topbella

Thursday, May 22, 2025

இலை நழுவவிட்ட துளிகள்

மழை விட்ட நேரம்
மரக்கிளைகளில் 
அங்கங்கே 
மழைத்துளிகள் 
விளையாடின

நகர்ந்த காற்று 
சற்றே அவற்றை
நாட்டியம் ஆடச் செய்தது 

இலை நழுவவிட்ட துளிகள் 
தரையைத் தொட்டது 
தரை தொட்ட துளிகள் 
பூமியின் தாகம் தீர்த்தது 

நிலத்தடி மண்புழுக்கள் 
மெதுவாய் வெளிவந்து
மேகம் பார்த்தது 

இரைக்குக் காத்திருந்த 
பறவை ஒன்று 
இதை இதமாய்ப் பார்த்தது 

நொடிப்பொழுதில் 
தரையிறங்கி 
மண்புழுவைக் 
கொத்தத் தொடங்கியது 

விடுவித்துக் கொள்ள 
மண்புழுவும் 
விதவிதமாய் 
முயற்சி செய்தது 

பாவம் புழு என நினைத்தே
பாய்ந்து பறவையை 
விரட்டினேன் 

வேகமாய்ப் பறந்து 
வெகு அருகில் 
மரத்தில் அமர்ந்தது 

அமர்ந்த பறவை 
எங்கும் போகவில்லை 
அசையாது 
பார்த்துக் கொண்டிருந்தது 

சற்றே மணல் நோண்டி 
மண்புழுவை 
பத்திரமாய்ப் 
பதுக்கி வைத்தேன் 

திருப்தியுடன் 
திரும்பிய கணத்தில்
திடீரெனப் பாய்ந்து
தரையிறங்கியது 
அந்தப் பறவை 

எங்கு வைத்தேன் என்று 
எப்படி அறிந்தது?!
எனக்குத் தெரியவில்லை 

சரியான இடத்தில் 
கொத்தித் தோண்டி
மண்புழுவை வாயில் 
கவ்விக்கொண்டு 
வானை நோக்கிப்
பறந்தது 

இயற்கையின் 
இயக்கத்தை 
யார் தான் 
நிறுத்த முடியும்?

அவரவர் வாழ்வை 
அவர்களே தான் 
வாழ்ந்தாக வேண்டும் 

பெரிதாய் ஏக்கப் 
பெருமூச்சு விட்டபடி 
வீட்டிற்குள் சென்றேன்
நானும்!

நெல்லை அன்புடன் ஆனந்தி
மே 21, 2025

1 comments:

கன்னிக்கோவில் இராஜா said...

வெகு சிறப்பான காட்சி கவிதை

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)