பிடறது.... காலை எழுந்ததும்..., இரவு படுக்கும் முன்பும்... இரு வேளையும் பல் துலக்குவது... இந்த மாதிரி இப்பவே சொல்லித் தரலாம்!

"இந்திய நாடு... என் வீடு.. இந்தியன் என்பது என் பேரு...ன்னு" சொல்றோம்.. சொல்றதோட சரி... அதை எத்தனை பேர் செய்றாங்க..?? சொல்றதொட நில்லாமல்.....நம்ம வீட்டை எப்படி பேணி சுத்தமா பாதுகாப்போமோ.. அதே போல நம் நாட்டையும் நினைத்தாலே... சுபீட்சம் அடைய முடியும்!

(பி.கு: திறந்த வெளிகளில், பஸ் நிறுத்தங்களில்.. வியாபாரம் செய்து பிழைக்கும் ஏழை வியாபாரியின் பிழைப்பை கெடுப்பதல்ல என் நோக்கம். அவர்களும், சுத்தமாக வைத்திருந்தால்... அவர்கள் உட்பட... அனைவருக்கும் நலம்)

காசு பணம் ஆயிரம் சம்பாதிச்சு.... என்னங்க புண்ணியம்??? நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...!!! சுத்தம் பேணி... நம்மைக் காத்து....நம் சுற்றமும் காக்க!!!


...அன்புடன் ஆனந்தி 

Monday, October 10, 2011

இயற்கையின்... இலையுதிர்க்காலம்...!!!

          காலையில் சிலு சிலுன்னு காற்றில் அசைந்து கொண்டிருக்கிற மரங்களை பார்க்கும் போது... எனக்கு தோணியது..! 

இங்கே இப்போ "இலையுதிர்க்காலம்"...! ஒரு ஒரு இலையாக... உதிர்ந்து.. சாலை எங்கும்... காற்றில் பறந்து கிட்டு இருக்கு. இந்த செடி, கொடி, மரங்களுக்கு தான் எவ்ளோ பெரிய மனசு.....!!

           (உதிர்ந்து கொண்டிருக்கும் இலைகள்...)

 
(உள்ளம் தொடும் வண்ண மாற்றம்....)

வசந்த காலம் வந்ததும்.. வகையாக துளிர்த்து.. பச்சை பசேலென்று பல வண்ண நிறங்களில் மலர்களை கொடுத்து நம் கண்ணுக்கு விருந்தாய் கடை விரித்துக் காட்சி தருகிறது...! வீட்டுக்கு உள்ளே இருந்து...தே வெளியே பார்த்தாலும், வெளியில் எங்கும் வண்டியில் செல்லும் போதும்.. சாலையின் இருபுறமும்.... காணும் பசுமையின் அழகை என்னவென்று சொல்வது...!

வசந்த காலம் ஆரம்பிக்கும் போதே... தோட்டத்தில் கவனித்து வந்தால்... தரையினை முட்டி.. மெதுவாக.. முளைத்து வெளி வரும்.. சிறு சிறு குருத்துக்களை காண்கையில்.. எல்லை இல்லா ஆனந்தம்..! இயற்கை.. தன் கடமையில் இருந்து ஒரு போதும் தவறுவது இல்லை.

சிறு தளிரில் இருந்து தொடங்கி..... அவை வளர்ந்து.... பெரிதாகி... மொட்டு விட்டு பூக்கும் போது.. நமக்கு ஏதோ.. சாதித்து விட்ட திருப்தி.. பாவம்.. முழு வேலையும் செய்ததென்னவோ அவைகள் தான்.

இத்தனை வளர்ச்சியும்.. மலர்ச்சியும்...... ஐந்தே மாதங்கள் தான்.. அதற்குள் குளிரத் தொடங்கி... இலையுதிர்க் காலம் வந்தே விட்டது.... அப்படி தன்னை முழுதாக உதிர்க்கும் போதும்..... தன் அழகால் நம்மை ஆனந்தப் படுத்தித் தான் செல்கிறது.. இந்த படங்களை பாருங்க... எங்கள் வீட்டின் பின்னால் உள்ள மரங்கள்....!



உதிரத் தொடங்கும் வேளையிலும்
உனதழகால் எனது உள்ளம்...
தீண்டிச் சென்றாய்!



ஐந்து மாதம் தானே... அதற்கு எதற்கு... அனாவசியமா அலட்டிக்கொள்ள வேண்டும்..ன்னு நினைத்திருந்தா இந்த அழகு நமக்கு கிடைக்குமா...!  அத்தனை இலைகளும்.. உதிர்ந்து... பனிக்காலத்தில் சிலையென உறைந்து... அப்பவும்.. பனி படர்ந்து... பார்க்க அம்சமாய் இருக்கும்.

இயற்கை தனது... வேலையைச் செய்ய.. யாரும் தூண்டி விட தேவை இருக்க வில்லை... தனது வாழ்க்கை சுழற்சியை எவ்வித தங்கு தடையுமின்றி... எதையும் எதிர்பார்க்காது... தவறாமல் செய்து வரும் இயற்கையை வணங்குகிறேன்!

என்னவோ போங்க.... என்ன தான்...... இயற்கையின் அமைப்பில் எல்லாமே அழகு என்று சொன்னாலும்... இலைகள் உதிர்ந்து போவதை பார்க்கும் போது... லேசான..... வருத்தம் இருக்கத்தான் செய்கிறது!

சரி பரவாயில்ல விடுங்க... இன்னும் ஒரு ஆறேழு மாதத்தில் திரும்ப வந்து விடுமே...! விடுமுறைக்கு சென்று இருப்பதாக நினைத்துக் கொள்கிறேன்.

(என்னோட பிரண்ட் எடுத்த படம்... நன்றி: வர்ஷா & ரங்கேஷ் )


...அன்புடன் ஆனந்தி 

Saturday, October 8, 2011

என் செய்தாய்...!

woman, holding, flower bouquet, women, nature, outdoors, females, summer,  people, one Person | Pxfuel

பூட்டி வைத்த புதையலாய்
நாட்டியமாடும் உன் விழிகளும்..
உனைக் காட்டியே கொடுத்திடும்
காந்தப் பார்வைகளும்..

மீட்டும் வீணையாய்
மின்னலின் வேகமாய் 
மாட்டிக் கொண்டே நான்
மயங்கி நிற்கின்றேனே..!

உணர்ச்சி கொதிப்பில்...நீ
உதிர்க்கும் வார்த்தைகளில்...
உடைந்து போகும் என் மனது...

உன் ஒரு நிமிட அணைப்பில்...
உலகமே.. வெளிச்சமாய் 
உய்வதென்ன இப்போது!

...அன்புடன் ஆனந்தி 




(படம்: நன்றி கூகுள்)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)