topbella

Thursday, May 26, 2011

சர்ப்ரைஸ் பார்ட்டி...!!


        
          எல்லாரும் அவங்கவங்க  பிறந்த நாளை குடும்பம் அல்லது நண்பர்களுடன் கொண்டாடுறது வழக்கம்..  கொண்டாடியும் இருக்கோம்.. (பின்ன நாங்க மட்டும் என்னவாம்னு எதிர் கேள்வி எல்லாம் கேக்கப் பிடாது) அதுவே ஒரு சந்தோசம்னா... சில நேரம் நமக்கு தெரியாம அவங்களே பிளான் பண்ணி, சர்ப்ரைஸ் பார்ட்டி-களும் வைப்பதுண்டு. (ஹ்ம்மம்ம்ம்ம்... அப்படி என் பிறந்த நாளைக்கு எனக்கு எந்த பயபுள்ளையும் வைக்கலங்க... )
       
          இப்படி தான் என் கணவரோட பிறந்த நாளுக்கு, சரி எல்லாரும் தான் சர்ப்ரைஸ் பண்றாங்க... நம்மளும் பண்ணலாம்னு.. ஒரு நல்ல எண்ணத்துல... நெருங்கிய சில நண்பர்கள் கிட்ட.. பேசி... ஏற்பாடு பண்ண ஆரம்பிச்சேன்.. முதல் முயற்சியா.. (ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தேன் இருந்துச்சு......) வீட்டில் நான் விருந்து சமையல் மாதிரி பண்ணினா சந்தேகம் வந்திரும்னு சொல்லி... ஒரு பிரண்ட் கிட்ட... இவருக்கு போன் பண்ணி... அவங்க வீட்டுக்கு கூப்பிடச் சொல்லி (சந்தேகம் வராத படிக்கு தான்...) பேசிட்டு இருக்குறதா பிளான் பண்ணேன்.

          சரின்னு இவரும் கிளம்பி போய்ட்டார்.. அவசரம் அவசரமா சமையல் பண்ணி முடிச்சு, மத்த பிரண்ட்ஸ் எல்லாம் வர வச்சு... (என் பிரண்ட்ஸ் வேற.. பாவம்.. வீட்டு முன்னாடி கார் பார்க் பண்ணினா.. இவுக கண்டு பிடிச்சிரப் போறாகன்னு... கார்-ஐ தள்ளி பார்க் பண்ணிட்டு... நடந்து வந்தாங்க...) அந்த அவசரத்துலயும் பலூன் எல்லாம் ஊதி... எல்லாம் ரெடி பண்ணி வச்சிட்டு... இவர் வீட்டுக்கு வர நேரம் ஆயிருச்சேன்னு... லைட் எல்லாம் ஆப் பண்ணிட்டு... எல்லாரும் ஒரு ரூம்-இல் ஒளிஞ்சு இருந்தாங்க...!

          எல்லாரும் அவர் கதவை திறக்கப் போற அந்த, சத்தத்துக்காக கவனமா வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க... இவர் கதவை திறந்ததும்... சர்ப்ரைஸ்ன்னு சத்தம் போடுறதா பிளான்... மனுஷன் கார் பார்க் பண்ணிட்டு..... நடந்து வந்து.... டோர் நாப் திறக்கற வரைக்கும்... ஏதோ த்ரில்லர் படம் பார்க்கற எஃபக்ட்ல வெயிட் பண்ணிட்டு இருக்கோம்... இந்த மனுஷன் கதவ திறந்ததும்.... "சர்ப்ரைஸ்"ன்னு அவரே கத்தினார் பாருங்க... நாங்க எல்லாரும் ஒரு நிமிஷம் ஒன்னும் புரியாம... (என்னாது இது??? கிர்ர்ரர்ர்ர்ர் ) ஒரு செகண்ட் அமைதி ஆய்ட்டோம்.

          அப்புறம் என்ன?? எல்லாரும் சுதாரிச்சு.... அவருக்கு விஷ் பண்ணிட்டு... கலகலப்பா பேசிட்டு, இருந்து போனாங்க.. (பின்ன வேற என்னத்த பண்றது...?) எனக்கு செம கடுப்பு... ஏங்க அப்படி பண்ணீங்க.. நாங்க எல்லாரும் எவ்ளோ ஆசையா வெயிட் பண்ணிட்டு இருந்தோம்ன்னு கேட்டா..... அதுக்கு அவரு எனக்கு முதல்லயே டவுட் வந்திருச்சும்மான்னு பெருமையா சொன்னார்..... ஹலோ.... டவுட்-ஏ வந்தாலும் அதுக்கு இப்படியா போட்டு உடைக்கறதுன்னு........ கேட்டு புலம்பிட்டு இருந்தேன்.. (ஒரு மனுஷி எவ்ளோ ப்ளான்ன்னன்.... பண்ணி.... பார்ட்டி வச்சேன்... இப்படி தான் ஆப்பு வைக்கணும்.. ரெம்ப நல்லவரு போங்க ..... இப்புடி எத்தன பேர் கிளம்பி இருக்காங்கன்னு தெரியலயே...இனிமே சர்ப்ரைஸ் பார்ட்டி வைப்ப வைப்பன்னு.....................சரி விடுங்க.. அத வேற விளக்கமா சொல்லிக்கிட்டு... )

            அதென்ன நம்ம எது செய்யப்போனாலும்..... இப்புடி ஏடாகூடமாவே நடக்குது......! இத்தன கூத்துல நாங்க எல்லாரும் தீவிரமா.... டிஸ்கஸ் பண்ணி எப்படி கண்டுபிடிச்சிருப்பாருன்னு... அதுல உள்ள குறைகள் எல்லாம் பார்த்து... ச.... நம்ம இப்படி பண்ணி இருக்கணும்... அப்படி பண்ணி இருக்கணும்னு ஒரே டிஸ்கசன்....என் பிரண்டு ஒருத்தங்க... அடுத்த தரம் பக்காவா பண்ணிரலாம் பா... ன்னு சொன்னாங்க... (திரும்பவுமா???????? ஹ்ம்ம் ஹும்ம்ம்ம்)

              எத்தன தரம் அடி வாங்குறது??? நா வரல இந்த விளையாட்டுக்கு...!!!

பகிர்வைப் படித்த அனைவருக்கும் நன்றிங்க.


...அன்புடன் ஆனந்தி


(படம்: நன்றி கூகிள்)

Monday, May 23, 2011

உயிரில் கலந்த உறவு...!


உதிரத்தில் உனை ஊற்றி
உன் பெயரை எனில் ஏற்றி
உள்ளார்ந்த அன்பினாலே
ஊமையாய் வலம் வந்தேன்...

எத்தனை திங்கள் என்று
எனக்கேதும் புரியவில்லை
எதிர்பார்க்காமல் என்னால்
இருக்கவும் முடியவில்லை..

நினைத்த மாத்திரத்தில்
கலைத்து விட இது கருவுமல்ல
கசக்கி எறிந்து விடவோ
இது காகிதமும் அல்ல....

நினைவோடும் உயிரோடும்
ஒன்றாகி விட்ட உரு...!
ஏனோ உன் நிம்மதிக்காய்
என்னெதிரில் நீ இருந்தும்
எவரோ போல் நானிருந்தேன்...

என்னை அசைய விடாமல்
எதிர்த்து நிற்கும் காதலிடம்
நான் என்ன சொல்லி
இசையைச் செய்வேன்...

உணர்வில் கலந்த உறவை
உயிராய் மாறி விட்ட திருவை 
உனது நிம்மதிக்காய் ஒன்றும்
இல்லாதது போல் இன்று நான்..!

...அன்புடன் ஆனந்தி 

Monday, May 16, 2011

வசந்தமே உன் வருகையில்...!



வீட்டருகே வித்தியாசமாய்...
வித விதமாய் வண்ண மலர்கள்..
விளங்க வைக்குமே உன்
வசந்தத்தின் வருகையை...!

வாடி நிற்கும் தருணம் எல்லாம்
வாசலில் பூத்திருக்கும்
வாச மலர் அழகு தன்னில்..
வந்த இடம் தெரியாமல்
வாட்டமும் ஓடிப் போகும்...

கொஞ்சி மகிழத் தோன்றும்
கொத்து கொத்தான மலர்க்கூட்டம்
நெஞ்சை அள்ளுமே
நேர்த்தியான பூந்தோட்டம்..!

எழுந்தே நான் வருகையிலே..
என் எதிரில் மலர் கண்டால்..
எண்ணமெல்லாம் வண்ண மயமாய்
ஏகாந்த எழுச்சி தோன்றும்...

புது மலர் உன்னைக் கண்டால்..
புத்துணர்வும் பொங்கும் இங்கே..
பனி மலர் பார்த்தாலே...
பரவசமாய் பாடத் தோன்றுமே...

ஒரு நாளோ ஒரு வாரமோ
உன் ஆயுள் எதுவாயினும்
உன்னிடம் வருவோர் எல்லாம்
உற்சாகத்தில் மலரச் செய்வாய்...

வசந்தமே உன் வருகையில்
வஞ்சி என் உள்ளத்தில்
வற்றாத நீரோட்டம்....
எப்போதும் எனக்குள்ளே
உனக்கான சீராட்டம்....!!

...அன்புடன் ஆனந்தி 

Monday, May 9, 2011

எவ்வாறு மறந்தாய் இன்று?


இதயத்தில் சுமக்க 
இசைந்த உன்னுள்ளம்...
இயல்பாய் இருப்பதில்
இறுக்கம் எதற்கோ?

இரு கரம் நீட்டியே 
அணைக்கா விடினும் 
இனிதாய் ஓர் வார்த்தை
இயம்பத் தயக்கம் ஏனோ?

உனதருகில் நகர்கின்ற
ஒவ்வோர் நொடியும்..
உனக்குள் அமிழ்ந்து விட
ஆசை கொண்டேன்..

கண்களில் தொடர்ந்த
காதல் பயணம்...
கல்லறை வரையிலும்
தொடரக் கூடும்..

கண்களால் கைது செய்து
கள்வனே உன்னை 
காலமெல்லாம் என்னில்
சிறை வைத்தேன்...

நெஞ்சைத் தொட்டு
நிஜமாய் சொல் ஒன்று..
எவ்வாறு எனை நீ 
மறந்தாய் இன்று?

...அன்புடன் ஆனந்தி 






About Me

My Photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)