topbella

Monday, September 10, 2012

காத்திருப்பு...!



கவிதையே என்னை
காதல் செய்ய
கண்மூடி நேசிக்கிறேன்...

உன் வரிகளை
புரட்டிப் பார்த்தே
உன் வார்த்தைகளில் 
வசந்தமாய் வசிக்கிறேன்...

அரைக் கணத்தில்
ஆயிரம் கவிதை செய்தே
அங்கங்கே எனை
ஆளுமை செய்தே
ஆட்கொண்டாயே அன்பே...

உன் நினைவுகளில்
என் நிமிடங்கள் கரைய
நெஞ்சுக்குள் நீ ஒரு
கவிதை வரைய
கண்ணா உன் வருகைக்காய்
என் காத்திருப்பு...!

~அன்புடன் ஆனந்தி

(படம்: கூகிள், நன்றி)

Monday, August 27, 2012

யாருமில்லா வனத்தில்...!



யாருமில்லா வனத்தில் 
கவலைகள் கடந்த கணத்தில்..
இயற்கையின் எழிலின் சிலிர்ப்பில் 
இறைவா உன் நினைப்பில் 
என் துணையோடு 
ஒரு தொடர் பயணம்...

இயந்திர வாழ்வின் 
இறுக்கம் தளர்த்திப் போட்டு 
எல்லையில்லா பரபரப்பின் 
கட்டுக்கள்  உடைத்துப் போட்டு 
மெட்டுப் போட்ட படியே 
மெதுவாய் உன்னோடு நடப்பு....

காலைக் கதிரவனின் 
கண்கொள்ளாக் காட்சியை 
என் காதல் கணவனின் 
கை கோர்த்து கண்ட படியே
கூவித் திரியும் குயில்களின் 
குரலோசை கேட்டபடி 
நான் மேவித் திரிந்தே 
மெதுவாய் நடை பயில்வேன்..

பல நாள் கனவின் ஒலி 
எனைச்  சிலை போல் 
செதுக்கக் கண்டேன் 
பச்சை மரங்களின் அழகில் 
இச்சை நான் கொண்டே
பதறாது ஒரு கணமும் சிதறாது
கோர்த்து வைத்தேன்...

ஒற்றையடிப் பாதையில் 
உன்னோடான உயிர்ப்பில் 
உறவே உனை உள்வாங்கி
உலகத்தை நான் வெல்வேன்..

காளை உன் கை கோர்த்தபடி 
கவிதைகள் நாம் செய்வோம் 
கடந்து போகும் பாதையெல்லாம் 
மிதந்து போகும் காற்றை கொய்வோம்...

ஏட்டில் எழுதாத 
ஏகாந்தம் பலவற்றை 
எண்ணற்ற ஆசைகளை 
எளிதாய் பேசியபடியே 
ஏக்கங்கள் தீர தீர 
எடுத்துக்காட்டாய் வாழ்வோம்...

கண்முன்னே விரிந்து கிடக்கும் 
காலைப் பனியில்...
கண்மூடித் த்யானம் செய்வோம்
காதருகே கவிதைகள் பல சொல்லி 
காவியம் நாம் படைப்போம்...

வேளை தப்பாது 
விண்மீனை கைது செய்தே 
விரல் சொடுக்கி 
வேலை  வாங்குவோம்
நாளை என்னவென்ற
கவலை சிறிதுமின்றி 
நாட்டியம் நாம் பயில்வோம்...

காதலே உன்னுடன் 
கவிதை செய்வேன்... 
என் கவிதையே உன்னைக் 
காதல் செய்வேன்....!


~அன்புடன் ஆனந்தி

Thursday, June 7, 2012

தயை செய்வாய் எனக்கு...!

Royalty-Free photo: Person holding pink petaled flower during ...

சிந்தையில் நாளும்
சிதறாமல் உலவுகின்றாய்
கண்மூடி தூங்கையிலும்
கைதட்டி எழுப்புகிறாய்...

கரம் பிடித்து விரல் பிரித்து
கதைகள் பல சொல்கிறாய்
உன் சிரம் சாய்த்து
என் நெஞ்சில்
ஸ்வரம் மீட்டி நகர்கிறாய்..

உள்ளங்கையில் தாங்குகிறாய்
உயிருடன் ஊஞ்சலாடுகிறாய்
எண்ணத்தில் கலகம் செய்கிறாய்
உன் நெஞ்சத்தில் சிறை வைக்கிறாய்..!

உனைச் சேரத் துடிக்கும் உயிரை
காணத் தவிக்கும் காதலை
காதல் செய்யும் என்னை
கை பிடிப்பது எப்போது..!

ஏதும் பெரிதில்லை
எதுவும் தேவையில்லை
அன்பன் உன் அன்பு
ஒன்றே அடைக்கலம் எனக்கு
தஞ்சம் புகுந்தேன் உன்னிடம்
தயை செய்வாய் எனக்கு..!


...அன்புடன் ஆனந்தி
(படம்: கூகிள், நன்றி)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)